சிறுபான்மைச் சமூகத்தவர் தம்மை மீள்பார்வை செய்யவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒன்றுபட வேண்டிய காலத்தின் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். அண்மைக்கால சம்பவங்களும் முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமா தொடர்பான செய்திகளும் இதனைத்தான் வெளிக்காட்டி நிற்கின்றன.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் எப்பொழுதுமே பதியப்படாத அதிர்ச்சிதரும் புரட்சியாக இது காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தவர்களுக்கும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுக்கும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள் காரணமாக இன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாகத் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
நெருக்கடிகள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள், கடும்போக்கு விமர்சனங்கள், கைதுகள், தேடுதல் வேட்டைகள் என ஏராளமான பக்க தாக்குதல்களால் ஓர் இனம் முடக்கப்பட்டுக் கிடந்தது.
சுதந்திரத்துக்குப் பின்னுள்ள எல்லாக் காலப்பகுதியிலும் இல்லாத நெட்டூரங்கள் பல முனைகளால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. 2013 ஆம் ஆண்டு காலப்பகுதி யிலிருந்து தொகுத்துப் பார்ப்பின் இச்சமூகத்துக்கு எதிராக, பள்ளிவாசல் எரிப்புகள், உடைப்புகள், ஹலால், பர்தா எதிர்ப்புகள், கடை உடைப்புகள், கிறிஸ் மனிதர்கள் என ஏகப்பட்ட யுக்திகளால் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களோ அரசியல் தலைமைகளோ தேசிய அரசாங்கங்களை விரோதித்து நடந்ததில்லை அவர்களைப் போஷித்தே நடந்துள்ளனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் 1930 ஆம் ஆண்டு தனிச்சிங்கள அரசாங்கமொன்று ஆட்சி நடத்தியதன்பின் சுமார் 89 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர் என்ற வகையில் நால்வர், ராஜாங்க அமைச்சர்கள் நான்கு பேர், பிரதியமைச்சர் ஒருவர் என்போரே ராஜினாமா (03.06.2019) செய்துள்ளனர். அதுவும் இஸ்லாமிய மக்களின் நோன்புக் கடமைகள் நிறைவுகொண்ட காலகட்டத்தில் இந்த அரசியல் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர், பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தும் காலக்கெடு விதித்தும் மேற்கொண்ட போராட்டங்கள் நாட்டில் கடுமையான பதற்ற நிலையை உருவாக்கிய நிலையில் பதவிகளைத் துறப்பதென முடிவு செய்த முஸ்லிம் தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை (03.06.2019) தங்கள் பதவிகளைத் துறந்தனர்.
வேற்றுக்கொள்கைகள், மாற்றுச் சிந்தனைகள், வேறுபட்ட ஆளுமைகள், அரசியல் பாதைகள் கொண்டவர்களாக இருந்த போதிலும் தமது சமூகம், சமயம் என்றவாறு ஒருவித போருக்காக இவர்கள் பதவிகளைத் துறந்துள்ளனர்.
இரு ஆளுநர்களையும் அமைச்சர் ஒருவரையும் பதவி நீக்குமாறு கோரியே தமது போராட்டங்களை பிக்குமார் ஆரம்பித்திருந்தார்கள். பிக்குமாரின் இப்போராட்டத்துக்கு பேரினவாத சமூகத்தைச் சேர்ந்த கணிசமான மக்கள் ஆதரவு காட்டியிருந்தார்கள். நாட்டின் பல பகுதியிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடாத்தப்பட்டிருந்தது. கண்டி மாநகரில் கடையடைப்புகள் நடைபெற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தை மகா சங்கம் ஆசிர்வதித்திருந்தது. இந்தப் போராட்டத்துக்கு ஈடுகொடுப்பது தமது மக்களையும் அவர் சார்ந்த நலன்களையும் பாதிக்குமென்ற தூரநோக்கு சிந்தனையுடன் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலியும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வும் தமது பதவிகளைத் துறக்க அதோடு ஒட்டியவகையில் அமைச்சர்கள் பதவிகளைத் துறந்துள்ளனர்.
இவர்களின் பதவிதுறப்பு, புதிய அரசியல்போக்கின் மாற்றுப்பாதையைத் திறந்து விட்டுள்ளது என்று கூறுமளவுக்கு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்தவர்கள் மாற்றுத் துருவங்களாகக் காணப்பட்டவர்கள், சுட்ட மண்ணும் சுடாத மண்ணுமாகக் காணப்பட்டவர்கள் என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியென்ற மாற்றுப்பாசறையிலிருந்தவர்கள் எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மிக முக்கியமான நடப்பு என்னவெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையை ஏற்றுக்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த கபீர் ஹாசீமும் பதவி துறந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக, பொதுச் செயலாளராக மற்றும் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்த கபீர் ஹாசீம், சிங்கள மக்களின் வாக்கு ஆதரவுடன் வந்த ஒருவர் என்பது குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயம். இந்தச்சம்பவங்கள் எதை வலியுறுத்தி நிற்கிறதென்றால் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய வரலாற்றுக்கடமை அல்லது நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டி நிற்கிறது. இதுவொரு வரலாற்று திருப்பமென்றே கூறவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு சம்பவமானது மிகக் கொடுமையும் மானிடத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத பாவச்சுமையும் கொண்டது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தின் பின்னணி என்ன, இதன் மூலநோக்கம் என்ன என்பதெல்லாம்பற்றி பல்வேறு கருத்துகளும் காரணங்களும் கண்டுபிடிக்கப்படுவதாக இருந்தாலும் இதனால் ஒரு சமூகம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை.
30 வருடகால யுத்தம் தமிழ் மக்களை அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றது பற்றி இரை மீட்டிப்பார்ப்பின் அதன் வடுக்களையும் வன்மங்களையும் மறந்து விட முடியாது. வட கிழக்கில் வாழும் அத்தனை தமிழர்களும் பயங்கரவாதிகள், புலிகளின் நாடி நரம்புகள் என பட்டை குத்தப்பட்டார்கள்.
கிராமம்கிராமமாக கலைக்கப்பட்டார்கள். வீடுவாசல்கள் நிர்மூலமாக்கப்பட்டன. வடமராட்சி சிகிச்சை, கிழக்கு விடுவிப்பு என்று சங்காரம் செய்யப்பட்டார்கள். பூசாமுகாமென்றும் வெலிக்கடை சிறைச்சாலையென்றும் மஹசீன் தடுப்பென்றும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். வன்னிப்போரில் ஏதும் அறியாத அப்பாவி மக்கள் அநாதைகளாக்கப்பட்டார்கள்.
பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழிக்க உதவுவோமென உலக நாடுகள் எல்லாம் கச்சை கட்டிக்கொண்டு இலங்கை அரசுக்கு உதவ வந்தார்கள். வல்லரசுகளும் வலிமை கொண்ட தேசங்களும் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய மக்களைக் கொன்று குவிக்க துணை நின்றார்கள். இவையெல்லாம் நடந்து முடிந்த கதையென்பதை விட தமிழினம் இருக்கும் மட்டும் மறந்து விடமுடியாத அகோர அத்தியாயங்கள்.
இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை புகட்டும் பாடமென்ன பௌத்த மேலாதிக்கம் சிங்களப் பேரினவாதம் அரசியல் மிலேச்சத்தனம் நிறைந்த ஒரு அடக்கப்பட்ட சர்வாதிகார நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதையே நாட்டில் இவ்வாரம் நடந்தேறிய சம்பவங்களும் சூழ்நிலைகளும் எடுத்தியம்புகின்றன.
குறித்த அரசியல்வாதிகளின் பதவிகள் பறிக்கப்படவேண்டும், அல்லது அவர்கள் தாமாகப் பதவி விலகவேண்டுமென்ற கடும்போக்குக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமும், காலக்கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது. உண்ணா நோன்பு இருந்தவர் ஒரு பௌத்த குருவானவர். அவர் உணவு தவிர்ப்புப் போருக்கு தேர்ந்தெடுத்திருந்தவிடம் பௌத்த மதத்தினரின் தலைமைப் பீடமாகக் கருதப்படும் கண்டி ராஜதானியின் தலதா மாளிகை.
இவ்வாறனதொரு சம்பவம் சுமார் 60 வருடங்களுக்கு முன் நடைபெற்றுள்ளது என்பதை ஞாபகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. சிங்களம் மட்டும் அரச மொழி எனும் சட்ட மூலத்தினை பிரதமர் பண்டாரநாயக்கா 15.06.1956 இல் நிறைவேற்றிய வேளை தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பைச் சமாளிக்க தந்தை செல்வா – பண்டா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. (27.07.1957) அச்சட்ட மூலத்தை அமுல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலிருந்து பௌத்த மக்களின் தலைமைப்பீடமான கண்டி தலதா மாளிகைக்கு (04.10.57) எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றினை மறைந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மேற்கொண்டார். இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குக்கள் கலந்து கொண்டார்கள். இந்த கடும் எதிர்ப்பு காரணமாக உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது.
சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்தவேளை தந்தை செல்வா தலைமையில் காலி முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்திய வேளை பிக்கு பெரமுனையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிக்குமார் சிங்களம் மட்டும் சட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த தமிழ்மொழி சரத்து நீக்கப்பட வேண்டுமெனக் கோரி பாராளுமன்றில் ஊர்வலம் ஒன்றினை நடத்தினர். இது வெடித்து கலவரமாகியது. இது போன்ற சம்பவங்கள் ஏலவே இலங்கையில் இடம்பெற்றிருப்பதை இது விடயத்தில் ஞாபகம் கொள்ளவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு சம்பவம், அதனைத் தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற தாறுமாறான போக்குகள் சிறுபான்மைச் சமூகத்துக்கு பயம், பீதி அவலம் என்பவற்றை உருவாக்கியுள்ளது என்பது நாடறிந்த விடயமாகும். குறிப்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அவலத்தன்மைக்கு பலவகை சம்பவங்கள் காரணங்களாகக் கொள்ளப்படலாம்.
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் ஞாயிறு தினத்தன்று (02.06.2019) உண்ணாவிரதப் போராட்ட இடத்துக்குச் சென்று விஷேட அறிக்கையொன்றை விட்டிருந்தார். குறித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும் என்பதே அந்த அறிக்கையாகும். இந்த காலக்கெடு, பிரச்சினைகளை உச்சக் கட்டத்துக்கு கொண்டு வந்தது. கண்டியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு கண்டி வர்த்தக சங்கத்தின் அறிவிப்பு நாடு முழுவதுமான ஆர்ப்பாட்டங்கள், இதில் பெரும்பான்மைப் பிக்குகள் பங்கு கொண்டமை முஸ்லிம் சமூகத்துக்கும் அவர்தம் தலைமைகளுக்கும் எக்காலத்தும் ஏற்படாத பயத்தையும் பீதியையும் உண்டாக்கியது. பதவிகள், அரசியல் என்பதைவிட சமூகத்தின் பாதுகாப்பை நோக்கி அவர்களைச் சிந்திக்க வைத்தது.
கோடிக்கணக்கான முதலீடுகள் கொண்டு தலைநகரிலும் ஏனைய பிரசித்தி பெற்ற நகரங்களிலும் நடத்திவந்த வர்த்தக நிலையங்கள், உற்பத்திச்சாலைகள், ஏற்றுமதி இறக்குமதி மையங்கள் ஆகியவற்றுக்கு ஆபத்து வந்துவிடுமென்ற அபாயத்தை உணரவேண்டிய தேவை ஏற்பட்டது.
பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள் செல்லும் தமது சமூகத்துக்கு அன்னியமான நிலையொன்று உருவாக்கப்பட்டு தாம் புறக்கணிக்கப்பட்டு விடுவோமா என தற்காப்புச் சிந்தனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் சில பேரினவாத அரசியல்வாதிகளும் பௌத்த அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களும் வெளியிட்ட இனவாத கருத்துக்கள் மார்க்க அடையாளங்களுடன் வெளியில் செல்லும் பெண்கள் முகங்கொடுக்க வேண்டிய சவால்கள் இம்சைகள் தொடர்பிலும் அச்சத்தில் மூழ்கிப்போன நிலையிலேயே, முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஓர் உயர்ந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பெருமை கொள்கின்ற விடயமாகும்.
இதிலிருந்து சிறுபான்மைச் சமூகமாகிய முஸ்லிம் சமூகமும், வட கிழக்கு மற்றும் மலையக தமிழர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் பட்டறிவும் ஏராளம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். புரிதல் இடம் பெறுவதற்கான காலத்தையும் சந்தர்ப்பத்தையும் சூழ்நிலை எமக்கு வகுத்துத் தந்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அரசியல்மயமான எல்லாக் காலப்பகுதியிலும் பெரும்பான்மைச் சமூகத்துடன் உடன்பட்டுப் போனவர்களாக இருந்து வந்துள்ளார்கள் என்பதை சுதந்திரத்துக்குப் பின்னுள்ள பாராளுமன்றங்களில் அங்கம் வகித்த சேர் ராசீsக் பரீத், எம்.ஷம்ஸ் காசிம், மாக்கன் மாக்கார், டாக்டர் எம்.சி.எம். கலீல், தொடக்கம் இன்றைய முஸ்லிம் தலைமைகள் வரை, உதாரணமாகக் கொள்ளமுடியும்.
நாட்டிலுள்ள தேசியக் கட்சிகளுடன் இணைந்தும் சேர்ந்தும், தனித்தும் அவர்கள் உடன்பாட்டு அரசியல் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளார்கள். ஆனால் தமிழர்களின் அரசியல்போக்கு அவ்வாறு இருந்ததில்லை. 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை உடன்பாட்டுத் தன்மையற்ற அரசியல் போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. உடன்பாடு கண்ட சமூகத்தினரும் சரி எதிரே உடன்பாடு காண முடியாத தமிழ் சமூகத்தினரும் சரி பெற்ற அடைவுகள் அல்லது, பெறுமானங்கள் இலங்கை அரசியலில் பூஜ்ஜியமே, பேரினவாதம், பௌத்த மேலாதிக்கம் என்ற வன்மவாதங்களை உடைத்தெறிய முடியாமல் வெறும் சிறுபான்மைச் சமூகம் என்ற வட்டத்துக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கொண்டுவரப்பட்டவர்களாக இரு சமூகத்தவர்களும் காணப்படுகின்றார்கள்.
சில அரசியல் நிகழ்வுகளும் மாற்றங்களும் வரலாற்றை மாற்றி எழுதுகின்றன. இது உலக வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்கள். அந்த நியதிக்கு ஏற்ப வரலாற்றை மாற்றி எழுதவேண்டிய தேவை சிறுபான்மைச் சமூகமாகிய முஸ்லிம், தமிழ்ச் சமூகத்தை நோக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் முஸ்லிம் என்ற சமூகம் தமது எல்லைகளையும் வேலிகளையும் உடைத்தெறிந்து ஒரு குடையின்கீழ் ஒன்றுபட வேண்டிய அவசியமும் அவசரமும் எவ்வாறு ஏற்பட்டிருக்கிறதோ அதேபோன்றே தமிழ் முஸ்லிம் என்ற இன, முனைப்புகள் ஒன்றுபட வேண்டிய அவசியம் உணர்த்தப்பட்டிருக்கிறது. இதற்குரிய காரணங்கள், பலம் பொருந்திய ஒரு சக்தியாக, சிறுபான்மை இனம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்பதுடன் தீர்மானிக்கும் சக்தியாக மாறவேண்டுமென்பது இன்னொரு நியாயமாகவும், தேவையாகவும் இருக்கிறது.
இவற்றுடன் இன்னும் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டிய விடயங்களாக ஒவ்வொரு இனத்துக்குமான, தனித்துவமான, கலாசாரங்கள் நடையுடை, பாவனைகள் மதிக்கப்படவேண்டும் என்பதில் எல்லா உரிமையுள்ள சமூகங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் துரதிஷ்டவசமாக, இலங்கை யில் நீண்டகாலமாகவே, இது புறக்கணிக் கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஏராளமான சம்பவங்களும் உதாரணங்களும் உள்ளன. குறிப்பாக பௌத்த மேலாதிக்கத்தின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபட வேண்டுமாயின் தனியான இனங்கள் என்ற அடையாளத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட வேண்டும். அந்தச் சூழ்நிலைக்கு இப்பொழுது ஒரு வித்திடப்பட்டுள்ளது. அதேபோன்றே விரிசலடைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் அப்பாதை இப்பாதையென சின்னாபின்னப்பட்டுப் போய்க்கிடக்கும் தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட வேண்டும் என்பதற்கு அப்பால் இலங்கையின் சிறுபான்மை இனமென பலமான அடையாளங் கொண்டிருக்கும் தமிழ் – முஸ்லிம் உறவுகளுக்கிடையில் ஒற்றுமையான ஓர் உடன்பாடு காணப்பட வேண்டியது அவசியமாகிறது.
திருமலை நவம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM