ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி சஜித் அணியுடன் இணைவது பற்றியோ பொதுவேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குவது பற்றியோ எந்தவொரு சந்தர்ப்பதிலும் சஜித் பிரேமதாஸவுடனோ அல்லது அவர் தரப்பினருடனோ எந்தவிதமான கலந்துரையாடல்களும் நடைபெறவே இல்லை.
அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபாலவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சஜித்தை ஆதரிப்பதாகவும் கூறவே இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி:- பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை எந்தக்கட்டத்தினை அடைந்துள்ளது?
பதில்:- பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றகரமானதாகவே நடைபெற்று வருகின்றது. எமக்கு இடையில் கொள்கை ரீதியான பிரச்சினைகள் இல்லை. ஆகையால் நாம் பரந்துபட்ட கூட்டணியில் இணைவதற்கு அதுவொரு தடையாக இல்லை. கூட்டணி செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று தற்போது சின்னம் சம்பந்தமான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். இரண்டு கட்சிகளுக்கும் பொதுவானதொரு சின்னத்தினை தெரிவு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்.
கேள்வி:- பொதுஜன பெரமுனவானது தாமரைமொட்டு சின்னத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கி வெற்றியையும் கண்டுள்ள நிலையில் அச்சின்னத்தினை கைவிடுவதற்கு முன்வருவார்களா?
பதில்:- கூட்டணியொன்று பரந்து பட்டளவில் ஏற்படுத்துகின்றபோது பொதுச்சின்னம் அவசியமாகின்றது. இது புதிய விடயமல்ல. கடந்த காலத்தில் இவ்வாறான இணக்கப்பாடுகள் ஏற்பட்ட அனுபவங்கள் இரு தரப்பினருக்குமே இருக்கின்றன.
கேள்வி:- பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் தாமரைமொட்டு சின்னத்திலேயே அடுத்துவரும் தேர்தல்களுக்கு முகங்கொடுக்கவுள்ளதாக உறுதியாக கூறியுள்ளார்களே?
பதில்:- தற்போது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது நிறைவடைவதற்கு முன்னதாக எமது நிலைப்பாட்டினை கூறமுடியாதல்லவா?
கேள்வி:- வேட்பாளர் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றனவா?
பதில்:- வேட்பாளர் விடயம் சம்பந்தமாக நாம் எந்தவொரு கருத்துப் பரிமாற்றத்தினையும் மேற்கொண்டிருக்கவில்லை.
கேள்வி:- பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை அறிவித்து விட்ட நிலையில் நீங்கள் கூட்டணியில் இணைகின்றபோது அவரையே வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்:- பொதுஜன பெரமுன தனது தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளது. நாம் பரந்துபட்ட கூட்டணிக்கான அடிப்படை விடயங்களை தற்போது பேசிக்கொண்டிருக்கின்றோம். அவை நிறைவடைகின்றபோது இத்தகைய பிரதான விடயங்கள் பற்றி கவனம் செலுத்துவோம்.
கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற நிலையில் பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என்று எவ்வாறு கருத முடியும்?
பதில்:- சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழு ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளது. அதேபோன்று சுதந்திரக்கட்சியின் பாராளுமன்றக் குழுவும் ஜனாதிபதி மைத்திரிபாலவே மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் தொடர்பாக மீண்டும் மறுபரிசீலனைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
கேள்வி:- பொதுஜன பெரமுனவுடன் பேச்சுக்களை நடத்துகின்ற ஏக காலத்தில் சுதந்திரக்கட்சி ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் அறிவித்திருக்கின்றீர்களே?
பதில்:- ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகள் தமது அறிவிப்புக்களை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்திருந்தார். அதற்கமைவாகவே நாம் அறிவிப்பினை செய்துள்ளோம். பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுக்கள் தோல்வியடைந்தால் சுதந்திரக்கட்சி தனது வேட்பாளரை களமிறக்கும். சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடவும் தயாராகவே உள்ளது. சுதந்திரக்கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் என்ற அறிவிப்பால் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படாது.
கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தபோது அவருடைய பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது?
பதில்:- அவர் அதனை நிராகரிக்க வில்லை. எனினும், ஜனாதிபதி பதவியைவிடவும் சுதந்திரக் கட்சி தலைமையில் சிறந்ததொரு அரசாங்கத்தினை அமைக்கவேண்டும் என்பதிலேயே உறுதியாக இருக்க வேண்டுமென அவர் கருதுகின்றார்.
கேள்வி:- தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக மட்டும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளமைக்கான காரணம் என்ன?
பதில்:- தேசிய பட்டியல் உறுப்புரிமையானது கட்சிக்குரியதொன்றாகும். அதன் ஊடாக நியமிக்கப்பட்ட எஸ்.பி.திஸாநாயக்க, பௌசி, டிலான் பெரேரா, லக் ஷ்மன் யாப்பா, விஜித் விஜிதமுனி ஆகியோர் வேறு கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதால் முதற்கட்டமாக அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தீர்மானித்து அதற்கான எழுத்துமூல ஆவணத்தினையும் அவர்களுக்கு அனுப்பியுள்ளோம். அவர்களின் பதிலை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
கேள்வி:- மேற்படி உறுப்பினர்களுக்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்டவர்கள் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கவில்லை?
பதில்:- இது நியாயமானவொரு கேள்வியாகத்தான் இருக்கின்றது. அடுத்து தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அத் தரப்பினருடன் கூட்டணி தொடர்பிலும் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். ஆகவே இப்பிரச்சினையை பூதாகரமாக்கி நீதிமன்றத்திற்கு செல்வதை விடவும் இருதரப்பு இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படுவதென தீர்மானித்தோம். எனினும் தேசிய பட்டியல் உறுப்புரிமை தொடர்பில் அவ்வாறு செயற்பட முடியாது என்றும் தீர்மானித்திருந்தோம். மேலும் எமது கட்சியிலிருந்து வேறு கட்சிகளில் இணைந்த அனைவரினதும் உறுப்புரிமைகள் நீக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- 19ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானம் கோருவதற்கு ஜனாதிபதி தயாராகிவருவதாக கூறப்படுகின்றதே?
பதில்:- அவ்விடயம் சம்பந்தமாக மத்தியகுழுவில் எவ்விதமான பேச்சுக்களும் இடம்பெற்றிருக்கவில்லை. ஏற்கனவே ஜனாதிபதி தனது பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினை நாடியிருந்தார். ஆகவே மீண்டும் அதே விடயத்திற்காக செல்வாரா என்று நான் கருதவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
கேள்வி:- அரசியலமைப்பில் 19ஆவது திருத்தச்சட்டம் உள்வாங்கப்பட்டமையால் மூன்று அதிகாரமையங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி பகிரங்கமாகவே கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அதில் மாற்றங்களை செய்வதற்கு பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளாரா?
பதில்:- அவ்வாறான கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் 19ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக மத்திய குழுவில் தீர்மானங்களை எடுத்துள்ளோம். குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். அத்துடன் மூன்று அதிகார மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையால் செயற்பாட்டு ரீதியான சவால்கள் ஏற்பட்டுள்ளன. மோதல் நிலைமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக சபாநாயகருக்கு ஆணைக்குழுக்கள் தொடர்பான அதிகாரம், பிரதமருக்கான அதிகாரங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் இப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் நாட்டினை பிளவடையச் செய்யாத நடைமுறைச்சாத்தியமான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படுகின்றபோது அதற்கு நாம் ஆதரவளிப்போம் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். மேலும் அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்.
கேள்வி:- அடுத்த ஆட்சியில் பிரதமரே அதிகாரம் மிக்கவராக இருப்பார் என்பதால் சரியான பிரதமரை மக்கள் தெரிவு செய்யவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி பகிரங்கமாக கூறியுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளனவா?
பதில்:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களில் 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அதிகபட்சமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 19ஆவது திருத்தச்சட்டமூலம் சம்பந்தமாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜனாதிபதிக்கான சில நிறைவேற்று அதிகாரங்களை நீக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமெனக் குறிப்பிட்டிருந்தது. அந்த விடயங்கள் நீக்கப்பட்ட பின்னரே 19ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் நிறைவேற்று அதிகாரங்களை முழுமையாக நீக்குவதாயின் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் அது சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன்.
கேள்வி:- 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது உங்களுடைய கட்சியினரும் ஆதரவாக செயற்பட்டிருந்தீர்கள். மத்தியகுழு, பாராளுமன்றக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே அவ்வாறு செயற்பட்டிருந்ததாகவும் கூறுகின்றீர்கள். அவ்வாறு கட்சியினுள் கலந்துரையாடப்பட்ட சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியோ அல்லது உங்களது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களோ 19ஆவது திருத்தச்சட்டத்தில் தற்போது நீங்கள் கூறும் குறைபாடுகளை கண்டறிந்திருக்கவில்லையா?
பதில்:- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பதாக கூறியிருந்தார். அத்துடன் சுயாதீன கட்டமைப்புக்களையும் உருவாக்க வேண்டியிருந்தது. ஜனநாயக ஆட்சிமுறைமையை ஏற்படுத்த வேண்டியிருந்தது. 19ஆவது திருத்தச்சட்டத்தில் இந்த விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.
ஆனால், அரசியலுக்காக ஜனாதிபதியின் அதிகாரங்கள் இலக்கு வைக்கப்பட்டு பிரதமருக்கு அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட்டன என்பதையும் நாம் கூறியிருந்தோம். எனினும் அச்சட்டம் நடைமுறைரீதியாக வருகின்றபோது மூன்று அதிகார மையங்களை உருவாக்கியதோடு மோதல் நிலைமைகளையும் தோற்றுவித்துள்ளமையை அனுபவரீதியாக தற்போதே உணர்கின்றோம். ஆகவே அரசியலை விடுத்து நாட்டுக்காக இந்த சட்டத்தினை நீக்க வேண்டும் என்பதையே நாம் குறிப்பிட்டு வருகின்றோம். இந்த நிலைமைகள் நீடித்தால் வினைத்திறனான அரசாங்கத்தினை முன்னெடுக்க முடியாத நிலைமையே தொடரும். ஆகவே அவ்வாறான
தொரு நிலைமை தொடர்ந்து நீடித்தால் அது நாட்டினை பின்னோக்கியே நகர்த்திச் செல்லும்.
கேள்வி:- இடைவெளிக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க மீண்டும் கட்சியின் செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ள நிலையில் அடுத்துவரும் காலத்தில் அவருடைய வகிபாகம் என்னவாக இருக்கப்போகின்றது?
பதில்:- அவர் கட்சியின் போசகராகவே உள்ளார். அண்மையில் எமது தலைமையகத்திற்கு வருகை தந்திருந்ததோடு 68ஆவது தேசிய மாநாட்டிலும் பங்கெடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து மத்தியகுழுக் கூட்டத்திலும், இறுதியாக நடைபெற்ற நிறைவேற்று சபைக் குழுக் கூட்டத்திலும் பங்கெடுத்திருந்தார். அவர் மீண்டும் கட்சியின் செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ள நிலையில் தொடர்ந்தும் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதில் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவார் என்றே கருதுகின்றேன்.
கேள்வி:- அவருக்கும் (சந்திரிகா)கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உறவுநிலைமைகள் எவ்வாறிருக்கின்றன?
பதில்:- இருவருக்கும் இடையில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. இருவரும் சுமுகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இருவரும் இணைந்து கட்சியை வலுவாக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றபோது அது மிகப்பெரும் நன்மையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
கேள்வி:- இலங்கை மத்திய வங்கி ஊழல் மோசடிகள் மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சட்டவிரோத விடயங்கள் சம்பந்தமான விசாரணைகள், ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் பிரகாரம் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் அரசியல் இருப்பதாக தெரிவிக்கப்படும் விமர்சனத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- 2015இல் புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டபோது இந்த பிரச்சினை கோப் குழுவின் முன்னிலையில் வந்தது. அச்சமயத்தில் நானும் குழுவின் அங்கத்தவராக இருந்தேன். அந்த விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்தார். ஆணைக்குழுவின் விசாரணைகளின் பிரகாரம் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஒரு தரப்பினர் தண்டிக்கப்பட்டனர். பிரதான சூத்திரதாரியாக இருக்கும் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுபோன்றுதான் ஏனைய வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. ஆகவே தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விடயமொன்றாகவே இருக்கின்றதே தவிர, தேர்தலுக்காக முன்னெடுக்கும் விடயமொன்றாக கூறமுடியாது.
கேள்வி:- அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது சாத்தியமா?
பதில்:- அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜையாவார். சிங்கப்பூருடன் எமக்கு உடன்படிக்கைகள் காணப்படாமையால் அவரை அழைத்துவருவதில் சட்டரீதியான சவால்கள் காணப்படுகின்றன. ஜனாதிபதி எழுத்து மூலமான ஆவணங்களை அந்தநாட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆகவே விரைவில் அதற்கான பதில்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்திற்குள் அர்ஜுன் மகேந்திரன் அழைத்துவரப்படுவதற்கு சாத்தியமுண்டா?
பதில்:- ஜனாதிபதியின் காலத்திற்குள் கொண்டுவரமுடியாது விட்டால் அடுத்துவருகின்ற ஜனாதிபதி அர்ஜுன் மகேந்திரனை அழைத்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபாலவை சார்ந்தவொரு விடயமாககொள்ளாது நாட்டின் எதிர்காலத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும்.
கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முரண்பாடுகள் வலுத்துள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான சுதந்திரக்கட்சி அவரை பொதுவேட்பாளராக களமிறக்குவதற்கு முயற்சிக்குமா?
பதில்:- நடைமுறை ரீதியாக இவ்வாறு நிகழ முடியும் என்று கருதப்படுகின்றது. பொதுமக்கள் மத்தியிலும் அவ்வாறானதொரு எண்ணப்பாடு தோற்றம்பெற்றுள்ளது. இவ்வாறான விடயங்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஜனநாயக நாட்டில் இவ்வாறான சிந்தனைகள் பொதுமக்களால் வெளிப்படுத்தப்படுவதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது.
ஆனால், தற்போது வரையில் சஜித் பிரேமதாஸவுடன் அவ்வாறான எந்தவிதமான கலந்துரையாடல்களும் நடைபெறவே இல்லை. அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபாலவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சஜித்தை ஆதரிப்பதாகவும் கூறவே இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM