விரைவில் நாட்டில் முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இத்தேர்தல்களில் வெற்றியை தமதாக்கிக் கொள்ளும் பொருட்டு அரசியல் கட்சிகள் காய் நகர்த்தத் தொடங்கி இருக்கின்றன. இது காலவரை மக்களை மறந்திருந்த சில அரசியல்வாதிகளின் கவனம் தேர்தல் காலம் என்பதால் இப்போது மக்களின் பக்கம் திரும்பி இருக்கின்றது.
மக்களின் வறுமை நிலை மற்றும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து இப்போது பலர் நீலிக்கண்ணீர் வடிக்கத்தொடங்கி இருக்கின்றார்கள். இந்த வகையில் மலையக மக்கள் மீதும் இப்போது பலருக்கு கரிசனை வந்திருக்கின்றது. “இம்மக்களின் பல்வேறு பிரச்சினைகளும் தீர்க்கப்படாதிருப்பதாக இப்போதுதான் இவர்கள் வாய் திறக்கின்றார்கள். எவ்வாறெனினும் மக்கள் இவர்களை தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் தேர்தல் கால வாக்குறுதிகளையும் போலியான முன்னெடுப்புகளையும் இனியும் நம்பி ஏமாறமாட்டார்கள்.
இந்நாட்டில் மலையக மக்களின் வரலாறு என்பது மிகவும் கசப்பானதாகும். இந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட இம்மக்கள் தொடர்ச்சியாகவே பல்வேறு துன்ப துயரங்களுக்கும் முகம் கொடுத்து வந்திருக்கின்றார்கள். இன்னும் முகம் கொடுத்தும் வருகின்றார்கள் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும். பல்வேறு இன்பக் கனவுகளுடன் இடம்பெயர்ந்த இவர்களின் கனவு நனவாகவில்லை.
அடிமேல் அடி விழுந்ததே தவிர இம்மக்களின் வாழ்வில் செழுமை ஏற்படவில்லை. தோட்டத்துக்குள்ளேயே இவர்களின் வாழ்க்கை முடங்கிப் போய் இருந்தது. எதற்கெடுத்தாலும் பிறரின் உதவியினையும் இவர்கள் நாடிச் செல்ல வேண்டியிருந்தது. நாடு சுதந்திரம் அடைந்தும்கூட மலையக மக்களின் வாழ்வு என்பது இருளில்தான் மூழ்கிக்கிடந்தது. சுதந்திரத்தின் முன்னர் இவர்கள் எதிர்நோக்கிய சவால்களைக் காட்டிலும் அதிகமான சவால்களை சுதந்திரத்தின் பின்னர் எதிர்நோக்க வேண்டி இருந்தது.
பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டு இலங்கை மண்ணில் நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கப்பட்ட இம்மக்கள் பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பெற்றுக் கொண்ட பின்னரும் கூட உரிய அபிவிருத்தியை பெற்றுக் கொண்டதாக இல்லை. தேசிய மயமாக்கல், அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தனியார் மயப்படுத்தல் இவைகளின் தாக்கத்தினாலும் தொழிற்சங்க வளர்ச்சியினாலும் தோட்ட நிர்வாக முறைகள் மாற்றியமைக்கப்பட்டன. எனினும் தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார பாகுபாடுகளுக்கு உள்ளாவதுடன் அபிவிருத்திக்கான உரிமையும் மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளமையும் இங்கு நோக்கத்தக்க ஒரு விடயமாகவே உள்ளது. தோட்டங்கள் அங்கு வசிக்கின்ற மக்களின் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களையும் கட்டுப்படுத்தியது. இம்மக்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் இடப்பட்டன.
ஆட்சியாளர்கள் பல இன மக்களும் வாழும் ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் சகல இனங்களினதும் உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுதல் வேண்டும். இதன் மூலம் ஐக்கியம் வலுப்பெறும் நிலையில் சாந்தியும் சமாதானமும் மேலோங்கும். நாட்டின் அபிவிருத்தியும் முன்னேற்றமடையும். எனினும் இலங்கையின் ஆட்சியாளர்கள் குறித்து பல்வேறு விசனப் பார்வைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் தெரிந்த ஒரு விடயமாகும்.
பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்துவதன் ஊடாக தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ளும் கலாசாரம் இந்நாட்டில் பாரிய பிரச்சினைகளுக்கும் அடித்தளமாகி இருக்கின்றது. சிறுபான்மையினர் கிள்ளுக்கீரைகள். இவர்களுக்கு உரிமைகளை வழங்கத் தேவையில்லை. இவர்களுக்கு உரிமைகளை வழங்கினால் அது பெரும்பான்மையினருக்கு ஆபத்தாய் போய்விடும் என்கிற சிந்தனையே இங்கு அதிகமாகவே மேலெழுந்திருக்கின்றன. சிங்களவர் போன்று வேறு ஒரு சமூகம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை.
இந்தியர்களுக்கு ஒரு பெரிய நாடு உள்ளது. எங்களுக்கு இச்சிறு துண்டு நிலமே உள்ளது. இந்த நாடு எங்களுக்கு வேண்டும் என்ற சிந்தனை கருத்து வெளிப்பாடு 1928 இல் இடம்பெற்றது.
இதனை அடியொற்றியதாக சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட ஆட்சியாளர்கள் சிலரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தமை புதிய விடயமல்ல. இலங்கையை மாறி மாறி ஆட்சி செலுத்திய ஆட்சியாளர்கள் மலையக மக்களின் நலன் கருதி காத்திரமான பங்களிப்பினை நல்கவில்லை என்பதனை பெரும்பான்மையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே அண்மையில் ஏற்றுக் கொண்டிருந்தார். இது குறித்து தனது வருத்தத்தையும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 1948 ஆம் ஆண்டு இந்திய வம்சாவழியினரின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் ஐக்கிய தேசியக் கட்சி பறித்தெடுத்து அம்மக்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்தியது. 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு சிறுபான்மையினரின் வீழ்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டது. தனிச் சிங்கள சட்டத்தை முன்னர் எதிர்த்தவர்கள் பின்னர் அரசியல் இருப்புக்காக இதனை ஆதரிக்க தலைப்பட்டனர். கருத்து மாற்றங்கள் அதிகமாகவே இடம்பெற்றிருந்தன.
அடங்கி வாழ வேண்டும்
இலங்கை சிங்கள – பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்ற கருத்து பிற்காலத்தில் ஆழமாகவே வேரூன்ற இடமளிக்கப்பட்டது. இந்த விதைப்பு பல்வேறு விரிசல்களும் இடம்பெற உந்து சக்தியாகியமை தெரிந்த விடயமாகும். சரத் பொன்சேகா இந்நாட்டின் இராணுவத் தளபதியாக கடமையாற்றியவர். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் அளப்பரிய பங்காற்றியவர். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இவர் 2010 ஆம் ஆண்டில் களமிறங்கி இருந்தார்.
சரத் பொன்சேகா இத்தேர்தலில் தோல்வி கண்டிருந்தாலும். ஒரு சிலவேளை அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் குறித்து எவ்வாறு நடந்து கொண்டிருப்பார் என்பதனை அவரின் பேச்சின் மூலமாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு. ஏனைய சிறுபான்மையினர் அவர்களுடன் வாழ தெரிந்துகொள்ளவேண்டும் என்று சிறுபான்மையினர் மனம் புண்படும்படி அவர் கருத்துகளை வெளியிட்டிருக்கின்றார். சிறுபான்மையினர் நலன்களை பேண விரும்பாத, சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்க விரும்பாத ஒருவராக அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்.
‘கனடியன் நெஷனல் போஸ்ட்’ என்கிற நாளிதழுக்கு 2008 ஆம் ஆண்டில் அவர் ஒரு செவ்வியினை வழங்கி இருந்தார். இச் செவ்வியில் இலங்கை நாடானது அதன் 75 வீத மக்களான சிங்களவர்களுக்கே சொந்தமானது. சிறுபான்மையினர் எங்களுடன் இந்த நாட்டில் வாழலாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் என்ற அடிப்படையில் சாத்தியமற்றதான எவற்றையும் கோரிக்கையாக முன்வைக்க முடியாது என்று தனது செவ்வியில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இராஜதந்திரம், பொருளாதாரம், அரசியல் என்ற விடயங்களில் சரத் பொன்சேகாவின் அறிவும், தொலைநோக்கும் எதிர்பார்ப்புகளுக்கு மிகவும் அந்நியமானவை என்பதில் சந்தேகமில்லை என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இக்காலகட்டத்தில் மேலும் பல கருத்துகளையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டால் நெடுமாறன், வைகோ போன்ற தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகளும் விடுதலைப் புலிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அனுதாபிகளாய் இருக்கும் ஏனையவர்களும் அவர்களின் வருமானத்தை இழந்து விடுவார்கள் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் வெளியிட்டிருந்தார்.
சரத் பொன்சேகாவின் தமிழக அரசியல்வாதிகள் தொடர்பான பலவித கருத்துகள் குறித்து அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியும் கண்டனம் தெரிவித்திருந்தார். நம் நாட்டு அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும் குற்றம் சாட்டுவதும் வேறு. ஆனால் மற்றொரு நாட்டைச் சேர்ந்தவர் எமது நாட்டுத் தலைவர்களைப் பற்றி இவ்வாறு அவதூறான கருத்துக்களைக் கூறுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருணாநிதி தெரிவித்திருந்தார்.
சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளர் என்ற நிலையிலேயே சிறுபான்மையினர் மீது இவ்வாறு வெறுப்பு கொண்டிருப்பாரானால் அவர் ஜனாதிபதியாக தெரிவாகி இருந்தால் எம்மவர்களின் நிலை என்னவாகி இருக்குமென்று சிந்திக்க வேண்டி இருக்கின்றது. சிறுபான்மையினர் அடங்கி வாழ வேண்டும் என்றால் அவர்கள் தம் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பக் கூடாதா?
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா
இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே.ஆர். ெஜயவர்த்தனா ஒரு முக்கிய கதாபாத்திரமாக விளங்குகின்றார். தந்திரம் மிக்க மூளையைக் கொண்டவர் என்று அவர் மேலும் பேசப்படுகின்றார். இலங்கையில் திறந்த பொருளாதார முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி நீண்டகாலமாக எண்ணம் கொண்டிருந்தது. ஜே.ஆர்.ெஜயவர்தனா இது குறித்து அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளைப் போன்று இலங்கையையும் உருவாக்க வேண்டும் என்பது அவரின் எண்ணமாக இருந்தது.
1977ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க. அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஜே.ஆரின் எண்ணத்துக்கு உருக்கொடுத்தது. புதிய அரசியல் திட்டத்தினை உருவாக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமைக்கு 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு வித்திட்டது. மேலும் விகிதாசார தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு வழிகளிலும் சுயாதீனமாக இயங்கக் கூடிய வலிமையான அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி அரசாங்க முறைக்கு வித்திடப்பட்டது. துரித பொருளாதார அபிவிருத்திக்கு பாராளுமன்றத்தினால் கட்டுப்படுத்தப்படாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி தேவை என்று பலராலும் கருதப்பட்டமையானது இப்பதவியின் உருவாக்கத்துக்கு உந்துசக்தியானது.
ஜனாதிபதி இலங்கை அரசின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும், நிறைவேற்றுத் துறையின் தலைவராகவும், ஆயுதம் தாங்கிய முப்படைகளின் தலைவராகவும் விளங்குகின்றார். அதிகாரங்கள் பலவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் குவிந்து காணப்படுகின்றன. இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ஜே.ஆர். விளங்கினார். இவர் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் குறித்து கொண்டிருந்த நிலைப்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றன.
இவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து எந்தளவு நாட்டு மக்களின் நலன்களைப் பேணினார். உரிமைகளை வழங்கினார்? என்று பரவலாகவே கேள்விகள் மேலெழுந்த வண்ணமுள்ளன. 1983 இல் இடம்பெற்ற ஜூலை கலவரம் எமது நாட்டை ஒரு உலுக்கு உலுக்கி இருந்தது. இதனால் பலர் பாதிப்புக்கு உள்ளாகினர். உயிர் மற்றும் உடமைகளை இழந்திருந்தனர். இந்த கலவரத்தின் போது ஜே.ஆர். நடந்து கொண்ட விதம் குறித்து விமர்சனங்கள் அதிகமுள்ளன. இவரின் செயற்பாடுகள் தொடர்பில் கூறுபவர்கள், உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாதிருந்திருக்கலாம் என்று கூறுவதையும் கேட்கக் கூடியதாகவே உள்ளது.
ஜே.ஆர்.ெஜயவர்தனா தமிழர்கள் உரிமைக்கோஷம் எழுப்பிய பல சந்தர்ப்பங்களில் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றார். இத்தகைய ஒருவர் ஜனாதிபதியான நிலையில் மலையக மக்களின் நலன்களுக்கு எந்தளவு வலுசேர்ப்பார் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. 1987 இல் பண்டா–செல்வா உடன்படிக்கையில் தமிழ் மக்களின் நலன்கருதி பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
தமிழையும் அரச கரும மொழியாக்குதல், பிரஜாவுரிமை சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்துதல், வட மாகாணத்திற்கு ஒரு பிராந்திய சபையும், கிழக்கு மாகாணத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகளும் ஏற்படுத்தக்கூடிய சட்ட விதிமுறைகளை தயார்படுத்துதல், பிராந்திய சபை பிரதேசத்திற்குள் மக்கள் குடியேற்றியமைகளுக்காக காணிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. எனினும் ஜே.ஆர்.ெஜயவர்தனா மற்றும் பௌத்த பிக்குகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது. 1985 இல் திம்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களை தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளல், பாரம்பரிய தாயகத்தை ஏற்றுக்கொள்ளல், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளல், பிரஜாவுரிமையை ஏற்றுக்கொள்ளல், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொள்ளல் போன்ற விடயங்கள் தமிழ் தரப்பினால் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும் ஜே.ஆர்.ெஜயவர்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இதனை நிராகரித்திருந்தது. இவ்வாறாக தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதனை கண்டித்த ஜே.ஆர். மலையக மக்களின் நலன்கருதியும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டாரா? என்பது கேள்விக்குரிய ஒரு விடயமேயாகும். இதேவேளை 1944 ஆம் ஆண்டில் ஜே.ஆர். சிங்களம் சில வருடத்துக்குள் அரச கரும மொழியாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இனவாத முகத்தை வெளிப்படுத்தி இருந்ததும் இங்கு நோக்கத்தக்க ஒரு விடயமாக உள்ளது. இனவாத சிந்தனையாளர்கள் நாட்டின் ஆட்சியாளர்களாகின்றபோது அவர்களின் செயற்பாடுகள் விரிசல்களை உண்டு பண்ணுவதாகவே அமையும்.
ஆர்.பிரேமதாச
பிரேமதாச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மலையக மக்கள் தொடர்பான அவரது நடவடிக்கைகள் குறித்தும் திருப்தி கொள்வதற்கில்லை. மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே அவரது செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன. கண்துடைப்புக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில மலையக அபிவிருத்திசார் நடவடிக்கைகள் இடம்பெற்றதே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. கிராம எழுச்சி தொடர்பில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எனினும் தோட்ட மக்களின் நலன்கருதி செயற்பாடுகள் குறைவாக இருந்தன. அவரது வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் மலையக மக்கள் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.
இலங்கையின் வீடமைப்புத்திட்டம் இக்காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்தது. ஒரு இலட்சம் வீடமைப்புத் திட்டம், பத்து இலட்சம் வீடமைப்பு திட்டம் என்றெல்லாம் இவர் ஏற்படுத்தினார். 1987ஆம் ஆண்டு சர்வதேச வீடமைப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது. கிராமப் பகுதியில் இவர் வீடமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் தோட்டப்புற வீடமைப்பு குறித்து இவர் உரிய அக்கறை காண்பிக்கவில்லை. வீடமைப்பில் சிங்கள மக்களுக்கு தோள் கொடுத்தாரே தவிர மலையக மக்களுக்கு உதவவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும். இதேவேளை. சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது தோட்ட மக்களின் நலன்கருதி வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. தோட்ட உட்கட்டமைப்பு விருத்திக்கு அவர் உதவியிருந்தார்.
வாக்குறுதிகள்
மஹிந்த ராஜபக் ஷவும் தோட்ட மக்களின் அபிவிருத்தி கருதி வாக்குறுதிகள் பலவற்றை வழங்கி இருந்தார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவை இடம் பெற்றிருந்தன. மற்றும் வரவு–செலவு திட்ட முன்மொழிவுகளிலும் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபன வெளியீடான மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கில் தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினை குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது. பெருந்தோட்ட மக்களை வீட்டுரிமையுள்ள சமூகமாக மாற்றுதல் வேண்டும். இது என்னுடைய பிரதான ஒரு இலக்காகும்.
இதற்கிணங்க 2015 ஆம் ஆண்டாகின்றபோது ஒவ்வொரு பெருந்தோட்ட ஊழியரது குடும்பமும் தற்போது வசிக்கின்ற லயன் வீடுகளுக்கு பதிலாக அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வீடொன்றிற்கு உரிமையுள்ள குடும்பமாக மாற்றுவேன் என்று மஹிந்த தெரிவித்திருந்தார். நிலைமைகள் என்னவாகின என்பது யாவரும் அறிந்த விடயம் தானே. 2014 ஆம் ஆண்டு மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தோட்டப்பகுதியில் ஏழு பேர்ச்சர்ஸ் காணி, வீடு தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்பதாவது வரவு – செலவு திட்டமும், தோட்ட மக்களின் வீடமைப்பு குறித்து முன்மொழிந்திருந்தது. தோட்டத்துறை மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் ஊடாக ஐம்பதாயிரம் வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட உள்ளதுடன் இரண்டு வீதம் அறவிடப்படும் தேச நிர்மாணவரி வங்கித்துறையிலும் அறவிடப்படும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. எல்லாமே பொய் வாக்குறுதிகள் என்பதனை மலையக மக்கள் விளங்கிக்கொள்ள நீண்டகாலம் பிடிக்கவில்லை.
பிரச்சினைகள்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. அரசியல், பொருளாதார சமூகப்பிரச்சினைகள் பல காணப்படுகின்றன. கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், தொழில் வாய்ப்பு என்று பிரச்சினைகள் ஒவ்வொரு துறையிலும் மேலோங்கி வருகின்றன. இந்த பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் தலைமைகள் அறியாமலில்லை. எனினும் இவற்றை தீர்த்து வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் ரூபா 1000 சம்பள உயர்வினை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுதியளித்திருந்தது. சம்பள உயர்வு விடயம் முக்கிய கருப்பொருளாகி இருந்தது. எனினும் தேர்தல் வெற்றியின் பின்னர் தோட்டத் தொழிலாளர்களை ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள். இந்நிலையில் எமது நாட்டில் விரைவில் முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தம்மை தயார்படுத்தி வருகின்றன. இதனிடையே தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கரிசனையையும் அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தி வருகின்றன. இம்மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் குறியாக உள்ள கட்சிகள் பல்வேறு உபாயங்களையும் பின்பற்றி வருகின்றன.
தலைவர்களின் கரிசனை
தோட்டத் தொழிலாளர்களின் பின்தங்கிய வாழ்க்கை நிலைமைகள் குறித்து தலைவர்கள் இப்போது பேசி வருகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலையகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மலையகத்தவர்களின் துன்ப நிலைமையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.தோட்டத்தொழிலாளர்கள் செந்நீரிலும் கண்ணீரிலும் காலத்தை கடத்துகின்றனர். அவர்கள் எந்தவொரு சுகபோகத்தையும் அனுபவிக்கவில்லை. அவர்களது உழைப்பில் ஏனைய தரப்பினரே அனைத்து சுகபோகத்தையும் அனுபவிக்கின்றனர்.
என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கரிசனையுடன் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார். நான்கரை ஆண்டுகளாக அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது. அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துவதாகக் கூறி இந்த அரசாங்கம் இறுதிவரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. எனினும் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்ற தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை தன்வசப்படுத்தியபோதும் கூட அவர்களுக்கான எந்த நன்மைகளையும் செய்யவில்லை. இந்த அரசாங்கத்தில் தோட்டத்தொழிலாளர்களின் தலைமைகள் அங்கம் வகித்து வருகின்றனர் என்பதும் கவலைக்கிடமான விடயமாகவே உள்ளது என்று மஹிந்த தெரிவித்திருக்கிறார்.
மலையக மக்களின் நிலைமைகள் குறித்த தலைவர்களின் கருத்துகள் நியாயமானதே என்றபோதும் இந்நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய வல்லமையும் இவர்களுக்கே இருக்கிறது என்பதை இவர்கள் மறந்துபோய் இருக்கிறார்கள். தமது ஆட்சிக்காலத்தில் மலையக மக்களின் நலன் கருதி விசேட திட்டங்களை அமுல்படுத்தி செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் இம்மக்களின் வாழ்க்கை வளம்பெற்றிருக்கும். எனினும் இவர்கள் ஆட்சிக்காலத்தில் அபிவிருத்திக்காக காத்திரமான பங்காற்றினார்களா என்று சிந்திக்க வேண்டி இருந்தது. தேர்தல் அண்மித்திருப்பதனால் தலைவர்களுக்கு இப்போது ஞானம் பிறந்திருக்கிறது. மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாகிவிடும். கடந்த கால வரலாறுகள் இதனை நிரூபித்துள்ளன. மலையகத்தவரின் அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்.
- துரைசாமி நடராஜா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM