இனவாதம் மற்றும் மதவாதம் என்பனவற்றை மையப்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலரால் சிறுபான்மையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பெரும்பான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக சிறுபான்மையினரைப் பலிக்கடாவாக்கும் கலாசாரம் நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைத்திருக்கின்றது என்று ஜே.வி.பி. யின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாட்டின் சமகால நிலைமைகள் குறித்து கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாடு இப்போது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முனையுமிடத்து பல்வேறு பிரச்சினைகளும் மேலெழும்பும் என்பது நிதர்சனமாகும். இப்படியொரு நிலை இப்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. பல்லின மக்கள் வாழுகின்ற நாடுகளில் சகலரின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் விளைவுகள் விபரீதமாக அமையக்கூடும்.
பெரும்பான்மை மக்களிடையே தம்மை வீரர்களாகவும் பெரும்பான்மை இனத்தவர்களின் காப்பாளர்களாகவும் அடையாளப்படுத்திக்கொண்டு தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகள் அதிகமாகவே இடம்பெற்று வருகின்றன. சமூக –பொருளாதார –அரசியல் நெருக்கடி நிலைமைகளினால் நாட்டு மக்கள் அதிகமான பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். வரிச்சுமையும் வாழ்க்கைச் சுமையும் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்களை வேறுபக்கம் திசை திருப்பிவிட்டு நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்வதில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் மூடிமறைக்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது. நெருக்கடிக்குள்ளான மக்கள் நல்லாட்சிக்கு எதிராக பல தடவைகள் குரல் எழுப்பியும் இருக்கின்றனர் என்பதும் தெரிந்த ஒரு விடயமாகும். ஆட்சிமாற்றத்தின் அவசியத்தையும் இவர்கள் வலியுறுத்தி இருந்தார்கள்.
தேசிய ஒற்றுமை இப்போது சவால்களுக்குள்ளாகி இருக்கின்றது. இந்த நாடு இனம், மதம் என்று பிளவுபடுமாக இருந்தால் குரோத நிலைமைகளும் அதிகரிக்கும் என்பதனையும் விளங்கிக்கொள்ள வேண்டும். நாடும் மக்களும் மென்மேலும் சிக்கல் நிலைமைக்கே உள்ளாகுவார்கள். மூவின மக்களும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இந்த நாட்டுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கின்றது என்பதனை ஒருபோதும் மறந்து செயற்படுதல் கூடாது. இனவாத செயற்பாடுகளைப் புறந்தள்ளி தேசிய ஒற்றுமையின் ஊடாகவே நாட்டைப் பாதக நிலைமைகளிலிருந்தும் பாதுகாக்க முடியும் என்று ஜே.வி.பி திடமாக நம்புகின்றது. இதற்கான முன்னெடுப்புகளையும் இக்கட்சி மேற்கொண்டு வருகின்றது.
சிறுபான்மையினர் என்ற வகையில் முஸ்லிம் மக்கள் இன்று பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். அச்சத்திற்கு மத்தியில் இம்மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யும் அளவிற்கு பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. இந்த நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் பேரினவாதிகள் நாளைய சமூகத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும் நாளைய தலைமுறையை நாட்டுக்கு பொருத்தப்பாடுடைய சிறந்த தலைமுறையாக உருவாக்குவது தொடர்பிலும் ஒவ்வொருவரும் முக்கிய கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM