எந்தவொரு நபராலும் தனது சொந்த பணத்தை கொண்டு சமூக சேவைகளை முன்னெடுக்க முடியாது. ஆனால் லயன்ஸ் கழகத்தில் உள்ளவர்கள் தமது சொந்த பணத்தை கொண்டு சமூகத்தில் பல தன்னார்வ தொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரு சமூகத்தின் தேவையை நிறைவேற்றும் போது அதன் மூலம் எங்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதத்தை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது என சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி1 இன் மாவட்ட ஆளுநரான பி. மஹேந்திரன் தெரிவித்தார்.
சர்வதேச லயன்ஸ் கழகம் 1917ஆம் ஆண்டு அமெரிக்கரான மெல்வின் ஜோன்ஸ் என்னும் மனிதாபிமான ஆர்வலர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு சேவை அமைப்பாகும்.
இன்று இந்த அமைப்பு உலகிலுள்ள பிரபல்யம் வாய்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பாக திகழ்கின்றது.இதன் விசேட தன்மை என்னவென்றால் சர்வதேச தலைவர் தொடக்கம் கீழ்மட்ட அங்கத்தவர் வரை அனைவரும் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது தன்னார்வத்துடன் மனிதாபிமான ரீதியில் சேவைகளை முன்னெடுக்கும் அமைப்பாகும்.
இந்நிலையில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி1 இன் மாவட்ட ஆளுநராக கடந்த 9ஆம் திகதி இத்தாலியில் பதவியேற்ற பி. மஹேந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு விசேட செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.
அந்த செவ்வியின் முழு வடிவம் பின்வருமாறு,
கேள்வி: இலங்கையில் உள்ள லயன்ஸ் கழகங்கள் தொடர்பிலும் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கூற முடியுமா?
பதில்: இலங்கையில் லயன்ஸ் கழகம் 61 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1958ஆம் ஆண்டு இந்தியாவின் பங்களிப்புடன் ஆரம்பமானது.முதலாவது லயன்ஸ் கழகமாக 'கொலம்பு ஹொஸ்ட்' என்னும் லயன்ஸ் கழகம் அமைக்கப்பட்டது. தற்போது இலங்கையில் எல்லா இடங்களிலும் லயன்ஸ் கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள 6 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 15 ஆயிரம் அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர்.
ஒரு கழகத்தை அமைக்க ஆகக் குறைந்தது 20 உறுப்பினர்கள் காணப்பட வேண்டும். இவர்கள் தமது சொந்த பணத்தை கொண்டே தன்னார்வ தொண்டு செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். இவர்களுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்பட மாட்டாது. சமூகத்துக்கு தனி ஒரு நபரால் சேவையை செய்வது கடினமான ஒன்றாகும். ஒரு குழுவாக சேர்ந்து சமூக சேவைகளை முன்னெடுப்பது இலகுவானதாகும். இதனையே எவ்வித இலாப நோக்கமும் இன்றி லயன்ஸ் கழகங்கள் செய்கின்றன.
உலகலாவிய ரீதியில் 210 நாடுகள் சர்வதேச லயன்ஸ் கழகத்தில் அங்கத்துவம் வகித்து சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றன. உலகளவில் 750 மாவட்டங்களின் கீழ் பல லயன்ஸ் கழகங்கள் செயற்படுகின்றன.நான் 306 பி1 இன் மாவட்ட ஆளுநராக இம்மாதம் பதவியேற்றேன்.
கொழும்பு, வத்தளை, ஜாஎல, நீர்கொழும்பு, வென்னப்புவ, புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் எமது சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
பொதுமக்களுக்கு ஒரு சேவையை செய்யும் போது அதனை திறம்பட செய்வதே எமது அடிப்படை நோக்கமாகும். எமது செயற்பாடுகளில் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்பு கூறல் காணப்படுவதாலேயே லயன்ஸ் கழகம் உலகளவில் முதற்தர அமைப்பாக காணப்படுகின்றது. லயன்ஸ் கழகமானது ஒரு கட்டுகோப்புடன் செயற்பட்டு வருகின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவை இன்று அதிகமாக காணப்படுகின்றது. இவர்களுக்கு எமது கழகத்தின் ஊடாக சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேவேளை இந்த மக்களுக்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அந்த உதவியை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பதில் அவர்களுக்கு எவ்வித தெளிவும் இருக்காது.
எனவே இவ்வாறு மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கூட எமது கழகத்தின் ஊடாக உதவி செய்யலாம். கடந்த வருடத்தில் 12 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களை செய்திருந்தோம்.
இதேவேளை யாழ். ஆதார வைத்தியசாலையில் சுமார் 6 மில்லியன் பெறுமதியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். மேலும் கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் பல வேலைத்திட்டங்களை செய்திருந்தோம்.
கேள்வி: 306 பி1 இன் மாவட்ட ஆளுநராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். உங்கள் கழகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சமூக சேவைகள் தொடர்பிலும் லயன்ஸ் கழகத்தில் உங்களுடைய அனுபவம் தொடர்பிலும் கூற முடியுமா?
பதில்: லயன்ஸ் கழகத்தில் ஒருவர் ஆளுநராக ஒரு வருடம் மாத்திரமே செயலாற்ற முடியும். இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதியே 306 பி1 இன் மாவட்ட ஆளுநராக இத்தாலி மிலான் நகரில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 202 சர்வதேச மாநாட்டில் பதவியேற்றுக்கொண்டேன்.
லயன்ஸ் கழகத்தில் கடந்த 30 வருடங்களாக சேவையாற்றி வருகின்றேன். எமது சமுதாயத்தில் எவ்வித பிரச்சினைகள் காணப்பட்டாலும் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று எம்மால் முடிந்த உதவிகளை செய்தோம்.
இதன் மூலம் இன்று ஆளுநராக பதவியேற்க முடிந்தது. இதேவேளை லயன்ஸ் கழகத்தில் இணைந்து பணியாற்றுவதால் நபர் ஒருவரின் தனிப்பட்ட தலைமைத்துவ பண்பும் வளர்ச்சியடைகின்றது. இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது கழகத்தில் உள்ள 5 இலட்சம் அங்கத்தவர்களுக்கு தலைமைத்துவ பண்புகள் தொடர்பாக பயிற்சிகளை வழங்க உள்ளோம். .
கடந்த வருடத்தில் மாத்திரம் 220 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களை செய்திருந்தோம். இந்த பணம் ஒவ்வொரு தனிப்பட்ட நபரினால் வழங்கப்பட்ட பணமாகும்.
சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என பலர் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. இவர்கள் லயன்ஸ் கழகத்தின் ஊடாக தமது சமூகத்திற்கு சேவைகளை செய்யலாம். மேலும் இவ்வருடத்தில் இலங்கை நீரிழிவு சங்கத்துடன் இணைந்து நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை செய்யவுள்ளோம்.
மேலும் எனது நிர்வாகத்தின் கீழ் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு மில்லியன் கணக்கான உதவிகளை செய்துள்ளோம்.
கேள்வி: லயன்ஸ் கழகத்தினால் முக்கிய ஐந்து விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்றீர்கள். அது தொடர்பில் கூற முடியுமா?
பதில்: கண்புரை அறுவை சிகிச்சை, நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டங்கள், பட்டினியை போக்குதல், இளைஞர்களின் அபிவிருத்தி போன்ற முக்கிய வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கின்றோம். மற்றும் தற்போது புதிதாக புற்றுநோய் தொடர்பான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம்.
கேள்வி: லயன்ஸ் கழகங்கள் சமூக சேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்திட்டங் களையும் ஏதும் முன்னெடுக்கின்றதா?
பதில்: சேவை நோக்கமே எமது அடிப்படையாக இருக்கின்றது. இதற்கு அப்பால் தலைமைத்துவ பண்பை உருவாக்க லயன்ஸ் கழகம் பல பயிற்சிகளை வழங்கி வருகின்றது. இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் எந்தெந்த இடத்தில் மக்களின் தேவைப்பாடுகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் எமது உடனடி சேவையை வழங்குவதே முக்கிய இலக்காக உள்ளது.
ஒரு சமூகத்தின் தேவையை நிறைவேற்றும் போது அதன் மூலம் எங்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கேள்வி: லயன்ஸ் கழகத்தில் ஒருவர் அங்கத்தவராக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
பதில் : ஏனைய கழகங்களில் போன்று விண்ணப்பித்து லயன்ஸ் கழகத்தில் இணைய முடியாது. அதாவது லயன்ஸ் கழகத்தில் நன்கு அறிமுகமான நம்பிக்கைக்குரிய நபர்களே இணைத்துக்கொள்ளப்படுவார்கள். அதாவது ஒரு குடும்பமாக இணைந்து சமூக சேவையை செய்யக் கூடிய நபராக இருக்கவேண்டும். மேலும் கழகத்தில் இணைவதற்கு முன் கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் சேவைகள் தொடர்பில் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி: இலங்கை சுனாமி தாக்குதலுக்கு இலக்கானபோது சர்வதேச லயன்ஸ் கழகத்தால் 7.5 மில்லியன் டொலர் பண உதவி வழங்கப்பட்டது. இதேபோன்று இலங்கையில் அண்மையில் பதிவான தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் நன்மை கருத்தி எவ்வித உதவிகளும் வழங்கப்பட்டதா?
பதில்: இயற்கை அனர்த்தங்களுக்கே சர்வதேச லயன்ஸ் கழகம் நிதி உதவிகளை வழங்கும். அதுபோன்றே சுனாமி காலத்தில் நிதி உதவி வழங்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்தோம். ஆனால் அண்மையில் பதிவான குண்டு வெடிப்பு சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சம்பவமாகும். இருந்தும் சர்வதேச லயன்ஸ் கழகத்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் நிதி உதவிகளை வழங்கியிருந்தன.
- எம்.டி. லூசியஸ் -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM