(நமது நிருபர்)
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான அதிகாரத்தை ஜனாதிபதி பறிக்கும்போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலை வேறு திகதியில் வைத்தாலும் சரி, டிசம்பர் 7 ஆம் திகதி நடத்தக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறியிருக்கிறேன் என ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்பொழுது ஜனநாயகம் சரியாக நிலை நாட்டப்படவில்லை. தேர்தல் திகதியை குறிப்பிடுவதற்கு ஜனநாயக தேர்தல் சட்டங்கள் என்ற சட்டம் இருக்கின்றது. அதன்படி தேர்தல் திகதியைக் குறிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மட்டுமே உள்ளது. அது வேறு யாருக்கும் இல்லை.
கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது ஒரு விடயத்தை கூறியிருந்தோம். நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவரிடம் எடுத்துக் கூறினோம். அதற்குள் நாங்களும் அதைத் தீர்மானிப்போம் என்றும் சொல்லியிருந்தோம்.
இதில் ஒரு சிக்கல் உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறா விட்டால், அவர் உடனடியாகப் பதவி விலகி வெற்றிபெறும் புதிய ஜனாதிபதிக்கு இடத்தைக் கொடுக்க வேண்டும்.
இந்தக் காரணங்களினாலோ என்னவோ எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தினங்களின் பின்னர் ஜனாதிபதி இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். அங்கு வைத்து அவர் டிசம்பர் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
ஆக நாங்கள் கொடுத்த காலம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரையான காலம். எவ்வளவு காலம் கூடுதலாக ஜனாதிபதி பதவியில் இருக்க முடியுமோ அதற்குத் தக்கவகையில் அவர் திகதியைக் குறித்திருக்கிறார்.
எங்களுக்கான அதிகாரத்தை ஜனாதிபதி அப்படிப் பறிக்கும்போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. அதனால்தான் இத்தேர்தலை என்ன திகதியில் வைத்தாலும் சரி, டிசம்பர் 7 இல் வைக்கக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கூறியிருக்கிறேன். ஏனெனில் அது எங்களுடைய அதிகாரம். அதாவது தேர்தல் தொடர்பான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தான் இறுதியில் தீர்மானிக்கும்.
எதிர்வரும் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 க்கு இடையில் எந்த நாள் வைப்பதென்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும். ஆனால் ஜனாதிபதி கூறிய 7 ஆம் திகதி தேர்தல் நடக்காது என்று நான் நம்புகின்றேன். இதை நாங்கள் கவனிக்காமல் விட்டு 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அடுத்து வரும் ஜனாதிபதியும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேறு அதிகாரங்களையும் பறிப்பார்.
ஆனாலும் ஜனாதிபதி எங்கள் அதிகாரங்களை எடுத்து உபயோகிக்கக்கூடாது. சட்டத்தின்படி நாட்டை நடத்துவதுதான் ஜனநாயகம். சட்டம் இல்லாமல் ஜனநாயகமும் இல்லை. ஆக இந்த இடத்தில் ஜனாதிபதி ஜனநாயகத்தையே குழப்பிவிட்டார் என்றே கூறுகிறோம்.
ஜனநாயக முறையின் அடிப்படையில் எங்கள் வாக்கை உபயோகித்து பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றோம். அவ்வாறு பிரதிநிதிகளைத் தெரிவுசெய்த பின்னர் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் செல்கின்றார்கள். எந்தக் கட்சிக்கு கூடிய ஆசனங்கள் இருக்கிறதோ அந்தக் கட்சிதான் பிரத மரை நியமிக்கிறது. அந்தக் கட்சிதான் ஜனாதி பதியுடன் ஆலோசித்து அமைச்சர்களை தெரிவு செய்கிறது. இதுதான் ஜனநாயகம்.
அமைச்சர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் என்று ஞானசார தேரர் சொல்கின்றார். அவர்களும் பதவியில் இருந்து நீங்குகின்றார்கள். ஏனெனில் பயம். அது ஜனநாயகமா என்ற கேள்வியும் எழுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM