மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் மாதிரிக் கிராமங்கள் செயல்திட்டத்தின் கீழ் இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட காந்தி நகர் - மாதிரிக் கிராமம் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளித்து வைக்கப்பட்டன.
இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் 100 மாதிரிக் கிராமங்களுள் இது இரண்டாவதாகும் என்பதோடு மிகவும் மதிக்கபடும் உலக தலைவரும், இந்திய தேச பிதாவுமான மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன ஞாபகார்த்த வருடத்தில், அவரது பெயரில் இக்கிராமம் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோர் கூட்டாக கிராமத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன் வீடுகளையும் கையளித்து வைத்தனர்.
விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அமீர் அலி, கௌரவ செய்யத் அலி ஸாகிர் மௌலான, பாராளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாணத்திலிருந்தான அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதேசத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
இலங்கை நாணயத்தில் 1200 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான இந்திய நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ், இலங்கை முழுவதிலுமாக, 2400 வீடுகளை உள்ளடக்கியதாக 100 மாதிரிக் கிராமங்களை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சுடன் இந்திய அரசாங்கம் பங்குதாரராக இணைந்து கொண்டது.
இந்த 2400 வீடுகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்காக என இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 60,000 வீடுகளுக்கு மேலதிகமானவையாகும்.
இலங்கை முழுவதிலுமாக, பல்வேறு துறைகளில் சுகாதாரம், கல்வி, திறன் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, தொழில் பயிற்சி என 70 இற்கு மேற்பட்ட மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திச் செயல்திட்டங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைள் நிலையத்தில் கேட்போர் கூட நிர்மாணம் மற்றும் மட்டக்களப்பில் ஒரு சுகாதார செயல்திட்டம் என கிழக்கு மாகாணத்தில் மூன்று செயல்திட்டங்கள் உள்ளடங்கியதாக, அத்தகைய 20 செயல்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திச் செயல்திட்டங்கள் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்தவையாகும், அவற்றுள் 560 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானவை தனியே நன்கொடைத் திட்டங்களாக அமைந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM