தலைக்கவசம் அணிந்து திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத் தம்பதி

Published By: Digital Desk 4

13 Jun, 2019 | 09:24 PM
image

மாலையும் கழுத்துமாக தலைக்கவசம் அணிந்து, இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட புதுமணத் தம்பதிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியினர் தலைக்கவசம் அணிந்து மேற்கொண்ட விழிப்புணர்வு பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி ராஜ். அவருக்கும், தனசிரியா என்பவருக்கும் சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து அவர்கள், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, திருமண மண்டபத்திலிருந்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடு நோக்கி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி புறப்பட்டனர்.

இதுகுறித்து கீர்த்தி ராஜ் தெரிவிக்கையில், “இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, மணக்கோலத்தில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்தோம்.

வழிநெடுகிலும் நின்ற மக்கள் எங்களை பாராட்டினர். நாங்கள் மேற்கொண்ட பயணம், மக்களிடையே கண்டிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right