சுதீந்திர குல்கர்னி
இருபத்தோராம் நூற்றாண்டு நாகரிகங்கள் மத்தியிலான பயனுறுதியுடைய உரையாடலினால் அடையாளப்படுத்தப்படப் போகிறதா அல்லது நாகரிகங்கள் மத்தியிலான மோதலினால் அச்சந்தருவதாக அமையப்போகிறதா? இது எமது காலத்தில் மிகவும் விறுவிறுப்பாக விவாதிக்கப்படுகின்ற கேள்விகளில் ஒன்றாகும்.
கடந்த நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் பிரபலமான அமெரிக்க அரசறிவியல் நிபுணரான சாமுவேல் ஹன்ரிங்டன் " நாகரிகங்களின் மோதல் " என்ற கருதுகோள் ஒன்றை முன்வைத்தார்.உலக அரசியலின் எதிர்காலப் போக்கு மேற்குலக நாகரிகத்துக்கும் மேற்குலகத்தையதல்லாத நாகரிகங்களுக்கும் இடையிலான மோதலினால் வரையறை செய்யப்படப்போகிறது என்று அவர் வாதிட்டார்.
இந்த மோதலில் மேற்குலகின் மேன்மையான நாகரிகம் வெற்றிபெறும் என்பது அவரது நம்பிக்கை. சோவியத் யூனியனின் சிதைவையும் ஒரேயொரு வல்லரசாக அமெரிக்காவின் வெளிக்கிளம்பலையும் கண்ட பனிப்போரின் முடிவுக்குப் பிறகு உடனடியாக தோற்றம் பெற்றது என்பதால் இந்த கருதுகோளை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பலர் தூக்கிப்பிடித்தனர்.
அதற்கு பின்னரான காலகட்டத்தில் ஹன்ரிங்டனின் கோட்பாட்டை உலகம் பூராவும் பெருவாரியான முக்கிய பிரமுகர்கள் மறுதலித்தார்கள்.அவர்கள் மத்தியில் குறிப்படத்தக்க ஒருவர் 1997 -- 2005 காலகட்டத்தில் ஈரானிய ஜனாதிபதியாக இருந்த முஹம்மத் கதாமி.அவரின் எதிர்க்கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை 2001 ஆம் ஆண்டை ' நாகரிகங்கள் மத்தியிலான கலந்துரையாடல் ஆண்டு ' என்று பிரகடனம் செய்தது.
புதியதொரு பனிப்போர் ?
கடந்த மூன்று வருடங்களில் அமெரிக்கா முக்கியத்துவம் குறைந்துவிட்ட ஒரு வல்லரசாக மாறிவிட்டது. இருந்தபோதிலும், ஹன்ரிங்டனின் வாதத்தை இன்னமும் ஆதரிப்பவர்கள் டொனால்ட் ட்ரம்பின் நிருவாகத்திற்குள் இருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அந்த நிருவாகத்தின் மிக உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவர் தற்போதைய அமெரிக்க -- சீன வர்த்தகப்போரை ' நாகரிகங்களின் மோதலின் ' பின்புலத்தில் உருவகப்படுத்திக் காட்டுவதற்கு முயற்சித்திருக்கிறார்.
சீனாவினால் தோற்றுவிக்கப்படும் ' நீண்டகால அச்சுறுத்தல் ' குறித்து தனது அண்மைய உரையொன்றில் அமெரிக்கர்களை எச்சரிக்கை செய்த இராஜாங்க திணைக்களத்தின் கொள்கை திட்டமிடல் பணிப்பாளர் கிரோன் ஸ்கின்னர், இந்த அச்சுறுத்தலை எதிர்ப்பது என்பது " உ்மையிலேயே வேறுபட்ட ஒரு நாகரிகத்துடனான ஒரு சண்டையே " என்று குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரை " மேற்கத்தைய குடும்பத்திற்குள் மூண்ட ஒரு சண்டை " என்று வர்ணித்தார்.
" வெள்ளை இனத்தைச் சாராத பெருவல்லாதிக்க நாடொன்றுடன் நாம் போட்டிபோடவேண்டியிருப்பது இதுவே முதற்தடவையாகும் " என்று அவர் சொன்னார்.தங்களது நாகரிகமே அதிமேன்மையானது என்று கர்வத்தனமாக உரிமை கோருகின்ற அவரின் கருத்து அப்பட்டமாக இனவெறித்தன்யமயானது." வாஷிங்டன் புதியதொரு பனிப்போருக்கு திட்டமிடுகின்றதா? உலகம் மீண்டும் ஒரு தடவை பெரும் விலையைச் செலுத்தவேண்டியிருக்குமா? " என்று உலகம் பூராவும் பலர் வினவுகிறார்கள்.
இந்த பின்புலத்திலேயே சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் புதியதொரு முனமுயற்சியின் முக்கியத்துவத்தை நோக்கவேண்டும். அண்மைய வருடங்களில் சி ஜின்பிங்கைத் தவிர, உலக சமாதானத்துக்காகவும் பொதுவான சுபிட்சத்துக்காகவும் நாகரிகங்களுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்படவேண்டிய தேவைக்காக உறுதியாக ஆற்றலுடன் வேறு எந்தவொரு தலைவரும் குரல்கொடுத்திருக்கவில்லை. " மனிதகுலத்தின் பொதுவான எதிர்காலத்துக்கான சமூகம்" ஒன்றைக் கட்டியெழுப்பும் மேன்மையான இலக்கை எட்டுவதற்கான பாதையாக அத்தகைய கலந்துரையாடல் ஒன்றை யோசனையாக முன்வைத்த ஒரே சமகாலத் தலைவரும் அவரே. அந்த யோசனையை சீனத்தலைவர் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் 70வது வருடநிறைவு உச்சிமகாநாட்டில் விளக்கிக் கூறினார்.
நாகரிகங்களின் சங்கமம் நிகழுமா அல்லது மோதல் மூளுமா என்பது தொடர்பான விவாதத்தில் மூன்று கேள்விகள் முக்கியமானவையாகின்றன ; சகல நாகரிகங்களும் சமமானவையா? இன்று உலகின் முன்னால் உள்ள பெரிய சவாலை கையாளுவதற்கு நாகரிகங்களுக்கிடையிலான கலந்துரையாடல் உண்மையில் உதவுமா? தேசங்கள் ஒன்றிலிருந்து மற்றது எவ்வாறு கற்றுக்கொள்ளவேண்டும்? இவற்றுக்கு சி ஜின்பிங் நேரிடையாகவும் வெளிப்படையாகவும் பதிலளித்திருக்கிறார்.
பாரிஸ் நகரில் யுனெஸ்கோ தலைமையகத்தில் 2014 ஆம் ஆண்டு உரை நிகழ்த்திய சி ஜின்பிங், " சகல நாகரிகங்களுமே சமத்துவமானவை. அத்தகைய சமத்துவநிலை நாகரிகங்கள் மத்தியில் பரஸ்பர பரிமாற்றங்களையும் அறிவுபெறுதலையும் சாத்தியமாக்கியிருக்கிறது.மனித நாகரிகங்களும் அவற்றின் மதிப்புத்தகுதியைப் பொறுத்தவரை சமத்துவமானவையே. அவை எல்லாம் அவற்றுக்குரிய வலிமையையும் குறைபாடுகளையும் கொண்டிருக்கின்றன. முழுநிறைவான நாகரிகம் என்று ஒன்று உலகில் கிடையாது.சிறப்பு இல்லாத நாகரிகம் என்றும் கூட ஒன்று இல்லை.எந்தவொரு நாகரிகத்தையும் மற்றதை விடவும் மேலானது என்று மதிப்பிடமுடியாது " என்று குறிப்பிட்டார்.
2017 அக்டோபரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது மகாநாட்டில் உரையாற்றியபோது அவர் புவியின் முழுச் சனத்தொகையும் எதிர்நோக்குகின்ற மிகவும் எரியும் பிரச்சினைகளில் ஒன்றான காலநிலை மாற்றத்துடன் இந்த நாகரிகங்கள் தொடர்பான விவாதத்துக்கு இருக்கின்ற பொருத்தப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். உலகம் ' கைத்தொழில் நாகரிகத்தில் இருந்து ' சுற்றுச்சூழல் நாகரிகத்துக்கு ' நிலைமாறவேண்டியதும் உலகின் சகல நாகரிகங்களும் கலாசாரம் மற்றும் மதங்களிலும் உட்பொதிந்திருக்கின்ற உன்னதமான போதனையான ' மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஒத்திசைவை ' உருவாக்குவதற்கு கற்றுக்கொள்ளவேண்டியதும் அவசியம் என்று அவர் கூறினார்.
நாகரிகங்களின் கலந்துரையாடல்
கடந்தமாதம் பெய்ஜிங்கில் ' ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல் ' தொடர்பான முக்கியமான ஒரு மகாநாட்டை கூட்டியதன் மூலமாக சீன ஜனாதிபதி நாகரிகங்கள் மத்தியிலான பரஸ்பர பரிமாற்றங்களை ஆதரித்து குரல்கொடுக்கும் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்தார். அந்த மகாநாட்டில் நானும் கலந்துகொண்டேன்.48 ஆசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2000 க்கும் அதிகமான பேராளர்களும் ஏனைய கண்டங்களைச் சேர்ந்த மேன்மைவாய்ந்த பிரமுகர்கள் பலரும் மகாநாட்டில் பங்கேற்றனர்.
அதில் தனது சிறப்புரையில் ஜனாதிபதி சி ஜின்பிங் உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கையும் உலக சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்ட ஆசியா கண்டத்தின் முக்கியத்துவத்தை அழுத்திக் கூறி " நாகரிகங்களின் தொட்டில் " என்று வர்ணித்தார். மகாநாட்டின் நோக்கத்தை விளக்கிய அவர், மிகவும் பெருமளவுக்கு பல்துருவமயம், பொருளாதார உலகமயமாக்கம் மற்றும் கலாசாரப் பல்வகைமையை நோக்கி இன்று நகர்ந்துகொண்டிருக்கும் உலகம் தகவல் வகைப்பட்டதாக மாறுகின்ற போக்கு அதிகரித்துவருகிறது. எதிர்காலத்துக்கான நம்பிக்கை தரும் வாய்ப்புகளுக்கு இது வரவு கூறுவதாக இருக்கிறது.அதேவேளை, உறுதிப்பாடின்மையும் நிச்சயமற்றதன்மைகளும் பெருகிக்கொண்டிருப்பதுடன் மனிதகுலம் எதிர்நோக்குகின்ற உலகளாவிய சவால்கள் முன்னெப்போதையும் விடவும் கூடுதல் அச்சந்தருபவையாக மாறிக்கொண்டிருக்கின்றன ; இந்த சவால்களை கையாளுவதற்கு உலகம் பூராவும் நாடுகளிடமிருந்து கூட்டு எதிர்வினை தேவைப்படுகிறது என்று கூறினார்.
" எமது பொதுவான சவால்களைச் சந்திப்பதற்கும் எல்லோருக்குமான சிறப்பான ஒரு எதிர்காலத்தை தோற்றுவிப்பதற்கும் கலாசாரமும் நாகரிகமும் அவற்றுக்குரிய பாத்திரங்களை வகிக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்த்து நிற்கிறோம். பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை வகிக்கின்ற பாத்திரத்தைப் போன்று இது முக்கியமானதாகும் " என்று சி ஜின்பின் பிரகடனம் செய்தார்.
அமெரிக்கா கடைப்பிடிக்கின்ற வர்த்தக தற்காப்பு மற்றும் தனியாதிக்க நிலைப்பாடு பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்ட சீன ஜனாதிபதி, " நாகரிகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதவேண்டியதில்லை ; தேவைப்படுவது சகல நாகரிகங்களினதும் வனப்பை பார்ப்பதற்கு கண்களே....நாடுகள் கதவுகளை மூடக்கொண்டு அவற்றின் பின்னால் ஔித்துநின்றால், மனித நாகரிகங்கள் ஒன்றிலிருந்து மற்றையது துண்டிக்கப்பட்டு சகலதுமே உயிர்த்துடிப்பை இழந்துவிடும். தாங்களே பிரத்தியேகமானவர்கள் என்ற எண்ணத்தை சகல நாடுகளுமே கைவிட்டு ஒன்றிணைவை ஆரத்தழுவி திறந்த போக்கை ஆதரித்து கொள்கை, உட்கட்டமைப்பு, வாணிபம், நிதித்துறை மற்றும் மக்களுக்கிடையிலான பிணைப்பை மேம்படுத்தவேண்டும் என்று ஆசிய மக்களாகிய நாம் எதிர்பார்க்கிறோம் " என்று கூறினார்.
நாகரிகங்கள் ஒன்றுடன் ஒன்று பரிமாற்றங்களைச் செய்யாமல், தங்களை பிரத்தியேகமானவை என்று நினைக்கும்போது எவ்வாறு அவை சரிவைக்கண்டு மாண்டுவிடுகின்றன என்பதை வரலாறு கண்டிருக்கிறது. " நாம் திறந்தபோக்கைக் கொண்டவர்களாகவும் சகல தரப்பினரையும் அரவணைத்து ஒருவரின் வலிமையிலிருந்து மற்றவர் அனுபவங்களைப் பெறுபவர்களாக மாறவேண்டும். மனித உடலில் இருக்கும் சகல உயர் உறுப்புக்களும் ஊன்ம ஆக்க மாறுபாட்டின் ( மெற்றாபோலிசம் ) ஊடாக தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும் ; அல்லாவிட்டால், உயிர்வாழ்வு முடிவுக்கு வந்துவிடும்.நாகரிகங்களைப் பொறுத்தவரையிலும் கூட அதுவே உண்மை.நீண்டகால தனிமைப்பாடு ஒரு நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்கிற அதேவேளை, பரிமாற்றங்களும் பரஸ்பர கற்றலும் அதன் வளர்ச்சியை நீடித்திருக்கச் செய்யும் " என்று சி ஜின்பிங் விளக்கமளித்தார்.
இந்திய அக்கறை காட்டாதது ஏன் ?
இருக்குவேதத்தையும் கங்கை மற்றும் இந்துஸ் நதிகளையும் குறிப்பிட்டுக் கூறிய சீன ஜனாதிபதி ஆசிய நாகரிகங்களின் செழிப்புக்கு இந்தியா வழங்கியிருக்கும் பங்களிப்புகளுக்கு அவர்தனது பேச்சில் வழங்கிய விசேட மதிப்பு ஒரு இந்தியன் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக உலகிற்கு பௌத்தம் என்ற விலைமதிப்பற்ற பரிசை இந்தியா தந்ததை அவர் குறிப்பாக சொன்னார். ஆனால், மீண்டும் ஒரு இந்தியன் என்ற வகையில் நான் கவலைப்படவேண்டியும் இருந்தது ; ஆசியாவுக்குள்ளும் உலகம் பூராவும் நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்காக சீனா ஆற்றலுடனும் மனவுறுதியுடனும் குரல் கொடுக்கும்போது வளமுடையதும் மிகவும் பழமையானதுமான நாகரிகங்களில் ஒன்றை மரபுரிமையாகப் பெற்ற இந்தியா அரசாங்க மட்டத்தில் ஏன் செயலற்று இருந்தது? இந்தியா ஏன் பெய்ஜிங் மகாநாட்டுக்கு உத்தியோகபூர்வ தூதுக்குழுவொன்றை அனுப்பிவைக்கவில்லை?
அத்தகைய தூதுக்குழுவொன்றை அனுப்பியிருந்தால், இந்திய -- சீன நாகரிகங்களின் ஒருமைப்பாடு பற்றிய ஒரு வர்ணனையை -- விளக்கத்தை பெய்ஜிங் மகாநாட்டில் முன்வைத்திருக்கமுடியும். அந்த ஒருமைப்பாட்டை ( தனது சொந்த நாட்டில் போன்று சீனாவிலும் மிகவும் உயர்வாக மதிக்கப்படுகின்ற ) இரவீந்திரநாத் தாகூர் கவிதையாக பின்வருமாறு கூறினார் ; " சீன தேசத்துக்கு ஒரு தடவை நான் சென்றபோது, நான் என்றுமே சந்தித்திருக்காதவர்கள் எனது நெற்றியில் நட்புறவின் திலகத்தை வைத்தார்கள்.என்னை தங்களுக்குச் சொந்தமானவனாக அழைத்தனர் ".
( சுதீந்திர குல்கர்னி முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஒரு உதவியாளர். ஒரு புதிய தெற்காசியாவுக்கான மன்றத்தின் தாபகர்.)
( இந்து )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM