தெஹ்ரான், ( சின்ஹுவா ) ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அண்மையில் ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமிய குடியரசுக்கு விஜயம் செய்திருக்கும் முதல் ஜப்பானிய பிரதமர் அபேயே ஆவார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் தீவிரமடைந்துவரும் பதற்றநிலை பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் நாடுகளை கவலையடைய வைத்திருக்கும் சூழ்நிவைக்கு மத்தியில் ஜப்பானிய பிரதமரின் அரிதான இந்த விஜயம் தெஹாரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
பிராந்தியத்தில் டோக்கியோவின் நலன்களைப் பாதுகாப்பதும் எல்லாவற்றுக்கும் அப்பால் பிராந்தியத்தில் இருந்து எரிபொருள் இறக்குமதியைப் பாதுகாப்பதுமே ஜப்பானின் இந்த இராஜதந்திர நகர்வுக்குப் பின்னால் உள்ள தூண்டுதலாகும். ஈரானின் அதியுயர் மதத்தலைவர் அயத்தொல்லா அலி காமெனியுடன் அபே கடந்த வியாழக்கிழமை நடத்திய சந்திப்பே அவரது ஈரானிய விஜயத்தின் மிகவும் முக்கியமான பகுதியாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமிருந்து ஒரு செய்தியை அபே கொண்டுவந்தார்.ஆனால், ஈரானிய தலைவர் அதை அலட்சியம் செய்துவிட்டார்.
அமெரிக்காவை தான் நம்பவில்லை என்றும் ஈரானிடமிருந்து செய்தியையோ அல்லது பதிலையோ பெறுவதற்கான ' பெறுமதியை ' கொண்டவராக அமெரிக்க ஜனாதிபதியைக் கருதவில்லை என்றும் காமெனி கூறினார்.கடந்த புதன்கிழமை ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரோஹானியை அபே சந்தித்த வேளையிலும் அதே அமெரிக்க விரோத உணர்வே வெளிப்படுத்தப்பட்டது.
" ஒட்டுமொத்தத்தில் ஈரானிய தலைவர்களுடனான அபேயின் சந்திப்புகள் நேர்மறையானவையாக கருதப்படுகின்றன.அவை இராஜதந்திரத்துக்கான சாத்தியத்தை திறந்துவைத்திருப்பதாக பல்வேறு காரணங்களுக்காக கூறமுடியும் " என்று ரொறண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஈரானிய அரசியல் விஞ்ஞான அறிஞர் அலிரெசா நம்வார் ஹக்ஹிஹி கூறினார். ஈரானுக்கான அபேயின் விஜயத்துக்கு தெஹரான் இணங்கிக்கொண்டமையும் ட்ரம்பிடமிருந்துசெய்தியை அவர் கொண்டுவந்தமையும் அமெரிக்காவுடன் மறைமுகமான பேச்சுவார்த்தைகளில் இறங்குவதற்கு ஈரான் இணங்கியிருக்கின்றது என்றே அர்த்தப்படும் என்றும் நம்வார் ஹக்ஹிஹி தெரிவித்தார்.
பத்து மாதங்களுக்கு முன்னர் ஈரானுக்கு விஜயம் செய்வதற்கு அபே திட்டமிட்டிருந்தார்.ஆனால், அந்த நேரத்தில் அவரின் நிகழ்ச்சி நிரலில் ஈரானிய அதியுயர் தலைவருடனான சந்திப்பு உள்ளடக்கப்படவில்லை.எனவே அவரின் அந்த விஜயம் ரத்துச் செய்யப்பட்டது. இப்போது அதியுயர் தலைவருடன் அவர் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அது அனுகூலமான விளைவைக்கொண்டிருக்கிறது என்றும் அந்த அரசியல் விஞ்ஞான அறிஞர் கூறியிருக்கிறார்.
பதற்றத்தை தணிப்பதற்கான அபேயின் முயற்சிகளை கடந்த வியாழக்கிழமை மெச்சிய காமெனி, " உங்களது அக்கறையையும் நல்லெண்ணத்தையும் நாம் சந்தேகிக்கவில்லை" என்று கூறினார். அத்தகைய கருத்தின் அர்த்தம் ' இந்த நட்புறவும் ஜப்பானின் பாத்திரமும் தொடரமுடியும் ' என்பதேயாகும் நம்வார் ஹக்ஹிஹி கூறினார்.
அணுவாயுதங்களை ஈரான் நிராகரிக்கிறது என்று காமெனி ஜப்பானிய பிரதமரிடம் வலியுறுத்திக்கூறியிருப்பதே இருவருக்கும் இடையிலான சந்திப்பின் மிகவும் முக்கியமான அங்கமாகும். " ஈரான் அணுவாயுதங்களில் நாட்டம் காட்டவில்லை.ஆனால், அணுவாயுதங்களை தயாரிப்பதில் நாம் இறங்கியிருந்தால், அது பற்றி அமெரிக்காவினால் எதையுமே செய்திருக்கமுடியாது " என்று காமெனி அபேயிடம் கூறினார்.அதேபோன்றே அணுவாயுதங்களை தயாரிப்பதற்கோ, வைத்திருப்பதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ ஈரான் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்று காமெனி உறுதியளித்ததாக அவருடனான சந்திப்புக்குப் பிறகு அபே கூறினார்.
அபேயுடன் காமெனி பேசியிருந்தாலும் கூட, ஈரானின்அணுத்திட்டம் பற்றி ஜனாதிபதி ட்ரம்புக்கு ஒரு " செய்தியை " அவர் அனுப்பியிருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன்.அணு விவகாரம் குறித்து மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ட்ரம்ப் விரும்பினால், தங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்பதும் போதுமான உத்தரவாதங்களை தங்களால் வழங்கமுடியும் என்பதும் காமெனியின் கருத்துகள் ஊடாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஹக்ஹிஹி குறிப்பிட்டார்.
அபேயின் இந்த விஜயம் வெற்றிகரமானதாக அமைந்ததோ இல்லையோ என்பதை ஈரானிய அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் அடுத்துவரும் நாட்களில் வெளியிடக்கூடிய கருத்துகள் உணர்த்தும் என்று ஈரானிய விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்த அவர் கூறியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM