(ஆர்.யசி)
அடுத்த ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை எம்மால் தீர்மானிக்க முடியுமே தவிர ஐக் கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க நாம் அவர்களின் பங்காளிக்கட்சி அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களின் தீர்மானம் தேர்தல் முடிவுகளை மாற்றும் என்ற எண்ணம் பிரதான கட்சிகளுக்கு இப்போது விளங்குகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன் அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தமக்கான ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கும் என்ற கருத்தினை முன்வைத்திருந்தனர். பிரதான கட்சிகள் தமக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் தமிழ் மக்களினதும் ஆதரவு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்ற நிலையில் இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டில் உருவாகும் எந்தவொரு அரசாங்கத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்தாக வேண்டும். யுத்த காலத்தில் தமிழ் மக்களின் மீதான அடக்குமுறை காரணமாக அப்போது உருவாகிய அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காத போதிலும் முஸ்லிம் மக்களின் ஆதரவு இருந்தது.
ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், முஸ்லிம் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரித்தமைக்கான பிரதான காரணமே ஏற்கனவே இருந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காகவே ஆகும். அவ்வாறு இருக்கையில் இன்றும் தீர்மானிக்கும் சக்திகளாக தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றமையே உண்மையாகும். ஆனால் ஒரு தரப்பை எதிர்க்கும் காரணத்திற்காக இன்னொரு தார்ப்பினருக்கு கண்மூடித்தனமாக ஆதரவை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க முன்வருவதாக பல அரசாங்கங்கள் , பல தலைவர்கள் எமக்கு வாக்குறுதிகளை கொடுத்தும் இன்றுவரை அவை பலிக்கவில்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் மக்களுக்கு சில நன்மைகள் நடந்துள்ளன.
குறிப்பாக இராணுவத்தின் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டன. சர்வதேச ஒத்துழைப்புடன் காணாமல்போன எமது உறவுகளை கண்டறியும் அலுவலகம் உருவாக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடயத்தில் சில விடுவிப்புகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இருந்த ஆட்சியை விடவும் இந்த ஆட்சியில் எமக்கு சில நன்மைகள் கிடைத்தது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் இது போதுமான விடயங்கள் அல்ல. எமது மக்களுக்காக முன்னெடுத்த விடயங்கள் அனைத்துமே இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன. புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகள் முடிவுறாது உள்ளது. காணிகள் விடுவிப்பு முழுமைப்படுத்தப்படவில்லை. அபிவிருத்திகள் முன்னெடுப்பதில் தாமதங்கள், வீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே இவ்வாறான நிலையில் இப்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்கும் தரப்பு வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் பிரதான வேட்பாளர்கள் தமிழ் வாக்குகளை தக்கவைக்க முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் இவர்களை ஆதரிக்க முன்னர் இவர்கள் தமிழ் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் என்ன என்பதே முக்கியமானவையாகும்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளில் முன்வைக்கும் தீர்வுகள் என்ன? அரசியல் அமைப்பு உருவாக்கும் விடயத்தில் தமது நிலைப்பாடு என்ன? இவற்றுக்கான தெளிவான பதிலையும் நம்பகத்தன்மை வாய்ந்த வாக்குறுதிகளையும் அவர்கள் கொடுக்க வேண்டும். அதன் பின்னரே எந்த தரப்புடனும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும். ஆனால் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க எமது ஆதரவை எவருக்கும் வழங்க தயாரில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அவர்களே தீர்மானிக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவொரு பிரதான கட்சியினதும் பங்காளிக் கட்சி இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM