பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த சம்பள உயர்வுக்கு மேலதிகமாக 50 ரூபாவைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுப்பனவு அதிகரிப்புக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தாமதம் ஆனாலும் வெகு விரைவில் கிடைக்கும்.
என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மேற்படி அமைச்சின் 1 கோடியே 45 இலட்சம் ரூபா நிதி மற்றும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜின் 80 இலட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஆகியவற்றைக் கொண்டு மொத்தமாக 2 கோடியே 25 இலட்சம் ரூபா செலவில் சாமிமலை நகரிலிருந்து மின்னா தோட்டம் வரை செல்லும் பாதை 'கொங்கிரீட்' இடுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
நான் அமைச்சராக வந்த பிறகு மலையகத்தில் நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் கிடந்த பல வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 20 வருடங்களுக்கு மேல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த மின்னா தோட்டத்துக்கான பாதை 2¼ கோடி ரூபா செலவில் செப்பனிடப்படவுள்ளது. இந்தப் பாதைக்கு ஏற்கனவே மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் 40 இலட்சம் ரூபா செலவில் ஒரு பகுதியை செப்பனிட்டுக் கொடுத்துள்ளார்.
தோட்டங்களில் மக்கள் பயணிக்கும் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதைக் கருத்திற் கொண்டுதான் பாதைகளை செப்பனிட்டுக் கொடுப்பதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அனேகமாக எல்லாத் தோட்டங்களுக்கும் பாதைகளை செப்பனிடும் வேலைத் திட்டம் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. இதற்கென கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது.
எமது மக்களுக்கு தோட்டங்களில் வீடுகளை அமைக்கும் போது தேயிலைகள் பிடுங்கப்படுவதாக பாராளுமன்றத்தில் கூறுகின்றார்கள். தேயிலையைப் பிடுங்காமல் வீடுகளைக் கட்ட முடியுமா? அத்தோடு, தோட்டங்களில் காடு மண்டிக் கிடப்பதாகவும் கூறி வருகின்றார்கள். காடுகள் நேற்றோ இன்றோ முளைக்கவில்லை. தோட்டங்களை கம்பனிகள் பொறுப்பேற்ற காலத்திலிருந்து தான் அவை காடுகளாக காட்சி தருகின்றன. அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் தான் பொறுப்புக் கூற வேண்டும்.
இந்த ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலோடு மூன்று தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே, தேர்தல் களத்தில் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதுப்புது கதைகளைப் புனைந்து கொண்டு வருவார்கள். இது வரையில் உரிய முறையில் சேவை செய்தது யார், மக்களை ஏமாற்றியது யார் என்பதை சீர்தூக்கிப் பார்த்து பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய முன்வர வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக சூளுரைத்தவர்கள் வெறும் 20 ரூபாவை மாத்திரமே பெற்றுக் கொடுத்துள்ளார்கள். கடந்த முறை 730 ரூபாவாக இருந்த அடிப்படைச் சம்பளம் இந்த முறை 750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே தான், நாம் அரசாங்கத்துடன் பேசி மேலும் 50 ரூபாவை அதிகரித்த கொடுப்பனவாக வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அதை எப்படி வழங்குவது என்பது பற்றி ஆராயப்பட்டு வருகின்றது. அது விரைவில் கிடைக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM