அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதே 21/4 தாக்குதல் களுக்குக் காரணம் என்று, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக் ஷ அண்மையில் கூறியிருந்தார்.
அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கியதை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் விரும்பவில்லை என்றும் அதனால், இலங்கையில் ஏதோ ஒரு வகையில் கால் பதிக்க அந்த நாடுகள் முனைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
21/4 தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று மாதங்களாகியும், இந்த தாக்குதல்களின்- அடி,முடியைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தடுத்து நிறுத்தப்பட்டிருக்கக் கூடிய அல்லது விளைவுகளை குறைத்திருக்கக் கூடிய இந்த தாக்குதல்கள் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அரசியல் தலைமைத்துவங்களின் இயலாமையினால் தான் மிகவும் சுலபமாகிப் போனது.
இந்தத் தாக்குதல் பௌதீக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ ஏற்படுத்திய தாக்கங்களுக்கு அப்பால், எதிர்பாராத பல விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.சர்வதேச சக்திகளின் தலையீடுகள், செல்வாக்கிற்கும் இது வழிகோலியிருக்கிறது. இந்தத் தலையீடுகள் எதிர்காலத்தில் இலங்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனுமானிக்க முடியாது. இந்தநிலையில், தாக்குதலுக்கான அடிப்படைகளையும், நோக்கத்தையும் அரசியல்வாதிகள் தமது வசதிகளுக்காக திசைதிருப்ப முனைகின்றனரோ ? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
விசாரணைகள் இன்னமும் முடிவடைய வில்லை. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள், கண்டறிவுகள் இன்னமும் சரியாக பகிரங்கமாகவில்லை. இந்தநிலையில் ஊகங்களையும் அனுமானங்களையும் வைத்துக் கொண்டு, இந்த தாக்குதல்களின் நோக்கம் குறித்து மக்களைத் திசைதிருப்ப முனைகிறார்கள் அரசியல்வாதிகள்.இதன்மூலம், யாரையோ காப்பாற்றுவதற்கு, உள்நாட்டு அரசியல் சக்திகள் சில முயற்சிக்கின்றனவோ என்ற சந்தேகமே எழுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதே 21/4 தாக்குதல்களுக்குக் காரணம் என்று, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக் ஷ அண்மையில் கூறியிருந்தார்.
அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கியதை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் விரும்பவில்லை என்றும் அதனால், இலங்கையில் ஏதோ ஒரு வகையில் கால் பதிக்க அந்த நாடுகள் முனைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்தின் படி, சீனாவுக்குப் பதிலாக இலங்கையில் கால்பதிக்க முனையும் நாடுகளின் செல்வாக்கு இந்த தாக்குதல்களில் இருந்திருக்க வேண்டும் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான தயாசிறி ஜயசேகர, இந்த தாக்குதலை நடத்தியது, ஐ.எஸ். அமைப்பு அல்ல என்றும், வெளிநாட்டு சக்தி ஒன்றே இதனை செய்துள்ளது என்றும் கூறியிருக்கிறார்.
அவர் ஊடகங்களிடம் பேசிய போது, கூறிய விதத்துக்கும் தெரிவுக்குழு சாட்சியத்தின் போது கூறிய விதத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. இலங்கையில் கால் வைக்க பல நாடுகள் முயற்சிக்கின்றன என்ற அடிப்படையில் தான், சஹ்ரானைப் பயன்படுத்தி அந்த நாடுகள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன என்று தாம் சந்தேகிப்பதாக அவர் கூறியிருக்கிறார். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்ற கூற்றைப் புறந்தள்ளி விட்டு ஊகங்களையும், தமது கருத்துக்களையும், இந்த விடயத்தின் பேசுபொருளாக மாற்ற முனைகின்றனர் அரசியல்வாதிகள்.பூகோள அரசியல், உலக நடப்புகள் எல்லாம் உதாரணங்களாக இருந்தாலும், அதே விதி இலங்கையிலும் பொருந்த வேண்டும் என்பது நியதியும் இல்லை. அவ்வாறு நோக்குவது புத்திசாலித்தன மும் அல்ல. இலங்கையில் கால் வைப்பதற்காக இப்படியொரு தாக்குதலை
ஒரு வெளிநாட்டு சக்தி மேற்கொண்டிருந்தால், இந்த மூன்று மாத காலத்தில் அந்த சக்தி எத்தகைய அடைவை பெற்றிருக்கிறது என்று ஆராய வேண்டியது முக்கியம். அதனைச் செய்யாமல் எழுந்தமானமாக முடிவுகளை எடுப்பது முட்டாள்தனம்.21/4 தாக்குதல்கள் என்பது இலங்கையைப் பொறுத்தவரை, முக்கியமானதொரு பாடம். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையே தோற்கடித்து விட்ட இறுமாப்பில் இருந்து இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்புகளையே நிலைகுலைய வைத்து விட்ட தாக்குதல் இது. இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதற்கு இன்னமும் வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றே, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இப்போது கூறுகிறார்.
தாக்குதல் நடந்த நாளில் இருந்தே, இதனை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறி வந்திருக்கிறார். ஆனால் அதைப் பற்றி யாரும் கரிசனை கொள்வதில்லை.
இப்படியான நிலையில், நடந்து விட்ட தாக்குதல்களில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டு, அதற்குக் காரணியான விடயங்களை அகற்றுவது தான் புத்திசாலித்தனம். இலங்கையின் அரசியல்வாதிகள் எப்போதுமே, தவறுகளில் இருந்து பாடம் கற்பவர்களில்லை. அவ்வாறு பாடம் கற்பவர்களாக இருந்திருந்தால், போருக்குப் பின்னர் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தேடியிருப்பார்கள். 21/4 தாக்குதல்களின் அடிப்படைகளை கண்டறிவதையும் இவர்கள் விரும்புவதாகவும் தெரியவில்லை. அதற்கு மாறாக, பூகோள அரசியல் அனுபவங்களை மட்டும் வைத்துக் கொண்டு, அனுமானங்களின் அடிப்படையில் விசாரணைகளையும் பொதுமக்களையும் திசை திருப்புவதில் இறங்கியுள்ளார்கள்.
ஏனென்றால், தமது அரசியல் இருப்புக்கும், நலனுக்கும் அவர்களுக்கு இதுபோன்ற முடிவுகள் தேவைப்படுகின்றன. அதைவிட தவறுகளை மறைக்கின்ற தேவைகளும் அவர்களுக்கு உள்ளன. இது ஐ.எஸ். அமைப்பின் கைவரிசை இல்லை என்றும் சர்வதேச சக்தி ஒன்றின் வேலை தான் என்றும், கூறுபவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமானவர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என்ற கருத்தே பெரும்பாலானவர்களிடம் உள்ளது. அவரிடம் தான், பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டிய முழுப் பொறுப்பும் இருந்தது.
ஆனால் அவர் அதனை அலட்சியமாக எடுத்துக் கொண்டார். எல்லாம் நடந்து முடிந்த பின்னர், தனக்குக் கீழ் இயங்கியவர்களின் தலைகளை உருட்டி, பழிகளை அவர்களின் மீது போட்டார். ஜனாதிபதியை இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதற்காக, சர்வதேச சக்திகளின் தலையில் பொறுப்பை சுமத்துவதற்கும் முயற்சித்திருக்கலாம். அதுபோலவே, இந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகளினது அடிப்படை இலக்கு என்ன என்பதை தெளிவாக கண்டறிந்து, அதற்கு சரியான மருந்தை தடவத் தவறினால், மீண்டும் மீண்டும் பாடங்களைக் கற்க வேண்டிய நிலையே ஏற்படும்.
இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் தான்தோன்றித்தனமாக வளரவில்லை. அது வெறுமனே ஐ.எஸ் தொடர்பினாலோ, அல்குவைதா தொடர்பினாலோ உருவானதும் அல்ல. இஸ்லாமிய மார்க்க போதனையின் விளைவும் அல்ல. இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் பல தசாப்தங்களாக ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜிஹாத், தலிபான், அல்குவைதா என்று பல சக்திவாய்ந்த இஸ்லாமிய ஆயுத அமைப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்த போதும், அவற்றின் தாக்கம் இலங்கையில் அப்போதெல்லாம் இருக்கவில்லை. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தான், இதில் அதிக தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் அளுத்கம வன்முறைகள் நிகழ்ந்தன. தற்போதைய ஆட்சிக்காலத்தில் கண்டி வன்முறைகள் இடம்பெற்றன. இவற்றின் எதிரொலியாக இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் கூட, இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்தக் காரணிகளை மறந்து விட்டு அல்லது மறுத்து விட்டு முன்னெடுக்கப்படும் விசாரணைகளால் எந்தப் பாடத்தையும் கற்க முடியாது,
ஒருவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை மறைப்பதற்காக அத்தகைய வன்முறைகளால் தான் அவர்கள் திருப்பித் தாக்கும் நிலை ஏற்பட்டது என்பதால், வன்முறைகளுக்கு பொறுப்புக்கூறுவதில் இருந்து தப்பிக்கும் நோக்குடன், வெளிநாட்டு சக்தி பற்றிய புரளிகளை கிளப்ப முனைந்திருக்கலாம். சிங்கள பௌத்த தேசியவாதத்தின் கோரமுகத்தின் உண்மையான தோற்றத்தை மறைப்பதற்காக, அதன் விளைவாகவே, இஸ்லாமிய தீவிரவாதம் முனைப்புப் பெற்றது என்ற உண்மையை மறைப்பதற்காக வெளிநாட்டு சக்திகள் என்ற குண்டைத் தூக்கிப் போட்டு விட்டு தப்பிக்க அரசியல்வாதிகள் முனையலாம்.
வெளிநாட்டு சக்திகள் இவ்வாறான தாக்குதல்கள், சம்பவங்களில் ஒருபோதும் தொடர்புபடுவதில்லை என்றோ, இந்த தாக்குதலுடன் அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்றோ யாரும் வாதிட முடியாது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், ஜனாதிபதியை பதவியிறக்கவும் தான் வெளிநாட்டு சக்தியால், இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார். உலக நடப்புகளில் இதுபோன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன என்பது உண்மை தான். அவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு இந்தச் சம்பவத்தையும் அவ்வாறே கருதுவது தான் ஆபத்தானது.
இதுதான் சரி என்று, சரியான விசாரணைகளின்றி வெறும் ஊகங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது தவறான அணுகுமுறை.
ஏனென்றால், இதுபோன்ற சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு இந்த முற்கணிப்புகள் உதவாது. அரசியல்வாதிகள் தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்தே அது உதவும்.
- கார்வண்ணன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM