இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது ஆன்றோர் வாக்கு. அத்தகைய இளங்கல்வி முறைமையானது எமது நாட்டில் பல்வேறு கட்டங்களாக வகுக்கப்பட்டு மாணவர்களுக்கு கட்டாயக்கல்வி என்ற பெயரில் புகுத்தப்பட்டு வருகின்றது. அதில் மாணவர்களது அடைவு மட்டத்தைக் கணிப்பிடுவதற்காக பரீட்சை முறைமைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு பரீட்சை முறைமைகள் ஊடாக மாணவர்களது இயலுமையை அவதானித்து அவர்களது உள்வாங்கும் திறனுக்கேற்ப கற்பித்தல் நடவடிக்கை கள் பாடசாலைகளில் முன்னெடுக்கப் படுகின்றன.
இந்நிலையில் இலங்கை கல்வித் துறையின் இன்றைய பேசுபொருளாக ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் மாறியுள்ளது. எமது நாட்டைப் பொறுத்தளவில் இந்தப் பரீட்சையானது பிள்ளைகள் தமக்குரிய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான அடித்தளமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே இந்தப் பரீட்சையானது பெற்றோர்களது கெளரவ பலப்பரீட்சையாக மாறியிருப்பதென்பதே வரலாற்று உண்மையாகும்.
இந்தப் பரீட்சை உண்மையில் அவசியம் என்றாலும் கூட மாணவர்களை உள ரீதியாக தாக்கக்கூடியதும், கல்வி தவிர்ந்த ஏனைய திறமைகளில் பாரிய எதிர்வலைகளைத் தோற்றுவிக்கும் கூரிய ஆயுதமாகவும், உள அளவில் பலவீனமான மாணவ சமூகத்துக்கு அத்திவாரமிடும் அடித்தளமாகவும் அமைந்துள்ளதை அடையாளப்படுத்தி இந்தப் பரீட்சையை தடை செய்யுமாறு புத்திஜீவிகளும், உளவியலாளர்களும், கல்வியியலாளர்களும் கடந்த பல ஆண்டுகளாக அரசாங்கத்துடன் போர் தொடுத்து வந்துள்ளனர்.
இந்தப் பரீட்சைக்காக ஒரு கட்டத்தில் மாணவர்கள் தம்மை முழுமையாக கல்விக்காக அர்ப்பணிக்கும் அதேவேளை உடல், உள, ஆரோக்கியம், ஆளுமை விருத்திக்கான அடிப்படைத் திறன்களை பெற்றுக் கொள்ள தவறுகின்றனர் என்பதை பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர். ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயத்தின் பேரில் பரீட்சை எழுதி சித்தி பெற வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இலங்கையில் ஆண்டுக்கு அண்ணளவாக பரீட்சை எழுதும் 325,000 பிள்ளைகளும் சித்தியடைவதில்லை. அதிலும் வருடத்துக்கு பரீட்சையில் சித்தியடைகின்ற சுமார் 25,000 மாணவர்களே அரசாங்கததின் புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்கின்றனர்.
இப்பரீட்சை எழுதுவதற்குரிய இடைப்பட்ட காலத்தில் இம்மாணவர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு ஒப்பாக தங்களை இப்பரீட்சைக்காக அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. இது வெறுமனே பரீட்சையோடு நின்றுவிடாமல் பெறுபேறுகளுக்கு அப்பால் சக மாணவர்கள் மத்தியில் தனக்கான இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் அங்கீகாரத்துடன் தொடர்புபட்ட பிரச்சினையாக மாறி விடுகின்றது. இந்த இடத்தில் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையும், கல்வி மீதான நாட்டமின்மையும் ஏற்படுகின்றது. ஒருவேளை பரீட்சையில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டால் அதனால் ஏற்படும் உளத்தாக்கத்தால் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து திட்டமிடத் தவறுகின்றனர். அதேநேரம் பரீட்சையில் சித்தியடைந்தாலும் இதுவே போதும் என்ற மனநிலையால் முக்கியமான பரீட்சைகளில் அவர்களது அடைவு மட்டம் படிப்படியாக குறைவடையத் தொடங்குகிறது.
பத்து வயதில் பாட்டியிடம் கதை கேட்டு வீட்டைச் சுற்றி நண்பர்களோடு ஓடித் திரிந்து சிறகடித்துப் பறக்க வேண்டிய சிட்டுகள் பரீட்சை என்ற வரையறைக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகின்றனர்.
இலங்கை அரசாங்கத்தால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும், பின்தள்ளப்பட்ட மாணவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக இலவசக் கல்வி முறைமையோடு 1945ஆம் ஆண்டு காலப்பகுதியளவில் ஆரம்பிக்கப்பட்டதே ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைத் திட்டமாகும்.
இந்தப் பரீட்சை மாணவர்களுக்கு பலப் பரீட்சையாக அமைந்ததினால் இதில் சித்தியடையும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் சிறு தொகை உதவிப்பணமும், தரமான உயர் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்பதற்கான வாய்ப்பும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பரீட்சையானது ஒரு சமூக அந்தஸ்துக்கான பரீட்சை என குடும்பச் சூழலால் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே உரமூட்டப்பட்டு விடுவதால் பிள்ளைகளும் அதே மனநிலையில் பரீட்சைக்குத் தயாராகின்றனர். இந்நிலையில் பரீட்சையில் தோல்வியைச் சந்திக்கும் பட்சத்தில் உள அளவில் பலவீனமடைகின்றனர். அதேவேளை அவர்களது அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆர்வத்தோடு வரவேற்க முன்வருவதில்லை. எனவே இத்தகைய தாழ்வு மனநிலையோடு அடுத்த கட்டத்துக்குச் செல்லும் மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்த கல்வி அமைச்சின் ஆர்வம் குறைவென்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் காலம் கடந்து ஞானோத யம் கிடைத்த கதையாக அண்மையில் கல்வி அமைச்சினால் 08/2019 என்ற சுற்றறிக்கையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்கள் வாயிலாக உறுதிப்படுத்தியிருந்தார்.
அதாவது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அல்லது புலமைப்பரிசில் உதவிகள் தேவைப்படும் மாணவர்கள் தவிர்ந்து ஏனைய மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்ற வேண்டியது கட்டாயமானதல்ல எனவும் தனது பரீட்சை அமர்வு குறித்து ஒவ்வொரு பிள்ளையும் தனது பெற்றோருடன் கலந்துரையாடி தீர்மானிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆரம்பப் பிரிவை மாத்திரம் கொண்டுள்ள பாடசாலையொன்றில் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போட்டித் தன்மையைத் தூண்டும் வகையில் பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்படக் கூடாது எனவும் வெற்றி பெறும் மாணவர்களது புகைப்பட பதாதைகளை காட்சிப்படுத்தவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதா கத் தெரிவித்திருந்தார்.
கல்வி அமைச்சின் இந்தத் தீர்மானத்துக்குப் பின்னர் நடைபெறப் போகும் முதலாவது தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடு முழுவதுமிருந்து 339,369 பேர் தோற்றும் இப் பரீட்சையில் தமிழ் மொழி மூலமாக 83,840 மாணவர்களும், சிங்கள மொழி மூலமாக 255,529 மாணவர்களும் பரீட்சைக்கு முகம் கொடுக்கின்றனர்.
கல்வி அமைச்சின் மேற்கண்ட தீர்மானத்தின் ஊடாக மாணவர்களது உள ரீதியான தாக்கம் முற்றுமுழுதாக நீங்குமா? என்பதும் மேற்குறித்த இந்த அறிவிப்பு வெறுமனே கல்வி அமைச்சின் இடைக்கால சிந்தனையா? அல்லது இதுவே இறுதித் தீர்மானமா? என்பது குறித்த தெளிவும் இன்னமும் பொது மக்களுக்கு வந்து சேரவில்லை என்பது சமூக ஆய்வாளர்களது கருத்தாக அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எவ்வித பாரிய மாற்றங்களுமின்றி இம்முறை நாடளாவிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு வழமை போலவே மாணவர்கள் முகம் கொடுக்கவுள்ளனர். ஆகஸ்டில் ஆரம்பமாகும் இந்தப் பரீட்சைச் சமர் பெறுபேறுகளுக்கு பின்னரான மாணவர்களதும் பெற்றோர்களினதும் மனநிலையைப் பொறுத்தே கல்வி அமைச்சின் இந்தத் தீர்மானம் சாத்தியமா என்பது தெரிய வரும்.
இந்த சுற்றறிக்கை வெளிவருவதற்கு முன்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இனி எமது நாட்டில் நடக்காது என அறிவித்திருந்தார். அதன் பின்னர் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இனிமேல் எட்டாம் ஆண்டில் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.இவ்விரு மாறுபட்ட கருத்துகளுக்கும் மத்தியில் கல்வி அமைச்சின் ஊடாக ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமானதல்ல என்றொரு தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே ''அரசாங்கத்தின் நிலையில்லாத இத்தகைய தீர்மானங்கள் எதிர்வரும் காலங்களில் மாணவர்களது கல்வி நடவடிக்கைகளில் எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கல்வி அமைச்சும் கல்விசார் சமூகமும் உறுதியாக நிற்க வேண்டும்''
அதேவேளை, விரும்பியவர்கள் பரீட்சைக்குத் தோற்றலாம் என்ற இந்த நிலைப்பாடு எந்தளவு சாத்தியமாகும் என்பது அடுத்தடுத்து நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் ஊடாகவே தெரியவரும்.
எனினும் இந்த அறிவித்தலின் ஊடாக பெரும்பாலும் விடயப்புலம் கொண்ட பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பரீட்சைக்கு அனுமதிக்க மாட்டார்கள் என்பதே கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இந்த எதிர்பார்ப்பு எந்தளவு சாத்தியமாகும் என்பதும் கேள்விக்குறியே.
காரணம் தரமான உயர் பாடசாலைகளில் கற்கும் வருமானம் படைத்த பின்புலம் உள்ள மாணவர்களுக்கு இந்த புலமைப் பரிசில் தேவையில்லை என்றாலும் கூட அரசாங்கத்தின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் திட்டத்தின் கீழ் பெரும்பாலான மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய பாடசாலைகளில் கல்வியைத் தொடருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
எனவே வசதிபடைத்த பெரும்பாலான பெற்றோர் தாம் விரும்பிய பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்த்துவிட வேண்டும் என்பதற்காகவே இந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ஓர் அடித்தளமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதே வெளிப்படையான உண்மை.
ஆகவே ''கல்வி அமைச்சினால் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை என தீர்மானிக்கப்பட்டாலும் கூட தரமான, விருப்புக்குரிய பாடசாலைத் தெரிவுக்காக பெரும்பாலான பெற்றோர்கள் இந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை வரவேற்பார்கள் என்பதே இந்த சுற்றறிக்கை வெளிவந்த பின்னரான பலரது கருத்தாக அமைந்துள்ளது.''
எனவே கல்வி அமைச்சின் இந்த இடைக்கால சிந்தனை எந்தளவு சாத்தியமாகும் என்பது அடுத்தடுத்த புலமைப்பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக் கையை அடிப்படையாகக் கொண்டே கணிப்பிட முடியும். அதேவேளை வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் மாணவ சமூகத்தினர் கிடைக்கப் பெறும் அரிய வாய்ப்புகளை உரியவாறு பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதே சிறப்பானது. எது எவ்வாறாயினும் பெற்றோர்கள் இந்தப் பரீட்சையை ஒரு கெளரவ பலப்பரீட்சையாக பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு தனித் திறமையுண்டு. எல்லோரோலும் கல்வியில் சாதிக்க முடிவதில்லை. எனவே பிள்ளைகளது திறமைகளை இனங்கண்டு அதற்கேற்ப பயிற்சியளித்து அவர்களை ஊக்குவிப்பதே சிறந்த பெற்றோர்களுக்கு அடையாளம்.
- நிவேதா அரிச்சந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM