கல்முனையையும் அதன் தென் பகுதியிலுள்ள பிரதேசத்தையும் ஒரு மத ரீதியான தென் கிழக்கு மாகாணமாக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திடம் 1986ஆம் ஆண்டு கூட்டணித் தமிழ் தலைவர்களே விதைந்துரைத்தார்கள். அன்றைய கூட்டணியின் வாரிசாக இருக்கும் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதேபாணியில் கல்முனை விடயத்தினை தீர்ப்பதற்கு விரும்பவில்லை என்று தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி கே.விக்கினேஸ்வரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
கேள்வி:- கல்முனை பிரச்சினை இதுவரை காலமும் தீர்க்கப்படாமைக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஓர் அங்கமாகவிருக்கும் அகில இலங்கை தமிழர் மகாசபை என்ன காரணம் என்று கருதுகின்றது?
பதில்:- அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தமது பிரதிநிதிகளாக அரசியல் ஞானம் படைத்த தலைவர்களைத் தெரிவு செய்யாமையே இப்பிரச்சினை தீர்க்க முடியாமல் நீடித்துக்கொண்டிருக்கின்றமைக்கு காரணமாகும்.
கேள்வி:- இதுவரை காலத்தில் அங்கிருந்து பல தமிழ் புத்திஜீவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இத்தகையதொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றீர்களே?
பதில்:- கல்முனையையும் அதன் தென் பகுதியிலுள்ள பிரதேசத்தையும் ஒரு மத ரீதியான தென் கிழக்கு மாகாணமாக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திடம் 1986ஆம் ஆண்டு விதந்துரைத்த தலைவர்களை வேறு எவ்வாறு வர்ணிக்கலாம்? அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்கள் ஓர் இரகசிய ஒப்பந்தத்தை செய்திருந்தார்கள் எனக் கூறப்பட்டது. எனவே தான், கல்முனை பிரச்சினைக்கு தீர்வு ஒன்று கிட்ட முடியாது இருந்தது. அன்றைய கூட்டணியின் வாரிசாக இருக்கும் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதேபாணியில் இந்த விடயத்தினை தீர்ப்பதற்கு விரும்பவில்லை.
கேள்வி:- கல்முனை பிரச்சினைக்கு உங்களுடைய தரப்பில் எவ்வகையான தீர்வினை முன்மொழிகின்றீர்கள்?
பதில்:- 1989ஆம் ஆண்டில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்ட பிரகடனத்தின் அடிப்படையில்தான் அந்தத் தீர்வு இருக்க வேண்டும். தற்போதைய கள நிலை கருதி ஒரு சில மாற்றங்களைச் செய்யலாம்.
கேள்வி:- 1989ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட விடயம் என்ன என்பதை விபரிக்க முடியுமா?
பதில்:- 1989ஆம் ஆண்டில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்த பிரகடனத்தில், கல்முனை தமிழர் பிரிவு என அழைக்கப்படும் கல்முனை வடக்குப் பிரிவில், பத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடக்கப்பட்டன. அவையாவன கல்முனை-1, கல்முனை2, கல்முனை-3, பாண்டிருப்பு-1, பாண்டிருப்பு-2, பெரியநீலாவணை-1, பெரியநீலாவணை-2, நற்பிட்டிமுனை-1, நற்பிட்டிமுனை-2 மற்றும் சேனைக்குடியிருப்பு என்பனவாகும்.
கேள்வி:- நீங்கள் பத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கூறுகின்றீர்கள். ஆனால் தற்போது 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அல்லவா காணப்படுகின்றன?
பதில் :- நான் குறிப்பிட்ட பத்து கிராமசேவகர் பிரிவுகளுக்கும் தற்போதுள்ள 29 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இடையில் எவ்விதமான வித்தியாசமும் கிடையாது. பழைய கல்முனை பிரிவுகள் மூன்றும் புதிதாக 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாகவும், பழைய பாண்டிருப்பு பிரிவுகள் இரண்டும் புதிதாக 8கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாகவும், பழைய பெரிய நீலாவணைப் பிரிவுகள் இரண்டும் புதிதாக நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாகவும் பழைய நற்பிட்டிமுனை பிரிவுகள் இரண்டும் புதிதாக மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாகவும் பழைய சேனைக்குடியிருப்பு புதிதாகமூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அவை தான் தற்போது 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாக உள்ளன.
கேள்வி:- எனினும் கல்முனை தமிழ் பிரிவு, கல்முனை முஸ்லிம் பிரிவு என்று 1989 இல் பிரிக்கப்பட்ட பொழுது மருதமுனைக்கும் நற்பிட்டிமுனையின் முஸ்லிம் பகுதிக்கும் என்ன நடந்தது?
பதில்:- அவை இரண்டும் நிலத்தொடர்பற்ற இரண்டு துண்டுகளாக கல்முனை முஸ்லிம் பிரிவுடன் சேர்க்கப்பட்டன.
கேள்வி:- அப்படியாயின் மருதமுனை, நற்பிட்டிமுனை பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- நிலத்தொடர்பற்ற துண்டுகளாக இருக்கும் அவை சீரான நிர்வாகத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். அதனாலே தான் மருதமுனையை தனியான பிரிவாக உருவாக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அங்கே 17000 முஸ்லிம்கள் மட்டுமே குடியிருப்பார்கள்.
சீரான நிர்வாகம் கருதி நற்பிட்டிமுனை முஸ்லிம் பகுதியை தமிழர் பெரும்பான்மைப் பிரிவான கல்முனை வடக்குடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்க்கும் போது கல்முனை வடக்கில் 30சதவீத முஸ்லிம்களும் 70 சதவீத தமிழர்களும் குடியிருப்பர். இதுவே எமது முன்மொழிவாகவும் உள்ளது.
கேள்வி:- வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்களப் பிரிவின் சில நிலத்தொடர்பற்ற பகுதிகள் அவற்றை அண்மித்த தமிழ்ப் பிரிவில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதைப்போன்று கல்முனையிலும் அமைக்கலாமே?
பதில்:- அது 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கதை. தற்போதைய சூழ்நிலையில் எந்த அரசாங்கமும் நிலத்தொடர்பற்ற பகுதிகளை இணைப்பதை விரும்பமாட்டாது என்பது தான் யதார்த்தமாகும்.
கேள்வி:- தற்போதைய கல்முனை01 எனப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குள்ளும் கல்முனை03 எனப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குள்ளும் 5000 முஸ்லிம்கள் குடியிருக்கிறார்கள். மேலும் இஸ்லாமாபாத் என்ற பிரதேசமும் அங்குள்ளதல்லவா?
பதில்:- 1989ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணிக் குடியேற்றத்திற்கு அதிகாரம் படைத்த பிரிவு கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு எனப்படும் முஸ்லிம் பிரிவு மட்டுமே. அப் பிரதேச செயலாளர் KP/59, KP/59/1 எனப் பெயரிட்ட இரண்டு சட்டத்திற்குப் புறம்பான பிரிவுகளை உருவாக்கி அங்கு 5000 முஸ்லிம்களைக் குடியேற்றியுள்ளார்.
சட்டத்திற்குப் புறம்பான இவ்விரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கல்முனை 01 அல்லது KP/61/1, கல்முனை03 அல்லது KP/59/1 என்பவற்றின் பகுதிகளாகவே கருதப்பட வேண்டும். அது மட்டுமல்லாது அங்கு வாழும் 5000 முஸ்லிம் மக்களும் கல்முனை வடக்கு எனும் பிரிவில் வசிப்பவர்களாக கருதப்பட வேண்டும்.
கேள்வி:- உங்களுடைய முன்மொழிவின் பிரகாரம், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு என முழு அதிகாரம் கொண்ட பிரிவுகளையும் மூன்றாவது பிரிவான மருதமுனையையும் வர்த்தமானியில் பிரகடனப்படுத்துகையில் கல்முனை தெற்கின் நிர்வாக மத்திய நிலையம் கல்முனை வடக்கில் தானே இருக்கப்போகின்றதே?
பதில்:- உண்மைதான். கல்முனை தெற்கு தனக்கான ஒரு நிர்வாக மத்தியை அமைக்கும் வரை அவ்வாறான நிலைமைதான் இருக்கும். அவ்வேளையில் அவர்கள் அம்மத்திக்கு அருகாமையில் புதிய இஸ்லாமாபாத்தையும் அமைக்கலாம். அதில் எமக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை. இந்த முன்மொழிவை உள்ளீர்ப்பது தவிர்க்கப்படுகின்ற போது கல்முனை விவகாரம் தீரா நோயாகிவிடும்.
நேர்காணல்:- ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM