பாகம் ;- 1 நம்பிக்கையைத் தந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாற்றம்

Published By: Digital Desk 4

04 Sep, 2019 | 09:55 PM
image

நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைணந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்ளுக்குத் தீர்வைக் காண்பதற்கு மெய்யான வாய்ப்பொன்று இருக்கிறது என்ற நம்பிக்கையின் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டது. 

ஆனால் அவ்வாறு செய்தது கூட்டமைப்பைப் பாதித்திருக்கிறது. தவறான 'குதிரைக்கு' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவைக் கொடுத்து, தமிழ் மக்களுக்காக எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது என்று இப்போது நோக்கப்படுகின்றது. 

இது ஒரு உண்மையாகும். அடுத்த தடவை வாக்காளர்களைச் சந்திக்கும் போது அந்த உண்மைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், உத்தியோகபூர்வப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் பிரபலமான தேசிய தினசரிகளில் ஒன்றான 'த இந்து' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய விரிவான பேட்டியொன்றிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அந்த நேர்காணலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளின் தோல்வி, தேசிய அரசாங்கத்திற்குக் கூட்டமைப்பு அளித்து வந்த ஆதரவினால் ஏற்பட்ட பின்னடைவு, இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பங்கு, இந்தியாவின் முக்கியத்துவம், தமிழ் - முஸ்லிம் உறவு, தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடனான எதிர்கால ஈடுபாட்டின் முக்கியத்துவம், அரசியல் தீர்வைக் காண்பதில் தென்னிலங்கைத் தலைவர்களின் அக்கறையின்மை ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக அவர் பேசியிருக்கிறார்.

அந்நேர்காணலின் முழுமையான விபரங்கள் வருமாறு:

சீர்திருத்தங்களில்  இருந்து பின்வாங்குதல்

கேள்வி : 2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. வேறுபல வாக்குறுதிகளுக்கு மத்தியில் அந்தக் கூட்டணி தமிழர் பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான அரசியல் இணக்கத்தீர்வொன்றைக் காண்பதாக உறுதியளித்தது. அதற்கான செயன்முறைகள் தொடங்கப்பட்ட போதும் அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் முட்டுக்கட்டை நிலையை  அடைந்துவிட்டன. ஏன் அது வெற்றி பெறவில்லை?

பதில் : அரசியலமைப்புச் சீர்திருத்த செயன்முறைகளின் போது குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் கூட்டரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தது போன்று பலமானதாக இருக்கவில்லை. பூசல்கள் வெளிப்பட ஆரம்பித்து, நாளடைவில் குறிப்பாக 2018 பெப்ரவரி தேர்தலுக்கு முன்னதாக அவை ஆழமாகின. கூட்டரசாங்கத்தில் முக்கிய பங்காளிகளான இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரிகள் போன்று மீண்டும் பார்க்க ஆரம்பித்தன. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமலிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பதை விடவும் தேர்தல் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதிலேNயு அவை கூடுதலான அளவு கரிசனை காட்டின. அதன் விளைவாக பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இணங்கிக்கொள்ளப்பட்ட விடயங்களுக்குக் கூட சொந்தங்கொண்டாட அவர்கள் தயாராக இருக்கவில்லை. 

சீர்திருத்தச் செயன்முறைகளில் இருந்து அவர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். அந்தப் பின்வாங்கும் போக்கில் ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரதானமாக முனைப்பைக் காட்டியது. அதனைத் தொடர்ந்து அவர்கள் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தொடர்ந்து செயற்படுகின்றார்கள் இல்லை என்பது மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரியவந்தது. எவருமே தாங்களாக அந்தச் செயன்முறைகளை முன்னெடுக்க விரும்பவில்லை. அவர்களும் கூடப் பின்வாங்கத் தொடங்கினார்கள். 

கேள்வி : பிரதமரின் ஐக்கிய தேசியக் கட்சியையும் அவ்வாறு கூறுகின்றீர்களா? 

பதில் : ஆம், பி;னநோக்கிப் பார்த்தால் இதனை விளங்கிக்கொள்ள முடியும். தங்களது கூட்டரசாங்கப் பங்காளி அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை என்று குறிப்பிட்ட ஒருகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் உணர்ந்துகொண்ட போது, அவர்களும் அந்தச் சீர்திருத்தச் செயன்முறைகள் தொடர்ந்து நீடித்துச் செல்வதற்கு அவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினார்கள். 

வேட்பாளர்களுடன்  பேசிய பின்னரே முடிவு

கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ராஜபக்ஷ முகாம் அதன் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை அறிவித்திருக்கிறது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை அறிவித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் அதன் வேட்பாளரை நியமிக்கவில்லை. 2015 இல் நீங்கள் ஆதரித்த அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உங்களுக்கு இப்போதிருக்கக்கூடிய தெரிவுகள் குறித்து எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : 2015 இல் குறிப்பிட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரித்தோம். தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற வாக்குறுதிகளுக்குப் புறம்பாக, நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைமையை ஒழிப்பது என்பதை அவர்கள் பிரதான வாக்குறுதியாகவும் அவர்கள் முன்வைத்தார்கள். 1994 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டுமக்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ஆணையைத் தொடர்ச்சியாக வழங்கி வந்திருந்த பின்னணியில் இரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்திருந்த போது நாம் மனப்பூர்வமாக அவர்கள் அந்த வாக்குறுதிகளை இத்தடவை நிறைவேற்றுவார்கள் என்று நம்பினோம்.

 ஆனால் அது நடைபெறவில்லை. இப்பொழுது நாம் யாராவதொரு வேட்பாளரை அவர்கள் ஒழிப்பதாக முன்னர் உறுதியளித்த நிறைவேற்றதிகார ஜனாதிபதிப் பதவிக்கு ஆதரிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இந்த நிகழ்வுத் திருப்பங்களை நாம் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளவில்லை. சகல கட்சிகளுமே அவற்றின் வேட்பாளர்களை நியமித்து விஞ்ஞாபனங்களை வெளியிடும் வரை நாம் காத்திருப்போம். வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தித் தீர்மானம் ஒன்றுக்கு வருவோம். எமக்கு அவசரமில்லை. 

தீர்வில் அக்கறையில்லை

கேள்வி : 2015 ஆம் ஆண்டில் தேசிய ஐக்கிய கூட்டு அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தமைக்கான காரணங்களில் ஒன்று அரசியல் தீர்வைக் காண்பதற்கான சாத்தியப்பாடேயாகும். புதிய அரசியலமைப்பு ஒன்றுக்காக வாக்களித்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் (1987 இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் விளைவாக வந்த) தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்திற்கே இப்போது பின்நோக்கிச் செல்கிறார்கள். இது 'ஓரடி முன்னால், ஈரடி பின்னால்' என்பது போன்றதொரு நிலவரமில்லையா?

பதில் : இது எல்லாக் காலத்திலுமே நடைபெறுகின்றது. 13 ஆவது திருத்தம் என்பது ஒரு மைல்கல்லாகும். மாகாணசபைகள் உருவாக்கத்தின் மூலமாக ஆட்சிமுறைக் கட்டமைப்பு அடிப்படையில் முதற்தடவையாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பமாக அது அமைந்தது.மாகாணசபைகளுக்கு சட்டவாக்க அதிகாரங்களும் ஓரளவிற்கு இருப்பதுடன், ஆளுநரூடாக சில வகையான நிறைவேற்று அதிகாரங்களும் இருக்கின்றன.

13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அது அர்த்தபுஷ்டியான அதிகாரப்பரவலாக்கலாக அமையவில்லை என்றுகூறி தமிழ்த்தரப்பினர் கணிசமானளவில் அதனை நிராகரித்தனர். அவ்வாறு நிராகரிப்பதற்கு அவர்களிடம் நல்ல காரணங்கள் இருந்தன. அதனால்தான் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதிகாரப்பரவலாக்கலை அர்த்தமுடையதாக்குவதற்கு 13 இற்கு அப்பாலும் செல்வதாகத் தென்னிலங்கை தலைமைத்துவத்தினால் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் போர் முடிவிற்கு வந்த பின்னரும் கூட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களைத் திருப்பி எடுப்பதற்குக்கூட முயற்சித்தார்.

இந்தப் பின்புலத்தில்தான் 2015 மாற்றம் வந்தது. 13 ஆவது திருத்தம் ஒருபுறமிருக்க முன்னைய பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்ட விடயங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் பெடரல் ஏற்பாடு ஒன்றை நாடுவது குறித்தும் அக்கறை காட்டப்பட்டது. இப்போது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிப்போம் என்று கூறுவது அந்த உறுதிமொழிகள் அனைத்திலிருந்தும் பின்வாங்குவதேயாகும். 

ஆனால் நான் ஏற்கனவே கூறியது போன்று எல்லாக் காலத்திலும் இது இவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிகாரப்பரவலாக்கல் நாட்டுப் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று தேர்தலுக்குத் தேர்தல் தங்களது தென்பகுதி வாக்காளர்களுக்குக் கூறுகின்ற இந்தத் தலைவர்கள், கூடுதலான எந்தவொரு ஏற்பாடு குறித்தும் தங்களை அர்ப்பணிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் உள்ளதைப் போன்ற இருகட்சி முறைமையில் அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகளின் ஒரு பெரும்பகுதியைத் தங்கடன் வைத்திருக்க விரும்பும் அதேவேளை, சிறுபான்மை இனத்தவரினதும் வாக்குகளைளப் பெறவேண்டிய அவசியமிருக்கின்றது. அதனால் '13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது' என்ற கதையளப்பைத் தொடர்ந்து நாடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய தந்திரோபாயத்தின் மூலமாக இந்தத் தலைவர்கள் தென்னிலங்கை வாக்காளர்கள் அச்சங்கொள்ளாத ஒரு சூழ்நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, தமிழ் வாக்காளர்களுக்கும் இன்னமும் எதையாவது உறுதியளித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது வாக்குறுதி இதயபூர்வமானது அல்ல. நாங்கள் அதனைக் கரிசனையுடன் நோக்கவில்லை.

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதற்தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 1994 ஆம் ஆண்டில் மாத்திரமே வேறுபட்ட ஒரு அணுகுமுறையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. அவர் இந்தக் கதையளப்புக்கள் சகலதையும் முழுமையாக மாற்றியமைத்து சமஷ்டி ஏற்பாடொன்றைக் கொண்டு வருவதாக உறுதியளித்தார். சுமார் 60 சதவீதமான வாக்குகளையும் பெற்றார். 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகா அளவுக்கு உரத்துக்கூறாவிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவும் இதுபோன்ற உறுதிமொழியை அளித்தார். ஆனால் இரு தடவைகளும் விடுதலைப் புலிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அவர்களின் அரசியல் போராட்டத்திற்கு வழிவகுத்த 'தனியான அரசு' என்ற கோட்hடு அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அவரகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் சமஷ்டி ஏற்பாடொன்றுக்கான சாத்தியம் வருவது போன்று தென்படுகின்ற போது அவர்கள் பேச்சுவார்த்தைகளை முறித்தார்கள். அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமானால் தமது தனிநாட்டுக்கான கனவு என்றென்றைக்குமாக அழிந்துவிடுமென அவர்கள் அஞ்சினார்கள். 

இப்போது போரும், போரின் விளைவான களைப்பும் இல்லாத சூழ்நிலையில் எந்தவொரு தலைவருமே முன்னர் வாக்குறுதி அளித்ததைப் போன்று செயற்படுவதற்குத் தயாராக இல்லை. அவர்கள் தமிழர்களின் வாக்குகளை எளிதாகப் பெறமுடியுமென நினைக்கின்றார்கள். அதாவது வாக்குறுதிகளை உண்மையில் நிறைவேற்றக்கூடிய கட்சி என்று நோக்குவதை விடவும் கெடுதியான இரு கட்சிகளில் குறைந்த கெடுதியுள்ளதை தமிழர்கள் தேர்தலில் ஆதரிக்கக்கூடும் என்பதே அந்த நினைப்பு.

கேள்வி : வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரத்யேகமான சவால்களை நோக்கும்போது இன்றை நிலைவரத்தை எவ்வாறு நீங்கள் பார்க்கின்றீர்கள்? போருக்குப் பிறகு பத்து வருடங்கள் கழிந்த நிலையில் பொறுப்புக்கூறல் மற்றும் புனர்நிர்மாணம் குறித்த உங்களது கருத்தென்ன?

பதில் : 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் 5 வருடங்களும் ராஜபக்ஷ ஆட்சி (போருக்கு வந்த தமிழர்கள் தோற்றுவிட்டார்கள். வெற்றி பெற்றவர்களுக்கே எல்லாம் என்ற அடிப்படையில்) தமிழ் மக்களை முதன்முதலாக அடிமைப்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரமாக போர்வெற்றியைப் பார்த்தது. அரசியல் இணக்கத்தீர்வு குறித்து அது உதட்டளவிலேயே பேசிக்கொண்டிருந்தது. மிகப்பெரிய உட்கட்டமைப்பு செயற்திட்டங்களை அது நடைமுறைப்படுத்தியது. ஆனால் மக்களின் அவலங்களையும் வேதனைகளையும் போக்குவதற்கு, வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதற்கு, உடனடி அக்கறைகளைக் கவனிப்பதற்கு எந்தவொரு முயற்சியும் இல்லாத நிலையில் பிரம்மாண்டமான செயற்திட்டங்கள் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு முற்றிலும் அந்நியமானவையாகவே இருந்தன. 

கடைசி 5 வருடங்களிலும் நிலைவரம் மேலும் சிக்கலானதாக மாறிவிட்டது. நீண்டகாலமாகத் தீர்மானிக்கப்படாத மக்களின் மனக்குறைகளை அரசாங்கம் கவனிக்கத் தொடங்கியது. இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த நிலப்பகுதிகள் முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் கணிசமானளவு மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பொறுப்புக்கூறல் விவகாரத்தைப் பொறுத்தவரை காணாமல்போனோர் விவகார அலுவலகம் அமைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணைகளில் முன்னேற்றம் திருப்திகரமானதாக இல்லை என்ற போதிலும்கூட, பொறுப்புக்கூறல் தொடர்பில் மேற்கூறப்பட்ட நடவடிக்கை முக்கியமானதொன்றாக அமைந்தது. அரசியல் கைதிகளில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள்.

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் விவகாரத்தைப் பொறுத்தவரை உண்மையில் எதுவும் உருப்படியாக நடைபெறவில்லை. அவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 5 வருடங்களில் ஜனநாயகவெளி விரிவடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. வடபகுதி மக்கள் தங்களது அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளிக்காட்டுவதற்கு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ராஜபக்ஷ ஆட்சியின் கீi; அது சாத்தியமானதாக இருக்கவில்லை. அப்போது ஒரு அச்சநிலையே காணப்பட்டது. 

உரிமைகள் என்றுவரும் போது தமிழர்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று ராஜபக்ஷ வெளிப்படையாக உணர்த்தினார். ஆனால் இந்த அரசாங்கத்தை நம்பிக்கையுடன் நோக்கியமைக்குக் காரணங்கள் இருந்தன. பிறகு அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினார்கள். எமது மக்கள் ஏமாற்றப்பட்டு, கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

தொடர்ச்சி ;-பாகம் ;- 2 நம்பிக்கையைத் தந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாற்றம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13