இலங்கையில் சர்வதேச பயங்கரவாதத்தின் ஊடுருவலானது பல்வேறு அதிருப்தி நிலைகளை தோற்றுவித்திருக்கின்றது. சமாதானமும் நல்லிணக்கமும் சீர்குலைந்திருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இவற்றுக்கும் மத்தியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த தையும் அவதானிக்கக் கூடியதாக உள் ளது. இந்நிலையில் சிங்கள பௌத்த மக்களிடையே ஐக்கியம் மிக்க தன்மை மேலெழுந்து வருவதனையும் காணமுடிகின்றது. இன ரீதியில் ஒன்றுபட்டு நாட்டின் சவால்களை வெற்றிகொள்ள அவர்கள் முனைந்து வருகின்றார்கள். இந்த ஒன்றிணைவு நிலைமையானது சிறுபான்மை மக்களின் எதிர்காலத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள உந்து சக்தியாக அமையும் என்று கருதப்படுகின்றது. சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதோடு ஆளுமை இல்லாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படக்கூடிய அபாயம் மேலெழும்பக் கூடுமென்றும் புத்தி ஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பின் தங்கிய ஒரு நிலையில் இருந்து படிப்படியாக மேலெழும்பி வரும் மலையக சமூகத்திற்கு இது மிகுந்த பேரிடியாக அமையும் என்னும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு அதிர்ச்சியில் இருந்து நாடு இன்னும் முழுமையாக மீளவில்லை. இன்னும் அச்ச நிலைமைகள் மக்களின் மனங்களில் குடிகொண்டிருக்கின்றன. குண்டுவெடிப்பினை தொடர்ந்து நாட்டில் பல்வேறு சிக்கல்களும் மேலெழுந்தமையும் நீங்கள் அறிந்த விடயமாகும். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இக்குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றிருந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பில் காணப்பட்ட ஓட்டைகள் அரசியல் முரண்பாடுகள் உள்ளிட்ட காரணிகள் சர்வதேச பயங்கரவாதம் நாட்டில் ஊடுருவுவதற்கு உந்து சக்தியாக அமைந்ததாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நாடு எதிர்கொண்ட பயங்கரவாத அச்சுறுத்தல் முழுமையாக நீக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வலியுறுத்துகின்றபோதும் மக்கள் இதனை முற்றாக ஏற்றுக்கொள்வதாக இல்லை. மீண்டும் நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் தலை தூக்கக்கூடும். எனவே விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி இருக்கின்றனர். இதனிடையே குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் முழுமையாக நிர்மூலம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதன் பின்னர் மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறாமல் தடுக்க முடிந்தமை பாரியதொரு வெற்றியாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெருமை பேசி இருக்கின்றது.
குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்நாட்டில் விஷமிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தி இருந்தனர். இதனை பலரும் கண்டித்துப் பேசி இருந்தனர். சிங்கள – முஸ்லிம் உறவுகள் இதனால் விரிசலடைந்தன. முஸ்லிம்கள் மீதான சந்தேகப் பார்வையும் வலுப்பெற்றது. இந்நிலையில் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற அவநம்பிக்கையை போக்குவதற்கு முறையான கலந்துரையாடல் ஒன்று அவசியமென்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் வலியுறுத்தி இருந்தனர். முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருக்கலாம் என்று சிங்களவர்களிடையே சந்தேகம் நிலவுகின்றது. இதனால் அவர்கள் அச்சமடைந்திருக்கின்றார்கள். இந்நிலையில் சிங்கள மக்களின் சந்தேகத்தை போக்கும் வகையிலும் முஸ்லிம்களின் கௌரவத்திற்கு பாதிப்பற்றதும் இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் முறையான திட்டமிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றினை கட்டமைக்குமாறு பாதுகாப்பு பிரிவினரிடம் கோரிக்கை ஒன்றினையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்திருந்தது.
ஞானசார தேரரின் விடுதலை
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த வியாழக்கிழமை (23) அன்று விடுதலை செய்யப்பட்டார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு காரணமாக இவருக்கு விடுதலை கிடைத்தது. எனினும் இவரது விடுதலை குறித்து அநேகமான பெரும்பான்மை மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில் இன்னும் ஒரு சிலர் கண்டனங்களை தெரிவித்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை ஒருதலைப்பட்சமான செயற்பாடு என்று லங்கா சமசமாஜக்கட்சி குற்றம் சாட்டி இருக்கின்றது. ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின்படி பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் காணப்படலாம். ஆனால் அதனை முறையாக செயற்படுத்தி இருக்க வேண்டும். இவரது விடுதலையினைத் தொடர்ந்து மறுபுறம் பாதிக்கப்பட்டவர்கள் நீதித்துறையினை நம்பும்போது பிரச்சினைகள் ஏற்படுமென்றும் சமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கதாகவே உள்ளது.
இது போன்றே இன்னும் சிலரும் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக குரலெழுப்பி இருக்கின்றனர். ஊடகவியலாளர் பிரகீத் எக்ன லிகொடவின் மனைவி சந்தியாவும் இதில் ஒருவராவார். ஞானசாரரின் விடுதலையால் தனக்கும் குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இவர் கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்திருந்தார். இதேவேளை ஞானசார தேரரை விடுதலை செய்துள்ள நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலையையும் ஜனாதிபதி துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஞானசார தேரரின் விடுதலை முஸ்லிம் மக்களிடையே பல்வேறு அதிர்வலைகளை தோற்றுவித்திருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. இதனிடையே ஞானசார தேரர் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்து பேசி வருகின்றார். அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான செயற்பாடுகள் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எனவே அரசியல்வாதிகள் அநாவசியமான பிரசாரங்களை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார். அரசியல் இலாபம் தேட முயற்சிப்பவர்களை கண்டித்துள்ள தேரர் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றார். பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு சிறந்ததொரு தலைமைத்துவத்தின் அவசியத்தினை வலியுறுத்தியுள்ள அவர் தலைவர் இல்லாமல் போகும் போதும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதும்தான், நாடு சீரழிகின்றது என்பதையும் நினைவுபடுத்தி இருக்கின்றார்.
ஞானசார தேரரின் வருகை சிங்கள பௌத்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தேரர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து தெரிவித்த கருத்துக்களை இப்போது அம்மக்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர். எனினும் நான் ஏற்கனவே கூறியது போன்று முஸ்லிம் சமூகத்தினரிடையே ஒரு அச்ச உணர்வு மேலோங்கி காணப்படுகின்றது. இந்நிலையில் நாட்டை முன்னேற்றுவதற்கும் நாட்டு மக்களை வழிநடத்துவதற்கும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கான தேசிய ரீதியிலான நல்ல நோக்கத்தைக் கொண்டதாக ஒரு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தால் அதனை மக்கள் வரவேற்றிருப்பார்கள் என்று தெரிவித்துள்ள புத்தி ஜீவிகள் ஞானசார தேரருக்கு அளிக்கப்பட்ட பொது மன்னிப்பானது இன ஐக்கியத்திற்கும் நல்லிணக் கத்திற்கும் விடுக்கப்பட்ட பாரிய சவால் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனோடு ஒப்பிடுகையில் ஞானசார தேரர் வெளிப்படுத்தும் சில கருத்துக்கள் தொடர்பில் ஆழமாகவே சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
சிங்கள பௌத்தர் ஒன்றிணைவு
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து சிங்கள பௌத்தர்களிடையே ஒரு இணைந்த ஐக்கியம் மிக்க போக்கு காணப்படுவதனை எம் மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சிங்கள பௌத்த ஒன்றிணைவு இந்த நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்தும் அந்நியர்களிடம் இருந்தும் மீட்டெடுக்க உந்து சக்தியாக அமையும் என எண்ணம் வலுப்பெற்று காணப்படுகின்றது. அந்நிய தலையீடுகள் நாட்டில் அதிகரித்து வருகின்றமை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சில சிங்கள பௌத்தர்களுக்கு இடையிலான விரிசல் நாட்டை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்று விடும் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதேவேளை நாட்டின் அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் விமர்சனங்கள் பலவும் இருந்து வருகின்றன. சிறுபான்மையினரின் தயவு இல்லாத அரசியல் பலத்தை உருவாக்க வேண்டும். சிங்கள பௌத்தர்கள் இது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்றெல்லாம் கருத்துக்கள் வெளிப்படுவதனை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. எவ்வாறெனினும் அடுத்து வரும் தேர்தல்களில் சிங்கள பௌத்தர்களிடையே ஒருமித்த ஐக்கியம் மிக்க போக்கு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலைமையானது சிறுபான்மையினரை பொறுத்த வரையில் அதிலும் மலையக மக்களை பொறுத்தவரையில் பெருமளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகின்றது.
சிங்கள பௌத்தர்கள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் ஜே.வி.பி. உள்ளிட்ட பல கட்சிகளில் அங்கம் வகிக்கின்றனர். இது சிறுபான்மையினரை பொறுத்தவரையில் ஒரு சாதக நிலைமையேயாகும். இதனால் சிறுபான்மையினர் சில சந்தர்ப்பங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு நிலை மேலோங்கி காணப்பட்டது. எனினும் பெரும்பான்மை மக்கள் சமகால சவால்களை வெற்றி கொள்வதை கருத்தில் கொண்டு ஒரு கட்சியை பலப்படுத்த முனைந்து ஐக்கியப்படுத்துமிடத்து சிறுபான்மையினர் செல்லாக்காசாகும் வாய்ப்புள்ளது.
ஒரு காலத்தில் இலங்கை அரசியலில் அமரர் தொண்டமான் ‘கிங் மேக்கராக’ விளங்கினார். பேரம் பேசும் சக்தியினை மையப்படுத்தி மலையக மக்கள் உரிமைகளை பெற்றுக் கொள்ள வழிவகுத்தார். தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதிக்கமும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வலுப்பெற்று காணப்பட்டது. சிறுபான்மையினரின் எழுச்சி பெரும்பான்மை அரசியல்வாதிகளின் கண்களை உறுத்தி இருந்தது. இது பல்வேறு பாதக விளைவுகளுக்கும் வித்திட்டது.
விரும்பத்தகாத நிகழ்வுகள்
பெரும்பான்மை சொல்வதனை கேட்டுக்கொண்டு இந்நாட்டில் சிறுபான்மையினர் அடங்கி நடக்க வேண்டும். உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடாது. அவ்வாறு சிறுபான்மையினர் குரல் கொடுப்பார்களாக இருந்தால் நாங்கள் வேறுவிதமாக நடந்து கொள்ள வேண்டி வரும் என்பது பேரினவாதிகளின் நிலைப்பாடாகவுள்ளது. ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது. அவ்வாறு அடங்கி நடக்க வேண்டிய அவசியமும் கிடையாது என்றெல்லாம் வலியுறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றபோதும் இவையெல்லாம் பேரினவாதிகளின் செவிகளில் ஏறுவதில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அடக்குமுறை, ஒடுக்குமுறை, உரிமை மறுப்பு என்பது மட்டும்தான். இதனடிப்படையில் சிறு பான்மையினர் மேலெழும்பும் போதெல் லாம் பேரினவாதிகளின் செயற்பாடு விரும்பத்தகாத முறையில் அமைந்திருந் தது.
இந்திய வம்சாவளி மக்கள் அரசியலில் கோலோச்சி விடுவர் என்கிற பயம் அம்மக்களின் பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பவற்றை இனவாதிகள் பறித்தெடுக்க உந்துசக்தியானது. இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் கூட மறைந்தபாடில்லை. 1956 ஆம் ஆண்டின் தனிச்சிங்கள சட்டம் இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு மேலும் ஒரு அடியாக அமைந்தது. தனிச் சிங்கள சட்டம் என்னும் கொள்கை இந்த நாட்டின் பொது வாழ்க்கையில் தமிழ் மொழியை அதற்குரிய ஸ்தானத்தில் இருந்து வெறுமனே விலக்கி வைப்பதை மட்டும் கருதவில்லை. ஆனால் அது இந்த நாட்டின் தமிழ் மொழி பேசும் மக்களை இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார வாழ்க்கை என்பவற்றில் இருந்தே வெளியே தள்ளி வைக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அ.அமிர்தலிங்கம் (1964) தெரிவித்திருந்தமை நோக்கத்தக்கதாக உள்ளது. பெரும்பான்மையை திருப்திப்படுத்தும் கலாசாரம் இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளை மறுதலித்தது. பெரும்பான்மை சமூகத்தினரை பகைத்துக்கொள்ள விரும்பாத அரசியல்வாதிகள் தான் செய்வது பிழையென்று தெரிந்தும் பெரும்பான்மையினரை திருப்திப்படுத்துவதற்காகவும் தமது அரசியல் இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் சிலர் பிழையான செயல்களை தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தனர்.
1956 ஆம் ஆண்டில் தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டதை ஆரம்பத்தில் எதிர்த்த அரசியல்வாதிகள் கூட பெரும்பான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக பின்னர் தனது நிலையை மாற்றிக்கொண்டு இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உந்து சக்தியாக இருந்தனர். இந்நாட்டில் இடம்பெற்ற வன்செயல்கள் சிறுபான்மையினரின் உரிமைகளை ஒடுக்குவதாக இருந்தன. முஸ்லிம் சமூகத்தினரை வர்த்தக ரீதியில் முடக்குவது இனவாதிகளின் திட்டமிட்ட நடைமுறைகளில் ஒன்றாகும் என்பதும் சொல்லித் தெரியவேண்டிய விடயமல்ல. இனவாதிகளின் கொடுமைகளை சிறுபான்மை மக்கள் சகித்துக் கொண்ட வரலாறுகள் இலங்கையில் அதிகமாகவே காணப்படுகின்றன. காலத்துக்கு காலம் திசை மாறும் இனவாதம் சிறுபான்மை இனம் ஒவ்வொன்றையும் பட்டியல் முறைப்படி குறிவைக்கின்றது. இந்த வரலாறு என்று ஓயப்போகின்றது என்று தெரியவில்லை.
பிரித்தானியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பெரும்பான்மை, சிறுபான்மை என்பதற்கு அர்த்தங்கள் வேறாக உள்ளன. கொள்கை ரீதியாக அரசியலில் பெரும்பான்மை, அரசியலில் சிறுபான்மை என்று இங்கு நோக்கப்படுகின்றது. எனினும் இலங்கையில் பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனம் என்கிற ரீதியில் நோக்கப்படுவதாக புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர். பெரும்பான்மை இனம் நினைத்ததை சாதிக்கும் வல்லமை கொண்டதாக விளங்குகின்றது. சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை இயற்றுதல், குடியேற்றத்திட்டங்களை ஏற்படுத்துதல் எனப் பல விடயங்களும் பெரும்பான்மையின் ஆதிக்கத்தினால் சாத்தியமாகின்றது. அரசியல் ரீதியான சிறுபான்மைக்கு பதிலாக இன ரீதியான சிறுபான்மை முன்வைக்கப்பட்டுள்ளமை சிறுபான்மையினரின் உரிமைகள் பறிபோவதற்கு வாய்ப்பளிக்கின்றது. இது மிகவும் ஆபத்தான ஒரு நிலையாகும். இலங்கையில் சிறுபான்மையினரின் பின்தங்கிய நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சிறுபான்மையினர் பெரும்பான்மையினரில் தங்கி இருக்கக்கூடிய ஒரு நிலைமையும் காணப்படுகின்றது. பெரும்பான்மை கையில் ஆட்சியதிகாரம் உள்ள நிலையில் சிறுபான்மையினர் மௌனிக்க வேண்டிய நிலை காணப்படுவதையும் குறிப்பிடுதல் வேண்டும். சிறுபான்மையினர் அரசியல் ஆதிக்கமில்லாத நிலையில் சிங்களவர்களுடன் இணைந்து செயற்படும் ஒரு போக்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
மழுங்கடிப்பு நிலை
நாட்டின் சமகால நிலைமைகளுக்கு மத்தியில் சிங்கள பௌத்தர்களின் இணைந்த செயற்பாடு வலுப்பெறுமாகயிருந்தால் சிறுபான்மையினரின் உரி மைக் கோஷங்கள் மழுங்கடிக்கப்படும் நிலைமை உருவாகும். சிறுபான்மையினரின் வகிபங்கு அரசியலில் ஆதிக்கமில்லாத நிலையில் சிறுபான்மையினரை வேரறுக்கும் இனவாதிகளின் கனவு சாத் தியமாகும். வடக்கு மக்களின் பிரச்சினைகள் அதிகமுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகள் அரசியல் கைதிகளின் விடுதலை, நில மீட்பு தேவைப்பாடு, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எனப்பல விடயங்கள் குறித்தும் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மலை யக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை தொடர்பி லும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, சமூக மேம்பாடு, தொழில் விருத்தி செயற்பாடுகள் என்று இன்னும் பல விடயங்களும் மலையக மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய விடயங்களாக உள் ளன. முஸ்லிம் மக்கள் அரசியல் அதிகாரம் உள்ளிட்ட மேலும் பல விடயங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெரும்பான்மையினரின் அரசியல் ஆதிக்கம் வலுப்பெறுமிடத்து சிறுபான்மையினரின் நிலைமை கேள் விக் குறியாகும். பேரினவாதம் மேம்படுகையில் சிறுபான்மையினரின் கோரிக்கை களை முன் வைப்பது பெரும்பாலும் சாதக விளைவுகளை பெற்றுத்தர மாட்டாது.
இதேவேளை நிலைமை எதுவாக இருந்தாலும் பேரம் பேசும் சக்தியினை சிறுபான்மை கட்சிகள் ஒரு போதும் கைவிடக் கூடாது என்றும் வெற்றி தோல்வியினை பொருட்படுத்தாது சிறுபான்மை சக்திகள் ஒன்றுபட்டு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதனை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஜே.வி.பி. வலியுறுத்துகின்றது. மேலும் மலையக அரசியல்வாதிகளின் முரண்பாடான போக்குகளையும், தனது அரசியல் இருப்பினை தக்கவைத்துக்கொள்ள அவர்களில் சிலர் ஆடும் நாடகத்தினையும் ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கின்றார். முதலாளித்துவ அரசாங்கத்தினை பாதுகாக்கும் நோக்கில் மலையக அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. அரசாங்கத்தின் அடிவருடிகளான இவர்கள் பொதுமக்கள் நலன்களை பேணுவதை காட்டிலும் சுய நலன்களை பேணுவதில் அதிகளவில் அக்கறை காட்டுகின்றனர். மக்கள் பிழையான போக்கி னைக் கொண்ட அரசியல்வாதிகளின் பிழையான கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு வருகின்றனர். இதிலிருந்தும் அம்மக்களை மீட்டெடுக்க வேண்டும். முதலாளித்துவ அரசாங்கத்தினால் தொழிலாளர்களின் பிரச்சினைகள் புறந்தள்ளப்படுகின்றன. இந்நிலையில் பாட்டாளிகளின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கக் கூடிய பாட்டாளி வர்க்க அரசு உருவாக வேண்டும். இதன் மூலமே பாட்டாளிகள் நன்மையடையும் நிலை உருவாகும் என்கிறார் இராமலிங்கம் சந்திரசேகர்.
சிறுபான்மையினர் வாக்கு
நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக் கம், மாகாணசபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல், உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் என்பவற்றில் சிறுபான்மையின ரின் பங்களிப்பு கடந்த காலத்தில் அதிகமாக இருந்தது. சிறுபான்மை மக்கள் ஐக்கிய தேசிய கட்சியினை ஆதரிக்கும் கலாசாரம் அதிகமாகவே இருந்து வந்ததனையும் அவதானிக்கக் கூடியதாகவே இருந்தது. எனினும் அரசாங்கத்தினை உருவாக்குவதற்கு தோள் கொடுத்தவர்களுக்கு அரசாங்கம் உரியவாறு தோள் கொடுத்ததா? என்பதெல்லாம் கேள்விக்குரிய ஒரு விடயமேயாகும். இதேவேளை ஐ.தே.க. விற்கு ஆதரவு வழங்கிய மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் உரிய நன்மைகளை பெற்று கொண்டார்களா? என்றும் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.க.வின் நிலைமை மோசமானதாக அமையக் கூடும் என்று இப்போதே கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார் 25 வீதத்துக்கும் குறைவான சிங்கள வர்களின் வாக்குகளை இக்கட்சி பெற்றுக் கொள்ளக் கூடும் என்று புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் சிறு பான்மை கட்சிகள் என்ன முடிவுகளை மேற்கொள்ளப் போகின்றன?
இதேவேளை சிறுபான்மை கட்சிகள் குறிப்பாக மலையக கட்சிகள் ஏதேனும் ஒரு பெரும்பான்மை கட்சியின் பக்கம் சார்ந்துள்ளதால் பேரம் பேசும் நிலை மைகள் மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி, இஸ்லாமிய பயங்கரவாத எதிர்நிலைகள் என்பன சிங்கள பௌத்த மக்களை ஒரு நிலைப் படுத்தியுள்ள நிலையில் சிறுபான்மை கட்சிகள் பொருத்தமான காய்நகர்த் தல்களை மேற்கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு, மலையகம் என்பவற் றுக்கு அப்பால் இக்கட்சிகள் இணக்கப் பாட்டுடன் செயற்படவேண்டிய தேவை யும் மேலெழுந்திருக்கின்றன. தனிப் பட்ட குரோதங்கள், விரிசல்கள் என்ப வற்றை மறந்து விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. நாட்டின் சம கால சூழ்நிலை சுற்றுலாத்துறையோடு சிறுபான்மையினரின் எதிர்காலத்தையும் வீழ்ச்சியடையச் செய்து விடுமோ? என்ற இயல்பான அச்சமும் மேலோங்கியே காணப்படுகின்றது.
துரைசாமி நடராஜா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM