இப்போதுள்ள அரசியல் பலவீனத் தன்மையிலும், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவர முடியாது. ஆகவே முதலில் பலமான அரசாங்கம் ஒன்றினை அமைத்து தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நிறைவேற்று அதிகாரத்தை நீக்க முடியும் என நம்புகின்றோம். அதேபோல் புதிய அரசியல் அமைப்பொன்று உருவாவதும் இப்போதைக்கு சாத்தியமில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அவருடனான செவ்வி முழுமையாக,
கடந்த காலங்களில் இருந்து எமது நாட்டில் அளவுக்கு அதிகமாக இரத்தம் படிந்துள்ளது. பல தசாப்த காலமாக போராட்டங்களை பார்த்துவிட்டோம். அவற்றில் அழிவுகளை சந்தித்துவிட்டோம். அவ்வாறு இருக்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இன்னொரு இனவாத முரண்பாட்டுக்கு இடமளிக்கக்கூடாது. ஆனால் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதில் அரசாங்கத்தின் தலையீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இப்போது நாட்டில் இடம்பெற்றுள்ள இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து அரசியல் கட்சிகள் அதனை எவ்வாறு தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை கடந்த இரண்டு வாரங்களாக அவதானிக்க முடிந்தது. அனைவருமே இதில் தமது அரசியலுக்காவே முயற்சித்து வருகின்றனர். ஆனால் ஜே.வி.பி. இதனை எப்போதுமே அரசியலாக கையில் எடுக்கப் பார்க்கவில்லை. மக்களை பாதுகாத்து முதலில் இந்த நிலைமைகளில் இருந்து மீளவே நாம் முயற்சித்து வருகின்றோம். அதற்காக சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி முதலில் மக்களை அமைதிப்படுத்தும் வேலையினை செய்து வருகின்றோம். கிறிஸ்தவ மத தலைவர்களை சந்தித்து பேசினோம். இஸ்லாமிய மத தலைவர்களை சந்தித்தும் பேசினோம். இரண்டு சமுகங்களை மோதவிடும் அரசியல் எமக்கு வேண்டாம்.
கேள்வி:- இந்த பயங்கரவாத தாக்குதலை தடுத்திருக்க முடிந்தும் பாதுகாப்பு தரப்பின் பலவீனமே காரணம் எனவும் பாதுகாப்பு தரப்பின் ஒருசிலர் மீது பழிசுமத்தப்பட்டுள்ளது, இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்:- உண்மையில் இந்த விடயத்தில் அரசாங்கமாக அனைவருமே பொறுப்பாளிகள். தேசிய பாதுகாப்பு விடயத்தில் மட்டுமல்ல சகல காரணிகளிலும் அரசாங்கத்துக்குள் அதிகார போராட்டம் ஒன்று உள்ளது. ஜனாதிபதி- பிரதமர் இருவரும் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே இருவருக்கும் எதிராகவே செயற்பட்டு வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி அரசியல் சூழ்ச்சியை கூறலாம். இவர்கள் இருவரிடையில் இருந்த அதிகார போராட்டம் இறுதியில் நீதிமன்றம் வரையில் கொண்டுசெல்லப்பட்டே முடிவுக்கு வந்தது. இவ்வாறான நிலையில் நாட்டினை எவ்வாறு இவர்கள் இருவராலும் சரியான பாதையில் கொண்டுசெல்ல முடியும். இந்த அராஜக நிலைமையே தேசிய பாதுகாப்பு வரையில் பாதித்தது. ஜனாதிபதி அவரது பாதுகாப்பு கூட்டங்களில் அரசியல் நகர்வுகளையே கையாண்டார். பிரதமர் எப்போதுமே வெள்ளைக்காரர்களை நம்பியே ஆட்சி செய்கின்றார். ஆகவே இந்த சம்பவத்தில் பிரதான இரண்டு குற்றவாளிகள் ஜனாதிபதியும் பிரதமருமேயாகும், அதன் பின்னரே பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு தரப்பு புலனாய்வு தரப்பு என விரல்நீட்ட முடியும். ஒட்டுமொத்தமாக அரசாங்க மற்றும் பாதுகாப்பு தரப்பினர் குற்றவாளிகள் தான்.
கேள்வி:- எனினும் கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதியே இந்திய புலனாய்வுத்துறை இலங்கையின் புலனாய்வுத்துறைக்கு இந்த தாக்குதல் குறித்து அறிவித்ததாகவும் இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு தரப்பு நன்கு அறிந்திருந்தது என்பதும் அவரவர் மூலமாகவே வெளிவந்துள்ளதே?
பதில்:- ஆம், அதனையும் மறுக்க முடியாது, அனைவருக்கும் தெரிந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கேள்வி:- இவ்வாறான ஒரு சிறிய இஸ்லாமிய குழு குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே சில பெளத்த அமைப்புகள் எச்சரித்து வந்துள்ளன. அப்போதெல்லாம் குறித்த பெளத்த அமைப்புமீது நீங்கள் அனைவரும் இனவாத குற்றச்சாட்டை முன்வைத்தீர்கள், ஏன் உங்களால் அப்போது இதுகுறித்து அறிந்துகொள்ள முடியவில்லை?
பதில்:- அப்போது இந்த காரணிகள் கூறப்பட்டது உண்மைதான்.அதேபோல் அளுத்கம, பேருவளை, கண்டி கலவரங்கள் உருவாக்கப்பட்ட போது சிங்கள முஸ்லிம் கலவரம் ஒன்று ஏற்படும் என்ற பயம் மட்டுமே எம்மத்தியில் இருந்தது. ஒரு இனவாதம் இன்னொரு இனவாதத்தை உருவாக்கும் அச்சம் மட்டுமே தென்பட்டது.சிங்கள -முஸ்லிம் கலவரம் சில மோசமான நிலைமைகளை உருவாக்கும் என்ற தூரநோக்கு எமக்கு இருந்தது. ஆனால் அதனையும் தாண்டி இவ்வாறு தற்கொலை தாக்குதலை முஸ்லிம் சமூகத்தில் ஒரு சிலர் செய்வார்கள் என சிறிதும் நினைத்துப்பார்க்கவில்லை. இதனை நாம் கவனிக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். நாம் இதனை நினைத்துப்பார்க்கவில்லை என்பதே உண்மை.
கேள்வி:- இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள இப்ராஹீம் என்ற நபருக்கும் உங்கள் கட்சிக்கும் இடையில் எவ்வாறான உறவு இருந்தது?
பதில்:- இப்ராஹீமுக்கும் எமக்கும் 10 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்புகள் இருந்தது உண்மைதான். இது அரசியல் ரீதியாக மட்டுமே இருந்தது. குறிப்பாக எமது கட்சியின் தேசியப் பட்டியலில் அவரை இணைத்து வைத்திருந்தோம். எம்மை பொறுத்தவரை எமது தரப்பில் தூய்மையான நபர்களை உள்வாங்கும் கட்சி. ஆனால் இப்ராஹீமை நாம் நேரடியான அரசியல் களத்தில் களமிறக்கவில்லை. இவர் ஒரு வியாபாரி என்பது தெரியும் நீண்டகாலமாக சகல தரப்பினாலும் இவர் குறித்து நன்மதிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது அதனை நம்பியே நாமும் அரசியல் உறவை வைத்திருந்தோம். அதனை தாண்டி எமக்கும் இவருக்கும் இடையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. இப்போது இந்த நபர் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இந்த விசாரணைகளில் நாம் எந்த தலையீடுகளையும் செய்யவில்லை. அவர்கள் எந்தமாதிரி நபர்கள் என்பது எமக்கு தெரியாது. குற்றவாளிகளாக இருந்தால் அதற்கான சகல தண்டனையும் பெற்றுகொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.
கேள்வி:- எனினும் ஜே.வி.பியை சற்று மாறுபட்ட அரசியல் கொள்கை கொண்ட கட்சியாக கூறும் நீங்கள் ஏன் உங்களின் கட்சிக்குள் ஒருத்தரை உள்வாங்கும்போதே அவர்கள் குறித்து ஆழமாக சிந்திக்கவில்லை?
பதில்:- 2015 ஆம் ஆண்டு அவரை தேசிய பட்டியலில் உள்வாங்கும் வரையில் அவர் குறித்து நன்மதிப்பே இருந்தது. எமக்கு மட்டும் அல்ல சகல அரசியல் கட்சிகளுக்கும் இது தெரியும். ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ, அவரது அமைச்சர்கள், வியாபார துறையினர் என அனைவருமே அவருடன் நல்ல எண்ணத்தை வைத்திருந்தனர். ஆகவே அவரை நாம் கட்சிக்குள் இணைத்தமை குறித்து அப்போது நாம் திருப்தியாகவே இருந்தோம். எமக்கு இந்த பின்னணிகள் எதுவுமே தெரியவில்லை. அவரது குடும்ப விபரங்களை நாம் ஆராயவில்லை. அதற்கான அவசியம் எமக்கும் இருக்கவில்லை.
கேள்வி:- நாட்டின் தற்போதைய நிலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நீங்கள் ஏன் இதனை ஆதரிக்கவில்லை?
பதில்:- இந்த சட்டமூலம் குறித்து பேசப்பட்டுள்ளது. இதில் பயங்கரவாதம் குறித்த விளக்கத்தில் பாரிய முரண்பாடுகள் உள்ளன. சாதாரண போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தொழிற்சங்க போராட்டங்கள் கோரிக்கைகள், மாணவர்களின் போராட்டங்கள் என அனைத்துமே பயங்கரவாத செயற்பாடுகள் என்ற எண்ணத்தை இந்த சட்டம் உருவாக்கியுள்ளது. இப்போது இந்த சந்தர்ப்பத்தை வைத்து தமது தேவைகளை நிறைவேற்ற பிரதமர் முயற்சிக்கின்றார். இப்போது சட்டத்தில் குறைகூறும் இவர்கள் ஏன் தாக்குதல் நடக்க முன்னர் இவை தெரிந்தும் வாய்மூடி இருந்தார்கள் ? இவர்களுக்கு வெள்ளையர்களின் சட்டங்களும் வேலைத்திட்டங்கள் மட்டுமே தெரியும். அதனை நிறைவேற்றவே இந்த செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மாறாக இந்த நாட்டின், மக்களின் நலன்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. இந்த புதிய சட்டம் முழுமையாக மேற்கு நாடுகளின் தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டுக்குள் முன்னெடுக்கும் வேலைதிட்டங்களை மக்கள் எதிர்க்கக்கூடாது என்பதற்காக இந்த சட்டத்தை உருவாக்குகின்றனர்.
கேள்வி:- அப்படியென்றால் இந்த செயற்பாடுகளின் பின்னணியில் சர்வதேச அரசியல் சூழ்ச்சிகள் உள்ளதாக நினைகிறீர்களா ?
பதில்:- ஆம், இன்று உலகில் பிரதான மூன்று வியாபாரங்கள் உள்ளன. மருந்து, போதைபொருள், ஆயுதம் இந்த மூன்றுமே உலகை தீர்மானிக்கின்றன. ஆயுதங்களை எடுத்துக்கொண்டால் எமது வலயத்தில் எந்த நாடுகளும் பாரிய அளவிலான ஆயுதங்களை தயாரிப்பதில்லை. உலகில் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் அதிகளவிலான ஆயுதங்களை மேற்கு நாடுகளே தயாரிக்கின்றன. இவர்களின் சட்டரீதியான ஆயுத சந்தை இருப்பதை போலவே சட்டவிரோத சந்தையும் உள்ளது. அதேபோல் உலகில் எந்த பயங்கரவாத அமைப்பும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லை. அப்படி இருக்கையில் இந்த பயங்கரவாதிகள் கைகளில் எவ்வாறு அதிநவீன ஆயுதங்கள் கிடைக்கின்றன. இலங்கை யில் விடுதலைப்புலிகள் உருவாக்கிய காலத்தில் அவர்களுக்கு எவ்வாறு நவீன ஆயுதங்கள் கிடைத்தது? அரசாங்கமா கொடுத்தது? இந்த ஆயுதங்கள் மேற்கு நாடுகளில் இருந்தும் வல்லரசு நாடுகளில் இருந்துமே கொண்டுவரப்பட்டன. மத்தியகிழக்கில் இன்று செயற்படும் இந்த இஸ்லாமிய குழுக்களுக்கும் மேற்கு நாடுகளே ஆயுதங்களை கொடுக்கின்றன. அதேபோல் மத்தியகிழக்கில் இடம்பெற்ற சகல போராட்டங்களுக்கும் பின்னணியில் எண்ணெய் சண்டையே இருந்துள்ளது. அதேபோல் ஒருசிலநாடுகள் தமது ஆட்சியை தக்கவைக்க உலகிற்கு ஆயுதங்களை கொடுக்கின்றன. இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலும் சர்வதேச அரசியல் போட்டியே. ஆனால் இலங்கைக்குள் இதனை கையாள எமது நாட்டுக்குள் இருக்கும் பலவீனங்களை அவர்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். இந்த நாட்டில் இருந்த அரசியல் மற்றும் பாதுகாப்பு பலவீனமும் மக்கள் மீதான மக்களின் அவநம்பிக்கை இனவாதம் என்பவற்றை அனைவரும் பயன்படுத்திக்கொண்டனர்.
கேள்வி:- நாட்டின் தற்போதைய சூழலில் நீங்கள் கொண்டுவர முயற்சிக்கும் 20ஆம் திருத்தம் என்னவாகும்?
பதில்:- இப்போதுள்ள நிலையில் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவருவது சாத்தியம் இல்லை. முதலில் தேர்தல் ஒன்றினை நடத்தி பலமான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி அதன் பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க முடியும். அதுவரையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அவசியமில்லை என்பதே இப்போது எமதும் நிலைப்பாடு. புதிய அரசியல் அமைப்பு குறித்தும் அதன் பின்னரே சிந்திக்க முடியும். முதலில் பலமான அரசாங்கம் ஒன்று உருவாக்க வேண்டும்.
கேள்வி:- தேர்தல் என்றால் முதலில் ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா நடக்கும் என நினைக்கின்றீர்களா?
பதில்:- முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதான கட்சிகள் உள்ளன. ஆனால் இப்போதுள்ள நிலையில் முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி பலமான அரசாங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லையென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தியாக வேண்டும். மக்களுக்கு தீர்மானம் ஒன்றினை எடுக்க இடமளிக்க வேண்டும்.
கேள்வி:- இந்த தேர்தல்களில் பிரதான காரணியாக மீண்டும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை கையில் எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை,நீங்கள் எதனை கையில் எடுக்கப் போகிறீர்கள்?
பதில்:- ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் அரசாங்கத்தை அமைத்தவர்கள் இதுவரையில் யுத்தத்தை வைத்தே அரசியல் செய்துள்ளனர். இதனை தாண்டி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் முழுமையாக மறைக்கப்பட்டு யுத்தம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதே முன்னுரிமை பெற்றுள்ளது. இப்போதும் அதே சூழலே உருவாகியுள்ளது. மீண்டும் பயங்கரவாதம் என்பதை பிரதான கட்சிகள் கையில் எடுத்துள்ளது. ஆனால் நாம் இதனை மட்டும் அல்ல இந்த நாட்டின் ஊழல், குற்றங்கள், பொருளாதார நெருக்கடிகள், இனவாத அடக்குமுறை இவை அனைத்தையும் மக்களுக்கு எடுத்துக்கூறியே வாக்குக் கேட்கின்றோம். இந்த நாட்டில் மூவின மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமையை பலப்படுத்தும் வாக்குறுதியை இவர்கள் எவராலும் முன்வைக்க முடியாது. ஆனால் நாம் தேசிய ஒற்றுமையை உருவாக்கும் நோக்கத்தில் முன்வருகின்றோம்.
கேள்வி:- ஜே.வி.பி.க்கு பிரதான இரண்டு கட்சிகளுடனும் அரசியல் செய்த அனுபவம் உள்ளது. இம்முறை நீங்கள் எந்தப்பக்கம் ?
பதில் :- நாம் தெளிவான நிலைப்பாட்டினை எடுத்துள்ளோம். இந்த இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் அரசியல் நோக்கமும் எமக்கு நன்றாகவே தெரியும். நல்லாட்சி என்ற வெவ்வேறு முகங்களை வைத்துகொண்டு ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளுக்கும் ஆட்சியை சரியாக கொண்டு செல்ல முடியவில்லை. ஆகவே இவர்களை இனியும் அதிகாரத்தில் வைத்திருக்க முடியாது. எனவே தான் நாம் புதிய தலைமைத்துவத்தை உருவாக்கும் முயற்சியை பொறுப்பை கையில் எடுத்துள்ளோம். இதற்கான மக்கள் மையம் ஒன்றினை அமைக்கவே நாம் முயற்சித்து வருகின்றோம். இந்த நாட்டினை மாற்றக் கூடிய மக்கள் சக்தியை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அனைவரையும் ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டுவரும் தலைமையை உருவாக்கவே நாம் முயற்சிக்கின்றோம்.
கேள்வி:- ஏனைய அனைவரும் தாம் தேர்தலுக்கு தலைமை தாங்க தயார் என கூறுகின்றனர், நீங்கள் மட்டும் ஏன் தலைமைத்துவத்தை ஏற்க முன்வரவில்லை?
பதில்:- முதலில் இந்த தனி நபர் அரசியலை கைவிட வேண்டும். இந்த நாட்டினை சரியான பாதையில் கொண்டுசெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மஹிந்த என்ற தனி நபர் இந்த நாட்டில் என்ன மாற்றத்தை செய்தார்? மைத்திரிபால சிறிசேன என்ற நபரால் மக்களுக்கு என்ன நலன்கள் கிடைத்தது? ரணில் விக்ரமசிங்க என்ற தனி நபரை இந்த நாட்டு மக்களால் ஏற்றுகொள்ள முடியுமா? இந்த தனி நபர் அரசியல் ஒருபோதும் இடமளிக்க முடியாது.இவ்வாறு தனிநபர் கோட்டை கட்ட நினைத்தமையே இந்த நாடு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது.நாம் இந்த நாட்டினை கட்டியெழுப்பும் சரியான தலைமைகள் அனைத்தையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம். அதன்பின்னர் ஒருவரை நாமே தெரிவுசெய்ய முடியும்.
கேள்வி:- அப்போது நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவீர்களா?
பதில்:- முதலில் சரியான அணியினை தெரிவுசெய்து மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்போம். சரியாக நாம் தெரிவுசெய்யும் அணியில் ஒரு தலைமைத்துவம் இருந்தால் அதனையே களமிறக்கவும் முடியும். எம்மை பொறுத்தவரை நாட்டினையும் மக்களையும் மாற்றுப்பாதையில் சரியாக வழிநடத்தும் அரசியல் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். அது சரியாக அமையுமானால் அதன் பின்னர் விலகியிருந்து வேடிக்கை பார்க்கவும் நாம் தயாராகவே உள்ளோம். நாம் பொது அரசியல் கொள்கை கொண்டவர்கள். தனிப்பட்ட வரப்பிரசாதம் குறித்து நாம் சிந்திக்கவில்லை. இந்த கட்சியில் எவருக்கும் பதவி மோகம் இருந்ததில்லை. ஆனால் எந்த சவாலையும் சந்திக்கும் தலைமைத்துவம் எம் அனைவருக்கும் உள்ளது. எம்மிடம் நல்ல தலைமைகள் பல உள்ளன. அவற்றில் சரியான ஒன்றினை நாம் எடுப்போம்.
கேள்வி:- நீங்கள் இப்போதும் சிங்கள பெளத்த வாக்குகளை இலக்குவைத்தா அரசியல் செய்கின்றீர்கள்?
பதில்:- இல்லை, நாம் ஒருபோதும் இனவாத அரசியல் செய்யவில்லை. ஆனால் இன்று சகல சமூகத்திலும் இனவாத அரசியல் தான் வெளிப்படுகின்றது. இதனை அரசியல் வாதிகள் சரியாக பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் நாம் அதனை செய்ய தயாராக இல்லை. சகல மக்களிடமும் செல்ல தயாராகவே உள்ளோம். தமிழ் மக்களிடம் நாம் கேட்பதும், முஸ்லிம் மக்களிடம் கேட்பதும் ஒன்றுதான். நீங்கள் தொடர்ந்தும் உங்களின் இனவாத தலைவர்களை நம்பி நாட்டினையும் உங்களையும் நாசமாக்க போகின்றீர்களா அல்லது பொது கொள்கையில் தேசிய ரீதியில் ஒன்றுபட்ட நாடாக மீளப்போகின்றோமா என்பதை இப்போதாவது தீர்மானியுங்கள்.
நேர்காணல்:- ஆர்.யசிஹரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM