- வெற்றி அடையப்போவது கோத்தாபயவே
- கூட்டமைப்பால் பயனில்லை புலிகளின் வழியில் விக்கி
- பொய்யுரைக்கிறார் வரதராஜப்பெருமாள்
- சீனாவின் திட்டத்திற்கு மாற்று யோசனை உண்டு
- அமெரிக்காவின் கைக்கூலியாக மைத்திரி-ரணில் அரசு
- ராஜபக் ஷவினருடன் தமிழ்தரப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டும்
தெற்காசியாவில் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதால் தான் நாம் அதிக அக்கறை காட்டுகின்றோம். இலங்கையில் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் ஆட்சிமாற வேண்டும்.
ஆட்சி மாறாது என்றால் எதனையுமே செய்ய முடியாது. நானோ அல்லது எமது கட்சியோ கூறுவதற்கு செவிசாய்கின்ற ஆட்சி அமைக்கின்றபோது நாம் தமிழர்களுக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிக்குமாறு கூறுவோம். அதுமட்டுமன்றி, தமிழர்களுக்காக இலங்கை வீதிகளிலேயே இறங்கி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடத் தயாராகவே இருக்கின்றேன் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அவர், தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றை நடத்தியிருந்தபோது சமகால விடயங்கள் தொடர்பிலான வினாக்களுக்கு பதிலளித்திருந்தார். அவை வருமாறு:
கேள்வி:- இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆட்சி யாருடைய கைகளில் இருக்க வேண்டுமென்று கருதுகின் றீர்கள்?
பதில்:- யார் ஆட்சிப்பீடத்தில் அமரவேண்டும் என்பதை நாம் கூறமுடியாது. அது இலங்கையின் உள்ளக விடயம். இறைமையுள்ள இலங்கை நாட்டின் மக்களே அதற்கான ஆணையை வழங்க வேண்டும். அதில் நாம் தலையீடுகளைச் செய்ய முடியாது. ஆனால், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு மாநாடு நடைபெற்றிருந்தது.
இதன்போது பாகிஸ்தானுக்குச் சார்பாக தற்போதைய இலங்கை அரசாங்கம் வாக்களித்திருந்தது. தமிழகத்திலிருந்து காஷ்மீர் வரையில் உள்ள அனைத்து தீவிரவாதிகளும் பாகிஸ்தானின் பின்னணியில் செயற்படுகின்றார்கள். அவ்வாறிருக்கையில், அத்தகையதொரு நாட்டுக்கு ஆதரவாக இலங்கை செயற்பட்டமையானது புரியாதிருக்கின்றது.
இந்த நாட்டில் அதிகாரப்பகிர்வு குறித்து பேசப்படுகின்ற நிலையில் தற்போது மாகாண சபைகள் இயங்காத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பழைய நிலைமைக்கே இந்தநாடு சென்றுவிட்டது. ஆகவே எடுத்த எடுப்பிலேயே ராஜபக் ஷ தரப்பினரை எதிர்க்காது தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
கேள்வி:- இலங்கை ஆரம்ப நிலைமைக்குச் சென்றுள்ளதாக கூறுகின்றீர்களே. அதற்கு யார் காரணம் என்கின்றீர்கள்?
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமாகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை உரிய காலத்தில் செய்திருக்க வில்லை. அதனாலேயே நிலைமை மோசமடைந்திருக்கின்றது.
இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் அமெரிக்காவுடன் உறவுகள் வைத்திருப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் கைக்கூலியாகவே இருக்கின்றது. அத்துடன் பாகிஸ்தானுக்கும் ஆதரவாகச் செயற்படுகின்றது.
கேள்வி:- நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்துகின்றீர்கள். ஆனால், தமிழ் மக்களின் பெருவாரியான ஆணை இருக்கின்றதே?
பதில்:- தமிழ் மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்கின்றதைப்போன்று ராஜபக் ஷவுக்கும் சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. அச்சந்தர்ப்பத்தினை அவர்கள் பயன்படுத்தவில்லை. ஆகவே அவர்களால் பயனில்லை. அவர்களை மாற்றவேண்டும்.
கேள்வி:- அப்படியென்றால் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகின்ற கூட்டணியை மாற்றாக எடுக்கலாமா?
பதில்:- இல்லை. அவர்கள் முழுமையாக விடுதலைப்புலிகளின் நிலைப்பாடுகளை கொண்டவர்கள். அவர்களால் உணர்ச்சிகரமான விடயங்களையே முன்னெடுக்க முடியும். செயற்பாட்டு ரீதியில் எதனையும் முன்னெடுக்க முடியாது.
கேள்வி:- தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு அமையவேண்டும்?
பதில்:- தமிழ் மக்கள் அரசி யல் நிலைப்பாட்டினை மாற்றவேண்டும். சிறிசேன – ரணில் கூட்டணியும் எதனையும் செய்ய வில்லை. அதற்கு மாற்றாக இருக்கும் ஒரேதெரிவு ராஜபக் ஷ தரப்பினரே. ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபயவை எழுந்தமானமாக எதிர்க்காது ஆட்சியில் அமர்வதற்கு ஆதரவளித்து விட்டு கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். எதிர்த்து வாக்களித்தால் கோரிக்கைகளை முன்வைக்க முடியாதல்லவா? அதற்காகவே தமிழர்களுக்காக இந்துத்துவ கொள்கைகளுடனான புதிய கட்சியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுக்களை முன்னெடுத்துள்ளேன்.
கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்றால் ராஜபக் ஷவினர் சீனா சார்புடையவர்கள் என்ற பகிரங்க விமர்சனம் இருக்கின்றதே?
பதில்:- இல்லை. அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உதார ணமாக அம்பாந்தோட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். தற்போதைய ஆட்சியாளர்களே சீனாவுக்கு 99 வருடங்கள் முழுமையான உரித்தை வழங்கினார்கள். ராஜபக் ஷ காலத்தில் சீனாவின் முதலீடுகள் இருந்தாலும் அவை அனைத்துமே இலங்கையின் நிருவாகத்தின் கீழ் தான் காணப்பட்டன. அதேபோன்று அமெரிக்காவின் பேச்சினைக் கேட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இலங்கை செயற்படுகின்றது. எனவே இந்தியாவால் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது.
கேள்வி:- 'ஒரே மண்டலம் ஒரே பாதை' திட்டத்தினை முன்வைத்து சீனா தெற்காசியப் பிராந்தியத்தில் காய்களை நகர்த்தியபோது இந்தியா சீற்றமடைந்ததோடு அந்த திட்டத்திற்கு எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்ததே?
பதில்:- சீனாவின் ஒரே மண்ட லம் ஒரே பாதை திட்டத்தினை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் குன்மிங், ராங்கூன், கொல்கத்தாவை இணைக்கும் வகையில் பாதையமைப்பதற்கே சீனா முயல்கின்றது. அதற்கே நாங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தோம். அவர்களின் திட்டப்படி கடல் – தரைவழியை இணைக்கப்பார்க்கின்றார்கள். அதற்காக மாற்று முன்மொழிவொன்று எம்மிடம் உள்ளது. அதுபற்றி கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம். அதாவது, மும்பை, உத்திரபிரதேஷ், கயிலாச பிரதேசம் ஊடாக பாதையமைக்க இடமளிக்க முடியும். அதுபற்றிய பேச்சுக்களை சீனாவுடன் ஆரம்பித்துள்ளோம். இந்த முயற்சியை சீனா விரும்பாது விட்டால் பாகிஸ்தானிடமுள்ள காஷ்மீர் பகுதியை நாம் மீட்டதன் பின்னர் அதன் வழியாகவும் தரைவழிப்பாதையை அமைக்கலாம்.
கேள்வி:- தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி நிற்கையில், அவர்கள் எந்த அடிப்படையில் ராஜபக் ஷ தரப்பினரை ஆதரிப்பது?
பதில்:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகளை ஒடுக்கியமைக்காக ராஜபக் ஷவுக்கு 99 சதவீதமான இந்தியர்கள் நன்றி செலுத்தியுள்ளார்கள். புலிகள் தமிழகத்தில் ஆயுத கலாசாரத்தினை ஏற்படுத்தி சகபோராளியான பத்ம நாபாவையே படுகொலை செய்தனர். ராஜபக் ஷ போரை நிறைவு செய்துள்ளார். பின்னர் மனித உரிமைகள் விடயத்தினை கையிலெடுத்தபோதே, அமெரிக்கா தனது நலன் நிறைவடைந்தவுடன் இதனை கைவிட்டு விடும் என்று நான் எச்சரித்திருந்தேன். ஆனால் யாரும் கேட்வில்லை. கடைசியில் அதுதான் நடந்துள்ளது. அமெரிக்காவை நான் நன்கு அறிந்தவன்.
ராஜபக் ஷ மீது மனித உரிமை விடயங்கள் உட்பட அவர் குறித்து எதிர்மறையான பொய்யான பிரசாரங்கள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவும் இதன் பின்னணியில் உள்ளது. எமது நாட்டின் சில அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் தான் அவர் மீது தமிழர்கள் தவறான மனப்பான்மையை கொண்டுள்ளனர். அதனை மாற்ற வேண்டும். ராஜபக் ஷ அமெரிக்காவின் தாளத்திற்கு ஆடமாட்டார். அதேநேரம் இந்தியாவினை முழுமையாக ஆதரிப்பார் என்று நான் கூறவில்லை. மாறாக இந்தியாவுக்கு எதிரான சக்திகளை ஆதரிக்கமாட்டார்.
கேள்வி:- தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றீர்களே. உங்களுக்கும் உரிமை கேட்டு போராடிய அவர்களுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் பிரச்சினைகள் உள்ளனவா?
பதில்:- அன்டன் பாலசிங்கம் முதலில் என்னை சி.ஐ.ஏ.முகவர் என்று பிரசாரம் செய்தார். என்மீது அவர் எவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும். நான் அமெரிக்காவில் நீண்டகாலமாக இருந்தவர் என்ற அடிப்படையிலும், இடதுசாரித்துவத்தினை எதிர்ப்பவன் என்றவகையிலும் அமெரிக்காவுக்கு என் மீது விருப்பம் உள்ளது. அவ்வளவு தான். மேலும் பிரபாகரனின் கொலைப்பட்டியலில் எனது பெயர் இருப்பதாக வைகோ கூறினார். அதன் பின்பு எனது பட்டியிலில் பிரபாகரனின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக பதிலளித்தேன். ஈற்றில் நான் சொன்னதே நடைபெற்றது. அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணியவைக்கும் செயற்பாடுகளை நான் அடியோடு வெறுகின்றேன்.
கேள்வி:- கடந்த ஆண்டில் நடைபெற்ற அரசியல் புரட்சிபற்றி அவதானம் செலுத்தியிருந்தீர்களா?
பதில்:- ராஜபக் ஷ பிரதமராக பதவியேற்றவுடன் எனக்கு தெரிந்த தமிழ் பிரமுகர்கள் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அவருடன் சந்திப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். இருப்பினும் கூட்டமைப்பு எழுத்துமூலமாக பலகோரிக்கைகளை முன்வைத்திருந்தது. ராஜபக் ஷ முதற்படியாக சிலவிடயங்களை செய்கின்றேன் என்று கூறியபோதும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. சிறிசேன, ரணில் ஆட்சியில் தற்போது எதுவுமே கிடைக்கவே இல்லையே. ராஜபக் ஷ மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகிவிட்டது. நான் கோத்தாபயவையே கூறுகின்றேன். அவர் நிச்சயம் வெற்றிபெறுவார். ஆகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ராஜபக் ஷ
தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுத்து அவர்கள் ஆட்சியில் செய்யவேண்டிய விடயங்களை எழுத்துமூலமாக பெற்றுக்கொள்வதே சிறந்த அரசியல் இராஜதந்திர நகர்வாக இருக்கும்.
கேள்வி:- உங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதமர் நரேந்திரமோடி – மஹிந்த ராஜபக் ஷ சந்திப்பு எவ்வாறிருந்தது?
பதில்:- விடுதலைப்புலிகளை அழித்தமையால் நான் ராஜபக் ஷவுக்கு ஆதரவாக இருக்கின்றேன். வைகோ, பிரபாகரன் இருப்பதாக கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் எங்கும் இல்லை. இலங்கையில் தன்மான ஆட்சியொன்றை முன்னெடுக்க கூடிய தகுதி மஹிந்த ராஜபக் ஷவுக்கே உண்டு. கோத்தாபயவுக்கும் உள்ளது. இது எனது நிலைப்பாடாகும். ஆனால் பிரதமர் மோடி அவ்வாறு சிந்திக்க மாட்டார். எமது நாட்டிற்கு(இந்தியாவுக்கு) எது நல்லது, கூடாது என்று தான் சிந்திப்பார்.
தனிப்பட்ட விஜயமாக டெல்லிக்கு வந்திருந்த மஹிந்தவை பிரதமர் மோடி சந்திக்க மாட்டார். இலங்கையில் உள்ள அரசுக்கு பிடிக்காது என்பதால் சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் மஹிந்தவின் உரையையும் அதற்காக கூடிய கூட்டத்தினையும் கண்டு பிரதமர் மோடியே மஹிந்தவை சந்திக்க தயார் என்று கூறி பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பிரதமர் மோடி வந்தபோதும் மஹிந்தவை சந்தித்திருந்தார் அல்லவா? தெற்காசியாவில் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதால் தான் நாம் அதிக அக்கறை காட்டுகின்றோம்.
கேள்வி:- தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பா.ஜ.கவின் அணுகுமுறை எவ்வாறு உள்ளது?
பதில்:- எம்மைப்பொறுத்தவரையில் தமிழர்கள் - – சிங்களவர்கள் இடையே பெரிய வேறுபாடில்லை. உதாரணமாக மொழியை எடுத்துக்கொண்டாலே பல ஒற்றுமைகள் உள்ளன. இந்துசமயத்திற்கும், பௌத்தத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. எமது நாட்டின் அரசியலமைப்பில் முஸ்லிம், கிறிஸ்தவர் அல்லாதவர்கள் இந்துக்கள் என்று தான் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்கள். ஆகவே, அந்த அடிப்படையில் தான் நாம் நோக்குகின்றோம். ஆகவே தமிழர்களின் கோரிக்கையை அவர்கள் தான் கூறவேண்டும். ராஜபக் ஷ செய்வதாக கூறும் விடயத்தினை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதே எமது நிலைப்பாடாகவுள்ளது.
கேள்வி:- இந்திய -– இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறாவது இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தமளிப்பீர்களா?
பதில்:- தேர்தல் நடைபெற்று ஆட்சி மாறாது என்றால் எதுவும் செய்யமுடியாது. தற்போதைய அரசுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
கேள்வி:- பெரும்பான்மையான தமிழ் தலைவர்கள் இலங்கை தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் தலையீடு தேவையென்பதை பகிரங்கமாகவே கூறிவருகின்ற நிலையில் இத்தனைகாலமும் இந்தியாவால் அதியுச்சமான அழுத்தத்தினை வழங்க முடியாதிருக்கின்றதே?
பதில்:- இந்தியா வரையறுக்கப்பட்ட அளவில் தான் தலையீடுகளைச் செய்ய முடியும். தற்போது வரையில் இந்தியாவின் தேக்க நிலைக்கு அதிகாரிகளே காரணமாகின்றார்கள். பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரியளவில் எதுவுமே இடம்பெற்றிருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இந்தியாவால் பகிரங்கமாக இலங்கை அரசுக்கு எதனையும் கூற முடியாது. அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது.
கேள்வி:- உங்களின் கருத்துகளின் அடிப்படையிலான ஆட்சியொன்று அமைகின்றபோது தமிழர்கள் கோரும் அதிகாரப்பகிர்வினை வழங்குங்கள் என்று ஆட்சியாளர்களுக்கு பகிரங்கமாக கூறுவீர்களா?
பதில்:- ஆம், எனது கருத்துகளுக்கு செவிமடுக்கும் ஆட்சி ஏற்படுகின்றபோது, தமிழர்களுக்காக இலங்கை வீதிகளிலேயே இறங்கி அவர்களின் நியாயமான கோரிக்கைளுக்காக போராடத் தயாராகவே இருக்கின்றேன். இந்த உறுதிமொழி மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளலாம்.
கேள்வி:- வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட வகையில் இந்துக்கோவில்கள் மற்றும் வரலாற்று இடங்கள் பௌத்தத்தின் பெயரால் ஆக்கிரமிக்கப்படுகின்றதே?
பதில்:- இங்கு பௌத்தர்களே பெரும்பான்மையானவர்கள். அவர்ளுக்கும் இந்துக்களுக்கும் இடையில் மேலைத்தேய கிறிஸ்தவர்கள் பிரிவினையை உருவாக்கி மனங்களில் நஞ்சூட்டியுள்ளனர். எனது விருப்பத்தின் பிரகாரம் தீர்மானங்களை எடுக்கவல்ல ஆட்சியொன்று உருவாக்கப்பட்டால் இவ்வாறான விடயங்களே இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை. பௌத்தத்திற்கும், இந்துத்துவத்திற்கும் இடையில் வேறுபாடுகள் பெரிதாக இல்லை. அப்படியிருக்கையில் இவ்விரண்டிற்குமிடையில் பிளவுகள் இருக்கவே கூடாது.
கேள்வி:- இல்லை, தமிழர்கள் பௌத்தத்தினை எதிர்க்கவில்லை. ஆனால் எந்த அரசுகள் ஆட்சியிலிருந்தாலும் அவர்களின் துணையுடன் நடைபெறும் ஆக்கிரமிப்புக்களையே எதிர்க்கின்றார்கள்?
பதில்:- தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற மனநிலையுடன் தான் சிங்களவர்கள் இருக்கின்றார்கள். அதுபோன்று தான் தமது மதமே முதன்மையானது என்ற மனநிலை அவர்களுக்கு உள்ளது. அது வரலாற்றில் உள்ள தவறாகும். ஆகவே வரலாற்றினை மாற்றியமைக்க வேண்டும். புதிய வரலாறு எழுதப்பட்டு இரு சமயத்தினரையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும். இதனை விட தமிழர் பகுதியில் கலாசார, பாரம்பரிய பண்பாடுகளுக்கு எதிரான விடயங்கள் இடம்பெற்றால் நான் தனியாளாகவாவது தலையீடு செய்வேன்.
கேள்வி:- ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இந்த விடயங்கள் எவையும் செய்யப்பட்டிருக்கவில்லையே?
பதில்:- அவருடைய ஆட்சிக் காலத்தில் எதுவும் செய்யவில்லை என்று கூறி மைத்திரி-ரணில் அரசினை கொண்டுவந்தீர்கள். ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள். ஜனநாயக கட்டமைப்பில் செயற்பாடுகளற்றவர்களை மாற்றுவது தான் வழமை. அதற்காக முன்னையவர்கள் வந்தால் நடக்குமா நடக்காதா என்றெல்லாம் இரண்டு மனநிலையில் இருக்க முடியாது. தமிழ் மக்கள் யாரி;ல் திருப்தியைக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கே வாக்குகளை வழங்க வேண்டும். ஆனால் அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்காது சுயமாக சிந்திக்க வேண்டும்.
கேள்வி:- வீரகேசரி வாரவெளியீட்டுக்கு கடந்த ஆண்டு வழங்கிய விசேட செவ்வியின்போது (ஆகஸட்; 26.2018 பிரசுரம்) வடக்கு, கிழக்கு முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் இருந்தபோது தமிழீழ பிரகடனத்தினை செய்யுமாறு ராஜீவ் காந்தி உங்கள் ஊடாக தெரிவித்ததாக கூறியிருந்தீர். ஆனால், வரதராஜப்பெருமாள் அவ்வாறான கருத்துகள் எவையும் உங்களிடமிருந்து கிடைக்கவில்லை என்று மறுத்துள்ளாரே?
பதில்:- அவர் பொய்யுரைக்கின்றார். எனக்கு பொய் கூற வேண்டிய அவசியம் இல்லை. வரதராஜப்பெருமாளும், அவருடைய செயலாளர் விக்னேஸ்வரனும் என்னைச் சந்தித்தபோது நான் ராகூPவ் காந்தி கூறிய விடயத்தினை தெரிவித்தேன். அப்போது அவர்கள், ராஜிவ் காந்தி இந்தக் கருத்தினை தம்மிடத்தில் நேரடியாக கூறவேண்டும் என்று கோரினார்கள். அது இயலாத காரியம் அல்லவா. தேர்தல் காலத்தில் அவரால் அவ்வாறு கூறமுடியாது. பின்னர் தேர்தலில் ராஜீவ் தோல்வி அடைந்தவுடன் வரதராஜப்பெருமாள் பிரகடனத்தினைச் செய்தார். அப்போது அனைத்துமே கைமீறிப்போய்விட்டன. பின்னர் வரதராஜப்பெருமாள் எமது நாட்டில் தான் அடைக்கலம் தேடி வந்திருந்தார்.
கேள்வி:- உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ‘ஹிந்தி மொழி' தொடர்பான கருத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- அமித் ஷாவின் கருத்து இந்திய அரசியலமைப்பினை மாற்றிவிடாது. முதலில் தாய்மொழிக்கே முன்னுரிமை. ஆனால் அண்மைய காலத்தில் ஆங்கிலம் சர்வதேச மொழியாகிவிட்டதால் அதனையும் கற்கின்றார்கள். தமிழகத்தில் ஹிந்தி மொழிக் கல்வியை அதிகப்படுத்துமாறு தனிப்பட்ட முறையில் என்னிடத்தில் பலர் கூறுகின்றார்கள். இளைய சமூகத்தினர் நல்ல வேலைவாய்ப்பிற்காக ஹிந்தியை கற்கின்றார்கள். ஹிந்தியில் ஆரம்பத்தில் உருது மொழி கலப்பிருந்ததால் கற்பதில் கடினம் இருந்தது. ஆனால், தற்போது மொழிசீர்திருத்தத்தின் பிரகாரம் அது இலகுபடுத்தப்பட்டு விட்டது.
கருணாநிதியை ஒருமுறை சந்தித்தபோது ஹிந்தி தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்தேன். தமிழில், சமஸ்கிருதத்தில் உள்ள பலசொற்கள் ஹிந்தியில் இருப்பதைக் கூறினேன். அகராதியில் ஆதாரங்கள் உள்ளதாகவும் சொன்னேன்.
ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் அவருடைய பெயரும், கட்சியின் சின்னமான உதயசூரியனும் சமஸ்கிருத மொழியாகும். அவர் கட்சி சின்னம் கதிரவன் என்று என்றுமே கூறியதில்லையே. ஆகவே ஹிந்தி திணிப்பு என்ற மனநிலையிலிருந்து விடுபட்டு மொழி என்ற அடிப்படையில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
நேர்காணல்:- ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM