(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் சில தினங்களாகவே நாட்டின் பல பகுதிகளிலும் தொடரும் கடும் மழை காரணமாக பல பிரதேசங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தென் மேல் பருவ பெயர்ச்சியின் காரணமாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார். அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் 192 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
150 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி
நுவரெலியா மாவட்டத்தின் அல்டன் பிரதேசத்திலேயே நேற்று திங்கட்கிழமை மதியம் வரை அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பிரதேசத்தில் 192 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும் நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய , வடக்கு மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் 100 - 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய பிரதேசங்களில் 75 மில்லி மீற்றர் மழை பதிவாகும் அதே வேளை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காற்றின் வேகம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் மற்றும், புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை வழியாக மன்னார் ஊடான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 - 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் கடல் சற்று கொந்தழிபுடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஆற்று நீர்மட்டம்
களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனுகல ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் நேற்று திங்கட்கிழமை மதியம் வரைவில் களு கங்னையின் நீர் மட்டம் 5.88 மிற்றராகக் காணப்பட்டது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை தொடருமானால் சில மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
இவற்றில் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி
இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல, கலாவான மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், எஹெலிய கொட பிரதேசத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேங்களில் மண்சரிவு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கேகாலை
கேகாலை மாவட்டத்தில் வராகாபொல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை
களுத்துறை மாவட்டத்தில் வலல்லவிட்ட, தொடங்கொட, இங்கிரிய, மத்துகம ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அறிவுறுத்தலும், புலத்சிங்கள பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்கள்
கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக கண்டி, கேகாலை, அம்பாந்தோட்டை, காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி
கண்டி மாவட்டத்தில் தும்பன, உடபலாத்த, உடுநுவர மற்றும் ஹரிஸ்பத்துவ ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பலத்த காற்றினால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இங்கு 8 குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கேகாலை
கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கன மழை மற்றும் மரம் முறிந்து வீழ்ந்ததால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம மற்றும் லுனுகம்வெஹர ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் திடீர் வெள்ளத்தினால் 69 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி
காலியில் நாகொட பிரதேச செயலகத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் குடியிருப்பொன்று சேதமானதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று, மன்முனை மேற்கு மற்றும் மன்முனை தென்மேற்கு ஆகிய பிரதேசங்களில் பலத்த காற்றின் காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, தமன மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் அதிக காற்றினால் 25 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு சுமார் 25 குடியிருப்புக்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு
கொழும்பு - நவலோக்க சுற்றுவட்டத்திலிருந்து புறக்கோட்டை நோக்கி உள்ள பிரதான வீதியில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதி மற்றும் பாபர் வீதி சந்தி முழுவதும் நேற்று திங்கட்கிழமை காலை நீரில் மூழ்கியமையால் குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்திருந்தனர்.
அதற்கமைய வத்தளை பகுதியிலிருந்து வரும் வாகனங்களை மட்டக்குளி மற்றும் மோதர பகுதியில் பிரவேசித்து கொழும்பு கோட்டையை சென்றடையுமாறும் , பேலியகொட பேஸ்லைன் வீதியை பயன்படுத்தி பொரள்ளை நோக்கி சென்று தொடர்ந்தும் செல்ல முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM