பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தந்த முதலாவது வெளிநாட்டு அரச தலைவர் என்ற ரீதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இலங்கைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. ஆனால், இந்த முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின்போது தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய விடயம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முக்கியத்துவப்படுத் தும் முகமாக சம்பிரதாயபூர்வமாக மரக்கன்று ஒன்று இந்தியப் பிரதமரால் ஜனாதிபதி மாளிகையில் நாட்டி வைக்கப்பட்டது.
அந்த மரக்கன்றின் பெயர் மற்றும் அது தொடர்பான விபரங்கள் அடங்கிய பெய ர்ப் பலகை ஒன்றும் நாட்டி வைக்கப்பட்ட மரக்கன்றுக்கு அருகில் வைக்கப்பட்டது. ஆனால் அந்த பெயர்ப் பலகையில் ஆங்கி லம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழி களில் மாத்திரமே குறிப்பு எழுதப்பட்டுள் ளது. தமிழ்மொழி இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தின் அவசி யம் தொடர்பான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையில், இவ்வாறு மிக முக்கிய விடயத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக, இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது இந்த விடயம் இடம்பெற்றுள்ளமை கவலைக்குரியதாகும்.
இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகள் அரச கரும மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அரசியலமைப்பில் இந்த இரண்டு மொழிகளும் அரச கரும மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. ஆனால் இணைப்பு மொழியொன்றுக்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் அரச கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்மொழிக்கு வழங்கப்படவில்லை. இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?
அரசியலமைப்பிற்குள் உள்ளடக்கப்பட்டு, அரச கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்கென ஒரு அமைச் சும் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொழி அமுலாக்கத்துக்காக அரச கரும மொழிகள் திணைக்களமும் அமைக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்விரண்டும் இருந்தும் தமிழ்மொழி தெரிந்தே புறக்கணிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகின்றது. கடந்த காலங்களில் அரச கரும மொழிகள் அமைச்சு பெரும்பான்மை அமைச்சர்களின் பொறுப்பிலிருந்தது. அவர்களுக்கு தமது மொழியை அமுலாக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. காரணம் இலங்கையில் சிங்கள மொழி என்றும் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால், தற்போது தமிழ்ப் பேசும் அமைச்சர் ஒருவரின் கீழ் அரச கரும மொழிகள் தொடர்பான பொறுப்பு உள்ளடங்குவதோடு, அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவராக தமிழ்ப் பேராசிரியர் ஒருவரும் பணியாற்றுகிறார். இந்த நிலையிலேயே இந்த புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் வினவிய போது, அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு தொடர்பான பெயர்ப் பலகையில் இவ்வாறு தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது தவறானதொரு விடயமாகும். இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
எனவே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறும், உடனடியாக அந்த பெயர்ப் பலகையில் தமிழ்மொழியிலும் குறிப்பு எழுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அரச கரும மொழிகள் அமைச்சினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு பதில் கடிதம் எதுவும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.
எதிர்வரும் நாட்களில் இது தொடர்பாக ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேற்குறிப்பிட்ட அந்த பெயர்ப் பலகையில் மாத்திரமல்ல, ஜனாதிபதி மாளிகையோ செயலகமோ அல்லது ஏனைய திணைக்களங்களோ எதுவாக இருந்தாலும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழி கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரத்திடம் வினவிய போது,
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவர் என்ற ரீதியில் இதற்கு எமது கடும் எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் மாத்திரமல்ல, இதே போன்று பல சந்தர்ப்பங்களிலும் அரச கரும மொழிக் கொள்கை மீறப்பட்டுள்ளது.
இவை தெரியாமல் இழைக்கப்பட்ட தவறு என்று யாரும் காரணம் கூற முடியாது. நாடளாவிய ரீதியிலுள்ள சகல திணைக்களங்கள், நிறுவனங்களுக்கும் இவ்விடயம் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதனை நடைமுறைப்படுத்தும் அதிகார வர்க்கத்தினர் தான் அக்கறையற்று செயற்படுகின்றனர்.பெரும்பாலானவர்கள் பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்கின்றமையே இதற்கான காரணமாகும் என்று நான் கருதுகின்றேன்.
இன்று நாட்டில் ஏற்படுகின்ற இனப்பிரச்சினைக்கு 'மொழி' பிரதான காரணமாக இருக்கின்றது. வெவ்வேறு மொழி பேசுபவர்களில் சிலர் ஏனைய மொழிகளை மதிப்பதோ, அதில் அக்கறை செலுத்துவதோ இல்லை. சிலர் தெரிந்தே தமிழ்மொழியை புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு மொழி தொடர்பான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களின் அக்கறையின்மையே தமிழ்மொழி புறக்கணிப்பிற்கு பிரதான காரணமாகும். நாடளாவிய ரீதியில் இது போன்று பல இலட்சக்கணக்கான பெயர்ப் பலகைகள் உள்ளன. அவற்றில் தமிழ்மொழி பிழையாக எழுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் அரச கரும மொழிகள் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கான நடவடிக்கைகளும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் பெரும்பான்மை மொழியான சிங்கள மொழி கூட சில இடங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. அண்மையில் சீன அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டமொன்று தொடர்பாக எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகை தொடர்பிலும் இதே போன்றதொரு பிரச்சினை ஏற்பட்டது. அதன் போது நாம் நேரடியாகச் சென்று சீன தூதுவரை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தியிருந்தோம். இனி இது போன்ற தவறுகள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார். எனவே இவ்வாறு ஏற்படும் மொழி பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து பொது மக் களும் அக்கறையுடன் செயற்பட வேண்டும். முழுமையாக தமிழ்மொழியை அமு லாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடு படுவோம் என்றார்.
எப்படியிருப்பினும், இந்தியப் பிரதமரின் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின்போது இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் இந்த புறக் கணிப்பு இடம்பெற்றுள்ளது. இது தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நல்லிணக்கமும் தேசிய ஒற்றுமையும் பலப்படுத்தப்படவேண்டிய தற்போதைய தீர்க்கமான காலகட்டத்தில் இதுபோன்ற புறக்கணிப்புகள் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளன என்பதே யதார்த்தமாகும். எனவே சம்பந்தப்பட்ட வர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தவேண்டும்.
- எம்.மனோசித்ரா -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM