இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வெறுமனே நபரொருவரை மாத்திரம் தெரிவுசெய்யப் போவதில்லை. மாறாக தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் வலுவானதும், வரவேற்கத்தக்கதுமான பின்னணியொன்று எந்த வேட்பாளருக்கு உள்ளது என்பது குறித்து மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என்று வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின் போது நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
அந்த செவ்வியின் முழுவிபரம் வருமாறு:
கேள்வி : அரசாங்கத்தினால் கடந்த நான்கு வருடகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீங்கள் திருப்தியடைகின்றீர்களா?
பதில் : ஆம், கடந்த நான்குவருட காலத்தில் பல்வேறு விடயங்களில் வெகுவாக முன்னேற்றம் கண்டிருக்கின்றோம். மிக முக்கியமாக ஜனநாயகத்தை வலுப்படுத்தியிருக்கிறோம். தகவல் அறியும் உரிமையை உறுதி செய்திருக்கின்றோம். அதேபோன்று நீதித்துறையின் சுயாதீனத்துக்கு முக்கியத்துவமளித்து அதனை உறுதி செய்தோம். அது உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதொரு விடயமாகும். ஆனால், எதேச்சதிகார ஆட்சியொன்று வரும்போது தான் எம்மால் மேற்கொள்ளப்பட்ட இவ்விடயங்கள் தொடர்பில் விளங்கிக்கொள்ள முடியும்.
இந்த நான்குவருட காலத்தில்
ஒவ்வொரு தனிநபரினதும் உரிமைகளும், பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. எவரும் காணாமல் போகவில்லை. அரசாங்கத்தினால் கொல்லப்படவில்லை. எனவே அத்தகையதொரு சிறப்பான பதிவுகளைக் கொண்ட அரசாங்கம் என்று எமது நல்லாட்சி அரசைக் குறிப்பிட முடியும்.
பொருளாதார ரீதியாக நோக்குமிடத்து, நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டபோது பொருளாதாரம் மிகவும் மோசமானதொரு நிலையிலேயே காணப்பட்டது. சிலர் கடன்தொகை கூடியிருப்பதாகக் கூறுகின்றார்கள். கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலத்தில் பெற்ற கடன்களை எடுத்துக்கொண்டால், அவை ஏற்கனவே பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்காகவே முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதேபோன்று கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை எமது அரசாங்கத்தின் ஊடாக மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வரிச்சலுகையின் மூலம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட ஏற்றுமதி 1300 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது. கடந்த ஆட்சியில் பல்வேறு காரணங்களினால் இடை
நிறுத்தப்பட்டிருந்த இவ்வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு எம்மால் முடியுமாக இருந்தது.
கேள்வி : ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி அமைக்கும் முன்னெடுப்புக்கள் பற்றிக் கூறமுடியுமா?
பதில் : நாங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது கட்சியைப் பொறுத்தவரை முதலில் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின்னரே கூட்டணி அமைக்க முடியும். ஏனெனில் கூட்டணியில் அங்கம் வகிப்போர் வேட்பாளருடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டிய தேவையிருப்பதால் அதுவே பொருத்தமாக இருக்கும்.
இந்நிலையில் எம்முடன் கூட்டணி அமைக்கவிருக்கும் கட்சியொன்று
'ஐக்கிய தேசியக் கட்சி விரைவாக வேட்பாள ரைத் தெரிவுசெய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறது. சிலவேளைகளில் நாம் யாரை வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்றும் அவர்கள் கூறலாம். எனவே அதற்கு முன்னர் நாம் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்ய வேண்டும்.
கேள்வி : அவ்வாறெனின் தற்போது வேட்பாளர் தேர்வு நிறைவிற்கு வந்திருக்கின்றதா?
பதில் : இல்லை, இவ்விடயம் குறித்த உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எவையும் இன்னமும் இல்லாத போதிலும் உத்தியோகபூர்வமற்ற ரீதியாக நாடளாவிய ரீதியில் எமது கட்சியின் பிரதித் தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.
கேள்வி : பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக் ஷ நிறுத்தப்பட்டுள்ளமை குறித்து உங்களுடைய அபிப்பிராயம்?
பதில் : இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கென ஒரு அங்கீகாரம் உள்ளது. எமது நாட்டின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை, நாம் உலக நாடுகளில் ஒரு அங்கமாகவே இருக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடென்ற ரீதியில் சர்வதேச சட்டத்
திட்டங்களுக்கும், மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.
அதேபோன்று எமது நாட்டைச் சேர்ந்த பலர் பிறநாடுகளில் வசிக்கின்றார்கள், தொழில் புரிகின்றார்கள். அவர்கள் நம் நாட்டில் வசிக்கவில்லை என்றாலும்கூட எமது பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு சர்வதேசத்துடன் சுமுகமான உறவுகளைப் பேணுவது அவசியமாகும். மேலும் நாம் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என ஏனையோர் கூறுகின்றார்கள் என்பதற்காக இருக்கக்கூடாது. மாறாக அது பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாமாகவே உணர்ந்து அதனை செய்ய வேண்டும்.
எனவே இம்முறை மக்கள் தெரிவு செய்ய இருப்பது நபரொருவரை மாத்திரமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். யாருக்கு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானம் தொடர்பில் வலுவான பின்னணி இருக்கிறது என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். அத்தோடு இது இரு நபர்களுக்கு இடையிலான தெரிவு மாத்திரமல்ல, இரு செயன்முறைகளுக்கு இடையிலான தெரிவுமாகும். ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
கேள்வி : கடந்த காலங்களில் உங்களுடன் சில விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கென வேட்பாளரொருவர் களமிறக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : அவர்கள் தனியொரு கட்சி என்ற அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரொருவரை களமிறக்கலாம். எனினும் தேர்தல்கள் ஆணையாளரால் வேட்புமனுக்கள் கோரப்பட்டு, அவை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே யார் போட்டியிடுகின்றார்கள், யார் போட்டியிடவில்லை என்ற இறுதி நிலைவரத்தை அறிந்துகொள்ள முடியும்.
கேள்வி : நாட்டின் ஜனநாயகம் ஒருபுறமிருக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் ஜனநாயகம் பற்றிக் கூறமுடியுமா?
பதில் : எமது கட்சிக்கெனப் பிரத்தியேகமான யாப்பு ஒன்று உண்டு. எமது நாட்டில் சில கட்சிகளுக்கு யாப்பு என்பதேயில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறானது அல்ல. எமக்கென யாப்பொன்றைக் கொண்டிருப்பதுடன், ஜனநாயக அடிப்படையிலேயே செயற்படுகின்றோம்.
தற்போது நாம் வரலாற்றின் முக்கியமான தொரு திருப்பத்தில் இருக்கின்றோம். எமது கட்சியில் அந்த வாய்ப்பை புதிய வரொருவருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
எனினும் இவ்விடயத்தில் நபரை மாத்திரம் கருத்திற்கொள்ள முடியாது. மாறாக அவ்வேட்பாளர் மற்றும் கட்சி கொண்டிருக்கக்கூடிய வியூகத்தையும் நாட்டிற்கான எதிர்கால செயற்திட்டத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும். எமது கட்சியின் யாப்பை மேலும் ஜனநாயக மயப்படுத்த வேண்டும்.
கேள்வி : உங்களது நிலைப்பாட்டின் அடிப்படையில் நோக்குகையில் மக்கள் நபருக்காகவா அல்லது கொள்கைக்காகவா வாக்களிக்கின்றார்கள்?
பதில் : இரு வகையான மக்களும் இருக்கவே செய்கிறார்கள். சிலர் ஒரு கட்சியின் வேட்பாளரை விடவும் அக்கட்சியின் கொள்கை மற்றும் நாட்டில் முன்னெடுக்கவிருக்கும் செயற்திட்டங்கள் என்பவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றார்கள். மேலும் சிலர் வேட்பாளர் யார் என்பதை கருத்திற்கொள்கிறார்கள். எனினும் இவ்விரு தரப்புமே கொள்கைக்கு சற்று அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலையொன்று தோன்றியிருக்கிறது.
கேள்வி : எதிர்காலத்தில் நாட்டில் ஏற்பட வேண்டிய மாற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும்?
பதில் : பொருளாதார ரீதியில் எமது நாடு மாற்றமடைய வேண்டும். நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையிலிருந்து நடுத்தர உயர்ந்த வருமானம் பெறும் நாடு என்ற நிலைக்கு நகரும் போது சர்வதேச நாடுகளாலும், அமைப்புக்களாலும் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மற்றும் உதவிகள் என்பன இல்லாதுபோகும். எனவே போட்டித்தன்மை வாய்ந்ததொரு பொருளாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்புடைய வகையில் நாம் எமது கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்துக்கொள்ள வேண்டும்.
( நேர்காணல் - நா. தனுஜா )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM