உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் பல சர்வதேச நாடுகளையும் இலங்கையின்பால் ஈர்த்துள்ளன. அந்த வகையில் இந்தியா அயல்நாடு என்ற உரிமையோடு இலங்கை விவகாரங்களைக் கையில் எடுக்க முனைந்துள்ளது.
இது இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு வழி சமைப்பதற்கான பிள்ளையார் சுழியாகவே தோன்றுகின்றது.
இந்தத் தொடர் குண்டுத் தாக்குதல்களில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மறைகர நிலைமையே இதற்கு முக்கிய காரணம் என உணரப்படுகின்றது. இந்தியாவின் உள்ளக மற்றும் பிராந்திய நலன் சார்ந்த பாதுகாப்பு நிலைமைகளில் இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது முக்கிய இடத்தை வகிக்கின்றது.
அயல்நாடாகிய பாகிஸ்தானின் ஊடாக இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் தனக்கு ஏற்பட்டிருப்பதாக இந்தியா வெளிப்படையாகவே குற்றம் சுமத்தி வந்திருக்கின்றது. இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் சந்தேக நபர்கள் இந்தியாவில் உள்ள சிலருடன் தொடர்புகளைப் பேணியிருந்ததை இந்தியப் புலனாய்வுத் துறையினர் கண்டறிந்திருக்கின்றனர்.
இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளது என்ற தகவலை பயங்கரவாதிகளின் இலங்கை இந்தியத் தொடர்பு வழிகளின் மூலமாகவே இந்திய புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்து முன்னதாகவே இலங்கையை எச்சரிக்கை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அந்த முன்னெச்சரிக்கையை இலங்கை உரிய முறையில் கவனத்திற் கொள்ளவில்லை. தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு நிலைமைகளில் விழிப்புடன் செயற்பட்டிருக்க வேண்டிய பொறுப்பையும் இலங்கை கோட்டை விட்டிருந்தது. இலங்கையின் தேசிய பாதுகாப்பு நிலைமைகளில் இதனால் பெரிய ஓட்டை விழுந்திருந்தது. இந்தப் பாதுகாப்பு ஓட்டை என்பது சாதாரண விடயமல்ல. இந்தியாவைப் பொறுத்தமட்டில் அது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
முதலாவது வெளிநாட்டு
அரச தலைவர்
இஸ்லாமிய பயங்கரவாத எச்சரிக்கை தொடர்பில் இலங்கை அரசு கவனக்குறைவாக நடந்து கொண்டது இலங்கையுடன் இந்திய அகப் புற பாதுகாப்பையும் பாதிக்க வல்ல ஒரு தவறாகும். பாரதூரமான அந்தத் தவறினால் 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொன்றொழிக்கப்பட்டார்கள். தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் என்பனவும் பெரும் சேதத்திற்கு உள்ளாகின.
பாரிய உயிர் மற்றும் உடைமைச் சேதங்களையும், தேசிய அளவில் உயிர் அச்சுறுத்தல் சார்ந்த உளவியல் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதல்களின் பின்னராவது, தேசிய பாதுகாப்பில் அரசாங்கம் ஒன்றிணைந்த நிலையில் காரியங்களைக் கையாளத் தவறியிருக்கின்றது.
தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்டிருந்த தவறுகள், ஓட்டைகள் என்பவற்றுக்கு உளப்பூர்வமாகப் பொறுப்பேற்று உரிய முறையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அப்பாவிகளான மிதவாத முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தவறியிருக்கின்றது.
நடந்து முடிந்த தவறுகள் தொடர்பிலான உண்மை நிலைமைகளைக் கண்டறிவதிலும் அரச தரப்பில் உரிய பொறுப்புணர்ச்சியைக் காண முடியவில்லை. மாறாக அதிகாரப் போட்டி மனப்பாங்கிலேயே அரச தரப்பின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. நானா, நீயா – யார் பெரியவன் என்ற அதிகாரப் போட்டியே அரச தரப்பின் செயற்பாடுகளில் மேலோங்கிக் காணப்படுகின்றன.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது பிரதமர் பதவியில் இரண்டாவது பருவ காலத்தின் முதலாவது வெளியுறவு நடவடிக்கையாக இலங்கைக்குக் குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து, இலங்கைக்கு விஜயம் செய்து குண்டுத் தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட முதலாவது வெளிநாட்டு அரச தலைவராகவும் அவர் திகழ்கின்றார்.
பதவியேற்பும் இலங்கை
விஜயமும்
அயல்நாடாகிய இலங்கையில் ஒரு பயங்கரவாத அனர்த்தம் நேர்ந்துள்ளதே என்ற அனுதாப உணர்வைப் பின்னணியாகக் கொண்டதாக பிரதமர் நரேந்திரமோடியின் விஜயம் தோற்றினாலும், அந்த விஜயம் சர்வதேச முக்கியத்துவம் உடையது. ஒரு சில மணித்தியாலங்களே நீடித்திருந்தாலும், ஒரு தேர்தலின் பின்னர் பதவியேற்றதும் கையாள வேண்டிய பல தேசிய முக்கியத்துவம் மிக்க பிரச்சினைகள் குவிந்து கிடந்த ஒரு தருணத்திலேயே அவர் மாலைதீவுக்கும், இலங்கைக்குமான குறுகிய கால விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
ஓரிடத்தின் அல்லது ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, அதன் எல்லைப்புறங்களின் பலமான பாதுகாப்பிலேயே அதிகம் தங்கியிருக்கின்றது. அந்த வகையில் இந்தியாவின் பாதுகாப்பு என்பது அதன் ஒரு பக்கத்தில் முக்கியத்துவம் மிக்க எல்லைகளாகிய இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் பாதுகாப்பு வலுவானதாக இருக்க வேண்டியது அவசியம். அத்துடன், அந்த நாடுகள் நட்பு நாடுகளாகவும் நேசத்துக்குரிய நாடுகளாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
இத்தகைய ஒரு நிலைப்பாட்டில், இந்தப் பிராந்தியத்தில் ஓர் உலக பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றுள்ள ஒரு சூழலில் தனது அயல்நாடுகளாகிய மாலைதீவையும், இலங்கையையும், நட்பு நிலையில் பாதுகாப்பு பலமுள்ளதாக வைத்திருக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் இந்தியப் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என கருத முடியும்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரச முறையிலான உறவுகளில் முன்னரிலும் பார்க்க அதிக மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை குறித்துக் காட்டும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்ற வைபவத்தில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வார் என்று இந்தியத் தரப்பிலிருந்தே முதலில் அறிவித்தல் வெளியாகியிருந்தது. அந்த அறிவித்தலுக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த வைபவத்தில் கலந்து கொண்டார்.
அந்த வைபவத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வார் என்ற அறிவித்தலும் இந்தியத் தரப்பில் இருந்தே வெளியாகியிருந்தது. வழமையாக இத்தகைய விஜயங்களுக்கான அழைப்பு சம்பந்தப்பட்ட நாடுகளின் அரச தலைவர்களினாலேயே விடப்படுவது வழக்கம். ஆனால் மோடியின் விஜயத்தின்போது அத்தகைய அழைப்பை இலங்கை விடுத்திருந்ததாகத் தெரியவில்லை.
ஒட்டுமொத்தத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் ஸ்திரமற்று அதிகாரப் போட்டி காரணமாகக் குழம்பியிருக்கின்ற ஒரு நிலைமையை, ஒரு வகையில் தனக்கு சாதகமாக்கிய வகையிலேயே இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது என்று கருதுவதற்கும் இடமுண்டு.
பின்னணி
சர்வதேச பயங்கரவாதிகளின் பின்புலத்தில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக அரசாங்கம் நிலைகுலைந்து போனது. இந்த ஆபத்திலிருந்து மீள்வதற்கு வழிவகை தெரியாத ஒரு தடுமாற்றமான நிலைமையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எற்பட்டிருந்தது. அத்தகைய ஒரு நிலையில்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நோக்கி இலங்கையைக் கைவிட்டுவிடுமாறு அவர் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அதேபோன்று சர்வதேச நாடுகளும் இக்கட்டான அந்த நிலையில் இலங்கையைப் பாதுகாக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வெளியிட்டிருந்தார்.
உண்மையில் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் பின்புலத்திலான பயங்கரவாதத் தொடர் குண்டுத் தாக்குதலை இலங்கை அரசாங்கமோ அல்லது பாதுகாப்புப் படையினரோ எதிர்பார்த்திருக்கவில்லை.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அவர்களை ஆயுத ரீதியாக மௌனிக்கச் செய்ததன் ஊடாக பயங்கரவாதத்தை வெற்றிகொண்டதாகப் பெருமை கொண்ட அரசாங்கம், மீண்டும் தலையெடுத்துவிடும் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி, இல்லாத புலிப்பயங்கரவாதத்தின் மீது குறிவைத்து வடக்கிலும் கிழக்கிலும் பாதுகாப்புப் படையினரை அரசு நிலைகொள்ளச் செய்திருந்தது.
புலிப்பயங்கரவாதத்தை மீண்டும் அனுமதிக்கலாகாது என்ற அரசியல் வயப்பட்ட சிந்தனையிலேயே அரசு தேசிய பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியிருந்தது. ஆனால் உண்மையான பயங்கரவாதத் தாக்குதலாகிய திட்டமிட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது அரசாங்கம் ஆடிப்போனது. அந்தத் தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நடைமுறைகளை செவ்வனே நடைமுறைப்படுத்தாமல், அந்தத் தாக்குதலுக்கான பொறுப்புக்களை ஆளாளுக்குப் பழிசுமத்தி தட்டிக்கழிக்கின்ற போக்கிலேயே அரச தலைமைகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் பல்வேறு காரணங்களை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கான மிகவும் குறுகிய கால விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
நோக்கங்கள்
மாலைதீவுக்கான விஜயத்தின்போது இந்தியாவுடன் பல முக்கிய விடயங்களில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றன. இந்தியத் தரப்பில் பல உதவித் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை, இலங்கையைப் பொறுத்தமட்டில், அரசியல் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகிய விடயங்களில் இந்தியா அதிக கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரங்கேற்றிய சதிமுயற்சியையடுத்து, இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை சீர்குலைந்து போனது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்குவதற்கு அவர் அரசியலமைப்பை மீறி மேற்கொண்ட முயற்சி பிசுபிசுத்துப் போனது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகி, நிலைமைகள் சுமுகமாகிய போதிலும், அரசியல் ஸ்திரமடையவில்லை. ஜனாதிபதிக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் அதிகாரப் போட்டியும், அதனைச் சார்ந்த கசப்புணர்வும் பகிரங்கமாகவே இடம்பெறத் தொடங்கின.
(19ஆம் பக்கம் பார்க்க)
இலங்கை மீதான...
(13ஆம் பக்கத் தொடர்ச்சி)
அக்டோபர் அரசியல் சதியைத் தொடர்ந்து நீதிமன்றத் தலையீட்டின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுகின்ற பாதுகாப்புச் சபையின் கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பதை நிறுத்திக் கொண்டார். இதனால், நாட்டின் முக்கிய அரசியல் தலைவராகிய பிரதமர் இல்லாமலேயே பாதுகாப்புச் சபை தேசிய பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களில் முடிவுகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அதிரடியாக நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னரும், பாதுகாப்புச் சபைக்கு பிரதமர் அழைக்கப்படாத நிலைமையே தொடர்கின்றது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி காரணமாக நாட்டின் அரசியல் தொடர்ச்சியாக ஸ்திரத்தன்மையற்று காணப்படுகின்றது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான உண்மையான நிலைமைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் அரச தரப்பினரின் பொறுப்பற்ற தன்மைகள் பற்றி பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இதனால் தேசிய பாதுகாப்புக்கே பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டு, தெரிவுக்குழுவின் விசாரணைகளைக் கைவிட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோள்கள் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இதனால், பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முறுகல்கள் அதிகரித்திருக்கின்றது.
இத்தகைய ஒரு நிலையில்தான் இந்தியா இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து கரிசனை கொண்டிருக்கின்றது.
பாதுகாப்பும் அபிவிருத்தியும்
அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அடுத்ததாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி விடயங்களில் இந்தியா கவனம் செலுத்தியிருக்கின்றது. தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான புலன் விசாரணைகளில் ஏற்கனவே இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதற்கு மேலதிகமாகவே இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியா கரிசனை கொண்டிருக்கின்றது. சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபடுகின்ற அதேவேளை, அந்தப் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த விடயங்களில் இலங்கைக்கு இந்தியா உதவுவதாக இருக்கலாம்.
அதேவேளை, இலங்கையின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத் திட்டம் என்பவற்றில் சீனாவும் ஏனைய நாடுகளும் பங்கேற்றிருப்பது இந்தியாவின் நலன்களுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது என்ற கருத்தும் நிலவுகின்றது. எனவே, அந்த விடயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு நலன்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அல்லது இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் அது குறித்து தீவிர கவனம் செலுத்துவதை இந்தியா குறியாக இருக்கலாம்.
மறுபுறத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகியுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளாகின்ற தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பவற்றிலும் இந்தியா கவனம் செலுத்துவதற்கான சந்தர்ப்பமும் உள்ளது.
அதேவேளை, அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய அனுசரணையுடன் ஆரம்டபிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முறையாக முன்னெடுக்கப்படாத நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது, இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் துரிதமாகச் செயற்பட்டதாகவும், ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்காமல் புறக்கணித்துச் செயற்படுகின்ற போக்கில் செயற்படுவதாகவும் இந்தியத் தரப்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், அதன் பின்னர், முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் என்பவற்றினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, இதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் இந்தியா இலங்கைக்கு உதவும் வகையில் கவனம் செலுத்தக் கூடும். குறிப்பாக உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக பலாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்துக்களை ஆரம்பிப்பதற்கு உதவும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு,
பலாலிக்கான விமான சேவையை ஆரம்பிப்பதன் ஊடாக புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் பாடசாலை விடுமுறைக்கால பயணங்களை அதிகரிக்க முடியும் என்ற வகையிலான ஆலோசனையை ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியாயினும் உயி;ர்த்த ஞாயிறு தின திட்டமிட்ட தொடர் பயங்கரவாதத் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இலங்கை மீது இந்தியா கூடுதலான கவனத்தைச் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
இந்தியாவின் இலங்கை மீதான இந்தக் கவனம் என்பது, உள்நாட்டிலும், அதேபோன்று தெற்காசியப் பிராந்தியத்திலும் அரசியல் பொருளாதார, பாதுகாப்பு நிலைமைகளில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்கவும் கூடும்.
பி.மாணிக்கவாசகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM