2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள “இலங்கை நிர்வாக சேவை” போட்டிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கான வதிவிட பயிற்சிப் பட்டறை இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அட்டன் “சீடா” கல்வி அபிவிருத்தி வள நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து நாளை 28 ஆம் திகதியும், நாளை மறுதினம் 29ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
இதற்கான அனுசரணையை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமும், “வீரகேசரி” நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் இருந்து போட்டிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 75 பேருக்கு மேற்படி பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றுமாறு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. ரமேஷ், வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன் ஆகியோர் மேற்கொண்டுள்ளார்கள்.
பயிற்சிப் பட்டறையில் வளவாளர்களாக சட்டத்தரணி ஆர். குகன், இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களான எப். கெனிஜுட், எஸ். பார்த்திபன், என். தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் மேற்படி ஏற்பாட்டாளர்களோடு, மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் போஷகர்களான ஆர். மகேஸ்வரன், எம். இராமஜெயம், ஆர். சீதாராமன், ஜே.பி. ஜெயபாலன், வீரகேசரி நிறுவனத்தின் சார்பில் கனிஷ்ட முகாமையாளர் எம். வாசுதேவன் உட்பட மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
பரீட்சார்த்திகள் கூடுதலான புள்ளிகளைப் பெறும் பொருட்டு ஊக்குவிக்கும் வகையில் மொத்தமாக 12 பயிற்சிப் பட்டறைகள் தலா 3 நாட்கள் வீதம் 4 தடவைகள் நடத்தப்படவுள்ளன. முதற்கட்டமாக இன்று முதல் 3 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளன. தொடர்ந்து ஏனைய பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்பட்டு ஒவ்வோர் அமர்வின் இறுதி நாளில் முன்னோடிப் பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் எம். தேவராசன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சிப் பட்டறைகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களாக அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர் டி. கஜேந்திரகுமார் கடமையாற்றுவார்.
நாடாளாவிய ரீதியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் பரீட்சார்த்திகள் 720 பேர் தோற்றவுள்ளார்கள். மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக 75 பேர் தோற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மாத்திரமே இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வருகின்றார்கள். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டிப் பரீட்சையில் அதி கூடுதலான புள்ளிகளைப் பெற்று பலர் சித்தியடையும் பட்சத்தில், நுவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள பிரதேச சபைகளிலும், பிரதேச செயலகங்களிலும், அமைச்சுகள், சுங்கத் திணைக்களம் போன்ற உயர் நிறுவனங்களில் செயலாளர்களாகவும், உயர்பதவி வகிக்கக் கூடிய வாய்ப்புகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எனவே, இது ஒரு சமூகக் கடமை என்ற வகையில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமும், வீரகேசரி நிறுவனமும் இணைந்து அனுசரணை வழங்கியுள்ளமை மலையகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாகவும் திருப்பு முனையாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM