வடக்கு–கிழக்கு மக்கள் இம்முறையும் ஏமாற்றமடையக்கூடாது. ஒருமுறை எங்களுடன் கைகோருங்கள். வடக்கு கிழக்கு மக்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி அபிவிருத்திகள் செய்யப்படும். அனைவரதும் சிவில் உரிமை பாதுகாக்கப்படும். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை விடயத்தில் அந்த மக்கள் முன்வரவேண்டும். உங்கள் பிரச்சினை உங்களுக்குத்தான் தெரியும்.
நீங்கள் ஒரு பக்கத்தில் மறைந்து இருக்கவேண்டாம். நாங்கள் கரங்களை நீட்டியுள்ளோம். அவற்றை பற்றிக்கொள்ளுங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார்.
கேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு.
கேள்வி: ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. உங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளீர்கள். அடுத்த கட்டமாக எவ்வாறான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றீர்கள்?
பதில்:நாங்கள் மிகவும் திட்டமிட்ட முறை யில் இந்த தேர்தலுக்கு தயாராகினோம். எந்தவொரு எதிர்க்கட்சியும் அடுத்த தேர்தலுக்காகவே தமது உழைப்பை வழங்கும். ஆனால்
நல்லாட்சி அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை நடத்தாமல் இருந்து வந்தது. இரண்டரை வருடங்கள் கடந்தே உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்தாமலேயே விட்டுவிட்டது. தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. அந்த விடயத்தில் சந்தேகமும் இருந்தது.
அதனால் நாங்கள் தேர்தலை கஷ்டப்பட்டே பெறவேண்டியிருந்தது. ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் மக்களின் ஜனநாயக உரிமை உறுதிப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்பினோம். அதன்படியே தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நாங்கள் எமது அமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தே இருந்தோம்.
எமது ஜனாதிபதி தேர்தலுக்கான விடயங்களை ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதியே ஆரம்பித்தோம். தேசிய சம்மேளனத்தை நடத்தி மஹிந்த ராஜபக் ஷவை கட்சியின் தலைவராக நியமித்ததுடன் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக் ஷவை பெயரிட்டோம். அன்றிலிருந்து தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதன்படி தற்போது கோத்தபாய ராஜபக் ஷ அனைத்து மத தலங்களுக்கும் விஜயம் செய்து வருகின்றார். அத்துடன் நாட்டின் அனைத்த துறைசார்ந்த மக்களையும் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றார். அகில இலங்கை ரீதியில் மக்களை சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றார்.
கேள்வி:கோத்தபாய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் கூட்டு எதிரணியின் அனைவரதும் ஏகோபித்த ஆதரவு கிடைத்ததா?
பதில் : இதற்காக அனைவரதும் ஆதரவும் விருப்பமும் கிடைத்தது. சில கட்சிகளில் போன்று நெருக்கடிகள் எமது தரப்பில் காணப்படவில்லை. இதனை நாங்கள் சரியாக கிரமமாகவே செய்தோம். அனைத்து தரப்புடனும் பேச்சு நடத்தியே வேட்பாளரை தீர்மானித்தோம்.
கேள்வி:கோத்தபாய ராஜபக் ஷ வினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவது கடினம் என்ற விடயம் பேசப்பட்டு வருகிறது. அதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு மதத்துக்கோ இனத்துக்கோ வரையறுக்கப்பட்ட கட்சியல்ல. இதனை நாம் ஆரம்பத்திலேயே கூறினோம். அனைத்து பிரதேசங்களிலும் நாங்கள் செயற்படுகின்றோம். வடக்கு கிழக்கிலும் நாங்கள் தற்போது எமது கட்சியின் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றோம். விசேடமாக வடக்கின் அனைத்து பகுதிகளிலும் இப்போது எமக்கு ஆதரவு பெருகிவருகின்றது. மலையக தமிழ் மக்களிடம் நாங்கள் இன்னும் செல்லவில்லை. காரணம் எம்முடன் இணையும் பல கட்சிகள் மலையகத்தில் உள்ளன. அவ்வாறு கூட்டிணைந்த பின்னர் நாங்கள் அங்கும் எமது செயற்பாடுகளை ஆரம்பிப்போம்.
கேள்வி:பொதுஜன பெரமுன கட்சி விடயத்தில் சிக்கல் உள்ளதாக கூறப்படவில்லை. மாறாக கோத்தபாய ராஜபக் ஷ
வினால் தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற முடியவில்லை என்று அல்லவா கூறப்படுகின்றது?
பதில்:கோத்தபாய ராஜபக் ஷ தற்போது முதல் முறையாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுகின்றார். மக்களின் ஆணையை இதுவரை அவர் பெறவில்லை. அவர் தமிழ் முஸ்லிம் மக்களுடன் இணைந்து செயற்படுகிறார். அவரை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவர் அனைத்து தரப்பினரையும் இணைத்துச் செல்லும் மனிதவாதி.
கேள்வி: கோத்தபாய ராஜபக் ஷவினால் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆத ரவை பெற முடியம் என்று கருதுகின்றீர் களா?
பதில்:எனக்கு பாரிய நம்பிக்கை உள்ளது. இதுவரை காலமும் சந்திரிகா குமாரதுங்கவே தமிழ் மக்களின் அதிக வாக்குகளை பெற்றவர். ஆனால் அதனைவிட அதிக வாக்குகளை இம்முறை கோத்தபாய ராஜபக் ஷ பெறுவார்.
கேள்வி:வடக்கில் கட்சிகள், அமைப்புக்கள் என யாருடன் தற்போது இணைந்து செயற்படுகின்றீர்கள்?
பதில்: ஈ.பி.டி.பி. கட்சியினருடன் இணைந்து செயற்படுகின்றோம். வரதராஜா பெருமாளும் எம்முடன் இணைந்திருக்கின்றார். டாக்டர் விக்னேஸ்வரனின் கட்சி எம்முடன் உள்ளது. உதயராஸாவின் கட்சி எம்முடன் உள்ளது. இவ்வாறு பல கட்சிகளுடன் வடக்கில் இணைந்து செயற்படுகின்றோம். குறிப்பாக மக்களுடன் இணைந்து முன் நகர்கின்றோம்.
கேள்வி: மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் பேச்சு நடத்தியுள்ளீர்களா?
பதில்: தொண்டமான் எம்முடன் இணைந்து கொள்வார் என்ற பாரிய நம்பிக்கை எமக்கு உள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் எம்முடன் இருந்தார்.
கேள்வி:ஆனால் இதுவரை தொண்டமானுடன் உங்கள் கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசவில்லையே.
பதில்: அந்த விடயம் குறித்து இதுவரை நாங்கள் பேச்சு நடத்தவில்லை. ஆனால் அவதானத்துடன் இருக்கிறோம்.
கேள்வி:சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோரின் கட்சிகள் என்ன செய்யும் என்று கருதுகின்றீர்கள்?
பதில்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை புறக்கணிப்பார் என்று நம்புகின்றோம்.
கேள்வி:சி.வி. விக்கினேஸ்வரனுடன் பேச்சு நடத்தவுள்ளீர்களா?
பதில்:நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் பேச்சு நடத்துவோம்.
கேள்வி:தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவை பெறுவது தொடர்பில் அவர்களுடன் பேச்சு நடத்துவீர்களா?
பதில்:அது தொடர்பான விடயம் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பார்.
கேள்வி:நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?
பதில்:மதவாத, இனவாதம் இல்லாத எந்த தரப்புடனும் பேச்சு நடத்துவோம்.
கேள்வி:அரசியல் தீர்வு தொடர்பில் உங்கள் தரப்பு அணுகுமுறை என்ன?
பதில்:மக்களுக்கு உயர்ந்தபட்ச அதிகாரத்தை பகிர்வதே எமது நிலைப்பாடாகும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
கேள்வி: 13 ஐ மையமாகக்கொண்டுதான் தீர்வு வருமா?
பதில்: நான் அப்படி கூறவில்லை. மக்களுக்கு அதிகாரங்களை வழங்கும் செயற்பாட்டுக்கு செல்வோம்.
கேள்வி: உங்கள் தீர்வுத்திட்டம் என்ன என் பதனை மக்கள் எதிர்பார்க்கின்றனர் ?
பதில்:எம்மிடம் அதற்கான வேலைத்திட்டம் உள்ளது. அதனை நாம் முன்னெடுப்போம்.
கேள்வி:ஒரு வருடத்தில் தீர்வை பெற்றுத்தருவதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளாரே? உங்களிடம் இவ்வாறு நேரம் அவகாசம் இல்லையா?
பதில்:பிரதமர் ரணில் ஐந்து வருடங்களாக என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லை. இந்த விடயத்தில் ரணிலும் சுமந்திரனும் இணைந்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.
கேள்வி: தமிழ் மக்கள் எதனை எதிர்பார்க்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா?
பதில்: நாங்கள் அது தொடர்பில் மதிப்பீடு செய்துகொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களின் தேவைகள் என்ன? அவர்கள் எதனை உடனடியாக எதிர்பார்க்கின்றனர் போன்ற விடயங்களைத்தேடி ஆராய்ந்து மதிப்பீடு செய்துவருகின்றோம். இது தொடர்பில் நாங்கள் தீர்மானம் எடுக்கமாட்டோம். தமிழ் மக்களே தீர்மானம் எடுக்கவேண்டும். அதுவும் ஒருவகையான அதிகார பரவலாக்கம் தானே?
ஆனால் இங்கு வடக்கு–கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய விடயத்தை கூறவேண்டும். வடக்கு–கிழக்கு மக்கள் இம்முறையும் ஏமாற்றமடையக்கூடாது. ஒருமுறை எங்களுடன் கைகோருங்கள். எமக்கு அதில் நம்பிக்கை உள்ளது. நீங்கள் அச்சம், சந்தேகம் இன்றி வாழும் சூழலை உருவாக்குவோம்.
வடக்கு–கிழக்கு மக்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி அபிவிருத்திகள் செய்யப்படும். அனைவரதும் சிவில் உரிமை பாதுகாக்கப்படும். ஊழல் மோசடி அகற்றப்படும். கடந்த ஆட்சிக்காலங்களில் நாங்கள் விட்ட குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும்.
விசேடமாக வடக்கு–கிழக்கு மக்களின் பிரச்சினை விடயத்தில் அந்த மக்கள் பேச்சு நடத்த முன்வரவேண்டும். உங்கள் பிரச்சினை உங்களுக்குத்தான் தெரியும். நீங்கள் ஒரு பக்கத்தில் மறைந்து இருக்க வேண்டாம். நாங்கள் கரங்களை நீட்டியுள்ளோம். அவற்றை பற்றிக்கொள்ளுங்கள். ஒரு கையினால் கைதட்ட முடியாது.
கேள்வி: கோத்தபாய ராஜபக் ஷவும் சுமந்திரனும் சந்தித்து பேச்சு நடத்தியதாக கூறப்படுகின்றதே?
பதில்:சில காலத்துக்கு முன்னர் பேச்சு நடத்தியிருந்தார்கள்.
கேள்வி: என்ன பேசப்பட்டது?
பதில்: அவர் சந்திக்கவேண்டும் என்று கோரியிருந்தார். அதனால் சந்திப்பு நடந்துள்ளது.
கேள்வி: யார் சந்திக்கவேண்டும் என்று கோரியது?
பதில்: சுமந்திரன்
கேள்வி:ஏன் என்று தெரியுமா?
பதில்: கோத்தபாய ராஜபக் ஷ அனைத்து தரப்பினருடனும் திறந்த மனதுடன் பேசவேண்டும் என்ற கொள்கை உள்ளவர். அதனால் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கேள்வி:வடக்கு பகுதிக்கு நீங்கள் சென்று அந்த மக்களின் தேவை என்ன என்பது குறித்து ஆராய்ந்து பார்ப்பீர்களா?
பதில்: நான் நிச்சயமாக செல்வேன். அத்துடன் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் எமது வேட்பாளர் ஆகியோரும் வடக்குக்கு சென்று மக்களுடன் உரையாடுவார்கள்.
கேள்வி: உங்கள் தரப்பு வெற்றிபெற்றால் அடுத்த ஆட்சியில் பஷில் ராஜபக் ஷவின் வகிபாகம் என்ன?
பதில்: தற்போது என்ன செய்கின்றேனோ அதனை செய்வேன். ஜனாதிபதி மற்றும் பிரதமரது பணிகளுக்கு உதவுவேன்.
கேள்வி: பதவிகளை பெற மாட்டீர்களா?
பதில்: அதனை மக்களே தீர்மானிக்கவேண்டும்.
கேள்வி: உங்கள் வேட்பாளர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதனை எவ்வாறு கையாள்வீர்கள்?
பதில்: அது குறித்து மக்கள் தீர்மானம் எடுப்பார்கள். நாட்டுக்கு இன்று என்ன தேவை என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இன, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடியவர் யார் என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாகவேண்டும். மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்குவது அவசியமாகும்.
கேள்வி : கோத்தபாய ராஜபக் ஷவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் குறித்த விடயத்தில் குழப்பநிலை நிலவுவதாக கூறப்படுகின்றதே? உங்கள் பக்கம் சரியான பதில் வரவில்லையே?
பதில்: அதில் பதில் வழங்க ஒன்றுமில்லை. அது நீக்கப்பட்டுவிட்டது.
கேள்வி : எனினும் அதில் தெளிவற்ற தன்மை உள்ளதா?
பதில்: அவ்வாறு ஒன்றும் இல்லை. அவர் அதனை கைவிட்டுவிட்டார். அவ்வளவுதான். தற்போது உங்களுக்கு காணி ஒன்று உள்ளது. அதனை நீங்கள் யாருக்காவது கொடுத்துவிட்டீர்கள். தற்போது உஙகளிடம் அந்த காணி இல்லை. அவ்வளவுதான்.
கேள்வி : அப்படியாயினும் கச்சேரிக்கு சென்று அதனை எழுதிக் கொடுக்கவேண்டுமே?
பதில்: அதனை அவர் எழுதிக்கொடுத்துவிட்டார். அவர் தானே எழுதுவார். அது தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
கேள்வி : ஆளும் கட்சி வேட்பாளர்?
பதில்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகும் நபர் தொடர்பில் மக்களுக்கு சிறந்த தெளிவு இருக்கவேண்டும். அதற்கு 45 நாட்கள் போதுமானதல்ல. அமெரிக்காவில் ஒருவர் வேட்பாளராவதற்கு இரண்டு வருடங்கள் தேவையாகும். அதற்காக உழைக்கவேண்டும். இரண்டு வருடங்கள் பிரசாரம் செய்யப்படும். நிறைவேற்று அதிகாரத்துக்கு ஒருவரை நியமிக்கும்போது அவ்வாறுதான் இருக்கவேண்டும்.
நாங்கள் அதனை கிரமமாக செய்து வருகின்றோம். நாங்கள் மறைத்து வைத்திருந்து வேட்பாளரை கொண்டுவரவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் குறித்த சிறந்த தெளிவு மக்களுக்கு இருக்கவேண்டும். ஆனால் அது இங்கே இல்லை. நாங்கள் எமது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். அவரை வெற்றிபெற வைப்பதற்கான பிரசாரத்தை முன்னெடுப்போம். மக்களை நம்புகின்றோம். மக்களை நம்பி இந்த விடயத்தில் இறங்கியிருக்கின்றோம். மக்களின் ஆணையை எதிர்பார்க்கின்றோம். கிரிக்கட் விளையாட்டில் சில நேரம் பந்துவீச்சாளரின் பந்துவீசும் முறையில் மாற்றம் வரலாம். ஆனால் பந்துவீச்சாளர் மாறமாட்டார்.
கேள்வி : ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தை எவ்வாறு உள்ளது? அவர்கள் உங்கள் தரப்பை ஆதரிப்பார்களா?
பதில்: பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. முடிவுகள் குறித்து தற்போது கூறமுடியாது. நாம் ஏன் அதில் அவசரப்படவேண்டும்.
நேர்காணல் – ரொபட் அன்டனி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM