(ஆர்.யசி )
கடந்த காலங்களில் பாதுகாப்பு செயற்பாடுகள் மந்த நிலையில் கையாளப்பட்டன என்பதை நான் உணர்கிறேன். பாதுகாப்பு அமைச்சின் ஒரு நிலையானதும் உறுதியானதுமான நிலைப்பாடு இருக்கவில்லை. ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகளே இதற்கான காரணம் என நான் நினைக்கிறேன், அதேபோல் நான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தாலும் எனக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவுக்குழு முன்னிலையில் இவ்வாறு சாட்சியமளித்தார். அவரின் சாட்சியம் வருமாறு,
குழு :- உங்களை இங்கு அழைக்க சில காரணிகள் உள்ளன, இதற்கு முன்னர் விசாரணைகளை முன்னெடுத்தபோது சில காரணிகள் முன்வைக்கப்பட்டன. நீங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற காலத்தில் இது குறித்து உங்களின் நினைவிலுள்ளவற்றை கூற முடியுமா?
பதில்:- 2017 ஆம் ஆண்டு பாதுகப்பு சபைக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச மோதல் குறித்து பேசப்பட்டது. பயங்கரவாத நபர்கள் குறித்து பேசவில்லை. அப்போது சட்டம் ஒழுங்கு அமைச்சும் வேறு அமைச்சரிடமிருந்தது. எவ்வாறிருப்பினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒன்று இடம்பெறும் என்ற காரணிகள் பேசப்படவில்லை. தாக்குதலின் பின்னர் தான் இந்த தாக்குதல் குறித்த முன்கூட்டிய தகவல்கள் பகிரப்பட்டமை குறித்து அறிந்து கொண்டேன்.
தாக்குதலின் பின்னர் முதல் கூட்டத்தை கூட்ட எவரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. பாதுகாப்பு செயலாளரை தொடர்புகொண்ட போது அவர்களும் களத்தில் இருந்தனர். தாக்குதல் இடம்பெற்ற இடங்களில் அதிகாரிகள் இருந்தனர். பின்னர் கூட்டப்பட்ட பாதுகாப்பு கூட்டத்தில் இந்த தாக்குதல்கள் நிலைமைகள் குறித்து பேசினோம். பிரதமரும் தொலைபேசியில் என்னிடம் தொடர்புகொண்டு பேசினார். கொழும்புக்கு வெளிப் பிரதேசத்தில் இருக்கின்ற காரணத்தினால் அவர் வந்தவுடன் உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்கக் கூறினார். அவர் கொழும்புக்கு வந்தவுடன் பாதுகாப்பு கூட்டத்தை கூட்ட கூறினார். ஆனால் அதனைக் கூட்ட அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. ஒரு மணிநேரத்தின் பின்னர் மீண்டும் பிரதமர் அழைத்தார். அப்போதும் பாதுகாப்பு அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை. மூன்றாவது தடவையாக பிரதமர் தொலைபேசியில் அழைத்து நீங்கள் இங்கு வரவில்லை என்றால் நான் அங்கு வரவா என கேட்டார். இங்கு நிலைமைகள் சரியில்லை நீங்கள் இங்கு வந்தால் நல்லது என கூறினேன். அவர் பாதுகாப்பு அமைச்சுக்கு வந்தும் காத்திருந்தார். பின்னரே கூட்டம் நடத்தப்பட்டது.
கேள்வி:- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக உங்களின் அதிகாரம் என்ன ?
பதில்:- நான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் எனக்கிருந்த அதிகாரங்கள் முப்படையோ அல்லது புலனாய்வு அதிகாரமோ அல்ல. நலன்புரி, மற்றும் சில சாதாரண விடயங்களை நான் கையாள்கிறேன். எனக்கும் பாதுகாப்பு கூட்டத்தில் பேசும் விடயங்களே தெரியும். புலனாய்வு குழுக்கூட்டங்களில் பேசும் விடயங்களும் தெரியும்.
கேள்வி:- நீங்கள் பதவியில் இருந்தாலும் அதிகாரம் இல்லையா ?
பதில்:- ஆம், வர்த்தமானியில் எனக்கான அதிகாரங்கள் இருந்தாலும் நடைமுறையில் அவ்வாறு இல்லை.
கேள்வி:- அப்படியென்றால் பாதுகாப்பு அமைச்சருக்கா அதிகாரம் இருந்தது?
பதில்:- முப்படை அதிகாரங்கள் மற்றும் நிருவாக அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே உள்ளன.
கேள்வி:- நீங்கள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் உறுப்பினராக உள்ளீர்களா?
பதில்:- கடந்த ஆண்டு அரசியல் புரட்சியின் பின்னர் என்னை அழைக்கவில்லை, அதற்கு முன்னர் இருந்தேன். 51 நாட்கள் அரசியல் பிரச்சினையில் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இருந்த முரண்பாடுகள் காரணமாக அதன் பின்னர் என்னை அழைக்கவில்லை.
கேள்வி:- பாதுகாப்பு கூட்டத்தில் சஹ்ரான் குறித்து பேசவே இல்லையா?
பதில்:- அப்போது காத்தான்குடி பள்ளிவாசல் மோதல் மற்றும் அடிப்படைவாத குழுக்கள் குறித்தும், சிரியாவுக்கு சென்ற குடும்பம் குறித்தும் பேசப்பட்டது. அதற்கு அப்பால் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசப்படவில்லை.முஸ்லிம் அடிப்படைவாதம் என்ற கதைகளும் சிரியா சென்ற குடும்பம் மற்றும் காத்தான்குடி பிரதேச சம்பவம் ஆகிய விடயங்கள் மட்டுமே பேசப்பட்டன.
கேள்வி:- பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் பேசப்படுகின்றதே தவிர நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையா ?
பதில் :- இல்லை, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- மாவனல்லை பிரச்சினையில் தான் இது ஆரம்பமாகியுள்ளது. இது குறித்து பேசப்படவில்லையா ?
பதில்:- அந்த காலத்தில் நான் பாதுகாப்பு குழுக்கூட்டங்களுக்கு செல்வதில்லை. ஆனால் பேசப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.
கேள்வி:- நீங்கள் புலனாய்வு கூட்டங்களுக்கு தலைமை தாங்கியதாக கூறப்படுகின்றமை உண்மையா ?
பதில்:- நான் தலைமை தாங்கவில்லை, பாதுகாப்பு செயலாளர் கூட்டங்களை கூட்டுவார். நான் கூட்டங்களில் கலந்துகொண்டு நடத்தியுள்ளேன். ஆனால் முழுமையாக அவ்வாறு கூறவும் முடியாது.
கேள்வி:- யார் உங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் ?
பதில்:- பாதுகாப்பு செயலாளர்
கேள்வி:- எவ்வாறு இருந்தாலும் வழமையாக கூட்டம் நடப்பது உங்களுக்கு தெரியும் தானே ?
பதில்:- ஆம்
கேள்வி:- நீங்கள் எவ்வாறான தீர்மானங்களை புலனாய்வு கூட்டங்களில் எடுத்தீர்கள் ?
பதில்:- பெரும்பாலும் தீர்மானங்களை பாதுகாப்பு குழுக்கூட்டங்களுக்கு கொண்டுசெல்வதுண்டு.
கேள்வி:- புலனாய்வு கூட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கூட்டங்களில் காத்தான்குடி மோதல் குறித்து வெறுமனே பேசப்பட்டுள்ளமை மற்றும் சிரியா சென்றவர்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளமை தவிர வேறு எந்த காரணிகள் குறித்தும் பேசவில்லை. அப்படியா ?
பதில்:- அப்படி அல்ல. சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் பற்றியும் பேசியுள்ளோம். பயங்கரவாதம் குறித்து பேசவில்லை.
கேள்வி:- உங்களுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதா ?
பதில்:- மட்டக்களப்புக்கு நான் சென்றபோது பல முஸ்லிம் மக்கள் கூறினார்கள். ஆனால் காத்தான்குடியின் அமைதியின்மை குறித்து ஏற்கனவே அறிந்து வைத்திருந்தோம். எனினும் பயங்கரவாத அமைப்பொன்று உருவாவது குறித்து அறிந்திருக்கவில்லை.
கேள்வி:- நீங்கள் எப்போது பாதுகாப்பு கூட்டங்களில் கலந்துகொண்டீர்கள் ?
பதில்:- அரசியல் பிரச்சினைக்கு முன்னர் கலந்துகொண்டேன். ஒக்டோபர் 2 ஆம் திகதி.
கேள்வி:- பாதுகாப்பு புலனாய்வு கூட்டத்தில் எப்போது இறுதியாக சென்றீர்கள் ?
பதில்:- அரசியல் பிரச்சினைக்கு முன்னர்.
கேள்வி:- பாதுகாப்பு கூட்டத்துக்கு அழைக்கப்படுவீர்கள் என்பதை எதிர்பார்த்தீர்களா?
பதில்:- இல்லை
கேள்வி:- கடந்த அரசியல் புரட்சிக்கு பின்னரில் இருந்து ஏப்ரல் தாக்குதல் வரையில் பாதுகாப்பு கூட்டம் குறித்து பாதுகாப்பு செயலாளரிடம் நீங்கள் கேட்கவில்லையா ?
பதில்:- நான் பாதுகாப்பு செயலாளரிடம் பேசினேன். பாதுகாப்பு கூட்டம் கூடுவது இல்லை என அவர் கூறினார். முப்படை மற்றும் புலனாய்வு துறையுடன் ஜனாதிபதி தேவைப்பட்டால் பேசி தீர்மானம் எடுக்கலாம் என்றார்.
கேள்வி:- நீங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர். ஏன் நீங்கள் ஜனாதிபதியிடம் நேரடியாக இது குறித்து கேட்கவில்லை?
பதில்:- நான் அவ்வாறு கேட்கவில்லை. அப்போது இருந்த அரசியல் நெருக்கடியில் ஒரு மட்டத்தில் முரண்பாடுகள் இருந்த காரணத்தினால் என்னை அழைக்காமைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என நினைத்தேன். ஆனால் பாதுகாப்பு குழுக்கூட்டம் கூட்டப்படவில்லை என்பதை செயலாளர் மூலமாக அறிந்துகொண்டேன்.
கேள்வி:- புலனாய்வு கூட்டங்களிலுமா கேட்கவில்லை?
பதில்:- மார்ச் மாதத்தில் கேட்டேன். அடுத்த கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பதாக கூறினார்கள். ஆனால் அழைக்கப்படவில்லை. அரசியல் முரண்பாடுகள் தான் காரணமாக இருக்கும் என நினைத்தேன்.
கேள்வி:- இந்த கூட்டங்கள் இடம்பெறுவது உங்களுக்கு தெரியுமா?
பதில்:- தெரியும். ஆனால் அழைப்பு விடுக்கப்படவில்லை.
கேள்வி:- நீங்களும் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் இருப்பதால், இவ்வாறு கூட்டங்கள் கூடுகின்றன என்பது உங்களுக்கு தெரியாதா ?
பதில்:- தெரியும், ஆனால் வழமையாக அவ்வாறு வருவதால் நான் பொருட்படுத்தவில்லை.
கேள்வி:- நீங்கள் ஜனாதிபதியிடம் எதிர்ப்பை தெரிவிக்கவில்லையா ?
பதில்:- அதனால் தான் பாதுகாப்பு செயலாளரை வினவினேன். வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எனக்கு அதிகாரங்கள் இல்லை. எனினும் நான் அதிகாரிகளிடம் கேட்டேன்.
கேள்வி:- இந்த விடயத்தில் தகவல் பரிமாற்றல் குறைபாடு என்பது தெரிகின்றதா ?
பதில்:- தொடர்பாடல் இல்லாமையே காரணம். புலனாய்வுத்துறையினர் வெவ்வேறாக செயற்படுவது எனக்கு தெரிந்தது. 2015 தொடக்கம் இப்போது வரையில் ஐந்து பாதுகாப்பு செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதுவெல்லாம் குறைபாடுகள் தானே.
கேள்வி:- புலனாய்வு விடயங்களில் உங்களின் ஒத்துழைப்பை பெறவில்லையா ?
கேள்வி:- செவ்வாய்க்கிழமை கூட்டங்களில் நான் கலந்துகொண்டேன். சில நேரங்களில் வேறு வேலைகளில் இருந்தால் நான் செல்லமாட்டேன். இவை அரசியல் பிரச்சினைக்கு முன்னர் இருந்த நிலையாகும். இந்த கூட்டங்களில் பேசும் விடயங்களை பாதுகாப்பு கூட்டங்களில் கொண்டு செல்வேன்.
கேள்வி:- பாதுகாப்பு விடயங்களில் பாராளுமன்றத்தில் நீங்கள் தானே பதில் கூறவேண்டும்?
பதில்:- ஆம்
கேள்வி:- ஆனால் அதிகாரம் வழங்கப்படவில்லை?
பதில்:- ஆம், தீர்மானம் எடுக்க எனக்கு அதிகாரம் வழங்கவில்லை
கேள்வி:- அப்படியென்றால் பாராளுமன்றத்தில் உங்களிடம் பொறுப்புக்கொடுப்பது நெருக்கடியான விடயமா?
பதில்:- ஆம் சற்று கடினமாகவே இருக்கும்.
கேள்வி:- நீங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், உங்களுக்கு பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து எதுவும் தெரியுமா? மன்னிக்கவும் உங்களை அவமதிக்க அவ்வாறு கேட்கவில்லை.
பதில்:- பரவாயில்லை, எனக்கு தெரியாது.
கேள்வி:- உங்களுக்கு இதனை விட அனுபவம், அறிவு இருந்தால் நல்லதென நீங்கள் நினைக்கின்றீர்களா ?
பதில்:- ஆம் அவ்வாறு இருந்திருந்தால் நல்லது.
சரத் பொன்சேகா:- ஜனாதிபதி இல்லாத நேரங்களில் நீங்கள் தானே பொறுப்பதிகாரி. அவ்வாறு இருக்கையில் ஒன்றும் தெரியாது செயற்பட முடியாதே?
பதில்:- ஆம், நீங்கள் கூறுவது சரிதான். இப்போது ஓரளவு பாதுகாப்பு அறிவு இருக்கின்றது. உங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு அமைச்சை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உங்களுக்கு கிடைக்கவில்லை.
கேள்வி:- புலனாய்வு அறிக்கையில்கூட சஹ்ரான் குறித்து அறிந்திருக்கவில்லையா ?
பதில் :- காத்தான்குடி சம்பவத்தில் தான் அறிந்துகொள்ள முடிந்ததே தவிர அவர் பயங்கரவாத செயற்பாடுகளில் இருப்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.
கேள்வி:- பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் எப்போதாவது சஹ்ரான், என்.டி.ஜே குறித்து எடுத்த நடவடிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து கோரிக்கை வந்ததாக தெரியுமா ?
பதில்:- அவ்வாறு பதில் கிடைத்ததாக நினைவில் இல்லை. பேசப்பட்டது.
கேள்வி:- இதனை தடுக்க எந்த நடவடிக்கையும் கோரிக்கையும் வரவில்லையா ?
பதில்:- இது சட்டம் நீதி அமைச்சருக்கு வலியுறுத்தப்பட்டது. விசாரணை நடத்த கூறப்பட்டது.
கேள்வி:- குண்டு வெடிக்கும் வரையில் விசாரணையே இடம்பெற்றது. ஜனாதிபதி இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையா ?
பதில்:- அவ்வாறு ஒன்றும் இருக்கவில்லை. தடுக்க பல வாய்ப்புகள் இருந்தன. விசாரணைகள் சரியாக இடம்பெற்றிருந்தால் தடுத்திருக்க முடியும் என நினைக்கிறேன்.
கேள்வி:- அரசியல் புரட்சிக்கு முன்னர் எத்தனை கூட்டங்கள் நடந்தன?
பதில்:- எத்தனை நாட்கள் கூடியது என எனக்கு தெரியாது. அவ்வப்போது ஜனாதிபதி தேவைப்படும் நாட்களில் கூட்டுவார்.
கேள்வி:- மாதத்திற்கு ஒரு தடவையாவது கூடியிருக்குமா ?
பதில்:- ஆம் மாதத்திற்கு ஒரு முறை கூடியிருக்கும். ஆனால் முறையாக கூடவில்லை.
கேள்வி:- நீங்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்க முன்னர் யார் பதவியில் இருந்தது ?
பதில்:- அவ்வாறு இருக்கவில்லை, இறுதியாக லலித் அதுலத்முதலி இருந்தார்.
கேள்வி:- உங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தில் நான்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அப்பால் அதிகாரங்கள் உள்ளதா?
பதில்:- கடந்த ஆண்டு அரசியல் புரட்சியின் பின்னர் மேலும் சில அதிகாரங்கள் இருந்தன.
கேள்வி:- உங்களின் அதிகாரங்களை கொண்டு பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் பேச ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன் ?
பதில்:- ஆம் எனக்கு உள்ள அதிகாரங்கள் கொண்டு பேச ஒன்றும் இல்லை.
கேள்வி:- அப்படியென்றால் புலனாய்வு கூட்டங்களில் தலைமையேற்று நடத்த எங்கிருந்து அதிகாரம் கிடைக்கும் ?
பதில்:- அவ்வாறு எங்கிருந்தும் வராது கூட்டங்களுக்கு அழைப்பார்கள்.
கேள்வி:- இந்த கூட்டங்களுக்கு ஜனாதிபதி வருவாரா ?
பதில்:- இல்லை.
கேள்வி:- நீங்கள் செல்லாத நேரங்களில் யார் உங்களுக்கு நடந்தவற்றை கூறுவார்கள் ?
பதில்:- அவ்வாறு யாரும் அறிவிக்கமாட்டார்கள். நான் தலைமை ஏற்பதில்லை. கூட்டங்களை முன்னின்று நடத்த நபர்கள் உள்ளனர். புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளர் உள்ளனர்.
கேள்வி:- புலனாய்வு கடிதத்தை நீங்கள் எப்போது பார்த்தீர்கள் ?
பதில்:- தாக்குதலின் பின்னர்
கேள்வி:- பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவின் மூலமாகவும்கூட உங்களுக்கு அறிவிக்கவில்லையா ?
பதில்:- இல்லை, தாக்குதலின் பின்னர் நானாக கேட்டேன். கடிதம் கிடைத்ததாக கூறினர். ஏன் எனக்கு கூறவில்லை என கேட்டேன். எமது கடமை உங்களை பாதுகாப்பது மாறாக உங்களுக்கு கூறுவதில்லை என அதற்கும் பதில் கூறினார்கள்.
கேள்வி:- திகன சம்பவத்தின் பின்னர்கூட இந்த இஸ்லாமிய அமைப்புகள் அடிப்படைவாத குழுக்கள் குறித்து பேசவில்லையா ?
பதில் :- இல்லை.
கேள்வி:- அரச புலனாய்வு அதிகாரியுடன் உங்களின் தொடர்பு எவ்வாறு உள்ளது ?
பதில்:- அவ்வப்போது பேசிக்கொள்வோம். ஆனால் அவர்களின் பொறுப்பில் அவர்களின் தொடர்பாடல் கட்டமைப்பு ஒன்று உள்ளது. அவ்வப்போது பேசி சம்பவங்கள் குறித்து அறிவிப்பார்.
கேள்வி:- தாக்குதல் குறித்த தகவல் ஏப்ரல் நான்காம் திகதி கிடைத்து 9 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லையா ?
பதில்:- இல்லை.
கேள்வி:- இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன ?
பதில்:- வருத்தமளிக்கிறது, எனக்கு எந்த தகவலையும் எவரும் வழங்கவில்லை. முன்னரே இது குறித்து பகிரப்பட்டுள்ளது என்பதை தாக்குதலின் பின்னரே அறிந்துகொண்டேன்.
கேள்வி:- இந்த பயங்கரவாதம் குறித்து பாதுகாப்பு கூட்டங்களில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை அப்படித்தானே ?
பதில்:- இல்லை பேசப்பட்டது, ஆனால் பயங்கரவாதம் வரையில் செல்லும் என கருதவில்லை.
கேள்வி:- தவ்ஹித் ஜமாஅத் அமைப்பை தடைசெய்ய கூறவும் இல்லையா ?
பதில்:- அப்போது கூறவில்லை. ஆனால் தாக்குதலின் பின்னர் முதல் பாராளுமன்ற உரையில் நானும் இந்த அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றே கூறினேன்.
கேள்வி:- 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு கூட்டங்களுக்கு நீங்கள் சென்றபோது வேறு குண்டுகள் வெடிக்கும் என்ற அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா ?
பதில்:- ஆம், இன்னும் ஒன்று அல்லது இரண்டு குண்டுகள் வெடிக்க இடமுள்ளது என புலனாய்வு அதிகாரிகள் கூறினார்கள்.
கேள்வி:- ஏன் வரவில்லை என எவரும் கூறினார்களா ?
பதில்:- அவ்வாறு எவரும் கூறவில்லை.
கேள்வி:- நீங்கள் கேட்கவில்லையா ?
பதில்:- நான் கேட்டேன், பிரதமர் பார்த்துக்கொண்டுள்ளார் பாதுகாப்பு கூட்டங்களை கூட்டுங்கள் என கூறினேன். ஆனால் சற்று பொறுங்கள் என கூறிக்கொண்டு இருந்தனர்.
கேள்வி:- இந்த காலங்களில் ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லையா ?
பதில் :-இல்லை
கேள்வி :-இந்த தாக்குதல் குறித்து நீங்கள் எவ்வாறு தெரிந்துகொண்டீர்கள் ?
பதில்:- இந்த தாக்குதல் குறித்து பிரதமர் தான் எனக்கு அறிவித்தார். பாதுகாப்புக் கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தினார்.
கேள்வி:- தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே இராஜாங்க அமைச்சர், பிரதமர், பொலிஸ்மா அதிபரை பாதுகாப்பு கூட்டங்களில் அழைக்கவில்லை என்பது தெரியுமா ?
பதில்:- அப்போது அறிந்திருக்கவில்லை, பொலிஸ்மா அதிபரை ஒருமுறை சந்தித்த போது அவர் கேட்டார். எனக்கு அழைப்பு வரவில்லை என அப்போது நான் கூறினேன். தனக்கும் அழைப்பு வரவில்லை என்று கூறினார். நான்கரை ஆண்டுகளில் எனக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டது. அதற்கு அப்பால் என்னால் செயற்பட முடியவில்லை. 2015ஆம் ஆண்டு எனக்கு அமைச்சு வழங்கப்பட்ட காலத்தில் எனக்கான அதிகாரங்கள் குறித்து ஊடகங்களில் வெளிவந்தது. எவ்வாறு இருப்பினும் எனது எல்லைக்குள் எனது கடமைகளை நான் செய்துள்ளேன். இந்த காலங்களில் பாதுகாப்பு செயற்பாடுகள் மந்த நிலையில் கையாளப்பட்டது என்பதை நான் உணர்கிறேன். பாதுகாப்பு அமைச்சின் ஒரு நிலையான அல்லது உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை. அவ்வப்போது அதிகாரிகள் மாற்றப்படுகின்றமை என்றமை முரண்பாடான காரணிகளாக இருந்தது.
கேள்வி:- ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இருந்த முரண்பாடுகளா இதற்கு காரணம்?
பதில் :- ஆம், நீங்கள் கூறுவது சரி.
கேள்வி:- நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிதீர்க்கும் வகையில் இந்த தாக்குதல் இடம்பெற்றது என கூறினீர்கள் எவ்வாறு அதனை கூறினீர்கள்?
பதில்:- இன்ஸாப் என்ற பயங்கரவாதி தாக்குதலை நடத்த முன்னர் தனது மனைவிக்கு குரல்பதிவு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் சில காரணிகளை கூறியுள்ளார். சிரியா பிரச்சினை, மியன்மார் மற்றும் கிரைஸ்ட்சேர்ச் தாக்குதல் குறித்தும் பேசியுள்ளார். இது சி.ஐ.டி எனக்கு கூறிய விடயங்கள் அதன் அடிப்படையில்தான் நான் அவ்வாறு கூறினேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM