கல்முனை விடயத்தில் இறுதித்தீர்வுக்கான முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், தமிழ்த் தரப்புடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டிருக்கின்ற போதும் இதுவரையில் இறுதியான இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம்.ஹரீஸ் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
"கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பது குறித்து கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையின் போது சம்பந்தன் ஐயா முதலமைச்சர் பதவி பற்றி பேசவேயில்லை"
கேள்வி:- கல்முனை விவகாரத்திற்கான தீர்வுக்காகவா அல்லது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட வேண்டும் என்பதற்காகவா அமைச்சுப்பதவியை ஏற்காது இருக்கின்றீர்கள்?
பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னரான நிலைமையைக் கருத்திற்கொண்டே நாம் இராஜினாமா செய்திருந்தோம். இருப்பினும் மீண்டும் பதவிகளை பெறுவதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டபோது மு.காவின் உயர்பீடம் கூடி அதுதொடர்பில் ஆராய்ந்திருந்தது. இதன்போது கல்முனை விடயம் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டு அதற்கும் தீர்வினை பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. எனினும் அமைச்சுப்பதவியை ஏற்குமாறு பிரதமர் உட்பட அரச தரப்பின் அழுத்தம் தொடச்சியாக வந்தது.
இந்நிலையில் கூடிய எமது உயர்பீடம் முஸ்லிம் விவகாரச்சட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பாராளுமன்றுக்கு வரவுள்ளமையால் கட்சித்தலைவர்கள் மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கல்முனை விடயத்திற்கு நிரந்தரத் தீர்வு காணும் வரையிலும், வாழைச்சேனை, தோப்பூர் விடயங்களுக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும். அதுவரையில் பதவியை ஏற்பதில்லை என்று எனது நிலைப்பாட்டினை தலைமையிடம் அறிவித்திருந்தேன். எனது தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பைசல் காசீம், அலிசாஹிர் மௌலானா ஆகியோரும் பதவிகளை ஏற்றிருக்கவில்லை.
கேள்வி:- அமைச்சுப்பதவியை நீங்கள் பொறுப்பேற்க மறுத்தமையால் தலைமையுடன் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றதே?
பதில்:- இல்லை. அது புனைகதை. இவ்வாறான கருத்துக்கள் பரப்பப்பட்டவுடன் நான் நேரில் தலைமையைச் சந்தித்து கலந்துரையாடினேன். அவர் எனது முடிவு குறித்து புரிந்துணர்வுடன் உள்ளார்.
கேள்வி:- கல்முனை விவகாரத்தினை தீர்ப்பதற்காக உங்களுடைய தரப்பில் தற்போது எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
பதில்:- தற்போதுள்ள கல்முனை மாநகர சபையை, கல்முனை தமிழ் பிரிவு (அவர்கள் விரும்பினால் உள் ளூராட்சி சபையை அமைக்கலாம்) கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது நகரசபை, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனையை இணைத்து பிரதேச சபை என நான்காக பிரிப்பதற்கான வரைபொன்றை அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடத்தில் கையளித்துள்ளோம். இதனை அனைத்து தரப்புக்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது முதலாவது வெற்றியாகும். இதனைவிடவும் இவ்விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பேராசிரியர் நிரஞ்சன் விக்கிரமரட்ன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டு தொடர்ச்சியான அமர்வுகளை நடத்தி ஆராய்ந்து வருகின்றது. இதனைவிடவும் முஸ்லிம் தரப்பினரும், மாவை.
சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தரப்பும் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றன. இதன்போது கல்முனை பள்ளிவாசல் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகளை உள்ளடக்கிய வரைபை நாம் கையளித்துள்ளோம். இருப்பினும், கூட்டமைப்பு அவ்வரைபு குறித்த இறுதியான தீர்மானத்தினை எம்மிடத்தில் கூறவில்லை. இந்நிலையில் தான் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக இவ்விடயத்திற்கு தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றக் குழுவில் தீர்மானித்துள்ளோம்.
கேள்வி:- கல்முனை வடக்கு உப அலகிற்கு கணக்காளரை நியமிப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளதாக கூட்டமைப்பு கூறுகின்றபோதும் இன்னமும் நியமனம் இடம்பெறவில்லை. எனினும் அந்த நியமனத்திற்கு உங்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
பதில்:- கல்முனை விடயத்திற்கு இறுதி தீர்வு எட்டப்பட்ட பின்னர் கணக்காளர் நியமனம் உள்ளிட்ட எந்தவிடயங்களையும் முன்னெடுக்க முடியும். அதற்கு முன்னதாக எவ்விதமான விடயங்களையும் முன்னெடுக்கக் கூடாது என்று முஸ்லிம் பாராளுமன்றக் குழு தீர்மானித்து பிரதமரிடத்தில் கூறியபோது பிரதமர் அதனை ஏற்றுக்கொண்டு இணக்கப்பாட்டினையும் வெளியிட்டிருந்தார். ஆகவே தான் அனைத்து விடயங்களையும் உள்வாங்கி இறுதித் தீர்வினை எட்டுவோம் எனக் கோருகின்றோம்.
கேள்வி:- நீங்கள் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுத்தபோது கணக்காளர் விடயம் குறித்து கலந்துரையாடினீர்களா?
பதில்:- இல்லை. அவர்களும் எம்முடன் அதுகுறித்து கலந்துரையாடவில்லை.
கேள்வி:- கல்முனை தமிழ்ப் பிரிவு, சாய்ந்தமருது நகரசபை, மருதமுனை மற்றும் நற்பிட்டி முனையை இணைத்து தனி அலகு இவை அனைத்துக்கும் ஒருமித்து 10ஆம் திகதிக்குள் தீர்வு எட்டுவது சாத்தியப்படுமா?
பதில்:- சாய்ந்தமருது, மருதமுனை விடயத்தில் எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் எவையும் கிடையாது. ஆனால் கல்முனை தமிழ்ப்பிரிவு தரமுயர்த்தப்படுகின்றபோது எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டியுள்ளது. தற்போது வரையில் எல்லை நிர்ணயம் தொடர்பான விடயத்தில் எவ்விதமான இணக்கப்பாடுகளும் ஏற்படவில்லையென இதயசுத்தியுடன் கூறுகின்றேன்.
எல்லை நிர்ணய ஆணைக்குழு மூலமாக நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டிலும் அவ்விடயத்தில் அரசியல் மற்றும் சிவில் தரப்புக்கள் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திய பின்னர் அதனை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைத்து அமுலாக்கலாம் என்பதற்காகவே பிரதமர் தலைமையிலும் எமக்குள்ளும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம்.
கேள்வி:- கல்முனை விடயம் உண்ணாவிரதம் வரையில் சென்று நிலைமைகள் மோசமடைவதற்கு முன்னதாக உரிய பேச்சுக்களை மேற்கொண்டிருக்கலாமல்லவா?
பதில்:- கடந்த வரவு – செலவுத்திட்டத்திற்கு இறுதித் தீர்வு காண்பதற்கு முன்னதாகவே கல்முனை விடயத்திற்கு இறுதித் தீர்வு காணப்படவேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தைகள் பிரதமர் தலைமையிலும், தமிழ்த் தரப்புடனும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதனடிப்படையில் இவ்
விடயத்தில் பிரதானமாகவுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பான விடயத்திற்கு தீர்வினை ஏற்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு இரண்டு மூன்று மாதங்களுக்குள் இறுதி முடிவினை எட்டுவதென்று இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது.
எனினும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு அரச இயந்திரத்தினை செயற்படுவதற்கு இடமளித்திருக்காததோடு இனங்களுக்கு இடையிலான உறவு நிலைமைகளிலும் மாற்றத்தினை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலைமையில் தான் கல்முனை விகாராதிபதி உண்ணாவிரதத்தினை ஆரம்பித்தார். அவருடன் கூட்டமைப்பின் மாநகர உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர். இதனை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை.
கேள்வி: -சாய்ந்தமருதுக்கான தனி அலகு உருவாகுவதற்கு நீங்கள் தடையாக இருப்பதாக விமர்சிக்கப்படுகின்றதே?
பதில்:- தற்போதைய சூழலில் பிரிவினை என்பதை எந்தவொரு தரப்பும் விரும்புவதில்லை. எனினும் கல்முனை மாநகர சபையினை அங்கு வாழும் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நான்காக பிரிப்பதற்கு தலைப்பட்டிருக்கின்றோம்.
அவ்வாறு பிரிக்கப்படுகின்றபோது சாய்ந்தமருதுக்கான நகரசபை வழங்கப்பட வேண்டும் என்பதில் நான் மாற்றுக்கருத்தினைக் கொள்ளவில்லை. ஆனால் கல்முனை உப அலகு தரமுயர்த்தல், மருதமுனை பிரதேச சபை கோரிக்கை உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் என்று தான் என்னுடன் பலசுற்றுப் பேச்சுக்களை முன்னெடுத்திருந்த சாய்ந்தமருது தரப்பினரிடத்தில் கூறியிருந்தேன். அவர்களின் கோரிக்கையை தட்டிக் கழிப்பது எனது நோக்கமல்ல.
ஆனால் அவர்களின் கோரிக்கையை முதன்மைப்படுத்துகின்றபோது சகோதர தமிழ் சமூகம் தவறாக சிந்தித்தால் ஒன்றாக வாழும் ஒருமொழிபேசும் இருசமூகத்தினுள் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுவிடும் என்பதை அடிப்படையாக கொண்டு ஒட்டுமொத்தமாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதனை விரும்பாத சில தரப்புக்களே என்மீது சேறு பூசும் வகையில் சாய்ந்த மருதுக்கான நகரசபையை நான் தடுப்பதாக பிரசாரங்களை செய்திருந்தார்கள்.
கேள்வி:- கிழக்கு மாகாண சபையில் மு.காவிற்கு முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு விட்டுக்கொடுத்திருந்தபோதும் தற்போது அதனை மறந்து கல்முனை பள்ளிவாசல் நிருவாகத்தின் நியாயமான கோரிக்கை என்ற
போர்வையில் கல்முனை வடக்கு தமிழர் பிரிவு உருவாகுவதற்கு மு.கா.விட்டுக்கொடுப்பினை செய்யவில்லை என்று தமிழர் தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
பதில்:- இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்துகளே முன்வைக்கப்படுகின்றன. நாம் அப்போதைய ஆட்சியாளர்களான மஹிந்த தரப்புடன் இணைந்துகொண்ட
போது கிழக்கு மாகாணத்தில் சுதந்திரக்கட்சியும், மு.காவும் தலா இரண்டரை வருடங்கள் ஆட்சி செய்வதென்று உடன்பட்டிருந்தோம். முதலில் சுதந்திரக்கட்சி முதலமைச்சர் பதவியைப் பெற்று ஆட்சி செய்து நிறைவுக்கு வருகின்றபோது தான் 2015இல் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதன்போது மு.காவும் கூட்டமைப்பும் ஐ.தே.மு வேட்பாளருக்கு ஆதரவை வழங்கினோம். அச்சமயத்தில் முதலமைச்சர் பதவியை எம்மைப்பொறுப்பெடுக்குமாறு கோரி சு.கவின் உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டார்கள். ரிஷாத், அதாவுல்லா, ஐ.தே.க தரப்புக்கள் என ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை எம்மிடத்தில் தாராளமாக இருந்தது. எனினும் கிழக்கில் இருசமூகங்களின் நல்லிணக்கத்திற்கான முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூட்டமைப்பினை ஆட்சியின் பங்காளர்களாக்குவதற்காகவும் பேச்சுக்களை முன்னெடுத்தோம்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிடத்தில் நாம் முதலமைச்சர் பதவியை ஏற்பதாகவும் அமைச்சு பதவி மற்றும் அவைத்தலைவர் பதவி ஆகியவற்றை கூட்டமைப்பிற்கு வழங்குவதாக எமது தலைமை கூறியது. அதன்போது கிழக்கு மாகாண தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடிவிட்டு பதிலளிப்பதாக சம்பந்தன் ஐயா கூறிச்சென்றார். இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தையின்போது அவர் இரண்டு அமைச்சுப் பதவிகளைத் தருமாறு கோரினார்.
அதாவுல்லாவுக்கு வழங்கவிருந்த அமைச்சுப்பதவியை நாம் கூட்டமைப் பிற்கு வழங்கினோம். சம்பந்தன் ஐயா இந்த பேச்சுக்களின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முதலமைச்சர் பதவி பற்றி பேசியிருக்கவில்லை. கூட்டமைப்பின் தயவினால் ஆட்சி அமைக்கப்பட்டது என்பதை விடவும் மு.காவின் நல்லெண்ணத்திற்கான நடவடிக்கை உருவாக்கப்பட்ட ஆட்சி என்பதே யதார்த்தமாகும். அவ்வாறிருக்க கல்முனை விடயத்தினை கிழக்கு மாகாண விடயத்தினை வைத்து நோக்குவதே தவறான அணுகுமுறையாகும்.
கேள்வி : கல்முனை விவகாரத்துக்கு தீர்வு கிடைத்தவுடன் அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்பீர்களா?
பதில்: இரண்டு இனங்களுக் குமிடையில் எவ்விதமான பிரச்சினைகளுமின்றி இவ்விடயம் தீர்க்கப்பட வேண்டும். அதேபோன்று வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் தோப்பூர் விவகாரத்துக்கும் உரிய தீர்வு கிடைக்க வேண்டும். அதன் பின்னரே அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்பது பற்றி சிந்திக்க முடியும். இதில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரதிபலிப்பும் முக்கியமான விடயமாக உள்ளது.
நேர்காணல்:- ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM