அடிப்படைவாதம் அமைதியைக் கெடுக்கும். நல்லெண்ணத்தை இல்லாமல் செய்யும் நல்லிணக்கத்துக்கு விரோதமாகச் செயற்படும். மொத்தத்தில் நாட்டில் அழிவையே ஏற்படுத்தும்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இதனை நிதர்சனமாகக் காட்டியிருக்கின்றன. ஏனெனில் அந்தத் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு அடிப்படைவாதமே அடிப்படையாக இருந்தது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளே இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட வகையில் நடத்தியிருந்தனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்டவர்களின் மரணத்திற்கு இஸ்லாமிய மதம் சார்ந்த அடிப்படைவாதமே உயிர்நாடி.
அப்பாவிகளைக் கொன்றொழிக்கின்ற பயங்கரவாதத்தின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியும் என்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் மீது கட்டியெழுப்பப்பட்ட அமைப்புக்களாகவே ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கைடா போன்ற இஸ்லாமிய உலக பயங்கரவாத அமைப்புக்கள் திகழ்கின்றன. அடிப்படைவாதத்தின் செயல் வழி பயங்கரவாதம் என்பதை இந்த அமைப்புக்கள் தமது கொடூரமான தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் மூலம் - கொலை வெறித் தாக்குதல்களின் மூலம் நிலைநாட்டி இருக்கின்றன.
இஸ்லாமிய அடிப்படைவாதமே இன்றைய அனைத்துலக பயங்கரவாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் அனைத்துலக நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.
முப்பது வருட கால யுத்தத்தில் சிக்கியிருந்த இலங்கையை, யுத்தத்தின் பத்தாவது வருடத்தில் இந்த உலக பயங்கரவாதம் பதம் பார்த்திருக்கின்றது. இதை எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
பயங்கரவாதமும் பாதுகாப்பும்
ஆயுத ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த அரச படைகள், விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே மூழ்கி இருக்கின்றன. அதன் மூலம் அரசாங்கம் குறிப்பிடுகின்ற பயங்கரவாதம் தலை நிமிர்த்திவிடும் என்ற தேசிய ரீதியிலான அச்சத்தில் நாட்டின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையிலான படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்தி பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கின்றது.
ஆனால் இந்தத் தேசிய பாதுகாப்பின் நிழலிலேயே இஸ்லாமிய பயங்கரவாதம் கருக்கொண்டு, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ஒரே நாளில் பல இடங்களில் நடத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தது என்பதை அரசும் அறிந்திருக்கவில்லை. அரச படைகளும் உய்த்து உணர்ந்திருக்கவில்லை. இந்த நிலையில்தான் நாடே பேரதிர்ச்சியில் செயலற்று திகைப்பில் உறையும் வகையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்தியிருந்தார்கள்.
இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு மூன்று மாதங்களாகின்றன. ஆயினும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை முற்று முழுதாக முறியடிக்காத நிலையிலேயே நாட்டின் தேசிய பாதுகாப்பு நிலைமை இன்னும் காணப்படுகின்றது.
அடிப்படைவாதமே, யுத்தத்தின் பின்னரான பயங்கரவாத நிலைமைக்குக் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ள போதிலும், அந்த அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வதற்கான தந்திரோபாய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதற்கான மூலோபாயச் செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
பயங்கரவாதிகளைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களும், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்களும் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஆனால் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் தோய்ந்துள்ள சிறு எண்ணிக்கையிலானவர்களைக் கடந்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையுமே பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக, அடிப்படைவாதத்திற்கு ஆதரவளிப்பவர்களாக உற்று நோக்குகின்ற பாதகமான பார்வை கொண்ட நிலைமையே காணப்படுகின்றது. இந்தப் பார்வையின் ஊடாக இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பௌத்த அடிப்படைவாதம் மேலோங்கி வளர்கின்ற மோசமான சூழல் உருவாகியிருக்கின்றது.
அடிப்படைவாதம்
அடிப்படைவாதம் என்பது கருத்தியல் சார்ந்த ஒரு மோசமான நிலைப்பாடு. அது சுய அடையாளம் சார்ந்த நெருக்கீட்டின் வெளிப்பாடு.
தீவிரவாத சிந்தனையையும், தீவிரவாத நிலைப்பாட்டையும் அது பயனடையச் செய்கின்றது. தீவிரவாதத்தின் அடுத்த வளர்ச்சிப்படியாகக்கூட அடிப்படைவாதத்தை நோக்க முடியும். தீவிரவாதம் மென்போக்கை சார்ந்து வன்முறையை நோக்கி வளரக்கூடும். ஆனால் அடிப்படைவாதம் வன்முறையையும் பயங்கரவாதத்தையுமே வழித்தடமாகக் கொண்டு செயற்பட வல்லது. அதையே உயிர்நாடியாகக் கொண்டது.
அடிப்படைவாதம் என்பது பெரும்பாலும் மதங்கள் சார்ந்த கொள்கைகளின் மீது கட்டி எழுப்பப்படுவது. ஆனால், அது வாழ்வியலின் எல்லாவிதமான போக்குகளிலும் செல்வாக்கு செலுத்த வல்லது. இனக் குழுமங்களின் அல்லது மதக் குழுமங்களின் வரலாறு அவற்றின் வளர்ச்சிப் போக்குகளில் அது நம்பிக்கை கொள்வதில்லை. உலகப் போக்கையும், அதன் இயங்கு வழியையும் துணிந்து நிராகரிக்க வல்லது.
அடிப்படைவாதம் பற்றியும் அடிப்படைவாதிகள் குறித்தும், ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர்கள் 'ஓர் அடிப்படைவாதி எல்லா விடயங்களையும் தான் நம்புகின்ற அடிப்படைகள் மீது அல்லது வழிமுறைகள் மீது ஒப்பிட்டு நோக்கி சந்தேகம் கொள்வது அல்லது ஏற்க மறுக்கின்ற வழிமுறையைக் கொண்டவனாகத் திகழ்வான்' என்று குறிப்பிடுகின்றார்கள்.
'தன்னில் திணிக்கப்படுகின்ற கொள்கைகளின் மீது அதீத நம்பிக்கை கொள்வதனால், அடிப்படைவாதிகள், சுய சிந்தனையில் அந்தக் கொள்கைகளை ஆய்ந்து சிந்தித்து உண்மையை உணர்வதில்லை. அத்தகைய கருத்தியல் சுதந்திரத்தை அவர்கள் அனுபவிப்பதுமில்லை. இதனால் சுயசிந்தனையற்ற செயல் வழி தன்மை கொண்டவர்களாக அடிப்படைவாதிகள் திகழ்கின்றனர். தாங்கள் நம்புவதே உலகம் என்றும், ஏனைய செயற்பாடுகளும் நம்பிக்கைகளும் பொய்யானவை என்ற வலிமையான உளவியல் நிலைமைக்கு அவர்கள் ஆளாகிவிடுகின்றனர்' என்பது அந்த நிபுணர்களின் கருத்து.
அடிப்படைவாதம் என்பது ஒரு தனி மனிதனை, ஒரு குடும்பத்தை, ஒரு குழுவை, ஒரு இனக்குழுமத்தை அல்லது ஒரு மதக் குழுமத்தை ஆக்கிரமித்து ஆட்கொள்ள வல்லது. அடிப்படைவாதத்திற்கு பாரம்பரியம், வரலாற்றுப் பின்னணி, கல்வி அறிவு, மரபு வழியிலான மத நம்பிக்கைகள், சமூக அந்தஸ்து, பொருளாதார அந்தஸ்து என்பன பொருட்டாக அமைவதில்லை. இவற்றைக் கடந்த நிலையில் அது செயற்பட வல்லது.
தத்துவமும் தன்மைகளும்
அடிப்படைவாதத்தின் இந்த வலுவான நிலைப்பாட்டை உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் செல்வந்தராகிய மொகமட் இப்ராஹிம் என்ற பிரபல வாசனைத் திரவிய வர்த்தகருடைய இரண்டு புதல்வர்களான இன்ஸாப் இப்ராஹிம், இல்ஹாம் இப்ராஹிம் ஆகிய சகோதரர்களும் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற தகவல் உறுதி செய்வதாக உள்ளது.
இவர்கள் இருவரும் செல்வந்தர்கள் என்பதுடன் கல்வி அறிவுடையவர்கள் என்பதும் அடிப்படைவாதம் பற்றிய நிபுணர்களின் கணிப்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான சில முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலானவர்களும் தற்கொலை தாக்குதலுக்கான குண்டுகளை வெடிக்கச் செய்து மாண்டு போனார்கள் என்ற உண்மையும் அடிப்படைவாதத்தின் மோசமான தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நம்பிக்கை மீது கட்டி எழுப்பப்படுகின்ற அடிப்படைவாதம் சமாதானம், சகவாழ்வு, சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல் என்பவற்றை அடியோடு நிராகரித்துச் செயற்படுகின்ற தன்மையைக் கொண்டது. அடிப்படைவாதிகள் நல்லெண்ணத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் விரோதமான போக்கைக் கொண்டிருப்பார்கள். தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையே சரியானது, சிறந்தது என்ற வளைந்து கொடுக்காத பிடிவாதம் உடையவர்களாக, அவர்கள் இருப்பார்கள்.
பல்லினம் சார்ந்த ஜனநாயகப் போக்கிற்கு அவர்கள் எதிரான கொள்கையைக் கொண்டிருப்பார்கள். தாங்கள் கொண்டுள்ள அடிப்படைவாதத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் வழியிலேயே மற்றவர்கள் அனைவரும் நடக்க வேண்டும் என்ற அழுத்தமான பிடிப்பைக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய நிலைப்பாட்டையும் கொள்கைகளையும் ஏற்க மறுப்பவர்கள், எதிர்ப்பவர்களை அவர்கள் எதிரிகளாகவே நோக்குவார்கள். அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற ஆழமான கொள்கைப் பிடிப்பை அவர்கள் கொண்டிருப்பார்கள்.
இந்த நிலையில் உலகில் சமூகங்களிடையே மோதல்களை உருவாக்குதல், நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தல், சமாதானத்தை நிராகரித்தல், சமூகங்களிடையே தேவையற்ற பிளவுகள், மோதல்கள், குழப்பங்கள் என்பவற்றை ஏற்படுவத்துவதிலும் அடிப்படைவாதிகள் குறியாக இருப்பார்கள். இருபதாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற அடிப்படை வாதம் இந்த வகையில்தான் உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய வழிமுறையில்தான் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களும், சர்வதேச நாடுகளில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டிருக்கின்றன என்பது ஆய்வாளர்களின் முடிவு. அடிப்படைவாத சிந்தனையின் செயற்பாடுகள்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னரான நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னரிலும் பார்க்க வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற சிங்கள பௌத்த தேசியவாதம், தமிழ் மக்கள் மீதும் மோசமான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியிருக்கின்றது. சிங்களவர்களே இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள். குடிசனத் தொகை மதிப்பீட்டுத் தகவல்கள் 74.9 வீதமானவர்கள் சிங்களவர்கள். தமிழர்கள் 11.2 வீதம். முஸ்லிம்கள் 9.2 வீதம். இந்திய வம்சாவழித் தமிழர்கள் 4.2 வீதம். ஏனைய சமூகத்தவர்கள் 0.5 வீதம் என கூறுகின்றன. எனவே நாட்டில் முக்கால்வாசிப் பேர் சிங்களவர்களாக உள்ளனர். இதனால் பெரும்பான்மை என்ற மேலாதிக்க சிந்தனையும் மேலாண்மைப் போக்கும் அவர்களிடத்தில் ஊறிப் போயுள்ளது. இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்ற பேரினவாத நிலைப்பாட்டிற்கு இதுவும் காரணமாகும். முஸ்லிம்கள் வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். அதேவேளை, வருடந்தோறும் அவர்களின் குடிசனத் தொகையும் அதிகரித்துச் செல்கின்றது. அத்துடன் உலக முஸ்லிம் நாடுகளின் செல்வந்த நிலைமையும், அவற்றின் ஆதரவும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பது தங்களுடைய சமூக, பொருளாதார, சமய வளர்ச்சிக்குப் பாதிப்பாக அமையும் என்ற அச்சமும் சிங்களவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல், வடக்கிலும்; கிழக்கிலும் செறிந்து வாழ்கின்ற தமிழர்கள், குறிப்பாக வடபகுதியில் அவர்களுடைய இருப்பும், வடக்கையும் கிழக்கையும் தாயகப் பிரதேசமாகக் கொண்டுள்ள தேசியத் தன்மையும் தங்களுக்குப் பாதகமாக அமையும் என்ற அரசியல் ரீதியான அச்சமும் அவர்களிடம் ஊறிப் போயுள்ளது.
வடமாகாணம் இந்தியாவின் தென் மாநிலமாகிய தமிழ் நாட்டுடன் நெருங்கிய பூகோள அமைப்பைக் கொண்டிருப்பதனால், தமிழர்கள் தமிழ்நாட்டுடன் இணைந்து தங்களை; சிறுபான்மையினராக்கி தமது இருப்புக்கே அரசியல் ரீதியான ஆபத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்ற அச்சமும் அவர்களிடம் நாடு சுதந்திரமடைந்த நாள்முதல் நிலவுகின்றது.
இத்தகைய அரசியல் ரீதியான அச்ச நிலைமையில்தான் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற சிங்கள பௌத்த தீவிரவாதிகள், தமிழ் மக்களுடைய சமூக சமய நிலைமைகளிலும் பிளவை ஏற்படுத்துகின்ற அடிப்படைவாத சிந்தனையுடனான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
மோசமடையும் நிலைமைகள்
பூகோள ரீதியாக வடக்கும், கிழக்கும் இணைகின்ற அதேவேளை, சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தமிழர்களும் முஸ்லிம்களும் சமூக ரீதியாக ஒன்றிணைவது தங்களுக்கு பேராபத்தாக முடியும் என்ற அரசியல் தீர்மானமும் சிங்கள பேரின அரசியல்வாதிகளிடம் தொடர்கின்றது.
இதனால், தமிழ் மக்களும் முஸ்லிம்களும் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பிளவுபட்டிருப்பது தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற எண்ணமும் அவர்களிடம் மேலோங்கியிருக்கின்றது. இத்தகைய பிளவை அரசியல் ரீதியாக உருவாக்குவதில் பேரின அரசியல்வாதிகள் ஏற்கனவே வெற்றி கண்டுள்ளார்கள்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னரான உலக பயங்கரவாத எதிர்ப்பு நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, சிங்கள பௌத்த தேசியம் என்ற அடிப்படைவாதத்தின் ஊடாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை தனித்தனியே எதிர்கொண்டு மோதுகின்ற ஒரு போக்கைக் கடைப்பிடித்து வருவதை உணர முடிகின்றது.
சிங்கள பௌத்த தேசியம் என்று அவர்கள் பகிரங்கமாக உரிமை கோரினாலும்கூட உண்மையில் அது சிங்கள பௌத்த தேசிய அடிப்படைவாதமாகவே பரிணமித்துள்ளது.
அடிப்படைவாதம் என்பது பொதுவாக மதத்தை அடிப்படையாகக் கொண்டு வன்முறை சார்ந்த பயங்கரவாதச் செயல் வழியைக் கொண்டிருந்த போதிலும், தமிழ் மக்களுக்கு எதிராக மென்வலுகொண்ட அடிப்படைவாத செயற்பாட்டிலேயே அவர்கள் தீவிர கவனம் செலுத்தியிருக்கின்றார்கள்.
மென்வலு கொண்ட அடிப்படைவாதச் செயற்பாட்டின் வெளிப்பாடாகவே நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ள பாரிய தாதுகோபுரத்தைக் கொண்ட பௌத்த விகாரையை நோக்க வேண்டி உள்ளது. சுமார் நாற்பத்தைந்து சிங்களக் குடும்பங்களைக் கொண்ட நாவற்குழியின் சிங்களக் குடியேற்றத்திற்கு இத்தகைய பெரிய பௌத்த விகாரை ஏன் அமைக்கப்படுகின்றது என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. அதேவேளை, அங்கு குடியேற்றப்பட்டுள்ள சிங்களக் குடும்பங்கள் அனைத்துமே பௌத்த குடும்பங்கள்தானா என்பதிலும் சந்தேகம் உண்டு. நாவற்குழி மாத்திரமல்ல. முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவியடிப் பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பில் அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டிருப்பது, திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தைக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தின் நேரடி உத்தரவின் கீழ் பௌத்த விகாரை அமைக்கும் செயற்பாடு, வலிகாமம் வடக்கு தைலிட்டியில் இராணுவத்தினர் பௌத்த விகாரைக்கான கட்டிட நிர்மாண வேலைகளை மேற்கொண்டிருப்பதாக எழுந்துள்ள சந்தேகமான நிலைமை போன்றவை சிங்கள பௌத்த தேசிய அடிப்படைவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடாகவே தோன்றுகின்றது.
(பி.மாணிக்கவாசகம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM