நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவான 50 ரூபாவை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்தும் முரண்பாடான நிலைமை நீடித்துவருகின்றது. பல மாதங்களுக்கு முன்னரே இவ்வாறு 50 ரூபா கொடுப்பனவைப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு முடிவெடுத்தபோதும் இதுவரை அந்த விடயம் இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றது.
இவ்வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்திலும் இந்த 50 ரூபா விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையிலேயே விசேட அமைச்சரவை பத்திரம் மூலம் இதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க 1200 மில்லியன் ரூபா தேவைப்பட்ட நிலையில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 600 மில்லியன் ரூபாவையும் திறைசேரி 600 மில்லியன் ரூபாவையும் பெற்றுக்கொடுத்து இந்த கொடுப்பனவை செலுத்தத் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட போதிலும் அதனை முன்னெடுப்பதில் தற்போது பல தடைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது தோட்டத் தொழிலாளருக்கான 50 ரூபா விசேட கொடுப்பனவு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்தார். 50 ரூபா கொடுப் பனவுக்கான 600 மில்லியன் ரூபா நிதியைப் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு வழங்கும் வகையிலேயே இந்த அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் இவ்வாறு அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்ட போது கருத்து வெளியிட்ட பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதை நான் எதிர்க்கவில்லை. ஆனாலும் இந்தக் கொடுப்பனவை அமைச்சர் திகாம் பரத்தின் அமைச்சுக்கு வழங்கி அந்த அமைச்சின் மூலமாக மிகுதித்தொகையையும் செலுத்திக் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை முன்வைத்திருந்தார். . இதனையடுத்து அமைச்சரவையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவு தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
இதன்போது அவ்வாறு நிதியை உடனடியாக தனது அமைச்சில் இருந்து வழங்குவது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ள அமைச் சர் திகாம்பரம் இது 50 ரூபா கொடுப்பனவை இழுத்தடிக்கும் முயற்சி என குற்றம் சாட்டியிருந்தார்.
இதனையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதையடுத்து கூட்டம் முடியும் முன்னரே அமைச்சர் திகாம்பரம் அமைச்சரவையிலிருந்து வெளியேறியுள்ளார். மேலதிக கொடுப்பனவு விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நாம் எமது மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ள அமைச்சர் திகாம்பரம் இடைநடுவில் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு பெருந்தோட்ட அமைச்சு 600 மில்லியன் ரூபாவை வழங்குவது என்றும் திறைசேரியில் இருந்து 600 மில்லியன் ரூபா பெறுவது என்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையிலேயே 600 மில்லியன் ரூபாவை பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு வழங்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாடு கேள்விக்குறியாகி விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படுகின்ற கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. இது தொடர்பில் மக் கள் மத்தியில் பாரிய விமர்சனங்கள் உள்ளன. கிட்டத்தட்ட பல மாதங்களின் பின்னர் இறுதியாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மொத்தமாக 750 ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கப் பிரதி நிதிகளுக்கும் இடையிலான பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் பின்னரே இவ்வாறு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் இந்தத் தொகைக்கு தொழிலாளர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு வெளிவந்தது. குறிப்பாக கூட்டு ஒப்பந்தத்தின் இந்த சம்பளத் தொகையை எதிர்த்து தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்தனர். தமக்கு நாள் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையாக இருந்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த போதிலும் முதலாளிமார் சம்மேளனம் இதற்கு இணங்கவில்லை. இந்த நிலையிலேயே 750 ரூபா சம்பள நிர்ணயத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானது.
இது தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியாகியதை அடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதனடிப்படையில் 50 ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. எனினும் அதை நடைமுறைப்படுத்துவதில் தற்போது பாரிய முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிலிருந்து 600 மில்லியன் ரூபாவையும் திறைசேரியிலிருந்து 600 மில்லியன் ரூபாவையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்ற சூழ் நிலையிலேயே தற்போது இந்தப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. அதாவது மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்கு 600 மில்லியன் ரூபாவை வழங்குவதுடன் எஞ்சிய தொகையை அவரது அமைச்சின் ஊடாகவே வழங்கும் வகையில் ஏற்பாட்டைச் செய்யுமாறு அமைச்சர் நவீன் திஸாநாயக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்தே தற்போது சிக்கல் நிலை தோன்றியுள்ளது. மலையக தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர்.
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் கணிசமான பங்களிப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் வழங்கப்படுகிறது. எனினும் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றமானது பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. வீட்டுப் பிரச்சினை, சுகாதார கல்விப் பிரச்சினை, உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதில் அவர்களது சம்பளப் பிரச்சினை தொடர்ந்தும் பாரிய திண்டாட்டமாகவே காணப்படுகிறது.
ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து குறிப்பிடத்தக்க சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்கின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துகின்ற பெருந்தோட்டத்துறை மக்கள் இவ்வாறு சம்பள உயர்வுக்காக போராடிக் கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். அதுமட்டுமன்றி தற்போது அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதிலும் சிக்கல் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயம். தினமும் பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியில் தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். இந்தச் சூழலில் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 50 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்காமல் இழுத்தடிப்பது கவலைக்குரியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM