இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர், சுற்றுலாத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. இவற்றை மீள் கட்டமைப்பதற்கும் வெளிநாடுகளின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் அரசாங் கம் பலதரப்பட்ட செயற்திட்டங்களை வேகமாக முன்னெடுக்கவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை பிரதிநிதியாக நியமனம் பெற்றுள்ள கிரேஸ் ஆசிர்வாதம் தெரிவித்தார்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலமாக தமிழ்ப் பெண்ணாய் வெளிநாட்டு சேவைத்துறையில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து வருபவரும், ஆசியாவை பிரதிநிதித்துவம் செய்து இரசாயன ஒழிப்பு நிறுவனத்தில் (Organization for the Prohibition of Chemical Weapons-OPCW) 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை துணை இயக்குநராக பணியாற்றி தற்போது பெல்ஜியம், லக் ஷம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு பதவிகளை பொறுப்பேற்கவுள்ள திருமதி கிரேஸ் ஆசிர்வாதம் வீரகேசரி வாரவெளியீட்டிற்கு வழங்கிய விசேட செவ்வி.
கேள்வி : உங்களுடைய இராஜதந்திர சேவை அனுபவங்கள் பற்றி ?
பதில் : நான் 1988 ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் சேவையை எனது முக்கிய தொழிலாக ஏற்றுக்கொண்டேன். அந்த நாள் முதற் கொண்டு இன்றுவரை இராஜதந்திர சேவையில் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றேன்.
துணைப்பணிப்பாளராக இருந்த காலப்பகுதியில் 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஈராக், குவைத் யுத்தத்தின்போது கூடுதலாக மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அங்கே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை இலங்கைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காகவும் மிகவும் தீவிரமாக பணியாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது தான் எனது வெளிநாட்டு சேவையில் எனக்கு கிடைத்த முக்கியமான ஓர் அனுபவம். அதன் பிறகு நான் பாகிஸ்தானில் இரண்டாவது செயலாளராக பணியாற்றினேன். பின்னர் இலங்கை வந்து வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றிய பின்னர் ஜேர்மன் துணை தூதுவராக நான் கடமையாற்றினேன். அதற்கு பின்னர் முதல் தூதுவராக பொன் (ஜேர்மன்) நகரத்தில் நியமித்தார்கள்
தூதுவராக இருக்கும்போது 1998 ஆம் ஆண்டு கட்டத்தில் இலங்கையில் யுத்தம் மிகவும் உக்கிரமாக இருந்தது. அச்சமயத்தில் மேலைத்தேய நாடுகளில் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கஷ்டமான நிலையில் நாங்கள் இருந்தோம். எவ்வாறாயினும் இராஜதந்திரிகளாகவும் தூதுவராகவும் ஏனைய நாடுகளில் வேலை செய்பவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தேவையான உதவிகளை சர்வதேச மட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இருந்தது.
பின்னர் இலங்கையின் தூதுவராக நேபாள நாட்டிற்குச் சென்றேன். இலங்கைக்கும் நேபாள் நாட்டிற்கும் உறவை மேம்படுத்துவதற்காக சேவை செய்ததை அடுத்து எனக்கு தேசபந்து என்ற கௌரவத்தை அளித்தார்கள். அதன் பின்னர் இலங்கை வந்து சார்க் நாடுகளுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் பணிப்பாளர் நாயகமாக இரண்டு வருடகாலம் சேவையாற்றினேன். அந்த காலகட்டத்தில் நாங்கள் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். அதன் பின்னர் உடனடியாக என்னை நெதர்லாந்திற்கு தூதுவராக நியமித்து 3 வருடகாலம் முடிவடைவதற்கு முன்னர் இரசாயன ஆயுதங்களை ஒழிப்பதற்கான நிறுவனத்தில் என்னை இரண்டாவது நிலையில் துணைப்பணிப்பாளர் நாயகமாக நியமித்தனர். அதன் பிறகு இலங்கை வந்து வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றினேன்.
2017 தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை நான் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளராக பணியாற்றினேன். தற்போது ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியத்திற்கும் லக் ஷம்பேர்க்கிற்குமான இலங்கை தூதுவராக என்னை நியமித்துள்ளார்கள்.
கேள்வி : அண்மைக்காலமாக இலங்கையின் இராஜதந்திர நகர்வுகள் எவ்வாறுள்ளன?
பதில் : 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் எங்களுடைய பணியானது பொருளாதாரத்தை விட சமூகத்தின் பக்கம் வலுவாக பார்க்கப்பட்டது.இப்பொழுதும் எமக்கு வழங்கப்படும் அறிவுரைகள் முழுவதும் எவ்வாறு நாம் பொருளாதார துறையை மேம்படுத்த ஏனைய உதவிகளையும் அனுசரணைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் அமைந்துள்ளன. இலங்கை மட்டுமல்ல அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட பொருளாதார விருத்தி சம்பந்தமான செயற்பாடுகளில் தான் ஈடுபடுகின்றன. இலங்கை மற்றும் மற்றைய நாடுகளின் தூதுவராலயங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியமான இராஜதந்திர பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
கேள்வி : இதற்கு முன் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து மேற்கொண்ட சேவையில் மிகவும் முக்கியமானதென நீங்கள் கருதுவது?
பதில்: எங்களுடன் உறவை பேணும் நாடுகளுடன் நாம் எப்போதும் பொறுப்புடன் செய்து முடிக்க வேண்டிய பணிகள் பல உள்ளன. அந்த வகையில் நாடுகளுக்கிடையே இருக்கும் உறவை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு சொல்லவேண்டியது எமது கடமையாகும்.
எனது 31 வருட இராஜதந்திர சேவையில் மிகவும் முக்கியமானதென நான் கருதுவது, 2008 ஆம் ஆண்டு நெதர்லாந்திற்கான தூதுவராக இருக்கும் சமயம் இலங்கையின் உள்நாட்டு யுத்தமானது உச்சகட்ட நிலையை அடைந்திருந்தது. இந்நிலையில் அக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களால் எமக்கும், தூதரகத்திற்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாகவே விடுக்கப்பட்டன. இரண்டு முறை தூதரகம் தாக்கப்பட்டு இலங்கைக்கு எதிரான பிரசாரமொன்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நாம் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, இலங்கை மீது ஏற்படுத்தப்பட்ட எதிர்மறையான பார்வையை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அக்காலகட்டத்தில் இலங்கையானது மேலைத்தேய நாடுகளின் ஆதரவையும், பொருளாதார உதவியையும் பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், நாட்டின் உண்மை நிலைவரங்களை ஓரளவு புரியவைத்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.
கேள்வி : இராஜதந்திர சேவையில் உங்களின் வேலைப்பளு அதிகமாக இருக்கும் போது குடும்பத்தினருடன் செலவளிக்கும் நேரம் குறைவாக இருந்திருக்குமே?
பதில்: பெண்கள் என்றவகையில் அதிக சமுதாய பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கூடியவர்களாவாகவே நாம் இருக்கின்றோம். இலங்கையின் வெளிநாட்டுத்துறை சேவையில் 52 வீதம் பெண்கள்தான் பணிபுரிகின்றார்கள். இதில் என்ன பிரச்சினை என்றால் பெண்கள் எல்லாதுறைகளிலும் பங்களிப்பு செய்யக்கூடிய திறமை மிக்கவர்களாக இருக்கின்றனர். ஆனால் பிள்ளைப்பேறு, குடும்பம் என்று வரும்போது சமூக விதிப்படி எங்களிடமிருந்து தனிப்பட்ட எதிர்பார்ப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இதைத்தான் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டை தாண்டி விட்டோம்.பெண்கள் தற்போது எந்த துறையிலும் எவ்வகையான உயர்பதவியிலும் இருக்கலாம், இலங்கை முதலாவது பெண் பிரதமரை, இரண்டுமுறை பெண் ஜனாதிபதியை உருவாக்கிய நாடாக இருக்கின்றது. அந்தவகையில் நாம் பெண்ணிய சுதந்திரத்தை அனுபவிக்க தவறவில்லை. அதே போன்று தாய், மனைவி என்ற ஸ்தானத்தில் தேவையான அன்பையும் பாசத்தையும் கொடுக்கவேண்டியது எமது கடமையாகும். என்னைப்பொறுத்தமட்டில் எனது 2 குழந்தைகளுக்கான நேரத்தை சரியாக செலவழித்துள்ளேன், 24 மணிநேரமும் தொழிற்படவேண்டிய கடமையையும் தடை இன்றி முன்னெடுத்திருக்கின்றேன். இவை யாவும் நாம் எவ்வாறு எமது நேரத்தை பிரித்து திட்டமிட்ட ரீதியில் செயற்படுகின்றோம் என்பதிலேயே உள்ளன.
கேள்வி : மலையகத்தின் பண்டாரவளையில் பிறந்து வளர்ந்தவர்கள் நீங்கள். அங்கிருந்து தற்போது ஐரோப்பிய ஒன்றியம் வரையிலான உங்களது பயணத்தைப்பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: பண்டாரவளை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து பண்டாரவளை சென் ஜோசப் கல்லூரியில் எனது உயர்தரத்தை முடித்து யாழ்.பல்கலைக்கழகத்தில் 1982ஆம் ஆண்டு மிகவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் எனது இளமாணி கல்வியை தொடர்ந்தேன், அதன் பிறகு கொழும்பு பல்கலைக் கழகத்தில் முதுமாணி பட்டப்படிப்பை துறைசார் நிபுணத்துவம் மிக்கதாக பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. தற்போது நான் உணர்வது கஷ்டமான காலத்தில் படித்திருந்தாலும் என்னோடு படித்த யாவரும் ஏதோ ஒரு அரச துறை உத்தியோகத்தர்களாக இருக்கின்றனர். கடினத்தை பொருட்படுத்தாமல் படித்ததன் பயனே இந்த முன்னேற்றம்.
கேள்வி: இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
பதில் : இலங்கையில் ஏற்பட்டுவரும் உள்நாட்டு விடயங்கள் நேரடியாக ஐரோப்பிய ஒன்றியத்தை பாதிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தோடு, இலங்கைக்கு உள்ள உறவுகளின் அடிப்படையில் தற்போது விசேட வர்த்தக சலுகைகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சலுகைகளை பெறுவதற்கு இயலுமானவரையில் இலங்கையின் இறையாண்மையை பாதிக்காத வகையில் இலங்கை மக்களுக்கு என்ன தேவையோ அதற்கேற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திட்டமிடல்களுடனான அறிவுரைகளை ஏற்று செயற்பட்டு வருகின்றோம்.
கேள்வி: கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் சம்பவம் குறித்த உங்களின் பார்வை எவ்வாறுள்ளது?
பதில் : இலங்கையில் நாம் எப்போதும் ஒரு சமாதானம் மிக்க சமுதாயத்தை உருவாக்கி பேணவே நாம் தொழிற்பட்டு கொண்டிருக்கின்றோம்.
அவ்வாறான நிலையில் அண்மையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவமானது ஒரு சமுதாயத்தில் உள்ள உணர்வை பிரதிபலிப்பதன்று, இது ஒரு சில நபர்களால் நடத்தப்பட்டதாகும், ஆகையால் பலர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நபர்கள் சார்ந்த சமூகங்கள் பாதிப்படையும் நிலைமைகள் ஏற்படுத்த கூடாதவையாகும்.
எங்களுடைய கண்ணோட்டத்தில் எதை செய்ய தவறினோம், எவ்வாறான காரணிகள் அவர்களை தூண்டின என்பது பற்றி ஒவ்வொன்றாக ஆராயவேண்டும். அத்தோடு, நாட்டின் அடுத்தகட்ட பாதுகாப்பு தொடர்பான விடயங்களை கவனம் கொள்ள வேண்டும். இது ஒரேநாளில் சிறு கும்பலால் செய்யப்பட்ட தாக்குதல் அல்ல, ஆன்மிக ரீதியாக மேற்கொண்ட தாக்குதலாக கூறினாலும் நாம் அவ்வாறு பார்க்கவில்லை. எங்களுடைய கடமைகளை சரிவர செய்யாமையே இவ்வாறான தாக்குதல் இடம்பெற வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலத்திலாவது இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கேள்விஇந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னரான காலப்பகுதிகளில், இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதே ?
பதில் : இந்த தாக்குதல் சம்பவம் உயிரிழப்புகளையும் தாண்டி தேசிய பொருளாதாரத்தை பாதித்துள்ளது. சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இச்சூழல் உருவாக பிரதான காரணம் நாட்டில் பாதுகாப்பு பற்றாக்குறை இருப்பதாக வெளிநாட்டவர்கள் உணர்ந்தமையாகும். முதலில் இந்த எண்ணவோட்டத்தை மாற்றியமைக்கும் வரையில் இந்த பின்னடைவு நிலை தொடரும்.
இலங்கை மட்டுமன்றி, மேலைத்தேய நாடுகளிலும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலை இலங்கை மட்டு மல்லாது, வேறு எந்தவொரு அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில் இடம்பெற்றிருந்தாலும் இதே நிலைமைதான், காரணம் நாம் பொருளாதாரத்தை மேம்படுத்த மற்றைய நாடுகளை சார்ந்துள்ளவர்களாக இருக்கின்றோம். ஆகவே, சுற்றுலாத்துறையை மீள்கட்டமைக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இவை சாத்தியப்படக்கூடிய விடயங்களாகும்.
அந்தவகையில் அண்மையில் பதவியேற்றுள்ள 14 தூதுவர்களும் இனிமேல் இவ்வாறானதொரு தாக்குதல் சம்பவம் இலங்கையில் இடம்பெறாது என வெளிநாடுகளுக்கு உறுதியளிக்கவேண்டிய கடப்பாட்டிலுள்ளோம். இதனை வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்து சுற்றுலாத்துறையை முன்பிருந்த நிலையிலிருந்து மென்மேலும் முன்னேற்ற அரசாங்கமானது பல்வேறுபட்ட செயற்திட்டங்களை வேகமாக முன்னெடுத்து செல்லவேண்டியுள்ளது.
நேர்காணல்: செ. லோகேஸ்வரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM