முள்ளிவாய்க்காலின் மீதான பேரினவாதப் பேரவலம் நிகழ்ந்து இன்றோடு தசாப்தம் ஒன்று பூர்த்தியடைந்திருக்கின்ற தருணத்தில் பேரினவாத பெருந்தகைகளால் ஓலமிடப்பட்டதான “பயங்கரவாதத்திடமிருந்து சுதந்திரம், இன நல்லிணக்கம், இன ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு, புரிந்துணர்வு, சமவுரிமை மதச்சுதந்திரம், மொழி உரிமை” உள்ளிட்ட இன்னோரன்ன வாசனை நிறைந்த வார்த்தைகளுக்கெல்லாம் இன்று வரையிலும் அர்த்தம் தேடிக் கொண்டிருக்கிறோமே தவிர அதனைக் கண்டடையவில்லை என்பதுதான் ஜீரணிக்க முடியாத நிதர்சனமாக நீடித்துக்கொண்டிருக்கிறது.
முள்ளிவாய்க்காலின் மரண ஓலமும் அதன் வடுக்களும் மாறுவதற்கும் மறைவதற்கும் முன்னரே மீண்டும் ஒரு பயங்கரவாத படுகொலைகளுக்கும் இனவாத, மதவாத, வன்முறைகளுக்கும் ஈடுகட்ட முடியாத இழப்புக்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய விதிக்குள் வீழ்ந்து விட்டதாக ஒரு கனமான எண்ணப்பாடு ஒட்டிக்கொண்டுவிட்டது.
இனவாதமும், மதவாதமும் ஆழமாக வேரூன்றிவிட்டதால் இதிலிருந்து நாமும் நாடும் மீள்வதும் மீள முடியுமென்பதும் கடினமான ஒன்றாகத்தான் இருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து ஒட்டுமொத்த தமிழர்களையும் புலிகளாகப் பார்த்த சிங்கள சமூகத்தார் இன்று புலிகளை “நிலவுரிமை போராளிகளாகப்” பார்க்கின்றனர்.
மறுபுறத்தில் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு இயன்றளவிலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கி ஒத்தாதசை புரிந்த முஸ்லிம்கள்மீது அதே சிங்கள சமூகத்தார் பயங்கரவாத பட்டம் சூட்டி ஒட்டுமொத்த முஸ்லிம்கள்மீதும் வன்முறைகளையும் குரோதங்களையும் வெளிப்படுத்துகின்றனர். இது தான் இனவாதத்தின் இயல்பு.
என்றாலும் “இதுவும் கடந்து போகும்” என்ற உபதேசத்தை எல்லோருமாக ஒருதடைவை உச்சரித்துப்பார்க்கத் தூண்டுவது பொருத்தமாகும்.
எமது நாடு இதுவரை காலமும் இழப்புக்களை மாத்திரமே எதிர்கொண்டிருக்கிறது. ஆதலால் அடுத்த கட்டத்துக்கான நகர்வு என்பதை கனவிலும் காணமுடியாதிருக்கிறது. இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னரும் எமது நாடு “அபிவிருத்தி அடைந்துவரும் நாடு” என்றே பாடப்புத்தகத்தினூடாக போதிக்கப்பட்டது. அதே போதனை ஐம்பது வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட வார்த்தை பிசகாது அவ்வாறே போதிக்கப்படுகிறது.
முப்பது வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வடுக்களை சுமந்தவாறே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது வாழ்வாதாரம், பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை என்பதைக் கூறுவதற்கு முன்னர் அவர்களுக்கான நிலவுடைமை கூட பூர்த்தி செய்யப்படவில்லை என்பது தான் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
இவ்வாறு ஒரு சமூகத்தின் மீதான பார்வையும் அக்கறையும் தளர்வுபட்டு நிற்கின்ற சந்தர்ப்பத்தில் தான் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா தினத்தில் மதவாத பயங்கரவாதம் ஆடிய பேயாட்டத்தில் அப்பாவிகளின் உயிர்கள் குடிக்கப்பட்டன. நொடிப்பொழுதில் எல்லாமே நிறைவேறிற்று. இது மீண்டுவர முடியாத அதிர்ச்சியாக உறைந்து கிடக்கிறது.
இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா தினத்தில் நடந்தேற்றப்பட்டதான இரக்கமற்ற ஈனச் செயற்பாடு இஸ்லாத்தை கோடிட்டுக் காட்டியிருப்பதாலேயே அது ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சங்கடத்திற்குள் தள்ளியிருக்கின்றது. என்றாலும் இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் அதேநேரம் சந்தர்ப்ப வாதத்துக்கும் உண்மையை உணரக்கூடிய பக்குவம் இராது என்பதன் வெளிப்பாடே முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதலும் வன்முறைகளுமாகும்.
“உன்னைப்போல் உன் அயலானை நேசி” “ஒரு கன்னத்தில் அறைந்தால் உனது மறு கன்னத்தையும் காட்டு” “எதிரியை மன்னித்துவிடு” “ஒரு முறையல்ல ஏழு – எழுபது முறை மன்னித்துவிடு” என்று போதித்த இயேசுக்கிறிஸ்து பெரிய வெள்ளியன்று சிலுவையில் தொங்கி உயிர்விடும் தறுவாயில் தன்னை நிந்தித்தவர்களையும், வஞ்சித்தவர்களையும் தனது மரணத்துக்கு காரணமானவர்களையும் நினைத்து மனதுருகி, “பிதாவே இவர்கள் அறியாது செய்கிறார்கள். இவர்களை மன்னியும்” என்று இரந்து வேண்டி உயிர் துறக்கிறார்.
இப்படியான தேவ படிப்பினையில் பயிற்சி பெற்ற கிறிஸ்தவர்கள் இரக்கமுள்ளவர்கள் என்பதை இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத்தின் பின்னரும் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
இரக்கத்தின் தேவனாம் பரமபிதாவின் தூதுவராகவும் இலங்கைக் கிறிஸ்தவர்களின் நல்ல மேய்ப்பனாகவும் மதத் தலைவர்களில் எடுத்துக்காட்டாகவும் சமாதானத்தின் யுக புருஷராகவும் தலைமைத்துவங்களின் வழிகாட்டியாகவும் திகழ்கின்ற பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, எமது நாட்டினதும் மக்களினதும் அடுத்த கட்டத்தை மிக உன்னதமாகக் கையாண்டிருந்தது முழு உலகமும் அறிந்ததே.
ஆனாலும் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட மதவாதப் பயங்கரவாதமானது திசைமாறி இனவாத மற்றும் சந்தர்ப்பவாத வன்முறையாக இன்று உருவெடுத்து நிற்கிறது.
இனவாதம், சந்தர்ப்பவாதம் மற்றும் மதவாதம் என்பன ஒன்று சேர்ந்துவிட்ட காரணத்தால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களினதும் அவர்களது உறவுகளினதும் அதேநேரம் இன்றுவரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவோரினதும் மீதான இரக்கம், கரிசனை நினைப்பு என்பன மழுங்கடிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள் என்பதே பொருத்தமாகிறது.
அன்று பாதிக்கப்பட்டவர்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான வழிவகை ஏற்படுத்தப்படாத கட்டத்துக்குள்ளேயே முஸ்லிம்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மீதான வன்முறையானது எதிர்கால அரசியல் இலாபம் கருதியதும் குரோத எண்ணம் கொண்டதுமாகவே அறியப்படுகிறது.
இனவாதம் என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மாத்திரம் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. அது அனைத்து தரப்பினரிடத்திலும் ஊறிப்போயுள்ள அரக்க குணமாகும். இதனை நேரடியாகவே இன்று கண்டுகொண்டிருக்கிறோம்.
சமாதானத்தின் யுக புருஷர் பேராயர்
நீர்கொழும்பில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை அறிந்த பேராயர் மறுதினம் அங்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். பள்ளிவாசலுக்கும் சென்று மதத்தலைவர்களுடன் கலந்துரையாடியது மாத்திரமன்றி நாட்டுக்கும் மக்களுக்கும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கும் சமாதானம், ஐக்கியம், சகவாழ்வு குறித்த நல்ல செய்தியை வழங்கியிருந்தார்.
அன்பு, கருணை, இரக்கம், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை அனைத்தும் பொருந்தியவராய் பேராயர் செயற்பட்டிருந்தார். ஆனாலும் இந்த நெகிழ்வுத் தன்மையானது ஏனைய தரப்பினரிடத்தில் காணப்படவில்லை.
முஸ்லிம்கள் தாக்குதலுக்கு இலக்கான பிரதேசங்களுக்கு படையெடுத்த அரசியல்வாதிகள் ஈஸ்டர் தினத்தன்று உயிரிழந்தவர்களது உறவினர்களை சந்தித்ததாகவோ வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றோரை சந்தித்துப் பேசி ஆறுதல் கூறியதாகவோ தெரியவில்லை.
இத்தகைய வேறுபாட்டு சிந்தனைகள் மாற வேண்டும். ஐக்கியம் பிறப்பதற்கும் புரிந்துணர்வுக்கும் இரக்கம், தயாள குணம் குடிகொள்ள வேண்டும்.
வன்முறை வேண்டாமே
இன்று எமது நாடு வன்முறைகளாலும் குரோதங்களாலும் சூழப்பட்டிருக்கிறது. எந்த இனத்தவராக இருந்தாலும் இனங்களின் மீதான வன்முறையும் கொடிய பார்வையும் இணைந்து எமது நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கின்றன. அன்பை அருகச்செய்து வெறுப்பை விதைக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் 83 கறுப்பு ஜூலைக் கலவரத்தையும் சற்று மீட்டிப் பார்த்தோமானால் அன்று அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். தமிழர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அரசாங்கத்தினதும் ஆயுதப்படையினதும் தயவில் அனைத்தும் நடந்தேறின.
அந்த வரிசையில் கடந்த பத்து வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் இந்நாட்டில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எந்தளவில் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டார்களோ நிர்க்கதியாக்கப்பட்டார்களோ எவ்வாறு தமிழர்கள் மீது கொடிய பார்வை வீசப்பட்டதோ அதே நிலைமை இன்று முஸ்லிம்கள் மீதும் காட்டப்படுகின்றது.
பேரினவாதிகளினதும் பிற்போக்கு சிந்தனையாளர்களினதும் செயற்பாடுகளால் இன்று முஸ்லிம்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். முஸ்லிம்களது சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. நிர்க்கதி நிலைகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. இது எமது நாட்டின் எதிர்காலத்துக்கு உகந்ததாக இல்லை. இந்நிலை கடந்து போக வேண்டும்.
இறுதியாக நாடும், நாட்டு மக்களும் இன்று மீண்டும் அதள பாதாளத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதாய் ஒரு உணர்வு. இன்றளவிலான நிலைமைகளுக்கு நாட்டின் இரு வேறு தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் மக்கள் குற்றவாளிகளாகப் பார்க்கின்றனர்.
முப்பது வருடகால யுத்தம் முள்ளிவாய்க்கால் அவலத்தில் முடிவுற்றதற்கும் அதன் பின்னரான பராமுக நடவடிக்கைகளுக்கும் உயிர்ப்பு விழா நாளில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான செயற்பாட்டுக்கும் இன்று வரையிலான இன வன்முறைகளுக்கும் அரச மற்றும் அரசியல் இயந்திரங்களே பின்னணிக் காரணிகள்.
அரசியல்வாதிகளே… மக்களுக்காகவே நீங்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகிறீர்கள். ஆகவே உங்களது அரசியல் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக இருக்கக்கூடாது.
மதத்தலைவர்களே… நல்லெண்ணங்களை விதையுங்கள். நல்வழிகாட்டியாய் மாறுங்கள். அன்பினால் பகைமையை வெல்லலாம் என்பதை எடுத்துரையுங்கள்.
இன்னும் ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும் எமக்குப் பின்னால் வரும் சந்ததியினர் “எமது நாடு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு” என்ற சொற்றொடரை பாடப்புத்தகத்தில் பார்க்காதிருக்கும் வகையில் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
நாடு சிந்திக்கப்படட்டும்.
மனிதம் மதிக்கப்படட்டும்.
மக்கள் மாண்புறட்டும்.
கடந்தவை கடந்தவையாகட்டும். புதிய தலைமுறையாய் பயணிப்போம். சகலரும் சமாதானத்துக்காய் பிரார்த்திப்போம்.
ஜே.ஜி.ஸ்டீபன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM