(எம்.எப்.எம்.பஸீர்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 'செட்டியோராரி' எழுத்தானை மனுமீதான பரிசீலனைகள் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இன்று மனுதாரர்களின் கோரிக்கையான் இடைக்கால தடையை வழங்குவதா இல்லையா என்பது குறித்தும் நீதிமன்றம் தீர்மானிக்கும் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.
நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் இடமில்லாத போதும், 2005ஆம் ஆண்டு அமுலில் இருந்த 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் வேறு அமைச்சுக்களின் ஆவணங்களில் கையெழுத்திட ஜனாதிபதிக்கு அதிகாரமிருந்ததாகவும், அதன்படி 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி ஐந்தாவது பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட அப்போது நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த 6 ஆவது பிரதிவாதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கு பூரண அதிகாரம் இருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ சார்பில் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் வாதங்களை முன்வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த குடியுரிமை சான்றிதழில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்ட 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதியன்று, தனது சேவை பெறுநரான கோத்தாபய ராஜபக்ஷ மட்டுமன்றி மேலும் 20 பேருக்கும் குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அன்றைய தினம் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள அந்த 20 பேரையும் கூட இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாதா எனவும் கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன் முறையீட்டு நீதிமன்றில் 'செட்டியோராரி' எழுத்தானை மனு, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வெயங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மனு நேற்று இரண்டாவது நாளாக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.
நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு இந்த மனு மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர, மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு இரட்டை பிரஜா உரிமையைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் எந்தவொரு ஆவணமும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இல்லாமை தொடர்பில் முடியுமான வரை அவசரமாக சத்தியக் கடதாசி ஊடாக நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சார்பில் முன்னிலையான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளேவிற்கு உத்தரவிட்டது.
குறித்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரி யார் என்பது உள்ளிட்ட விடயங்களையும் அந்த சத்தியக் கடதாசியில் உள்ளடக்குமாறும் , அந்த சத்தியக் கடதாசி எந்தவொரு விசாரணைக்கும் சமர்ப்பிக்க முடியுமான வகையில் தயார் செய்யப்படல் வேண்டும் எனவும் தனது உத்தரவூடாக மேன் முறையீட்டு நீதிமன்றம் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளேவுக்கு ஆலோசனை வழங்கியது.
இதனையடுத்து நேற்றைய பரிசீலனையின் தொடர்ச்சியாக, இந்த மனுவில் 3 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சார்பில் மன்றுக்கு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி சட்டத்தரணி சானக டி சில்வா ஊடாக இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதிக்கு அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் உள்ளதாக யாரேனும் தர்க்கித்தால் அது தவறானது என ஜனாதிபதி சட்டத்தரணி சானக டி சில்வா சுட்டிக்காட்டினார்.
இதன்போது அவர் மேலும் கருத்துக்களை முன்வைக்கில்
' அதிகாரத்தில் மூலமானது ஜனாதிபதி அல்ல. அதிகாரத்தின் மூலமானது அரசியலமைப்பே ஆகும். அரசாங்கத்தின் பிரதானியாக செயற்படும் ஜனாதிபதிக்கு, அவ்வாறு செயற்பட அரசாங்கமொன்று இருத்தல் வேண்டும். அரசாங்கத்தின் நோக்கு நிலை மற்றும் கடப்பாடு என்பன அமைச்சரவியிலேயே தங்கியுள்ளன. மாற்றமாக அது தனி நபரான ஜனாதிபதியின் கைகளில் இல்லை. 'என்றார்.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணியிடம் கேள்வியொன்றினை எழுப்பிய மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட, புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அமைச்சரவைக்கு பொறுப்புக்கள் சாட்டப்படும் வரை, அது அமைச்சரவை அதிகாரங்கள் யாருக்கும் இல்லையா? என கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி சானக டி சில்வா, அமைச்சர் ஒருவர் இல்லாத என்பது திணைக்களம் ஒன்றின் பிரதானியின் கடமைகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால் நாட்டின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றார்.
அத்துடன் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் அரசியலமைப்பு ஊடாகவே கிடைத்துள்ளதாகவும், அவர் அரசாங்கம் மற்றும் அமைச்சரவையின் பிரதானியாக இருந்த போதிலும் அரசின் நிர்வாக அதிகாரம் பாராளுமன்றத்துக்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்வைக்குமே உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சானக டி சில்வா, அமைச்சரவைக்கு உரிய அதிகாரங்களை பயன்படுத்தும் வரம் ஜனடஹிபதிக்கு இல்லை என்றார்.
அதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட்டமை சட்ட விரோதமானது எனவும் அவர் வாதிட்டார்.
இதன்போது தலைமை நீதிபதி யசந்த கோதாகொட, மனுதாரர் தரப்பு சட்டத்தரனி சுரேன் பெர்ணான்டோ, பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகளான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, காமினி மாரப்பன மற்றும் சானக டி சில்வா ஆகியோரை நீதிபதிகள் குழாம் அருகே அழைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை மிக நெருக்கமாக கலந்துரையாடினார்.
இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி சானக டி சில்வா தொடர்ந்தும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்கும் போது, 5 ஆம் பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, எழுந்து குறித்த சட்டத்தரணி கேட்டுக்கொண்ட நேரத்துக்கும் கூடுதலாக நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும், அதனால் நீதிமன்ற நேரம் வீணாகுவதாகவும் குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவித்தார்.
எனினும் ஜனாதிபதி சட்டத்தரணி சானக டி சில்வாவுக்கு தொடர்ந்து கருத்துக்களை முன்வைக்க தலைமை நீதிபதி யசந்த கோதாகொட அனுமதியளித்தார். இதனையடுத்து மீள விடயங்களை தெளிவுபடுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி சானக டி சில்வா, தனது சேவை பெறுநர் தற்போது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கும் நிலையில், அவர் கூட கோத்தாபயவின் இரட்டை பிரஜா உரிமை தொடர்பிலான ஆவணங்களை இதுவரை கண்டதில்லை என தெரிவித்தார்.
சுமார் 3 மணி நேரம் விடயங்களை தெளிவுபடுத்திய சட்டத்தரணி சானக டி சில்வாவின் வாதங்களின் நிறைவில் சிறு இடைவேளை ஒன்றினை அறிவித்த நீதிமன்றம் அதனையடுத்து 5 ஆம் பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவுக்கு வாதிட சந்தர்ப்பம் அளித்தது.
இதன்போது வாதத்தை ஆரம்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ""அரசியலமைப்பு மீயுரரானது என்ற போதிலும் அதனையும் விட பொது மக்களின் அதிகாரம் உயர்ந்தது என்றார். அத்துடன் ' 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பொது மக்களால் தேர்ந்தெடுக்கபப்டும் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தது. அதன்படி அமைச்சர்களை நியமிப்பது, அவர்களுக்கான பொறுப்புக்களை சாட்டுவது, போன்று தனக்கு தேவையான அமைச்சுக்களை தன் வசம் வைத்திருக்கும் அதிகாரமும் அப்போது ஜனாதிபதிக்கு இருந்தது. அந்த அர்சியலமைப்பு விதிவிதாங்களின் கீழ், ஜனாதிபதிக்கு தனக்கு தேவையான விடயங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அதே போல் ஒரு அமைச்சருக்கு பொறுப்புச் சாட்டப்படாத விடயம் ஒன்று ஜனடஹிபதியின் கீழேயே இருக்கும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.' என்றார்.
இதன்போது தலையீடு செய்த தலைமை நீதிபதி யசந்த கோதாகொட, தற்போது 19 ஆவது திருத்தம் அமுலில் உள்ள சூழலில் ஜனாதிபதிக்கு தனது அதிகாரத்தில் உள்ள 3 விடயதானங்களுக்கு மேலதிகமான ஆவணங்களில் கையெழுத்திட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜனடஹிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா
' தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அந்த இயலுமை இல்லாமல் இருந்தாலும் கூட, 2005 ஆம் ஆண்டு அமுலில் இருந்த 17 ஆவது அரசியலமைப்பு திருத்ததுக்கு அமைய அதற்கான இயலுமை இருந்தது.' என்றார். தொடர்ந்து தனது வாதங்களை பதிவு செய்த அவர் ' 2005 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி 5 ஆவது பிரதிவடஹியான கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திடும் அதிகாரம் அப்போது நிறைவேற்று ஜனாதிபதியான 6 ஆம் பிரதிவாதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருந்தது. குறித்த நாளில் எனது சேவை பெறுநருக்கு மேலதிகமாக அவர் மேலும் 20 பேரின் குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார். அப்படியானால் அன்றைய தினம் குடியுரிமை சான்றிதழ் பெற்றுக்கொன்ட ஏனைய 20 பேரையும் கூட இந் நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ள முடியாதா?
இந்த மனு மீது சிறிது அவதானம் செலுத்துங்கள். இம்மனுவில் மூன்றாவது பிரதிவாதி அமைச்சர் வஜிர அபேவர்தன. அவரது பெயரின் முன்னாள் ' கெளரவ' எனும் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் 6 ஆவது பிரதிவாதி இந் நடடில் இரு முறை ஜனாதிபதியாக இருந்தவர். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர். அவரது பெயரின் முன்னாள் அந்த கெளரவ பதம் இடப்படவில்லை. ஏனெனில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிக நெருக்கமான இரு மனுதாரர்களும், இந்த மனுவை அரசியல் உள்நோக்கத்திலேயே தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுதாரர்கள் 5 ஆம் பிரதிவாதி கோத்தாபய ராஜபக்ஷ்வை சிறையில் தள்ள கடுமையாக முயன்றவர்கள். அண்மையில் கோத்தாபயவை கைது செய்ய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக வெளியான செய்தியால் மிகவும் சந்தோஷமடைந்து பின்னர் அது போலியான செய்தி என்பதை அறிந்து வருத்தப்பட்டவர்கள். இவ்வாறான அரசியல் உள் நோக்கத்துடனேயே இந்த மனுதாரர்கள் இடைக்கால தடை உத்தர்வுகளை கோருகின்றனர்.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதியான 6 ஆவது பிரதிவாதி மஹிந்த ராஜபக்ஷ இந்த குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட்டமை தவறான நடவடிக்கை எனில், 30 வருட கால யுத்ததத்தை நிறைவு செய்த போது, கடந்த 15 வருடங்களில் அவரது நடவடிக்கைகள் ஏன் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை' என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து அவரது வாதங்கள் நிறைவுக்கு வந்த நிலையில் இன்று மீண்டும் இந்த மனு மீதான பரிசீலனைகள் இடம்பெறவுள்ளது. அத்துடன் இன்று மனுதாரர்களின் கோரிக்கையான் இடைக்கால தடையை வழங்குவதா இல்லையா என்பது குறித்தும் நீதிமன்றம் தீர்மானிக்கும் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM