தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் தலையீடு செய்துகாத்திரமான தீர்வு வழங்கவேண்டும் எனத் தெரிவித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு – கிழக்கு இணைப்புக்கு இந்திய அரசாங்கம் கரிசனை காட்டவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு யாழ்.முற்றவெளியில் நேற்று இடம் பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இலங்கை அரசாங்கம், சிங்கள அரசியல் வாதிகள், சர்வதேச சமூகம் போன்றவை தமிழ் மக்களுடைய இன்றைய நிலைமைகளை அறிந்துகொள்ளவேண்டும். இந்த எழுச்சி மூலம் வைத்துள்ள கோரிக்கைகள் புதிய விடயங்கள் அல்ல. யுத்தத்துக்கு பிற்பாடு தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் துன்பப்பட்டார்கள். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், சிங்கள் மக்கள் வாழாத இடங்களில், பௌத்த மக்கள் வாழாத இடங்களில், இராணுத்தினரால் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதும் அதனோடு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதும் நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ் மக்களுடைய புராதன இடங்களான கன்னியா வெந்நீரூற்றும் முல்லைத்தீவில் நீராவியடிப்பிள்ளையார் கோவிலும் நெடுங்கேணியில் வெடுக்குநாறி மலை போன்ற தமிழ் மக்களின் புராதன இடங்கள் எல்லாம் பௌத்த துறவிகளினால் பறிமுதல் செய்யப்பட்டு அங்கு புதிய புத்தர் சிலைகள், பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுவது மட்டுமன்றி சிங்களக்குடியேற்றங்கள் நிறுவப்பட்டு தமிழ் இனப்பரம்பலை குலைக்கின்ற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இன்று நாங்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகள் இனப்பிரச்சினைக்கு அப்பால் யுத்தத்துக்குப் பிற்பாடு மிகவேகமாக இலங்கை அரசாங்கம் ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைத்து செயற்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பௌத்த விகாரைகளைக் கட்டுவது, சிங்கள மக்களை குடியேற்றம் செய்வது, இவற்றைச் செய்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இடங்களில் அவர்களை சிறுபான்மையாக்கி அவர்களுடைய அடையாளங்களை அகற்றி தமிழ் மக்கள் தேசிய இனம் என்பதை மாற்றி அவர்களை இல்லாதாக்குகின்ற விடயத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
யுத்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். ஒட்டுமொத்தமான யுத்தகாலத்தில் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சம் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக தமிழினப்படுகொலை இடம்பெற்றுவருகின்றது.
ஆகவே இந்தப் படுகொலையில் இருந்து தமிழ் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். தமிழ் மண்ணை காப்பாற்றவேண்டும். தமிழ் மக்களின் புராதன சின்னங்கள் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் இந்த மண்ணில் தேசிய இனமாக வாழமுடியும். இந்த அடிப்படையில் தான் இக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. சிங்கள அரசியல் வாதிகளைப் பொறுத்தவரையில் தற்போது இந்த அரசாங்கம் வந்து நான்கு வருடங்கள் முடிந்துள்ள நிலையில் குறித்த கோரிக்கைகள் ஜெனீவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே ஆகும்.
அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, மக்கள் மீளக்குடியமர்த்தல் என்பவற்றை எல்லாம் செய்வதாக இணங்கினார்கள்.
அவர்களால் வாக்குறுதி அளித்தபடி எந்த விடயமும் நான்கு வருடம் முடிந்தும் நிறைவேற்றப்படவில்லை. தொடர்ச்சியாக
நிலங்களை கபளீகரம் செய்தமை, ஆலயங்களை அடித்து நொறுக்குகின்ற செயற்பாடுகள் தொடர்கின்றன.
இவர்களுடைய செயற்பாடுகள் தமிழினத்தையே அழிக்கின்ற செயற்பாடாகவே இடம்பெறுகின்றன.
பாராளுமன்றம் அரசியல் அமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. 83 தடவைகள் கூடிக்கலைந்தார்கள். ஆனால் பாராளுமன்றத்தில் ஒரு இடைக்கால அறிக்கை வந்தது. ஆனால் அவை இன்று குப்பைத்தொட்டிக்குள் போடப்பட்டுள்ளன. இப்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வேட்பாளர்கள் வருகின்றார்கள். சஜித் வருகிறார். ரணில் விக்கிரமசிங்க வருகிறார். ஜே.வி.பி.வருகின்றது.
பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள். எல்லோரும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி செய்கின்றோம் எனக் கூறுகின்றார்கள். ஏற்கனவே கம்பரெலிய அபிவிருத்தித் திட்டம் நடைபெறுவதாக கூறுகின்றார்கள். புதிய புதிய அபிவிருத்தி பற்றிக் கதைக்கின்றார்கள். யாழ்ப்பாணம் வந்த சஜித் தான் ஜனாதிபதியாக வந்ததும் ஆறு மாதத்துக்குள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக் கூறுகின்றார். ஆனால் என்ன பிரச்
சினையைத் தீர்த்து வைக்கப்போகிறார் என்று ஏதாவது திட்டங்கள் இருக்கின்றதா என்றால் எதுவுமே இல்லை.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் மூன்று வருட காலம் தேவை எனக் கூறுகின்றார். ஜே.வி.பி.யே தான் வடக்குக் கிழக்கை பிரித்தது. நாங்கள் ஆளுகைக்குள் வந்தால் இந்த மாகாண முறைமை வேண்டாம் உள்ளூராட்சிமன்றங்களுக்கு அதிகாரம் கொடுத்தால்போதும் என்கிறார்கள். இவ்வாறானவர்கள் தான் எம்மை நோக்கி வருகின்றார்கள். ஆனால் நாங்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளவேண்டும். எமது மண்ணில் எமது பாதுகாப்பு எமது இனத்தின் பாதுகாப்பு, எமது இனத்தின் அடையாளம், எமது மொழி, எமது கலாசாரம், பண்பாடு பாதுகாக்கப்படவேண்டும் என்பதை நான் உட்பட அனைத்துதமிழ் அரசியல் வாதிகளும் புரிந்துகொள்ளவேண்டும்.
நாங்கள் யாருடனும் பேசலாம், யாருடனும் கருத்துக்கள் பரிமாறலாம். ஆனால் எங்களுடைய முக்கியமான விடயம் என்பது வட–கிழக்கு இணைந்த தமிழர்தாயகமாகும். ஏற்கனவே இது இருந்தது. இனி மீள இணைக்கப்பட்டால்தான் தமிழ் மக்கள் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள்.
ஏற்கனவே கூறப்பட்டது போல் இது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. வட – கிழக்கு இணைத்தல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த இணைப்பு தற்போது ஒரு தலைப்பட்சமாக மறுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பை மீண்டும் கொண்டுவரவேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது. இந்திய அரசாங்கம் இது குறித்து சிந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
யுத்தம் நடந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேச சக்திகள் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவாக இருந்தன. எமது போராட்டம் பயங்கரவாத போராட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் சித்தரிக்கப்பட்டது. எமது போராட்டம் தமிழ் மக்களுடைய பாதுகாப்புக்கான போராட்டம். எமது போராட்டம் தமிழினத்தை அழிவிலிருந்து பாதுகாக்கின்ற போராட்டம்.
தமிழ் மக்களின் தற்பாதுகாப்புக்கான போராட்டம். ஆனால் இப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டு பயங்கரவாத போராட்டமாக கொண்டு வரப்பட்டு அது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிர்க்கதியான நிலைக்கு இலங்கை அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட சூழலில் இருக்கின்றோம்.
இந்த அழிவிலிருந்து தமிழ்தேசிய இனம் காப்பாற்றப்படவேண்டும். தமிழ் மக்கள் நிம்மதியாக, சுதந்திரமாக தமது மண்ணில் வாழவோண்டும். அவர்களுக்கு உரித்தான சுதந்திரம் கிடைத்தாகவேண்டும்.
சர்வதேச சமூகத்துக்கு தெரியும் இலங்கை அரசாங்கம் ஒரு இஞ்சி கூட நகரமாட்டாது என்பது. தமிழ்த்தேசிய இனத்துக்கு எதுவும் செய்யமாட்டாது.
ஆகவே சர்வதேச சமூகத்தின் உறுதியான பங்களிப்பு இந்தப் பிரச்சினைக்குத் தேவை. நிச்சயமாக கொழும்பை நம்பி நாங்கள் ஏமாந்தது மாத்திரமன்றி கொழும்பை நம்பிய பலபேர் தாங்களும் ஏமாந்துவிட்டோம் எனக்கூறுகின்றார்கள் அவ்வாறான சூழ்நிலையில் வடக்கு – கிழக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியி ருக்கின்றோம். எமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தியிருக்கின்றோம். இதனை இலங்கை அரசாங்கம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாள ராக களம் இறங்குபவர்களுக்கு விளங்க
வேண்டும். இந்தியாவுக்கு விளங்கவேண் டும். சர்வதேச சமூகத்துக்கு விளங்கவேண் டும் தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிந்திக்கப்பட்டு ள்ளார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM