கர்ப்ப காலத்தில் பெண்களின் வயிற்றின் வெளிப்புற தோலில் தழும்புகள் ஏற்படுகின்றன. பிரசவத்தின் பின்னரும் சிறிது காலம் இவ் அடையாளம் நீடிப்பதுண்டு. பெண்கள் பொதுவாக தமது அழகு பற்றி அதிகம் சிந்திப்பவர்கள். ஆண்களை விட அழகு பற்றிய அக்கறை இவர்களில் அதிகம். அதுவும் இன்றைய நவீன உலக விளம்பர மாயையில் எடுபட்டு தமது அழகை மிகையாக காட்ட பல்வேறு அழகு சாதனங்களை உபயோகிக்கின்றனர்.
முகத்தில் ஒரு சில பரு அல்லது கரும்புள்ளி ஏற்பட்டால் கூட மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஆணாதிக்க உலகில் பெண்கள் அழகு பதுமைகளாக நோக்கப்படுவதும் இதற்கு காரணம். நவீன உலகம் விளம்பரம் மூலம் இன்று ஆண்களையும் கூட அழகு தொடர்பாக ஆக்கிரமித்துள்ளது.
அழகு அவசியமானது தான். இயல்பான இயற்கையான அழகுடன் உடலை துப்புரவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் போதுமானது. அலங்காரங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமே. நான் இதைக் கூறும் போது பலருக்கு பிடிக்காது என்பதை அறிவேன்.
பெண்களின் வயிற்று சருமத்தில் ஏற்படும் அடையாளங்கள் அப்படியொன்றும் அலங்கோலமானவை அல்ல. அவை கூட ஒருவித அழகுதான். ஒருசிலரில் தான் சற்று அதிகமான தழும்புகள் தோன்றுவதுண்டு. இவற்றால் எதுவித தீமையும் கிடையாது. இது ஒரு நோயுமல்ல. எனவே, பெண்களே இதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் அழகை இவை குறைக்கும் என்று கருதினால் அதை மறைத்து ஆடை அணியுங்கள். இவ் அடையாளங்கள் காலப்போக்கில் மறைந்து விடும். அடுத்தடுத்து குழந்தை பெறுபவர்களில் தோல் சுருக்கம் நீடிப்பதுண்டு. இது தீமையானதல்ல.
அடையாளங்கள் ஏற்படுவதற்கான காரணம்
கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பையுள் குழந்தை வளர வளர அது விரிவடையும். கர்ப்பப்பை விரிவடையும் போது அதற்கு இடம் கொடுப்பதற்காக வயிற்று தசைகளும் விரிவடைகின்றன. இதன் பயனாகவே தோற்பகுதியும் விரிந்து அடையாளங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக இவ் அடையாளங்கள் வயிற்றுப் பகுதியில் ஏற்படுகின்ற போதிலும் சிலரில் இவை இடுப்பு, தொடை உள்ளிட்ட பிற பகுதிகளிலும் ஏற்படலாம். இவை பாரிய தழும்புகளாக மாறுவதில்லை. பிரசவத்தின் பின்னர் கர்ப்பப்பை சுருங்கும் போது வயிறும் ஒடுங்கும். விரிவடைந்திருந்த தசை இழையங்கள் கிட்டத்தட்டபழைய நிலைக்கு திரும்பினாலும் விரிந்து சுருங்கிய சரும பகுதியில் அடையாளங்கள் நீடிக்கும். இவை அசிங்கமானவை அல்ல. அழகுக்கு பாதகமானவையுமல்ல.
யாருக்கு அதிக தழும்புகள் ஏற்படுகின்றன?
ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல இளவயதில் கருத்தரிக்கும் போது அடையாளங்கள் எற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இவர்களது சருமம் மென்மையாக இருப்பதே இதற்கு காரணம். கர்ப்ப காலத்தில் அதிக எடையுடையோர் ஒன்றிற்கு மேற்பட்ட சிசுக்களை கர்ப்பப்பையில் ஒரே சூலில் சுமப்பவர்கள், எடை அதிகரித்ததான குழந்தையை சுமப்பவர்கள், பன்னீர்க்குடத்தில் அதிகளவு திரவம் கொண்டிருப்பவர்கள் என்போரில் கூடுதலான தழும்பு ஏற்படலாம். இத்தழும்புகள் இயற்கையான சரும நிறத்தை விட வெளிறிய நிறத்தில் தேமல் போல இருக்கும்.
சிகிச்சை
இது ஒரு நோயல்ல என்பதால் இதற்கு எதுவித சிகிச்சையும் அவசியமில்லை. சிலர் அழகுக்காக சில ஸ்கின் கிறீம்களை பாவிப்பார்கள். எனினும் அவசியமில்லை. சற்று ஈரப்பதமாக வைத்திருக்கும். இத்தழும்புகள் பெரும்பாலும் ஒரு வருடத்துக்குள் வெகுவாக குறைந்து சிலரில் மறைந்து விடும். எனவே, இதை அழகோடு தொடர்புபடுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாகாதீர்கள். இயற்கையோடு நிகழும் மாற்றங்களை அனுசரித்து, பழகிக் கொள்ளுங்கள்.
(வைத்தியர்: ச. முருகானந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM