சமூக பொருளாதார மற்றும் ஆரோக்கிய வாழ்வில் பாரிய செல்வாக்குச் செலுத்தும் ஒன்றாகவும் தற்கால சந்தை பொருளாதாரத்தில் தனகென தனித்துவமான அடையாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஒன்றாகவும் நீர் காணப்படுகின்றது.
உலக சனத் தொகையில் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை சுட்டிக்காட்டுவதோடு ஒவ்வொரு எட்டு விநாடிகளுக்கும் ஒரு குழந்தை மரணிப்பதாகவும் தெரிவிக்கின்றது. சுத்தமான குடிநீர் என்பது மனிதனின் ஆரோக்கியத்தில் ஆழமாக தாக்கம் செலுத்தும் ஒன்றாகவும் உள்ளது.
இலங்கையில் தற்போதைய நிலையில் இருபத்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட நீர் இணைப்புக்கள் மூலம் பாவனையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் சுத்தமான குடிநீரை 24 மணி நேரமும் வழங்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஒரு தேசிய நிறுவனம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையாகும். இது இலங்கையின் தர (SLS-Sri Lanka Standards Institution) மற்றும் சர்வதேச தர (ISO-International Organization for Stansardization) நிர்ணயங்களுக்கேற்ப நீரினை சுத்திகரித்து தனது 343 நீர் வழங்கல் திட்டங்களூடாக விநியோகித்து வருகின்றது. தேசிய நீர் வழங்கல் சபை மூலம் வழங்கப்படுகின்ற ஒரு நீர் அலகு என்பது ஆயிரம் லீற்றர்களாகும். அவ்வாறு ஆயிரம் லீற்றர்கள் நீரை சுத்திகரிப்பதற்காக மற்றும் விநியோகிப்பதற்காக இச்சபைக்கு சுமார் 50 ரூபா செலவாகின்றது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் இலக்குடன் மேற்படி பாரிய நிதியை செலவழித்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரினை மாணவர் சமூகம் குடிப்பதற்காக ஒரு பாடசாலைக்கு ஒரு நீர் இணைப்பு என்ற அடிப்படையில் (சுற்று நிருபம் இல. A07/2012) உற்பத்தி செலவைவிட குறைந்த சலுகை கட்டணத்தில் வழங்கிவருகின்றது.
பாடசாலை கணக்கெடுப்பின் படி இலங்கையில் 10,162க்கு மேற்பட்ட பாடசாலைகள் காணப்படும் நிலையில் அதில் 4,000 க்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் சமுதாய அடிப்படை நீர் வழங்கல் திட்டங்களிலிருந்தும் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்களின் பிரகாரம் கணிசமான பாடசாலைகளில் அங்குள்ள மாணவர் தொகைக்கு ஒப்பான குடிநீர் பாவனையை விட அதிகரித்த நீர் பாவனை பதிவாகியுள்ளது. அவற்றுக்கான காரணங்களாக பின்வருவன இனம் காணப்பட்டுள்ளன.
1. பாடசாலைகளில் இடம் பெறும் கட்டுமான பணிகளுக்கு பாவித்தல்
2. பாடசாலை சூழலிலுள்ள பூந்தோட்டங்கள் மற்றும் மலர்ச்செடிகளுக்கு பாவித்தல்
3. கவனிப்பற்று அல்லது பராமரிப்பற்று காணப்படும் சிறிய அளவிலான நீர்க் கசிவுகள்
4. பாடசாலை விடுமுறை நாட்களில் ஏற்படும் அவதானம் செலுத்தப்படாத உள்ளக நீர் கசிவுகள்
பாடசாலைகளில் தொடர்ச்சியாக அதிகரித்த நீர்ப் பாவனை காணப்படுமிடத்து அதாவது பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஒப்பான பாவனையைவிட அதிகரித்த பாவனை காணப்படுமாயின் அம்மேலதிக பாவனைக்கான கட்டணத்தை வர்த்தக அடிப்படையில் உரிய பாடசாலை செலுத்த வேண்டி வரலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். வர்த்தக அடிப்படையில் என்னும் போது ஆயிரம் லீற்றர்-ஒரு அலகு நீர் பாவனைக்கான கட்டணமாக 75 ரூபா செலுத்த வேண்டும் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் குறித்த நீர் இணைப்பு தொடர்பான மீள்பரிசீலனையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை எடுக்கலாம் என்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
மேலும் இவ்வாறான அதிகரித்த நீர் பாவனை காணப்படுமிடத்து அதனை மட்டுப்படுத்துவதற்காக சில பாடசாலைகளில் சடுதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் மாணவர்கள் தமது அடிப்படை தேவைக்குரிய போதியளவான நீரினை பெற்றுக்கொள்வதில் வரையறைகளும் நிலவுகின்றன. இது அவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை செலுத்த வல்லது எனலாம்.
பாடசாலையில் இடம் பெறும் கட்டுமான பணிகளுக்கு நீர் தேவைப்படுமாயின் அதற்காக உரிய ஒப்பந்தகாரர் தற்காலிக நீர் இணைப்பை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் விடுதி வசதியுள்ள பாடசாலைகள் குறித்த பாடசாலை மாணவர்களுக்கு குடிநீருக்காக வழங்கப்பட்ட நீர் இணைப்பிலிருந்து நீரை பயன்படுத்த முடியாது. அவ் விடுதிகளுக்கு நீர் தேவைப்படுமாயின் அதற்கான பிரத்தியேக நீர் இணைப்பை அல்லது நீர் இணைப்புக்களை பாடசாலை நிர்வாகம் பெற்றுக்கொடுத்தல் வேண்டும்.
ஏனெனின் அவைகளுக்கான கட்டணங்கள் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் குடிநீருக்கான கட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.
பாடசாலைச் சூழலில் காணப்படும் நீர் விநியோக குழாய் வலையமைப்பில் நீர் கசிவுகள் ஏற்படும் நிலையில் அவைகளை சீர் செய்வதற்கான உதவிகள் தேவைப்படுமாயின் அதனை தங்களது பிரதேசத்துக்கு பொறுப்பான நீர் வழங்கல் காரியாலயத்தை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேலே உள்ள விடயங்களை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர் சமூகத்துக்கான சலுகை கட்டணத்திலான சுத்தமான குடிநீரினை இடையூறு இன்றி தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதில் பாடசாலை நிர்வாகத்தினதும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினதும் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இது 10,162க்கு மேற்பட்ட பாடசாலைகளைக் கொண்ட இலங்கையில் இன்னும் சுத்தமான குழாய் குடிநீர் விநியோகம் இன்றி காணப்படும் 6,000 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் சுத்தமான குடிநீரினை வழங்கவும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் ஆறாவது இலக்கான 2030ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்ற இலக்கை எட்டுவதற்கும் உறுதுணையாக அமையும் எனலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM