ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது.
கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பாக தமிழர் மரபுரிமைப் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இன்றையதினம்(19) குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த 16.07.2019 அன்று தென்கயிலை ஆதினத்தால் கன்னியா பிள்ளையார் கோயிலை மையப்படுத்தி அங்கு சென்று சமய வழிபாடுகள் செய்யும் நோக்குடனும் கன்னியா தமிழரின் பூர்வீகம் என்பதை அடையாளப்படுத்தும் நடவடிக்கையாகவும் வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த கவனயீர்ப்புக்குச் சென்ற பல பேர் குறிப்பாக வெளியிடங்களிலிருந்து சென்றவர்கள் இராணுவ, பொலிஸார் சோதனைச் சாவடிகளைக் கடந்து மிரட்டல்களுக்கும் இராணுவ கண்காணிப்புகளுக்கும் மத்தியில் சென்றடைந்ததையும் களத்தில் நடந்த சம்பவங்களையும் பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
பல நூற்றாண்டுகளாக சைவ சமயத்தோரும் அதன் இதிகாச வரலாற்றோடும் தொடர்புடைய கன்னியா வெந்நீரூற்றையும் அதை அண்டி இருந்த கன்னியா பிள்ளையார் கோவிலையும் தொல்லியல் திணைக்களம் அபகரித்ததை யாவரும் அறிந்தது.
கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் பௌத்த விகாரையின் வரலாறு ஒரு தசாப்ததிற்குட்பட்டது. தமிழரின் பூர்வீகம் அதன் வரலாறு வரலாற்றில் திரிவுபடுத்தப்படுகின்றது. சிங்கள பௌத்த மையம் கூர்ந்து இதனூடு சிங்கள பௌத்த தேசியம் தன்னை ஒரு பூர்வீக தூய்மையான கலப்பற்ற இனமாக சித்தரிக்க முற்படுகின்றது. இவ் அரசியல் நிகழ்ச்சி ஏனைய இனங்களின் பூர்வீகத்தையும் அதன் வரலாற்றையும் கேள்விக்குட்படுத்தி மாற்றியமைக்க முற்படுகின்றது. ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும்.
கன்னியாவின் பூர்வீகம் தமிழின இருப்பின் பூர்வீகம். பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்யச் சென்ற சமயக் குருக்களையும் பக்தர்களையும் பொலிஸார் தடை செய்தது என்பது ஒரு சமயத்திற்குரிய வழிபடுகின்ற உரிமையை மறுத்தலாகும். நீதிமன்ற தடையுத்தரவு கண்பிக்கப்பட்டு அம்முயற்சி தடை செய்யப்பட்டபோது மக்கள் தங்கள் எதிர்ப்பை மிக அமைதியான முறையில் காட்ட முற்பட்ட போது இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு மக்கள் தங்கள் அதிருப்தியை காட்டுவதற்கான வெளி முற்றாகவே குறைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணி அவர்களின் இருப்புசார் கோரிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்பதே அதன் உள் நோக்கமாக இருந்தது.
ஒரு சமய மதத் தலைவரை அங்கிருந்தவர்கள் அநாகரிகமாக அவதரித்தது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. இதே அவமதிப்பு ஒரு பௌத்த பிக்கு ஒருவருக்கு நடந்திருந்தால் அது அரசியல் மயமாக்கப்பட்டு வன்முறைச்சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் ஆனால் தமிழர்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்கள் அகிம்சைவாதிகள் வன்முறையை விரும்புபவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றார்கள்.
அதிகார ஆயுத அரசியல் பலத்தோடு பெரும்பான்மையினர் தாங்கள் விரும்பியதை ஏனையவர்களின் உரிமையை பறிப்பதாக கூட இருக்கலாம் செய்யலாம் என்ற தோற்றப்பாடு வரலாற்றில் நடந்தேறியுள்ளது மீண்டும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மத வழிபாடு செய்வது நாட்டின் இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பது அப்பட்டமான பொய். அவ்வாறெனில் வடக்கு கிழக்கில் பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றில் காளான்களாக முளைத்த பௌத்த விகாரைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவ்வாறான நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அது சிங்கள பௌத்தர்களுக்குரியது. ஏன்பதை சுட்டி நிற்கின்றது. அவ்வாறெனில் இலங்கையின் பல்லினத்தன்மைக்கான வெளி மறைக்கப்பட்டு விட்டதா ?? பெரும்பான்மை சனநாயக வெளியில் ஒற்றையாட்சித் தன்மையில் ஏனைய இனக் குழுமங்கள் நாளடைவில் இன அழிப்பை சந்திக்கும் என்பதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. அவ்வாறான பாதையை இலங்கை அரசு தெரிந்தெடுத்திருப்பது என்பது இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நிருபணமாகின்றது.
மேற்குலக நாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் தன்னை ஒரு சனநாயக நாடு நல்லிணக்க சமாதான விரும்பி என காட்டிக்கொண்டு அதன் இன்னொரு கோர முகத்தை பெரும்பான்மை தவிர்ந்த இனத்தவர் மேல் காட்டுவது என்பது உண்மையில் இலங்கை அரசின் அரசியல் இருப்பில் ஐயம் கொள்ளச் செய்கின்றது. அண்மைய காலங்களில் பௌத்த பிக்குகளின் இலங்கை சனநாயகத்தை சிதைக்கின்ற முயற்சிகளும் அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தண்டனை விலக்கீட்டு நிலையில் இறைமை ஆட்சி நோக்கிப் பயணிக்கின்றதா என்று சந்தேகக் கொள்ளச் செய்கின்றது.
மேற்கூறப்பட்ட அரசியல் நிகழ்ச்சிகள் தொடர்பில் தங்களை மக்கள் பிரதிநிதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் மௌனம் காப்பது இந்நிகழ்சியில் இவர்களும் பங்காளிகள் என சந்தேகம் கொள்ளச் செய்கின்றது. இதுவரைக்காலம் இது பற்றி தமிழ் அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். தமிழின இனப்படுகொலையின் தமிழ் அரசியல் கட்சிகளதும் அரசியல்வாதிகளதும் வகிபங்கை வரலாறு பதிவு செய்யும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM