குற்றம் உறுதி செய்யப்படாத அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண் டும். இந்த விடயத்தில் இனவாத குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை. சிறிய குழுவினர்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் அரசாங்கத்தினால் எதனையும் செய்யமுடியாது.
தேசிய பிரச்சினையை இதற்கு மேலும் இழுத்தடிக்க முடியாது . இதற்கு உரிய தீர்வினை நாம் வழங்குவோம். அதற்கான வேலைத்திட்டங்கள் ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பரவலாக்கமே சிறந்ததாகும். எனினும் அதற்கு அப்பால் சென்று அதிகாரத்தை பரவலாக்கம் செய்யவே நாம் திட்டமிட்டுள்ளோம். இதனை உள்ளடக்கிய தேசிய நல்லிணக்க கொள்கையை அரசாங்கத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம். புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதி யுத்தத்தின் போது யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம். ஆகவே குற்றம் இழைக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் விசேட நீதிமன்றம் ஊடாக விசாரணை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மிகவும் அவசியமாகும். அதற்கான வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இதன்பிரகாரம் ஜனவரி முதல் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்புவதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். இதனை தேசிய நல்லிணக்க மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படவுள்ளது.
நாட்டில் சுமார் முப்பது வருடங்களாக பாரிய யுத்தம் நடைபெற்று வந்துள்ளது. விடுதலை புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்து அதில் வெற்றிகொண்ட போதிலும் நாட்டில் வாழும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தோல்விக்கண்டு விட்டோம். யுத்தம் நிறைவடைந்து சுமார் ஏழு வருடங்கள் புர்த்தியான போதிலும் சமாதானத்திற்கான எந்தவொரு தீர்க்கமான திட்டங்களும் முன்னைய ஆட்சியின் போது முன்னெடுக்கப்படவில்லை. எனினும் புதிய அரசாங்கத்தினால் இதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
நல்லிணக்க வேலைத்திட்டம்
ஜனவரி மாதம் முதல் நல்லிணக்க வேலைத்திட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை நான்கு நிறுவனங்களின் ஊடாக நாம் முன்னெடுக்கவுள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து தேசிய பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கான கருத்துக்களை கோரவுள்ளோம். யுத்ததின் காரணமாக 30 வருடங்களாக தமிழ் மக்களின் அபிப்பிராயங்கள் வெளிப்படாமலே போயுள்ளன. ஆகவே இது குறித்து எமது அலுவலகம் விசேட அவதானம் எடுக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாம் குறித்த மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளோம்.
இது தொடர்பில் அனைத்து அரசியல்கட்சிகளையும் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுப்பான்மையின அரசியல்கட்சிகளை சந்தித்து அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக முன்னெடுக்கவுள்ளோம். இது தொடர்பில் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கிழக்கு முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
இந்த வேலைத்திட்டத்தின் போது பாடசாலைகள் ரீதியாக பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். பாடவிதானங்களில் நல்லிணக்கம் என்ற பெயரில் புதிய விடயதானங்களை ஆரம்பிக்கவுள்ளோம். மேலும் பாடவிதானங்களில் நல்லிணத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஏதாவது காணப்படின் அதனை திருத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அனைத்து மதங்களின் அனுஷ்டானங்கள் தொடர்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெளிவுட்டவுள்ளோம். அனைத்து மத அனுஷ்டானங்களை பாடசாலைகளில் அனு‘்டிப்பதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
அதேபோன்று எமது நாட்டின் அரசியலமைப்பின் மொழி கொள்கையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே புதிய கொள்கையை தயாரிக்கும் பணிகளிலும் அவதானம் செலுத்தவுள்ளோம். அத்துடன் பெண்களின் தலைமையின் கீழ் விசேட குழுக்களை நிறுவி, அவர்களது கருத்துக்களும் உள்ளடங்கும் படியாக விசேட திட்டம் முன்னெடுக்கப்படும். அனைத்து நிறுவனங்களிலும் தமிழ் மொழி ஆற்றல் கொண்டோரை வேலைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நல்லிணக்கம் தொடர்பான பாடசாலை மட்டத்தில் செயலமர்வுகளை நடத்தி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெளிவூட்டவுள்ளோம். தற்போது அரச நிறுவனங்களில் தமிழ் மொழி ஆற்றல்ளுடையோர் 5 சதவீதத்தினரே காணப்படுகின்றனர். ஆகவே இவை அனைத்தும் நல்லிணக்கத்திற்கு பாதிப்பாக அமைய கூடும்.
ஆகவே தேசிய நல்லிணக்கம் தொடர்பாக விசேட கொள்கையொன்றை தயாரிக்கவுள்ளோம். அதனை அரசாங்கத்திடம் முன்வைக்கத்திட்டமிட்டுள்ளோம். அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
புதிய அரசியலமைப்பு
ஜனவரி மாதம் முதல் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். குறித்த யாப்பில் நல்லிணக்கத்திற்கு பிரதான வகிபாகம் வழங்கப்படும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அதிகார பரவலாக்கம் என்பது 2000 ஆம் ஆண்டு எனது ஆட்சியின் போது முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனையை விடவும் சிறப்பானது. ஆகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அடிப்படையாக கொண்டு அதிகார பரவலாக்கம் சிறந்ததாகும்.
ஆகவே அதிகாரப்பரவலாக்கம், பேச்சு சுதந்திரம், சமமான உரிமைகள், மொழி சுதந்திரம், சமமான மொழி சுதந்திரம், என்பவற்றை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும். இதற்கு புத்தஜீவிகள், சட்டவல்லுனர்களின் ஆலோசனைகள் கோரப்படும்.
அதன்பிரகாரம் அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
யுத்தக் குற்றம்
இதேவேளை இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை விசேட தீர்மானம் ஒன்றினை முன்வைத்துள்ளது. எனினும் சர்வதேச விசாரணையே முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போதிலும் உள்ளக விசாரணை பொறிமுறையின் கீழ் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் சர்வதேசத்துடன் புரிந்துணர்வுக்கு வந்தது. எனினும் உள்ளக விசாரணையின் போது தொழில்நுட்ப உதவிகளை அரசாங்கம் சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ள நேரிட்டால் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
எனினும் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றிருக்குமாயின் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதா என்பது தொடர்பில் ஆராயவே உள்ளக விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது குற்றம் இழைக்கப்பட்டவர்கள் விசேட நீதிமன்றத்தின் மூலமாக விசாரணைக்குட்படுத்தப்படுவர்.
அரசியல் கைதிகளின் விடுதலை
தற்போது அரசாங்கத்திற்கு அரசியல் கைதிகள் விவகாரம் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஆகவே குற்றங்கள் உறுதிப்படுத்தப்படாத அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும். இந்த விடயத்தில் மூன்று கட்டங்களாக அவதானிக்க வேண்டியுள்ளது. இதற்கமைய சில கைதிகளுக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. அடுத்ததாக சில கைதிகளின் வழக்கு எந்தவொரு முடிவும் இன்றி காலதாமதம் அடைந்து வருகின்றது. இவர்கள் விடயத்தில் உடனடி தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். ஆனால் அரசியல் கைதிகளில் சாட்சியங்கள் குற்றங்கள் உறுதிப்படுத்தப்படுமனால் அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் முன்பு அரசின் அனுசரனையை பெற்றுக்கொண்டிருந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்டம் கடுமையான முறையில் பிரயோகிக்கப்பட வேண்டும்.
இனவாதிகளுக்கு அஞ்சப்போவதில்லை
இதேவேளை அரசியல் கைதிகள் விடுதலைகளுக்கு எதிர்ப்பு வௌியிடும் வகையில் இராவணாபலய போன்ற இனவாத அமைப்புகள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றன. எந்தவொரு நாட்டிலும் அடிப்படைவாதிகள் செயற்பாடுகள் காணப்பட்டு வருகின்றன. எனினும் ஒரு சிறிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல்களுக்காக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை இரத்து செய்யமுடியாது. இனவாத குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.
அத்துடன் இனவாத குழுக்கள் மீளவும் ஆட்சிப்பீடமேறுவதற்கு முயற்சிக்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை.
விசேட நீதிமன்றம்
இலங்கையில் கடந்த பத்து வருட காலப்பகுதியில் நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கவில்லை. எனினும் தற்போது நீதித்துறை சுயாதீன தன்மை ஆக்கப்பட்டுள்ளது. நீதித்துறை மோசடிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. ஆகவே இந்த விடயத்தில் நேர்மையான நீதிபதிகளுடன் கூடிய விசேட நீதிமன்றத்தின் ஊடாக உள்ளக பொறிமுறையை முன்னெடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM