சினிமா என்பது மனித வாழ்வியலோடு ஒன்றித்துக் கிடக்கும் மிகப்பெரிய ஊடகமாகும். என்னைக் கேட்டால் சினிமா என்பது வெறுமனே பொழுதுபோக்கு சாதனம் மட்டும் அல்ல நவீன கால மாற்றத்தில் நமது கலை கலாசார விழுமியங்களையும் வாழ்வியலையும் பதிவு செய்து தலைமுறைகள் தாண்டி பாது காக்கப்போவது சினிமா மட்டும்தான் என்று கூறுவேன். ஏனெனில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மன்னர்களின் பெருமையையும் மகான்களின் பெருமையையும் எம் கண் முன்னே கர்ணணாக, ராஜராஜ சோழனாக, வீரபாண்டிய கட்ட பொம்மனாக, பாகுபலியாக கொண்டு வந்து நிறுத்தியது சினிமா தான். இன்று அதிகாரம், பணம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு சாக்கடைகளிடம் சிக்கி சாமானியன் படும் துயரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் சினிமாதான். ஓர்இனத்தின் இருப்பை விளக்கும் கலையான சினிமா அழியாத கல்வெட்டு போன்றதே.
அந்தவகையில் தென்னிந்திய சினிமா அதா வது நம் தமிழ் சினிமா என்பது நல்ல சிறந்த படைப்புகள் மூலம் நமது கலை கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து தலைமுறைகளுக்கு வழங்கும் பொக்கிஷங்களாக உள்ளது. அதுமட்டும் அல்ல பல்வேறு சமூகச் சீர்கேடுகளை சுட்டிக்காட்டி தட்டிக்கேட்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாதனமாகவும் உள்ளது. இதனால்தான் தமிழகம், இந்தியா தாண்டி சர்வதேச திரை விழாக்களிலும் தமிழ் சினிமாக்களுக்கு பல்வேறு அங்கீகாரங்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.ஆனால் இம்முறை இந்திய அரசினால் வழங்கப்படும் தேசிய விருது களில் தமிழ் சினிமா புறக்கணிக்கப்பட்டுள்ளமை பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவிக்கும் தமிழ் சினிமாவுக்கு இம்முறை கிடைக்க வேண்டிய ஒரு தேசிய விருது கூட கிடைக்கவில்லை. சிறந்த மாநில படங்களில் மட்டும் தமிழுக்கான படத்தில் பாரம் என்றொரு சுயாதீன படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சர்ச்சைகளையும் கலைஞர்களிடையே வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் கடந்த வருடம் 200க்கு மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின. கடந்த இரண்டாண்டுகளில் தமிழ்த் திரையுலகம் மாற்று சினிமா நோக்கிய பயணத்தை மிகத் தீவிரமாகவே மேற்கொண்டிருக்கிறது. `லென்ஸ்', `தரமணி', `96', `பேரன்பு', `பரியேறும் பெருமாள்', 'கனா', `2.0', `வடசென்னை', 'சூப்பர் டீலக்ஸ்' என சர்வதேசத் தரத்தில் பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருந்தன. இந்தப் படங்கள் எல்லாம், பல பன்னாட்டுத் திரைப்படத் திரு
விழாக்களில் பல அங்கீகாரங்களையும், விருதுகளையும் பெற்றன. இன்னமும் பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களுக்கு கூட தேசிய விருதுகள் கிடைக்கப்பெறாமை தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
வாழ்வியலைப் படமாக்குவதில் தமிழ், மலையாளம், பெங்காலி மொழித் திரைப்படங்கள் இந்தியாவிலேயே முன்னோடிகள் எனலாம். இந்த ஆண்டு, இந்த மூன்று மொழிகளும் சேர்த்தே ஏழு விருதுகள்தான் பெற்றுள்ளன. அதிலும் மூன்று விருதுகள் அந்தந்த மொழிகளில் வந்த சிறந்த படங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள். பொதுப்பிரிவுகளில் பெங்காலி மற்றும் மலையாள மொழிப்படங்கள் தலா இரண்டு விருதுகள் மட்டுமே பெற்றுள்ளன. தமிழுக்கு இந்தப் பிரிவுகளில் ஒரு விருதுகூட வழங்கப்படவில்லை.
விருதுகள் வழங்கும் தேர்வுக்குழுவில் எல்லா மொழிகளில் இருந்தும் ஒரு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் தமிழக இயக்குநர்களுக்கு அங்கு சென்று தங்களது நேரத்தைச் செலவிட மனம் இல்லை. யாரும் செல்வதில்லை. என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆயினும் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாரதிராஜா உள்ளிட்டோர் அக்குழுவில் இருந்த போது விவாதம் செய்தும் சண்டையிட்டும் தமிழுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இயக்குநர் இமயம் பாரதிராஜா கூறுகையில், "தமிழ்ப் பட உலகில் தரமான இயக்குனர்கள் அதிகம் வந்துள்ளனர். தரமான படங்களும் நிறைய வந்துள்ளன. நமக்குள்ள சூழ்நிலை சரியில்லை. யார் யாரோ உட்கார்ந்து அவர்களுக்கு வேண்டியவர்களை அனுப்புகின்றனர். தமிழில் தரமான படங்களுக்கு விருது இல்லை. எங்களுக்கு ஓர் அங்கீகாரம் வேண்டும்" என்றார்.
இதேவேளை இயக்குநர் ராமின் பேரன்பு திரைப்படத்துக்காக மம்முட்டிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் விருதுகள் பட்டியலில் கூட அவரது பெயர் இல்லை. இதனால் ரசிகர்கள் தேர்வுக்குழுவினரோடு டுவிட்டரில் மோதியதும் மம்முட்டி ரசிகர்களுக்காக மன்னிப்புக் கேட்டதும் நடந் தேறியுள்ளது.
இப்படி தமிழனின் கலைப் படைப்புகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? தமிழ் சினிமாவில் திறமை மிக்க கலைஞர்கள் இல்லையா.... அல்லது அரசியல் காரணமாக அவர்களை அங்கீகரிக்க மத்திய அரசுக்கு மனம் இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. நல்ல திரைப்படம் ஒன்று புறக்கணிக்கப்பட்டிருந்தால் கூட ஏதாவது காரணம் இருக்கும் என்று கூறலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக விருதுகள் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட எல்லாத் திரைப்படங்களும் புறக்கணிக்கபடுகின்றன என்றால் இதில் அரசியல் தவிர்ந்து வேறு காரணங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் தமிழகத்தின் முன்னால் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவின் பின்னர் மத்தியில் ஒலித்து ஓங்கும் தமிழக அரசியல் தலைமையின் குரல் இல்லை. நீட் தேர்வு, விவசாய நிலங்களை அழிக்கும் 8 வழி சாலை திட்டம், ஹைட்ரோ காபன் திட்டங்கள், காவிரி நதிநீர் பிரச்சினை என அனைத்து வகையிலும் தமிழகத்துக்கு எதிரான திட்டங்கள் தடையின்றி நடத்தப்படுவதோடு தமிழ், தமிழகம் மத்தியில் புறக்கணிக்கப்படுகின்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தமிழனின் நாகரிக தொன்மையைப் பறைசாற்றிய கீழடி ஆய்வு கூடம் நிறுத் தப்பட்டு பல போராட்டங்களின் பின்னரே தொடர்கிறது.
இந்நிலையில் தேசிய விருது கள் மறுப்புக்குக் காரணம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் கட்சிக்குப் பெரிதாக ஆதரவு அளிக்காத தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி மொழி திரைக் கலைஞர்களை வேண்டுமென்று புறக்கணிக்கவே இப்படிப்பட்ட சூழல் ஏற்படுத்தப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. அதிலும் கடந்த ஆண்டு ராம், வெற்றிமாறன், பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் உட்பட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலர் தமிழக நலனுக்காக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்தியா முழுவதிலுமிருந்து பல திரைக்கலைஞர்கள், `பா.ஜ.க.வைப் புறக்கணிப்போம்’ என வெளிப்படையாகவே ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டனர். அதிலும் பல தமிழ் இயக்குநர்கள் பங்கெடுத்தனர். அதன் தாக்கம்தான் இப்படி இருக்கிறது என்பது பல திரை ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த அரசியலில் எல்லாம் ஈடுபடாதவர் இயக்குநர் ஷங்கர். அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் ஒவ்வொரு முறையும் கலை இயக்கம் பிரிவில் விருது வாங்கிவிடும். ஆனால், இந்தியாவின் முதல் நேட்டிவ் 3டி படமான `2.0'க்குக்கூட அந்த ஷங்கரின் வழக்கமான விருது கிடைக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எது எப்படியோ தமிழ் சினிமா புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் வெறும் விருதுகள் மட்டும் கலைகளை அங்கீகரிப்பது இல்லை. அங்கீகாரம் என்பது மக்களின் மனதில் அந்தக் கலைப் படைப்பு எந்தளவு உயரத்தில் ஆசனம் இட்டு அமர்ந்துள்ளது என்பதில்தான் இருக்கின்றது. பல்லாயிரம் இதயங்களை வென்ற படைப்புகளின் தரம் நான்கு சுவருக்குள் உள்ள நான்கு பேருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக குறையாது. விருதுகள் தடுக்கப்பட்டாலும் காலத்தால் அழிக்க முடியாதவைகளாக தமிழனின் சிறந்த கலைப்படைப்புகள் தலைமுறைகள் தாண்டியும் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.
குமார் சுகுணா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM