இங்கிலாந்தில் விசித்திர ஹோட்டல் ; ஆர்வத்தில் மக்கள்

Published By: Raam

16 May, 2016 | 12:08 PM
image

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இயங்கிவரும் பிரபல உணவகமொன்று தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் நிர்வாண ஹோட்டல் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

நவீன கால உணவு முறையில் முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாகிவரும் இந்த ‘பன்யாடி’ உணவகத்தில் மின்சாரம், பீங்கான் தட்டுகள், மேசைக்கரண்டி மற்றும் முள்ளுக்கரண்டிகள் போன்றவை பயன்படுத்தாது அதற்கு பதிலாக மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், மரத்திலான பண்டைய மேசைகள், நாற்காலிகள், களிமண்ணால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில், நவீன செயற்கை மசாலாக்களின் கலப்பில்லாத – இயற்கையான முறையில் விறகு அடுப்பில் சமைக்கப்பட்ட உணவு வகைகளே பரிமாறப்படுகின்றன.

இந்த உணவகத்தின் மிக முக்கிய விதிமுறை என்னவென்றால் கையடக்கத்தொலைபேசிகள்  கொண்டு செல்லவும், புகைப்படங்கள் எடுக்கவும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. 



இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைந்த கணமே தங்களின் ஆடைகளை களைந்து விட்டு கையில் அளிக்கப்படும் ஒரு சிறு டவலால் உடலை மூடியபடி சென்று தங்களது இருக்கையை அடைந்ததும், அதையும் களைந்துவிட்டு, முழுநிர்வாணமாக அமர்ந்து தேவையான உணவு வகைகளுக்கு ஓடர் செய்து ருசித்தும், ரசித்தும் சாப்பிடலாம்.

ஆடைகளை களையாமல் வழக்கம்போல் சாப்பிட விரும்புபவர்களுக்கான தனிப்பகுதியும் இங்கு உண்டு. எதிர்வரும் ஜூன் மாதம் அல்லது ஜூலை மாதத்தில் இந்த உணவகம் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டன் நகரின் எப் பகுதியில்  இவ் உணவகம் அமைக்கப்படவுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

எனினும், இதுதொடர்பான மேலதிக தகவல்களை பெறவிரும்பி, இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான லண்டன்வாசிகள் ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right