உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து நாட்டில் பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடு தலைவிரித்தாடுகின்றது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பௌத்த பேரினவாதிகள் செயற்படுவதுடன் அவர்களை அடக்கி ஒடுக்குவதற்குத் தொடர்ந்தும் முயன்று வருகின்றனர். தமிழ் மக்களைக் கடந்த மூன்று தசாப்த காலமாக அடக்கி ஒடுக்கிவரும் பேரினவாதிகள் தற்போது முஸ்லிம் மக்களை நோக்கி தமது செயற்பாட்டை விரிவுபடுத்தியுள்ளனர்.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் செயற்பாட்டை அடுத்து ஆத்திரம் கொண்ட பெரும்பான்மையின மக்கள் இத்தகைய செயற்பாடுகளில் இறங்கலாம் என்று கருதப்பட்டது. ஆனாலும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட மதத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தரப்பினர் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இத்தகைய வன்முறைகள் தீவிரமாக இடம்பெற்றிருக்கவில்லை.
தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னர் மே மாதம் 13 ஆம் திகதிக்குப் பின்னரே திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நீர்கொழும்பில் ஆரம்பித்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தலைவிரித்தாடியது. இதனால் முஸ்லிம் மக்களுக்குப் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தாக்குதல் நடைபெற்றவுடன் வன் முறைகள் இடம்பெற்றிருந்தால் ஆத்திரமீதத்தினால் இடம்பெற்றது என்று கருத முடியும். ஆனால் தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னர் அரசியல் சுயநலம் கருதிய சில தரப்பினரது செயற் பாடுகள் காரணமாகவே முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்பட்டன. இந்த வன்முறைகளின் பின்னணி தொடர்பிலும் தாக்குதல்தாரிகளின் திட்டங்கள் குறித்தும் விசாரணைகளின்போது பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசியல் குளிர் காயும் முயற்சி
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப் போன்று இனங்களிடையே முரண்பாட்டைத் தோற்றுவித்து வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் அரசியல் குளிர்காய நினைக்கும் ஒரு தரப்பினர் தொடர்ச்சியாகவே இத்தகைய வன்முறைக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையவர்கள் இன ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரிவி னைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாகவே முஸ்லிம் அரசியல்வாதிகளையும் முஸ்லிம் மக்களையும் இலக்கு வைத்து வன்முறைகள் அரங்கேற் றப்பட்டன. பௌத்த மேலாதிக்க சக்திகளின் செயற்பாடுகளும் இந்த விட யத்தில் முக்கியப் பங்காற்றியிருந்தன. பௌத்த பேரினவாதிகள் இனங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்து இனக் கலவரத்தை உருவாக்குவதற்காக தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்ற னர்.
முஸ்லிம் தலைவர்கள் மீதான போர்க்கொடி
இதன் ஒரு கட்டமாகவே முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டது. அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பொது எதிரணியின் சார்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதேபோன்றே ஆளுநர்களான அசாத் சாலியும் ஹிஸ்புல்லாவும் பதவி விலகவேண்டும் என்று பௌத்த பேரினவாதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். குண்டுத் தாக்குதல்களுடன் இவர்களையும் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வெறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் பதவி விலகவேண்டுமென்று கோரப்பட்டபோதிலும் அதற்கான ஆதாரங்களோ சாட்சிகளோ சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்த எதிரணியினர் அதனை உடனடியாக விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்தச் சர்ச்சை பல நாட்களாக நீடித்ததுடன் விவாதத்துக்கான தினமும் ஒதுக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே தாக்குதல் சம்பவங்களுடனோ அல்லது தாக்குதல்தாரிகளுடனோ அரசியல் தலைவர்கள் எவரேனும் தொடர்பு பட்டிருந்தால் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்கள் குற்றவாளிகளானால் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆனால் அரசியல் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்ட வகையில் முஸ்லிம் அரசியல்தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர்களைப் பதவி விலகுமாறு கோரி நாட்டில் வன்முறையை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் செயற்பட்டிருந்தனர். இந்தப் பின்னணியிலேயே மூன்று முஸ்லிம் தலைவர்களையும் பதவி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அணி திரண்ட சிங்கள பேரினவாதிகள்
குற்றச்சாட்டுகளை மட்டும் கருத்தில்கொண்டு எத்தகைய நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலை யில் தான் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த மூவரையும் பதவி விலக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தார்.
மூன்று தினங்கள் தேரரின் போராட்டம் இடம்பெற்றிருந்தது. அத்துரலிய ரத்ன தேரர் போராட்டத்தை ஆரம்பித்ததையடுத்து சிங்களப் பேரினவாதிகள் அதற்கு ஆதரவாக அணிதிரண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொது மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் களத்தில் இறங்கியதுடன் அரசாங்கத்துக்கு கால அவகாசமும் வழங்கியிருந்தார்.
ஞானசார தேரரின் பாய்ச்சல்
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரரை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிவந்தனர். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரும் அவரை சென்று பார்வையிட்டதுடன் அவரை விடுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதி பதிக்கும் எடுத்துக் கூறியிருந்தனர்.
இவ்வாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்து சட்டத்தினால் கட்டிப்போடப்பட்டிருந்த ஞானசார தேரர் ஜனாதி பதியால் பொதுமன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட ஞானசார தேரர், தான் எதிர்காலத்தில் மதபோதனைகளைச் செய்துகொண்டு அமைதியாக வாழப்போவதாக அறிவித்திருந்தார். பின்னர் மறுநாள் ஆவேசம் கொண்டு எழுந்த அவர் நாட்டுக்காக மீண்டும் தனது பணியை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்ததுடன் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீண்டும் நிரூபிக்கும் வகையில் செயற்படத் தொடங்கியிருந்தார்.
தனது விடுதலைக்காக சிபார்சு செய்த ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராகவே அவர் போர்க்கொடி தூக்கியிருந்தார். இவ்வாறு பௌத்த பேரினவாதிகளின் செயற்பாடு காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர்கள் இருவரையும் பதவி விலகுமாறு கோரியதையடுத்து அவர்களும் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
பௌத்த பீடங்களின் ஆதரவு
இந்த வேளையில், அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்துக்கு நான்கு பௌத்த பீடங்களும் முழுமையான ஆதரவு வழங்கியதுடன் அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுமிருந்தன. இத்தகைய கோரிக்கைகள் காரணமாகவே ஆளுநர்கள் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
இதேபோன்றே அமைச்சர் ரிஷாத் பதியு தீனும் பதவி விலக வேண்டிய சூழ்நிலை பௌத்த பேரினவாதிகளின் போராட்டத்தால் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு பதவிகளைத் துறக்காவிடின் பௌத்த பேரின வாதிகளின் போராட்டமானது முஸ்லிம் மக்கள் மீது திசை திருப்பப்படும் அபாய மும் காணப்பட்டது. அதற்கேற்ற வகையில் போராட்டங்களும் தீவிரப் படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி கலந்துரையாடினர். சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியின் வீட்டில் திங்களன்று காலை ஒன்றுகூடிய முஸ்லிம் எம்.பி.க்கள் நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்ததுடன் பௌத்த பேரினவாதிகளின் செயற்பாட்டால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படாத வகையில் எத்தகைய தீர்மானத்தை எடுக்கலாம் என்பது குறித்தும் கலந்துரையாடி னர்.
இதனையடுத்தே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாகப் பதவி விலகுவது என்று தீர்மானம் எடுத்தனர். இந்தத் தீர்மானம் குறித்து பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் முஸ்லிம் அமைச்சர் அனைவரும் பதவி விலகுவதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்பவில்லை. ஆனாலும் அவர்களின் சுயாதீன முடிவில் அவர் தலையிடவில்லை. இதனையடுத்தே அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருந்தனர்.
பேரினவாதிகளுக்கு பேரதிர்ச்சி
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த ஒற்றுமையான இந்த முடிவானது இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி வன்முறையை உருவாக்கி அரசியல் குளிர்காய நினைத்த பௌத்த பேரினவாத சக்திகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமது எண்ணம் நிறைவேற்றப்படாத வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்பட்டமை அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
தமது சமூகத்துக்குப் பாதிப்பு ஏற் படப் போகின்றது என்பதைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் தலைமைகள் எடுத்த இந்த முடிவானது வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவருமே தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்திருந்தனர். இந்தப் பதவி துறப்பானது இனவாத சக்திகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தது.
ஹக்கீமின் இராஜதந்திரம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சிங்களப் பௌத்த பேரினவாத சக்திகள் கடும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவருக்கு எதிராக செயற்பட்டு வந்தன. இதன் காரணமாக ரிஷாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கானது பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. பேரினவாதிகளின் இத்தகைய செயற்பாடு காரணமாக ரிஷாத் பதியுதீன் முஸ்லிம்களின் பெருந்தலைவராகும் நிலைமையும் உருவாகியிருந்தது.
ஆனால் தற்போது சமூகத்தின் நலன் கருதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துள்ள இந்த முடிவானது முஸ்லிம் மக்கள் மத்தியில் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸை பலம்பெறச் செய்திருக்கின்றது. தமக்காக தமது தலைமைகள் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று தமது பதவிகளைத் துறந்துள்ளமை தொடர்பில் முஸ்லிம் சமூகம் தற்போது பெருமைப்படுகின்றது.
முஸ்லிம் தலைமைகள் எடுத்த முடிவின் காரணமாக பௌத்த பேரினவாத சக்திகளின் எண்ணம் நிறைவேறவில்லை. இதேபோன்றே அரசியல் குளிர்காய நினைத்த தரப்பினரின் செயற்பாடும் தோல்வியுறச் செய்யப்பட்டிருக்கின்றது. ஏனெனில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைச் சாட்டாக வைத்து ஆட்சியைக் கைப்பற்றும் வகையில் நாட்டில் இன வன்முறையை ஏற்படுத்தலாம் என்ற தோரணையில் எந்தத் தரப்பு செயற்பட்டதோ அந்தத் தரப்பு குறித்து தற்போது சிறுபான்மையின மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
சிறுபான்மையினரின் ஒற்றுமையின் அவசியம்
அரசியல் சுயநலத்துக்காகவே தம் மீது சிங்கள மக்களை ஆத்திரம் கொள்ள வைப்பதற்கு இந்தத் தரப்பு முயற்சித்துள்ளமையை முஸ்லிம் மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். இதேபோன்றே தமிழ் மக்களும் தற்போது இத்தகையோரின் செயற்பாடு கள் தொடர்பில் நன்கு உணர்ந்துள்ளனர். இதன் காரணமாகவே தமிழ் தலைமைகளும் தற்போது முஸ்லிம் தலைமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
சிறுபான்மையின மக்களின் ஒற்றுமையின் அவசியம் கூட பேரினவாத சக்திகளின் இத்தகைய செயற்பாட்டால் உணரப்பட்டிருக்கின்றது.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி பெரும்பான்மையின சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுவிடுவதற்கு முயன்றவர்களின் செயற்பாடானது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறியிருக்கின்றது.
தவறை உணர்ந்த பௌத்த பீடங்கள்
தற்போது பதவியை இராஜினாமா செய்துள்ள முஸ்லிம் தலைவர்கள் தமது பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான்கு பௌத்த பீடங்களும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. மல்வத்து, அஸ்கிரிய, ராமஞ்ஞ மற்றும் அமரபுர ஆகிய நான்கு பீடாதிபதிகளும் ஒன்றிணைந்தே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதன்மூலம் முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கும் வகையில் சிங்களப் பேரினவாத சக்திகள் செயற்பட்டுள்ளமை நிரூபணமாகின்றது. ஏனெனில் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய நான்கு பௌத்த பீடங்களும் இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளைப் பொறுப்பேற்க வேண்டும் என்று வினயமாகக் கோரியுள்ளன. இதிலிருந்து தாம் இழைத்த தவறை பௌத்த பீடாதிபதிகள் உணர்ந்துள்ளமை தெளிவாகின்றது.
அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்காக...
சுயநல நோக்கோடு செயற்பட்டோரின் சதித்திட்டம் தற்போது அம்பலமாகியிருக்கிறது. முஸ்லிம் அரசி யல் தலைமைகள் தமது ஒற்றுமையின் மூலமும் சகிப்புத் தன்மையின் மூலமும் இதனை தற்போது அம்பலப்படுத்தியிருக்கின்றன.
ஜனாதிபதியின் அறிவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பும் தற்போதைய நிலையில் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் மஹிந்த அணியினருடனும் இணையப் போவதில்லை என்றும் அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிவித்து அரசியல் வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தால் ஆதரவு வழங்கப்படும் என்றும் இல்லையேல் நடுநிலை வகிப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
இந்த விடயமும் தற்போதைய நிலையில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் எப்படி அமையப்போகின்றன என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கின்றது. மொத்தத்தில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி அரசியலில் குளிர்காய நினைத்த தரப்பினருக்குப் பாதகமான நிலைமையே தற்போது ஏற்பட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் சிறுபான்மையினத் தலைவர்கள் இவ்விடயங்கள் குறித்து சிந்தித்து ஒற்றுமையாகச் செயற்படுவதன் மூலமே தமிழ், முஸ்லிம் மக்களுக்கான தீர்வைக் காண முடியும் என்பதை பேரினவாதிகளின் செயற்பாடுகள் நன்கு உணர்த்தியுள்ளன.
அன்பரசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM