ஹட்டன் நகரின் மத்தியில் அமைந்துள்ள டன்பார் விளையாட்டு மைதானத்திற்கு அப்பெயர் வரக்காரணம் அது டன்பார் தோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தமையாகும்.
1957 களுக்குப் பின்னர் டன்பார் தோட்டத்தின் ஒரு பகுதி பண்டாரநாயக்க டவுண் என்ற பெயரில் குடியிருப்பாக மாறியது. அச்சந்தர்ப்பத்திலேயே இவ்விடத்தில் மைதானம் அமையப்பெற்றது. நகரசபையின் தலைவராக விளங்கிய அந்தனி பாயோவின் காலத்தில் ஓ. டொன் வில்பிரட் மைதானம் என இது பெயர் பெற்றது. ஓ.டொன் வில்பிரட் என்பவர் நீண்ட காலமாக ஹட்டன் – டிக்கோயா நகரசபைத் தலைவராக விளங்கியவர்.
ஹட்டன்- – டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின் தொகை சராசரியாக 28 ஆயிரமாகும். இத்தொகையில் 65 வீதமானோர் தமிழர்களாவர். 30 வீதமானோர் சிங்களவர்கள். மிகுதியானோர் முஸ்லிம்கள். இப்பிரதேசத்தில் அமைந்துள்ள சகல பாடசாலைகளும் தமது விளையாட்டுப்போட்டி இறுதி நிகழ்வை இம்மைதானத்திலேயே நடத்தி வருகின்றன.
மட்டுமன்றி, இப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 40 விளையாட்டுக் கழகங்களின் உதைபந்தாட்ட மற்றும் கிரிக்கெட் போட்டித்தொடர்கள் இங்கேயே இடம்பெறுகின்றன. குறித்த கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மட்டுமல்லாது இப்பிரதேச மக்கள், மாணவர்கள் அதிகாலைவேளையில் இம்மைதானத்திலேயே உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவை நீண்ட காலமாக இடம்பெற்று வரும் நிகழ்வுகளாகும்.
எனினும் அண்மைக்காலமாக இவ் விளையாட்டு மைதானத்தில் பிரமுகர்களின் தகனக்கிரியைகள் இடம்பெற்று வருவது இப்பகுதி மக்களிடையே வெறுப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக அரசியல் பிரமுகர்கள் கட்சி ரீதியான போட்டா போட்டியில் இவ்வாறு மாறி மாறி செயற்படுவது குறித்து கட்சி தொழிற்சங்க பேதங்களுக்கப்பால் ஹட்டன் வாழ் மக்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விளையாட்டு மைதானம் ஒன்றில் இறுதிக்கிரியைகள் அல்லது தகனக்கிரியைகள் இடம்பெறுவது சரியா? இதற்கு அட்டன் டிக்கோயா நகரசபை அனுமதி வழங்குகிறதா? எதிர்காலத்தில் இவ்வாறு இடம்பெறுவதற்கு அனுமதி வழங்கப்படுமா போன்ற வினாக்களை 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் நாம் கேள்விகளை எழுப்பியிருந்தோம். அதற்கு நகரசபையால் வழங்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
நகரசபையின் பதில்கள்
1)இம்மைதானம் அட்டன் –டிக்கோயா நகரசபைக்கு சொந்தமானதாகும்.
2)இறுதிச் சடங்குகளை இம்மைதானத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் நகர சபைக்கு உள்ளது.
3) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஆரியதிலக்கவின் தகனக்கிரியை இம்மைதானத்தில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்டது.
4)இதுவரை 5 தகனக்கிரியைகள் இம்மைதானத்தில் இடம்பெற்றுள்ளன.
5) இம்மைதானத்தில் சாதாரண மக்கள் தகனக்கிரியைகளை மேற்கொள்ள தடைகள் காணப்படுகின்றன.
6) எதிர்காலத்தில் இம்மைதானத்தில் தகனக்கிரியைகள் மேற்கொள்வதற்கு நகரசபை அனுமதி வழங்காது.
தகனக்கிரியை வரலாறு
முதன்முதலாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஆரியதிலக்கவின் பூதவுடல் இம்மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அதற்கடுத்து பௌத்த பிக்கு ஒருவர், அமரர்களான மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ராஜு, அட்டன் பிரபல வர்த்தகர் டி.கே.வீரதுங்க, மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.அருள்சாமி மற்றும் சிங் பொன்னையா ஆகிய 6 பேரின் பூதவுடல்கள் இங்கு தகனம் செய்யப்பட்டன.
இவ்வாறு ஒரு இறுதிக் கிரியை இம்மைதானத்தில் இடம்பெற்றால் சுமார் ஒரு வார காலத்திற்கு மைதானம் மூடப்பட்டிருக்கும். எவரும் உள் நுழைய முடியாது. இறுதியாக இடம்பெற்ற கிரியைகளின் போது உள்ளூர் மட்டத்திலான உதைப்பந்தாட்ட போட்டித்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அப்போட்டித்தொடரும் இடை நிறுத்தப்பட்டதையடுத்து குறித்த கழகங்களைச்சேர்ந்தவர்கள் இச்சம்பவத்துக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு முயற்சி செய்த போதிலும் நாட்டின் சூழ்நிலைகள் காரணமாக அது கைவிடப்பட்டது.
மைதானத்தை சுற்றி வர அதிகமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இவ்வாறு மைதானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும் போது குடியிருப்புகளில் உள்ளவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது.
புனரமைக்கப்பட்ட மைதானம்
டன்பார் மைதானம் 2008 ஆம் ஆண்டு மீள் புனரமைப்பு செய்யப்பட்டது. அப்போதைய இளைஞர் வலுவூட்டல் அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் அமைச்சின் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாவை இம்மைதான புனரமைப்புக்கு ஒதுக்கினார். மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இழுபறியாகிக்கொண்டிருந்த வேளை அப்போதைய நகரசபைத்தலைவராக பொறுப்பேற்ற டாக்டர் அழகமுத்து நந்தகுமார் பழைய ஒப்பந்தக்காரரை இடைநிறுத்தி புதிதாக பணிகளை ஆரம்பித்தார். இதற்கெதிராக வழக்கும் தொடரப்பட்டு இறுதியில் நகரசபையே வழக்கில் வென்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய புற்றரைகள் அமைக்கப்பட்டன. பார்வையாளர்கள் அமரும் புதிய கட்டிடம் மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கான தனி கட்டிடங்களும் மைதானத்தை சுற்றி வேலிகளும் அமைக்கப்பட்டன. இம்மைதான திறப்பு விழாவின் போது உரையாற்றியிருந்த ஆறுமுகன் இம்மைதானம் இப்பிரதேச மக்களின் ,மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படல் வேண்டும். இங்கு ஹெலிகொகப்டர் இறங்குவதற்குக்கூட அனுமதியில்லை என்று உறுதியாகக் கூறியிருந்தார். ஆனால் அதன் படி இங்கு எதுவுமே நடக்கவில்லை என்பது கண்கூடு.
தகனக்கிரியைகள் மைதானத்தில் இடம்பெறுவதற்கு என்ன காரணம்?
ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உரித்தான பொது மயானம் குடா ஒயா பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சடலங்களை புதைக்க மட்டுமே முடியும். தகனக்கிரியைகள் செய்வதற்கான மின் மயான வசதிகள் இங்கில்லை. டிக்கோயாவிலிருந்தும் நல்லடக்கம் செய்ய குடா ஓயா பகுதிக்கே வரவேண்டியுள்ளது.
தகனக்கிரியைகள் செய்ய வேண்டுமானால் கொட்டகலை கொமர்ஷல் மின்மயானத்திற்குச் செல்ல வேண்டும். அது கொட்டகலை பிரதேச சபைக்கு உரித்தானது. குறித்த பிரதேச சபைக்கு வெளியே உள்ளவர்களுக்கு கூடுதல் தொகையே அறவிடப்படுகின்றது.
ஆகவே ஹட்டன் டிக்கோயா நகரசபையானது அதன் எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியில் அல்லது குடா ஓயா பொது மயானத்தின் ஓரிடத்திலாவது மின்மயான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் கொட்டகலை பிரதேச சபைக்கு உரித்தான ரொசிட்டா மைதானத்தில் இவ்வாறு தகனக்கிரியைகள் இடம்பெறுவதில்லை.
இடம்பெறாது என்று உறுதியாக கூறமுடியாது
தகவல் அறியும் சட்டமூலத்தின் படி எதிர்காலத்தில் இவ்வாறு தகனக்கிரியைகள் இடம்பெறுவதற்கு நகரசபை அனுமதி வழங்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என்றே பதில் தரப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பான பிரேரணை ஒன்று சபையால் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக அனைத்து உறுப்பினர்களாலும் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
மட்டுமன்றி இறுதிச்சடங்குகள் பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கு நகர சபைக்கு அதிகாரங்கள் உள்ளதாகவும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போதைய சபையால் தீர்மானங்கள் எதுவும் கொண்டு வரப்பட்டாலும் புதிதாக ஆட்சியமைக்கும் சபை தகனக்கிரியைகளை நடத்தலாம் என்ற தீர்மானத்தை கொண்டு வருவதற்கு அதிகாரங்கள் உள்ளன.
இதில் அரசியல் தலையீடுகள் இல்லாமலில்லை. அந்த கட்சி பிரமுகருக்கு இடமளித்தால் எமக்கும் ஏன் முடியாது என்ற தர்க்க ரீதியான பிரச்சினைகள் இதனால் ஏற்பட்டுள்ளன. இதை ஒரு சமூக ரீதியான பிரச்சினையாகவே பார்க்கப்படல் வேண்டும்.
அரசியல் தொழிற்சங்க பேதங்களுக்கப்பால் நகர வர்த்தகர்கள் ,பொது மக்கள் , மத ஸ்தாபனங்கள்,பொலிஸார் , சிவில் சமூகத்தினரிடம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அனைத்துத்தரப்பினரிடமும் கருத்துக்களைப்பெற்றே அதன் பிறகு இதற்கு ஒரு தீர்மானம் எடுக்கப்படல் வேண்டும் என்ற கருத்தே தற்போது ஓங்கி ஒலிக்கின்றது. ஆனாலும் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் விளையாட்டு மைதானத்தை மயானமாக மாற்றக்கூடாது என்றே நிலைப்பாட்டிலேயே அட்டன் நகரவாழ் மக்கள் பெரும்பாலோனோர் இருக்கின்றனர்.
சிவலிங்கம் சிவகுமாரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM