திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்டானைக் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் குடிநீர் வசதியின்றி பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சுனாமி அனர்த்தத்தின்போது வெகுவாகப் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில், திருக்கோவில், தம்பட்டை, விநாயகபுரம் போன்ற பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்களை ஒன்றிணைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றக் கிராமம்தான் மண்டானைக் கிராமம் ஆகும்.
திருக்கோவில் நகரிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீற்றர் தொலைவில் எல்லைப் புறமாக அமையப் பெற்றுள்ள இக்கிராமத்தில் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1400 மக்கள் தொகையினர் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இப்பிரதேசத்தில் மீள் குடியமர்த்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் பலவற்றைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் வரட்சியுடனான காலநிலை நிலவி வரும் இக்காலப் பகுதியில் இக்கிராமத்தில் உள்ள நீரேந்து பிரதேசங்கள் வற்றி வரண்டு காணப்படுகின்றன. கிணறுகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் போன்றவற்றின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். நீர்த்தட்டுப்பாடு காரணமாக இங்குள்ள மக்களில் பெருந் தொகையானோர் தூரப் பிரதேசத்தில் உள்ள தமது உறவினர்களின் இல்லங்களில் தஞ்சமடைந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம் இப்பகுதியில் விஷேட நீர் விநியோகத்திட்ட அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டு, சாகாமம் குளத்திலிருந்து நீரைப் பெற்று இப்பகுதி மக்களுக்காக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தன. இருந்தபோதிலும் சாகாமம் குளத்தின் நீர் மட்டம் குறைவடைகின்றபோது இக்குடிநீர் விநியோகத் திட்டம் இடை நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திருக்கோவில் பிரதேசத்தில் மிக உயரம் கொண்ட பகுதியாக மண்டானைப் பிரதேசம் காணப்படுகின்றது. இதனால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம் நிறுவப்பட்ட குடிநீர்த் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகமானது சாதாரண காலத்தில் கூட உயர்ந்த பிரதேசத்தில் வசித்து வரும் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை என இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டினை தற்காலிகமாக நிவர்த்தி செய்யும் பொருட்டு திருக்கோவில் பிரதேச சபை, திருக்கோவில் பிரதேச செயலகம் ஆகியவற்றால் நீர்க் கொள்கலன்கள் மூலம் வாரத்திற்கு இரண்டொரு தடவைகள் நீர் கொண்டு செல்லப்பட்டு அம்மக்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றன. அத்தோடு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூலம் வாரத்தின் வெள்ளிக்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மாத்திரம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் விநியோகிக்கப்படும் நீர் தாழ்ந்த பிரதேசத்துக்கு மாத்திரமே செல்வதாகவும் உயர் நிலப் பிரதேசங்களுக்கு இந்நீர் வருவதில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நீர்த் தட்டுப்பாட்டினை பல தரப்பினரிடம் முறையிட்டும் தமக்கு நிரந்தரத் தீர்வேதும் கிட்டாத காரணத்தினால் இப்பகுதியில் உள்ள மக்கள் தமது நிலங்களில் கிணறுகளை வெட்டி நீரைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நப்பாசையுடன் கிணறு தோண்டுகின்றபோது, கிணறு தோண்டி பூதம் வெளியான கதைபோல் பல அடி ஆழத்திற்கப்பால் தோண்டிக் கொண்டு செல்கின்றபோது நீர் வெளிவருவதற்குப் பதிலாக பாரிய கல் மலைகள் வெளியாவது கண்டு இம்மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். கிறவல் நிலமான இப்பகுதியில் கிணறொன்றைத் தோண்டுவற்கு பல்லாயிரம் ரூபா பணம் தேவைப்படுகின்றது.
நாளாந்தக் கூலித் தொழிலை நம்பி ஜீவனோபாயத்தினைக் கடத்தி வரும் இம்மக்கள் கிணறு தோண்டுகின்றபோது வெளியாகும் மலைகளை உடைப்பதற்கு போதிய வளமும் நிதியும் இல்லாததால், கிணறு தோண்டும் தமது முயற்சிகளை இடைநடுவில் கைவிடுகின்றனர்.
எது எவ்வாறாக அமைந்த போதிலும், தமக்கு வழங்கப்படுகின்ற நீர் நாளாந்தம் குடிப்பதற்கு போதுமானதாக அமையவில்லை என இப்பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
விவசாயச் செய்கை, மற்றும் கூலித் தொழில் ஆகியவற்றினை நம்பி தமது ஜீவனோபாயத்தினைக் கடத்தி வரும் இம்மக்கள் தமது கால்நடைகளுக்கு பல கிலோமீற்றர் தொலைவில் உள்ள பிரதேசங்களுக்குச் சென்று நீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் வரட்சி காரணமாக தமது கால்நடைகள் இறந்து வருவதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேச மக்கள் தமது நீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு சுமார் 40 அடிக்கு மேல் கிணறுகளைத் தோண்டுகின்ற போதிலும் நீரைப் பெற்றுக் கொள்ள முடியாத வரட்சி இப்பிரதேசத்தில் நிலவுவதாக மக்கள் குறிபிப்பிடுகின்றனர். அதுமாத்திரமல்லாமல் தற்கால வரட்சி காரணமாக இப்பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட மேட்டு நிலப் பயிர்களுக்கு பல்வேறு நோய்த் தாக்கங்களும் பீடித்துள்ளன. இதனால் பயிர்ச் செய்கைக்காக செலவு செய்த பெருந்தொகையான பணத் தொகையும் வீணடைந்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டில் நிலவும் வரட்சியுடனான காலநிலை இம்மக்களின் வாழ்க்கையினை வெகுவாகப் பாதித்திருக்கிறதென்றே கூறவேண்டியுள்ளது. நீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் தமது விவசாயச் செய்கை வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதுடன் தமது ஜீவனோபாயமும் கேள்விக்குறியாகி வருகின்றது என அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இம்மக்களின் குடிநீர்க் குறைபாட்டினை நிவர்த்திக்க வேண்டும் என்ற முனைப்புடன் திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் ஆர்.டபிள்யு. கமலராஜன் தமது நேரடிக் கண்காணிப்பின் கீழ் இப்பிரதேசத்துக்கு நீர் பவுசர்களைக் கொண்டு சென்று குடிநீரை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகின்றது. தமது அடிப்படைத் தேவையான குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக் கோருகின்ற இம்மக்கள் குடிநீருக்கான நிரந்தரத் தீர்வினையும் பெற்றுத்தருவதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM