அகதிகளையும் தஞ்சம் தேடுவோரையும் வரவேற்பதில் யாழ்ப்பாண மக்கள் உறுதியாக உள்ளனர் என சகவாழ்வுக்கான யாழ் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
யாழ்ப்பாணத்தில் தஞ்சம் தேடி வந்த ஒரு அகதிக் குடும்பம், அவர்களின் பாதுகாப்புக்கு இங்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற பொலிசாரின் எச்சரிக்கை காரணமாக, மீண்டும் வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதை இட்டு யாழ்ப்பாணத்தில் வாழும் பல்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் என்ற வகையில் எங்கள் கவலையையும் வெட்கத்தையும் வெளிப்படுத்துகிறோம்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகள் உயிர்த்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தாக்குதல்களைத் தொடர்ந்து பல எதிரீட்டு சம்பவங்களை சந்தித்துவரும் பின்புலத்தில் இந்த நிகழ்வும் நடந்துள்ளது.ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து தெற்கில் தாம் வசித்த வாடகை வீடுகளிலிருந்தும், தற்காலிகமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடங்களிலிருந்தும் தப்பி ஓடவேண்டிய அனுபவங்களை இந்த அகதிகள் மீண்டும் மீண்டும் சந்தித்துள்ளனர்.
இவ்வாறான அவலமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு,ஒரு அகதிக் குடும்பத்துக்கு யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர் ஒருவரினால் வரவேற்பு வழங்கப்பட்டு அவரின் வீட்டிலே தங்க இடமும் வழங்கப்பட்டது.
அந்தக் குடும்பத்தினர் யாழ்ப்பாண பொலிஸில் சென்று தம்மைப் பதிவு செய்தனர்.ஆனால், பொலிசார் பதிவுகளை திரும்பிக் கொடுத்துவிட்டு, இங்கு இந்துத் தீவிரவாதிகள் அவர்களை தாக்கினால் தம்மால் அகதி மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என்ற காரணத்தினைக் கூறியதால், இன்னொரு பாதுகாப்பான இடத்தை நோக்கி அகதிகள் மீண்டும் ஓட வேண்டிய நிலை உருவானது.
எமக்கு இக்கட்டான காலங்களில், பலரின் கருணையான செயல்களால், அவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய போதும், எமக்கு அடைக்கலம் தந்ததை பெரிதும் அனுபவித்த யாழ்ப்பாண சமூகமாகிய எம்மத்தியில் ஒரு அகதிக் குடும்பத்திற்குக் கூட தஞ்சம் வழங்க முடியவில்லை என்பது வருந்தத்தக்கது.
இலங்கையில் தற்போது அகதிகளாகவும் தஞ்சம் கோருவோராகவும் வந்துள்ளவர்கள் மத்தியில் அஹமாதி, ஷியா, சுன்னி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மற்றும் சமயம் சாராதவர்கள் உள்ளடங்கிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களும் அடங்குவர்.
தீவிரவாதக் குழுக்களாலும் காடையர்களாலும் தாக்கப் பட்டதாலும், பாகுபாடுள்ள சட்டங்கள் நடைமுறைகளை அந்நாடுகளில் எதிர்நோக்கியதாலுமே, அவர்கள் அகதிகளாக இங்கு வந்துள்ளனர். தமது தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு தஞ்சம் வழங்கும் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படும் வரையே அவர்கள் இலங்கையில் தங்குகின்றனர்.
தமது சொந்த இடங்களில் அனுபவித்த அச்சம் மற்றும் நிச்சயமற்ற நிலையை மீண்டும் ஒரு பாதுகாப்பான இடமெனக் கருதிய இலங்கையிலும் அனுபவிக்க நேர்ந்துள்ளது.
பல்வேறு இடப்பெயர்வுகள், இன மத வெறிக் கும்பல்களின் தாக்குதல்கள் என்பவை இலங்கைத் தமிழர்களுக்கு நெருக்கமான உடன் அனுபவங்கள்.யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் அகதி முகாம்கள் பரவி இருந்தன. மேலும் தமிழர்கள் தொடர்ந்தும் நாட்டினுள் அகதிகளாகவும் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தும் உள்ளனர். அகதிகள் அனுபவிக்கும் வலிகள், அச்சம், நிச்சயமற்ற நிலை மற்றும் உடல், உள ரீதியான கஷ்டங்களை எல்லாம் நாம் ஆழமாக அறிவோம். அதிகாரிகளும், அகதிகளைக் கையாளும் முகவர்களும் தமது கடமையை ஒழுங்காக செய்யாதவிடத்து அகதிகள் அனுபவிக்கும் கைவிடப்பட்ட நிலையையும் நாம் நன்கு அறிவோம்.
அகதிகளுக்கும் தஞ்சம் கோருவோருக்கும் எமது வீடுகளை திறந்து வரவேற்கின்றோம் என்பதை பல்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றும் யாழ்ப்பாண வாசிகளாகிய நாங்கள் திடமாக கூறிக் கொள்கின்றோம். எல்லாவித சமூகங்களையும் அணைத்துக் கொள்ளும் வரலாறுடைய யாழ்பாணம் தொடர்ந்தும் அவ்வாறான இடமாகவே இருக்க வேண்டும்.
அண்மைக் காலங்களில் கும்பல் தாக்குதல்களையும், வன்முறைகளையும் அனுபவித்த அகதிகளை குறிப்பாக வரவேற்கின்றோம். அகதிகளுக்கு யாழ்ப்பாண மக்கள் தமது ஆதரவையும் சகோதரத்துவ வெளிப்பாடுகளையும் காட்டும் போது, அவற்றை முறியடிக்க இன மத வாத அழுத்தங்களை காரணம் காட்டாது தமது கடமைகளை தவறாது புரியும்படி பொலிஸ் அதிகாரிகளிடமும், இந்தப் பிராந்தியத்தில் நிர்வாகப் பொறுப்பு வகிக்கும் நபர்களிடமும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
அகதிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவும், உறைவிடம் மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இலங்கை அரசாங்கத்துக்கு பொறுப்புள்ளது.பலவிதப்பட்ட வன்முறைகளை சந்தித்த நாட்டின் மக்கள் என்ற வகையில், நாட்டின் பல பிரஜைகள் உலகம் முழுவதும் அகதிகளாக வாழும் நிலையில், அகதிகளை வரவேற்கக்கூடிய திறந்த மனப்பாங்குடைய இடமாக மாறுவதற்கு நாம் மேலும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM