ஒரு பாம்பு கடித்து விட்டது என்பதற்காக கண்டகண்ட பாம்மையெல்லாம் அடித்துவிட வேண்டும் என்று கணிப்பது போன்று உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு குழுவினர் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டார்கள் என்பதற்காக இந்நாட்டில் வாழ்கின்ற அத்தனை முஸ்லிம்களையும் தங்களுக்கு இயலுமான ரீதியில் பலி தீர்க்க முனைவது எந்த வகையில் நியாயம்?
ஏப்ரல் 21 தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் பெயர்களையோ அல்லது அவர்களது அமைப்பின் பெயரையோ உச்சரிப்பதற்குக் கூட அச்சமும் வெட்கமும் முஸ்லிம்கள் கொண்டுள்ள சூழலில், அவ்வமைப்பை யார் வளர்த்தது என்பதை நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம் என அமைச்சர் தலதா அத்துகோரள கூறியிருக்கிறார்.
இருந்தும், இத்தாக்குதல்களை நடத்தியவர்களைக் கண்டுபிடிக்கும் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் மக்கள் தங்களது பூரண ஒத்துழைப்பை அந்நாள் முதல் வழங்கி வருகிறார்கள். நாட்டில் மீண்டும் அமைதிவாழ்வு திரும்ப வேண்டும் என்ற நோக்கில் தங்களுக்கு முடிந்த ஒத்துழைப்புக்களை முஸ்லிம்கள் வழங்கி வருகின்றனர். இந்தச் சூழலில் அவர்களையும் ஏனைய மக்களையும் நிம்மதியாக வாழவிடாது சட்டமும் ஒழுங்கும் செயற்பாட்டில் உள்ள வேளையில் திட்டமிட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் படுவது நல்லதல்ல. இது வாழ்வுரிமையின் மீதான சந்தேகத்தையும், ஜனநாயக நாட்டின் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான பாதுகாப்பின் மீதான கேள்வியையும் எழுப்பி இருப்பதாகக் கருதப்படுகிறது. அனைத்து மக்களினதும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் நோக்கப்படுகிறது.
நாம் அனைவரும் இலங்கையர். இல ங்கை என்ற ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகப் பிரஜைகளுக்கு நல்வாழ்வு கிட்டச் செய்வதே ஜனநாயகத்தின் குறிக் கோளாகும். ஜனநாயக நாட் டில் வாழும் மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமையுமுண்டு. ஒரு சமூகத்தைச் சார்ந்த ஒரு தரப்பினர் புரிந்த குற்றத்திற்காக முழுச்சமூகத்தினதும் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறிக்க முயற்சி மேற்கொள்வதும், வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும் மனிதநேயத்தையும், மனிதத்துவத்தையும் மதித்து சகவாழ்வுடன் வாழ நினைக்கும் ஜனநாயகத் தேசியத்தின் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
அச்சமான சூழல் 21/4 தாக்குதலும் 13/5 வன்முறைகளும்
எவரும் எதிர்பாராத ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்கள் கடந்து விட்டன. தாக்குதல் சூத்திரதாரிகள் செத்து மடிந்துள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புபட்ட பலர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டும், தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டின் அமைதிக்கு மாத்திரமின்றி பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதல் சம்பவம் அனைத்து இன மக்களினதும் இயல்பு வாழ்வைப் பாதித்து அச்சமான சூழலையும் தோற்றுவித்துள்ளது. நிம்மதியாக வாழ விடாமல் தடுத்திருக்கிறது.
ஆனால், இத்தாக்குதல்களுக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தொடர்பில்லை என அனர்த்தம் நடைபெற்ற நாள் முதல் முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஜனாதிபதி உட்பட சில அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இத்தாக்குதல்களுடன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தொடர்புபடுத்த வேண்டாம் அவர்களை பயங்கரவாதத்திற்குள் தள்ளிவிட வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.
இதேவேளை, இத்தாக்குதல்களில் நேரடியாகப் பாதிப்பை உணர்ந்த,சுமந்த பேராயர் கர்தினால் மல்கம் ஆண்டகை மற்றும் ஏனைய மதத் தலைவர்கள், நல்லுள்ளம் கொண்டோரின் வேண்டுகோள்களையும் ஆலோசனைகளையும் கேட்டு. கிறிஸ்தவ மக்கள் அமைதி காத்தாலும், உறவுகளை இழந்த வேதனையோடுதான் இருக்கின்றார்கள். சகோதர கிறிஸ்தவ மதத்தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அவ்வேதனையிலிருந்து விடுபடச் செய்து சாதாரண இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முயற்சித்து வருகின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில், வன்முறைத் தாக்குதல்களை மேற்கொள்வதனால் ஏற்படும் இழப்புகளையோ, துயரங்களையோ, விளைவுகளையோ கருத்திற்கொள்ளாது, மதத் தலைவர்களினதும் ஏனையோரினதும் வேண்டுகோள்களையும், ஆலோசனைகளையும் பொருட் படுத்தாது, காடையர் கூட்டம் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து உயிர் இழப்பையும், சொத்திழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி நீர்கொழும்பு போரத்தொட்ட பகுதியில் இரு தனிநபர்களுக்கிடையில் உருவான கருத்து முரண்பாடுகளை பூதாகரமாக்கி முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும், வீடுகளையும் சேதப்படுத்தினர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பிரதான வீதியைத் தவிர்த்து உள்ளூர் வீதி வழியாகச் சென்று அப் பிரதேசங்கள் சிலவற்றில் இத்தாக்குதல்களை மேற்கொண்டதாக பிரதேசவாசிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், படையினர் நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும், அப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட்டது. அமைதியாக வாழ விடாமல் அச்சம்பவங்கள் தடுத்திருக்கின்றன.
நீர்கொழும்புப் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து அப்பிரதேசங்களுக்குச் சென்ற பேராயர் கர்தி னால் மல்கம் ரஞ்ஜித் முஸ்லிம்களுக்கு எதிராக கைதூக்க வேண்டாம் என கத்தோலிக்க மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி குண்டுகள் வெடிக்குமா? தாக்குதல்கள் தொடருமா?--_ என்ற அச்சத்துடனான கேள்விகளை, கருத்துக்களை பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் ஊடகங்கள் வாயிலாக வெளிப் படுத்தி மக்களை அச்சத்திற்குள்ளாக்கியிருந்த நிலையில், சிலாபத்தில் முஸ்லிம் நபர் ஒருவர் இட்ட முகநூல் பதிவொன்றின் கருத்துத் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை அப்பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை யைத் தோற்றி வன் முறைக்கு இட்டுச் சென்றது.
இப்பிரதேசத்திலும் பள்ளிவாசல் உள்ளிட்ட சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது. வன்முறைகளின் பின்னர் அமைதி நிலைநாட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி மற்றும் நிக்கரவட்டிய ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து திட்டமிட்ட குழுவொன்று பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியது. இவ்வன்முறைத்தாக்குதல்களினால் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியானார். பெரும் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்பாவி முஸ்லிம்கள் நிர்க் கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதல்கள் புனித தலங்களில் மேற்கொள்ளப்பட்டு கிறிஸ்தவ மக்களின் மனங்களை எந்தளவுக்கு பாதித்ததோ, அந்த புனித நாளை அனுஷ்டிக்க முடியாமல் செய்ததோ அதே பாதிப்பை புனித ரமழான் நாட்களில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல்கள் மன வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. புனித நோன்பை நோக்கவிடாமலும் ரமழான் மாத வழிபாடுகளை மேற்கொள்ளவிடாமலும் தடுத்திருக்கிறது.
வாழ்வுரிமை கேள்விக்குறி
வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தின் பல முஸ்லிம் பிரதேசங்கள் மற்றும் கம்பஹா மாவட்டத்தின் மினுவாங் கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் மேற் கொள்ளப்பட்ட தாக்குதல்களினால், முஸ்லிம்களின் பலகோடி சொத்துக்கள் இழக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் ஊடகங்களுக்குத் தெரிவித் துள்ளனர். இத்தாக்குதல்கள் முஸ்லிம்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குறி யாக்கியிருக்கின்றது. ஈடுசெய்ய முடியாத இழப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கின் றது. இவை மாத்திரமன்றி தாக்குதல்களுக்குள்ளான முஸ்லிம்களுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து வயிற்றில் அடித்திருக்கிறது. முஸ்லிம்களை மாத்திரமின்றி பெரும்பான்மை இன தொழிலாளர்களையும் வேதனைக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் தள்ளியிருக்கிறது.
வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தியது முஸ்லிம்களின் பள்ளிவசல்கள், கடைகள், வீடுகள், வாகனங்களை மாத்திரமல்ல, வாழ்வுரிமையையும், சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும், அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும், பிற இனத்தவர்களினதும் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும்தான் என்பதை இந்நாட்டு மக்கள் அனைவரும் புரிய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
புனித தினத்தில் தேவாலயங்களில் குண்டுகளை வெடிக்க வைத்து அப்பாவிகளைக் கொன்றொழித்த கொடியவர்களுக்காக அப்பாவி முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும், கலாசாரத்தையும் கேள்விக்குட்படுத்த முனைவதை சர்வதேச சமூக நிறுவனங்கள் முதல் சிங்கள மற்றும் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் வரை கண்டித்துள்ளனர். சுயநல அரசியலுக்காக அப் பாவி முஸ்லிம்களுக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டி விட்டுத் தங்களது அதிகாரங்களையும், பதவிகளையும், வாக்குகளையும் பெற்றுக்கொள்ளவே முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அழகிய நாட்டின் அமைதியை இழக்கச் செய்து பாதுகாப்பற்ற நாடு என்ற அவப்பெயரை பெற்றுக்கொடுக்க எந்தவொரு தரப்பும் முயற்சிக்கக் கூடாதென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 21/4 தாக்குதல்கள் மற்றும் 13/5 வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியானவர்கள் பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் விரைவாகச் சென்றடைய வேண்டும். வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அரங்கேற்றப்பட்ட வன்முறைகளினால் பலர் வீடு வாசல்களுடன் அன்றாடத் தொழிலையும் இழந்திருக்கிறார்கள். இவர்களுக்கான அத்திவாசிய அன்றாட நிவாரணங்களை வழங்க பொறுப்புள்ளவர்கள் உடன் செயற்பட வேண்டும். குண்டுத்தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை நேரில்கண்ட, கேட்டறிந்த பலர் அச்சம், பயம், பரிதவிப்பு போன்ற உளவியல் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய உடனடித் தேவைகள் நிறைவேற்றி வைக்கப்படுவதுடன் உளவியல் காயங்களுக்கான சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வன்முறைத் தாக்குதல்களும் அரசியல் களமும்
ஏப்ரல் 21 தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் காரணம்காட்டி குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும் ஆட்சிமாற்றத்தை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத் தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், இக்கலந்துரையாடலின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட ஏனைய அமைச்சர்கள் முன்வைத்த கருத்துக்களைச் செவிமடுத்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கிய பிரதமர், பாதுகாப்பு தரப்பினர் நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறியமை தொடர்பில் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்ட பல வீனமே வன்செயல்கள் உக்கிரமடை வதற்குக் காரணமாக அமைந்ததென முஸ் லிம் அமைச்சர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வன்முறையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ள நிலையில், பழைய தவறைச் செய்ய வேண்டாமென மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில், சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றை விடுதுள்ளது.வன்முறைகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைக் காரணம்காட்டி திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து பலகோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலை தொடர்பில் சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் கருத்துக்களும் அறிக்கைகளும் வெளிவந்துள்ள நிலையில் அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷயங்களில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது. வன்முறையை உருவாக்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தீவிரவாதிகள்தான்.
சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும்
நாட்டை வீழ்த்த வேண்டுமென்றே அவர் கள் விரும்புகிறார்கள் என வன்முறைத் தாக்கு தல்கள் குறித்த கண்டன அறிக்கைக ளில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள், இந்நாள் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கதே.
சுதந்திரம் பெற்ற ஜனநாயகத் தேசமொன்றில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியம். எந்தவொரு நபரினாலோ, ஒரு குழுவினாலோ ஒரு தனிநபரது அல்லது ஓர் இனத்தினது உரிமைகள் பறிக்கப்படுகின்ற, மிதிக்கப்படுகின்றபோது, அவ்வுரிமைகளுக்கு பங்கம் ஏற்படு கின்றபோது குறிப்பிட்ட தனிநபருக்கெதிராக அல்லது அந்தக் குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
அவ்வாறு குற்றம் புரிவோர், குற்றச் செயல் இடம்பெறுவதற்கு தூண்டுகோலாக இருப் போருக்கு எதிராகச் சட்டம் அதன் கடமையை சரியாக நிலைநிறுத்தும்போதுதான் அத்தேசத்தில் ஜனநாயகம் மலரும்.
ஆக, மனித உரிமைகளை மதிக்கின்ற, ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கின்ற பல் லின சமூகம் வாழும் ஒரு சுதந்திரத் தேசத் தில் ஓர் இனம் மற்றுமொரு இனத்தினால் வஞ்சிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டியது அந்த தேசத்தின் அரசையே சாரும். இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழ்கின்ற எந்த வொரு இனமும் அந்த இனத்துக்குரித்தான உரிமைகளுடன் வாழவும் கல்வி கற்கவும் தொழில் புரியவும் கலை, கலாசார பண்பாட்டு மத விடயங்களைப் பின்பற்றவும் இந்நாட்டின் அரசியல் சாசனம் இடம்வகுத்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வெறுக்கும், கண்டிக்கும் ஏப்ரல் 21 தாக்குதல்களைக் காரணங்காட்டி முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தொழித்தவர்கள் முஸ்லிம்களின் கலாசாரம், வர்த்தக நடவடிக்கை உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்கு எதிராகவும் பிரசாரங்களையும் தடைகளையும் ஏற் படுத்தி முஸ்லிம்களை வாழவிடக் கூடாது என்று செயற்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என் றும் எவரினதும் தேசிய இனத்துவம் மனப் போக்கான வகையில் இழக்கப்படுவதோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுவதோ ஆகாது எனவும் ஐ.நா மனித உரிமைகள், உலகபொதுப் பிரகடனத்தின் 15ஆவது உறுப்புரை சுட்டிக்காட்டுகிறது.
ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுமை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல் தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் தனித்தன்மை கொண்டதுதான் சட்டம்.
மனிதனை மனிதனாய் வாழ வைக்கவும் மற்றும் நிறுவனங்களின் முறையான இயக்கத்திற்கும் சட்டம் தேவை. அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் நீதியுடனும், சமமாகவும், உரிமைகளோடும், அமைதியாகவும் வாழ்ந்திட சட்டம் வழி வகை செய்கிறது.
குற்றம் விளைவித்தால் அந்தக் குற்றத்திற்கு தண்டனை வழங்க இந்நாட்டில் சட்டம் இருக்கிறது. ஏனெனில் சட்டத்தின்முன் எல்லோரும் சமமானவர்கள். அதனால்தான் ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில, குருநாகல் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை பிரதேசத்திலும் வன்முறைகளைத் தூண்டிவிட்டவர்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என 81பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிதீவிர போக்குடையவர்களாகக் கருதப்படுகின்ற அமித் வீரசிங்க, நாமல் குமார மற்றும் டேன் பிரியசாத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குவர்.
இச்சந்தர்ப்பத்தில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இனவாதம் இனம் மாறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இனம் மாறும் இனவாத் தாக்குதல்களின் தொடராக 2014இல் அளுத்தகமயிலும் 2017இல் கிந்தோட்டையிலும், 2018இல் அம்பாறை திகனப் பிரதேசங்களிலும் கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் குருநகால் மற்றும் கம்பஹா மாவட்டப் பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களையும் குறிப்பிடலாம்.
குற்றம் செய்தார்கள், குற்றம் செய்யத் தூண்டினார்கள் என்று நீதியையும் நியாயத்தையும் சட்டவரம்புகளையும் மதிக்கின்றவர்கள் சுட்டிக் காட்டப்படுபவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட வேண்டும். ஏப்ரல் 21 தாக்குதல்களில் தொடர்புபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அதற்கான தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டிருந்ததன் மூலம் குற்றம் செய்வோருக்கு பாரபட்சமற்ற தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் அமைதி, சகவாழ்வு, நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சமூக ஒருமைப்பாடு, சமாதானம் என்பன மக்களுக்கிடையில் நிலைக்க வேண்டும் என விரும்பும் அனைவரும் இந்த வன்முறைகளுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தங்களது மனச்சாட்யின் அடிப்படையில் முன்வர வேண்டும்.
சட்டத்தை எவரும் கையில் எடுக்கக் கூடாது. அவ்வாறு சட்டத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறிவருகிறார். இவ்வாறான நிலையில் சட்டம் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்படும் இலங் கைச் சட்டங்கள், நாட்டின் இன ஒற்று மைக்கும், அமைதிக்கும் எதிராகச் செயற் படுவோருக்கு எதிராகவும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டு ஒழுங்கு சட்டத்தின் 3ஆம் பிரிவானது, எவரா வது போரைப் பரப்பினால், அல்லது பாரபட்சத்தை, எதிர்ப்பு உணர்ச்சியை, வன்முறையைத் தூண்டுவதாக அமையும் தேசிய, இன அல்லது மதரீதியிலான பகைமையை ஆதரித்தலோ கூடாது எனக் குறிப்பிடுகிறது.
அத்துடன், குற்றம் புரிவதற்கு எத்தனிக் கும், அதனைப் புரிவதில் உதவி புரியும் அல்லது உடந்தையாயிருக்கும் அல்லது புரியப்போவதாக அச்சுறுத்துகின்ற ஒவ் வொரு வரும் இச்சட்டத்தின் கீழ் தவறொன் றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென குறித்த சட்டம் சுட்டிக்காட்டுகிறது
இவ்வாறு சட்டம் உள்ள நிலையில், அச்சட்டமானது அதன் பொறுப்பை நிறை வேற்றுமாயின் இன ஒற்றுமைக்கும் சமூக சகவாழ்வுக்கும் நாட்டின் அமைதிக் கும் பங்கம் ஏற்பட மாட்டாது. பல் லாண்டு காலங்கள் இந்த நாட்டில் இன ஒற்றுமையுடன் வாழும் சகலரும் தங்க ளுக் குரிய இனத்துவ உரிமையுடன் நிம்ம தியாக வாழ முடியும்.
இந்நிலையில், இந்நாட்டு முஸ்லிம்கள் தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்வதுடன் நாட்டில், தேசிய அமைதி, சமாதானம், சகவாழ்வு நல்லிண க்கம் என்பவற்றைக் கட்டியெழுப் புவ தற்கு உழைக்கும் அத்தனை தரப்புக் குக்களு டனும் தொடர்ச்சி யாக ஒன்றி ணைந்து அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ தங்களது பூரண ஒத்து ழைப்புக்களை வழங்க வேண்டு மென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதையும் பதிவிட வேண்டியுள்ளது.
எம்.எம்.ஏ.ஸமட்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM