- வீ.பிரியதர்சன்
இந்து சமுத்திரத்தின் நடுவே இந்திய உபகண்டத்திற்கு கீழே உள்நாட்டுப்போர் ஓய்ந்து வெடிச்சத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த இலங்கைக்கா இந்த நிலையென்று ஏனைய உலகநாடுகள் கன்னத்தில் கைவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இன்று இலங்கை !
இலங்கையில் கடந்த 30 வருடகால உள் நாட்டுப்போர் ஓய்ந்து பௌத்தம், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைப் பின்பற்றும் மூவினத்தவர்களும் இணைந்து கடந்த வருடங்களாக ஒரே தேசியக் கொடியின் கீழ் கட்டிக்காத்து வந்த நல்லிணக்க செயற்பாட்டுக்கு கரும்புள்ளியாக அமைந்தது கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்தாக்குதல்கள்.
இலங்கை மக்களுக்கு சுதந்திரம் கிடை த்த காலத்திலிருந்து இலங்கை மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்திருப்பார்களா என்று ஆராய்ந்து பார்த்தால் அதிலும் ஐயப்பாடே நிலவுகின்றது !
யுத்தம் நிறைவடைந்து இலங்கை மக்களின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எத்தனையோ உலகநாடுகள் பின்நிற்க மனித மனங்களா அல்லது மதங்களா இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பிரதான பங்காற்றப்போகின்றன என்ற கேள்விகளுக்கு மத்தியில் மதங்களுக்கிடையேயான ஒற்றுமைகளின் மூலம் இந்த நல்லிணக்கச் செயற்பாடுகளைக் கட்டியெழுப்ப முடியுமென்ற நிலையில் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் மெதுமெதுவாகக் கட்டியெழுப்பப்பட்டு வந்தது.
தற்கொலைத் தாக்குதலால் கேள்விக்குள்ளான நல்லிணக்கம்
இலங்கையில் மதத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒரு குழு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல்களில் 250க்கும் மேலான உயிர்கள் பலியெடுக்கப்பட்டதுடன் பலர் காயமடைந்த நிலையில் தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதனால் வெளிநாட்டவர்கள் உட்பட சிறுபிள்ளைகள் எனப் பல உயிர்கள் அநியாயமாகக் காவுகொள்ளப்பட்டுள்ளன.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் குண்டுச் சத்தங்கள் ஓய்ந்தநிலையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலால் இலங்கை மண்ணே சோகத்தில் ஆழ்ந்தது மட்டுமல்லாது பல உலகநாடுகளையும் உலக அரசியல் தலைவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் இலங்கை மண்ணில் கடந்த 9 வருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்டுவந்த நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் பயமாகத் தொற்றிக்கொண்டது.
இந்த நல்லிணக்கம் குறித்து, குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறான மனநிலையிலுள்ளனர் என்று அறி-வதற்காக நாம் ஒரு கள ஆய்வினை மேற்கொண்டு நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய பகுதிக்குச் சென்றிருந்தோம்.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய மக்களின் மனதில்.......
துயரச்சம்பவம் இடம்பெற்று இருவாரகால நிறைவில் ஐயோ என்ற கதறல் சத்தங்கள் சற்று ஓய்ந்த நிலையில் அனைவர் முகத்திலும் ஒருவித சோகமும் கேள்விகளும் ஆட்கொண்ட நிலையில் எங்கும் நிசப்தமான சூழலில் எங்கு திரும்பினாலும் மரண வீடுகள் இடம்பெற்ற காட்சிகளையே நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு அருகிலான பகுதிகள் வெளிப்படுத்தின.
அங்குசென்ற எம்மையே ஒருவித சோகம் ஆட்கொண்டது. நாட்டின் தற்போதைய நிலையை சிந்திக்கத் தூண்டியது. இவ்வாறு தமது தாய், தந்தை, பிள்ளைகள் என்று ஒவ்வொரு வீட்டிலும் தமது உறவுகளைப் பறிகொடுத்த நிலையில் இருந்த மக்களின் மனதில் அவர்களுடன் உரையாடும்போது கவலைகள், கோபங்கள், ஏக்கங்கள், வலிகள் நிறைந்திருந்தாலும் நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கத்திற்காக அவர்கள் சிந்திப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இவ்வாறு அவர்களுடன் நாம் உரையாடும்போது அவர்களின் கவலைகள், வலிகளுக்கு மத்தியில் நாட்டின் நல்லிணக்கத்திற்காக அவர்களில் ஒரு சிலர் பகிர்ந்து கொண்டவை....
அன்பையே நாம் எதிர்பார்க்கின்றோம்....
கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் எனது உறவினர்கள் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
எனது 70 வயதுடைய மாமியாரும் அக்காவொருவரின் 8 மாதக் குழந்தையும் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துள்ள நிலையில் அக்காவும் அவரின் 7 மற்றும் 5 வயதுடைய இரு மகள்மார்களும் காயமடைந்துள்ளதுடன் 5 வயதுடைய மகள் தொடர்ந்தும் வைத்திய சாலையில் சிகிச்சைபெற்று வருகிறார் என கட்டுவாபிட்டியைச் சேர்ந்த ஜூட் தெரிவித்தார்.
நாம் இந்தத் துக்கத்திலிருந்து மீள முடியாதென நான் நினைக்கின்றேன். பெரும் மனஉளைச்சலையும் வேதனையையும் இனம்தெரியாத கோபத்தையும் வரழைத்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு... நாங்கள் செய்த தவறா... எதிர்காலம் என்ற ஒன்றில் நம்பிக்கையில்லாது போய்விட்டது.
மீண்டும் சமூகத்தில் நல்லிணக்கத்துடன் இணைந்து வாழ்வதென்பது நினைத்துப்பார்க்க முடியாதது. கிறிஸ்தவர்கள் என்பது உண்டு மகிழ்ந்து பகிர்ந்து மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள். கிறிஸ்து உயிர்த்த நாள் என்பது எமக்கு மகிழ்சிக்குரியநாளாகும் குரல் தளதளக்கின்றது. ஆனால் இன்று..... அவரால் வார்த்தைகளை உதிர்க்க முடியவில்லை.
எதிர்காலத்தில் பணம் சம்பாதித்து ஏனைய மக்களுடன் இணைந்து பகிர்ந்து வாழவேண்டுமென்ற எண்ணமே இல்லாது போய்விட்டது. அரசாங்கம் என்னதான் பண உதவிசெய்தாலும் பலியானவர்களின் பிரிவைப் பணத்தால் ஈடு செய்துவிட முடியாது.
அதிகமான பௌத்தர்கள் எம்மைப் பார்த்துவிட்டு உண்பதற்கு பிஸ்கட் பைக்கற்றுகளையாவது வாங்கி வந்தார் கள். ஏனைய இனத்தவர்களிடமிருந்து அன்பையே நாம் எதிர்பார்க்கின்றோம் விரோதத்தையோ, குரோதத்தையோவல்ல.
கடந்த காலங்களில் நாம் உணவுப்பொருட்கள் என்றாலென்ன வீட்டுக்கு வர்ணப்பூச்சுகள் வாங்குவதென்றால் என்ன முஸ்லிம் சகோதரர்களின் கடைகளிலேயே வாங்குகின்றோம். எமது இனத்தவர்களின் கடைகளைவிட அவர்கள் குறைந்த விலைகளிலேயே பொருட்களை விற்பனை செய்வார்கள் ஆனால் அந்த தீவிரவாதிகள் செய்த செயலுக்காக நாம் அப்பாவி முஸ்லிம் சகோதர மக்களைத் தாக்கமுடியாது.
ஆனால் அரசாங்கம்தான் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அரசியல் போட்டியே அப்பாவி மக்கள் பலியெடுக்கப்பட்டமைக்குக் காரணம்.
நாட்டில் ஜனாதிபதி இருக்கும் போதே அடுத்த ஜனாதிபதி யார் என்று கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றார்கள். இவர்களின் அதிகார ஆசையால் நாம் இன்று உறவுகளை இழந்து தவிக்கின்றோம். உலகத்தில் இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் எங் கும் இடம்பெற்றதில்லை.
வீதியில் நாயொன்று இறந்து கிடந்தால் கூட பாதுகாப்புத் தரப்பு பதிலளிக்க வேண்டும். ஆனால் இன்று நாயைவிடக் கேவலமாக கொல்லப்பட்டுள்ளனர் எமது உறவுகள். பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் சொல்லுக்கு நாம் அடிபணிந்து இருக்கின்றோம். ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாட்டுக்காக அப்பாவி முஸ்லிம் சகோதர இனத்தவர்களைத் தண்டிக்க முடியாது. தீவிரவாதிகளுக்குத் தேவை இனங்களுக்கிடையில் குரோதங்களை உண்டுபண்ணி வன்முறையைத் தூண்டுவதே ஆகும். இதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கக்கூடாது.
ஆனால் அரசியல்வாதிகளினால் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். குறிப்பாக நீர்கொழும்பு பிரதேசத்தில் முஸ்லிம் சகோதரத்தவர்களே வர்த்தகத்துறையில் முன்னிலையிலுள்ளனர். அவர்களைக் கைவிட்டுவிட்டு எம்மால் தனித்து செயற்படமுடியாது.
நாட்டில் தீவிரவாதிகளை முற்றாக இல்லதொழிக்க வேண்டும் அப்போதே மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.
பல்லினங்களைக்கொண்ட நாட்டில் பிரிந்துவாழ முடியாது. எல்லோரும் ஒன்றுபட்டாலே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். மக்களின் மனங்களில் உள்ள காயங்களை ஆற்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இனங்களுக்கிடையே விரிசலையேற்படுத்தி அரசியல் இலாபம் தேடக்கூடாது. ஆனால் அரசியல்வாதிகள் தற்போது அதனையே செய்துகொண்டு இருக்கின்றனர்.
அப்பாவி மக்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்க வேண்டிய நிலை
கட்டுவாப் பிட்டியைச் சேர்ந்த சாந்தினி தெரிவிக்கையில்,
அம்மா எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார். ஐயோ இந்த அரசாங்கம் ஏன் இப்படிச்செய்துவிட்டது. கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோட அவரின் முகத்தில் கடும் கோபத்தைக் காணக்கூடியதாக இருந்தது. அம்மாவை இந்த அரசாங்கம் கொலை செய்துவிட்டது... எனக்கூறி கதறி அழுகின்றார்....
எம்மைச் சுற்றியிருந்த அயலவர்களில் அரைவாசிப்பேர் பலியாகிவிட்டனர். இதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பை யும் ஏற்கவேண்டுமெனக் கடும் கோபத்துடன் தெரிவித்தார். இந்தக் கிராமத்திற்கே அரசாங்கம் பாவம் செய்துவிட்டது. அரசியல்வாதிகளுக்குத் தெரிந்திருந்தும் ஏன் எம்மைப் பாதுகாக்கவில்லை. பாவம் இந்த மக்கள். நாம் யாருக்கு என்னத் தீங்கிழைத்தோம். ஐயோ..... ஏன் இந்த நிலைமையென கதறி அழுகின்றார்.......
மனிதர்களிடேயே காணப்படும் இரக் கம், ஒற்றுமை இந்த அரசியல்வாதிகளிடமில்லை. அசம்பாவிதம் இடம்பெறப்போகின்றது என அரசாங்கம் அறிந்தும் பாதுகாக்கவில்லை.
யுத்தத்தின் கொடூரத்தை நாம் தொலைக்காட்சிகளில் தான் அவதானித்துள்ளோம். ஆனால் அன்று நாம் யுத்தத்தை நேரில் அவதானித்தபோது சொல்ல வார்த்தைகள் இல்லை. தற்போது வீதியில் ஒருவர் பையை மாட்டிக்கொண்டு செல்லும் போது அச்சத்துடன் பார்க்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அப்பாவி மக்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்க வேண்டிய நிலையையே இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. தீவிரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் சிறுகுற்றம் செய்யும் அப்பாவி மக்களை அரசாங்கம் சிறையிலடைக்கின்றது.
அரசியல்வாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் தவறுகளுக்காக நாம் முஸ்லிம் சகோதரர்களைத் தண்டிக்க முடியாது.
வழிதடுமாறும் 3 இளம் பிஞ்சுகள்
தாயையும் தந்தையையும் இழந்து ஒரு பெரிய பங்களாவில் வெளிச்சமற்ற நிலையில் 3 சகோதரர்கள் அமர்ந்திருந்தனர்.
வீட்டின் வெளியில் தாய் மற்றும் தந்தையரின் அஞ்சலிப் பதாதைகள் தொங்குகின்றன. வீட்டிற்குள் நாம் நுழைந்தோம். அங்கு அவர்களுடன் கதைப்பதற்கே மனம் இடம்கொடுக்கவில்லை. பெற்றோர்கள் இன்றிப் பிள்ளைகள் அநாதைகளாக இருந்த நிலையை எம்மால் ஒருகணம் எண்ணிப்பார்க்க முடியவில்லை.
தந்தை, தாய் 3 பிள்ளைகளுடன் 5 பேரடங்கிய அழகிய குடும்பம் தந்தையார் ஆயுள்வேத வைத்தியர் மற்றும் கட்டான நகர சபை உறுப்பினர், பிள்ளைகளில் மூத்தவர் பெண், அவர் சீனாவில் மருத்துவத்துறையில் கல்விபயில்கின்றார். மற்றைய இரு ஆண் பிள்ளைகளில் ஒருவர் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்வி பயில்கின்றார் மற்றையவர் தரம் 7 இல் கல்வி பயில்கின்றார்.
ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பெற்றோர்கள் மரணித்துள்ளனர்.
இதையடுத்துப் பிள்ளைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மனதில் எவ்விதமான உணர்வுகள் பதியப்படப்போகின்றனவோ............
எமக்கிடையில் எவ்வித இனப்பாகுபாடுமில்லை
அம்மாவும் அப்பாவும் பலியாகிவிட்டார்கள். அப்பாவின் கால்களுக்கு முன்பாகவே தற்கொலைக்குண்டுதாரி குண்டினை வெடிக்கச் செய்தார். அம்மாவும் அப்பா வும் கட்டியணைத்தபடியே மரணித்துக்கிடந்தார்கள் என கட்டுவாப்பிட்டியைச் சேர்ந்த ரொசிக்கா விமான கண்ணீருடன் கூறுகையில்,
எமதுபெற்றோர்கள் சுகயீனமடைந்து மரணித்திருந்தால்கூட பெரியதொரு கவலை இருந்திருக்காது, திடீரென அம்மா, அப்பாவை பிரிந்த அதிர்ச்சியிலிருந்து நாம் மீளவில்லை. அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் எனது அம்மாவும் அப்பாவும் உயிருடன் இருந்திருப்பார்கள். இந்த அரசியல்வாதிகள் பாதுகாப்புடன் செல்கின்றனர். அப்பாவி மக்களை இவர்கள் ஒரு எள்ளளவும் கருத்தில்கொள்ளவில்லை. எமக்கு இடையில் எவ்வித இனப்பாகுபாடுமில்ல. இது எமது தவறுமில்லை. பெற்றோர்களின் தவறுமில்லை. அரசாங்கத்தின் தவறே நிகழ்ந்துள்ளது.
கட்சி, மத, இன வேறுபாடு இன்றி செயற்படுவதே எமது எதிர்பார்ப்பு. எமது பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் அதனையே கூறுகின்றார்.
இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர அப்பாவி மக்களல்ல.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படமாட்டோம்
நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல போதிராஜா ராமய விகாராதிபதி யட்டவத்த ஞானாராம தேரர் தெரிவிக்கையில்,
தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது விகாரையிலேயே இருந்தேன். சம்பவங்களில் உயிரிழந்துள்ள உறவுகளுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த தினங்களில் மரணவீடுகளில் கலந்துகொண்டு ஆறுதல்களையும் கூறினேன். இந்தச் சம்பவத்திற்கு அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்புக் கூற வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும்.
நீர்கொழும்புத் தொகுதியில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் கலந்து வாழ்கின்றனர். ஒரு கட்டத்தில் அனைவரும் அன்னியோன்யமாகப் பழகி வாழ்ந்து வந்தார்கள்.
இந்த சம்பவத்தால் மக்களின் மனங்களில் அதிருப்தி நிலையேற்பட்டுள்ளது. அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். மீண்டும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தற்போது சமூகங்களுக்கிடையில் ஏற்படும் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு சமூகங்களுக்கிடையில் காணப்படும் விசுவாசமற்ற தன்மையைக் களைந்தெறிய வேண்டும்.
முஸ்லிம் சகோதரர்கள் இந்தச் சம்பவங்களில் தொடர்புபடாவிட்டாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளை இந்தச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தேர்தலை இலக்குவைத்து அரசியல்வாதிகள் செயற்படக்கூடாது நாட்டின் அனைத்து இன மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும். இடம்பெற்ற கோரச்சம்பவம் போன்று எதிர்காலத்தில் இடம்பெறாதிருக்க அரசாங்கம் உறுதிபூணவேண்டும்.
இந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களும் அச்சத்துடனேயே வாழ்கின்றார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் மிகவும் அன்னியோன்யமாகப் பழகினார்கள். நான் அவர்கள் வசிக்கும் இடத்திற்குச் செல்லும்போது எனக்கு வழங்கவேண்டிய மரியாதையை சரியாகச் செய்வார்கள், ஆனால் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று இரவு 7 மணியளவில் நான் வீதியில் பயணம் செய்தபோது அச்சத்துடனேயே முஸ்லிம் மக்களின் பார்வை இருந்தது. அந்த மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சத்தையும் அவவிசுவாசத்தையும் இல்லாமல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டி திகனயில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை வரக்கூடாதென நினைத்து இங்குள்ள மக்களிடம் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தி வந்தேன்.
ஆனால் எவரோ செய்த சதியினால் அந்தமக்கள் அச்சத்துடன் வாழும் நிலையேற்பட்டுள்ளது. நாம் ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்பட மாட்டோம். ஒரு இனம் தம்மைத் தாக்கிவிடுமோ என்ற அச்சம் முஸ்லிம் மக்களிடம் தோன்றியுள்ளது. இந்த அச்சத்தை இல்லாது செய்ய அரசாங்கம் சரியான அணுகுமுறைகளை கவனமாகவும் நிதானமாகவும் முன்னெடுக்கவேண்டும்.
ஆனால் அரசாங்கம் இதைச் சரியாகச் செய்யுமா என்ற சந்தேகம் தற்போது எம்மிடம் தோன்றியுள்ளது. இனங்களுக்கிடையே குழப்பதையேற்படுத்தி வாழ வேண்டிய அவசியம் எமக்கில்லை. ஒற்றுமையின் மூலமே நாட்டைக்கட்டியெழுப்ப முடியும். அதுவே எமது தேவை. ஜனாதிபதி தற்போதுவரை எடுத்துள்ள அணுகுமுறைகளில் கூட எனக்குத் திருப்தியில்லை தனது பொறுப்புக்களைச் சரியாகச் செய்யவில்லையென்றே எண்ணத்தோன்றுகின்றது. எனவே அரசியல் இலாபம் தேடாது அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்லவேண்டும்.
தாக்குதலின் பின்னும் சகோதரர்கள் போல் வாழ்கின்றோம்
கடந்த 21 ஆம் திகதி காலையில் தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏனைய மதங்களையும் ஏனைய இனத்தவர்களையும் பாதுகாக்க வேண்டுமென்றே இஸ்லாம் கூறுகின்றது என நீர்கொழும்பு பிரதேசத்தில் வாழும் மௌலவி சப்றி மிகவும் கவலையுடன் பகிர்ந்து கொள்கையில்,
குட்டி ரோம் என்று அழைக்கப்படும் அனைத்து இன மக்களும் வாழும் பிரதேசமான நீர்கொழும்பு பிரதேசம் அமைதியானதொரு அழகிய பிரதேசமாக இருந்து வந்துள்ளது.
நாம் பல வருடங்களாக இப்பிரதேசத்தில் வசித்து வருகின்றோம். குறிப்பாக பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனைய இனத்தவர்களுடன் நாம் ஒற்றுமையாகவும் கண்ணியமாகவும் அன்னியோன்யமாகவும் தான் வாழ்ந்து வருகின்றோம்.
முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்ட ஒரு குழுவினரால் தேவாலயங்களில் தீவிரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.
இந்தத் தாக்குதலின் பின்னரும் நாம் ஏனைய மதத்தவர்களுடன் எமது சகோதரர்கள் போன்றே வாழ்ந்து வருகின்றோம். அவர்களுடன் பிறந்து வாழ்ந்த இந்தப் பிரதேசத்தில் தற்போதும் அன்னியோன்யமாகவே வாழ்ந்து வருகின்றோம்.
நாங்கள் தீவிரவாதத்தைத் தூண்டவில்லை. தற்போது முஸ்லிம்கள் என்ற ரீதியில் அனைவரும் கவலையான நிலையிலேயே இருக்கின்றோம். இவ்வாறு இடம்பெறுமென எவருமே எதிர்பார்க்கவுமில்லை. கனவிலும் நினைக்கவில்லை.
மதத்தின் பெயரைக் கூறித் தீவிரவாத செயற்பாடுகளில் எவர் ஈடுபட்டாலும் அதற்கு நாம் இடம்கொடுக்காது அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ஏனென்றால் இலங்கைத் திருநாடு ஒரு அமைதியான நாடு நாம் இவ்வளவு காலமும் அமைதியாக வாழ்ந்த நாடு. இந்த நாடு அமைதியின் பக்கமும் செழிப்பின் பக்கமும் தான் செல்ல வேண்டும். இந்த நாட்டை அழிவின் பக்கம் இழுத்துச்செல்வோர் தொடர்பில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்தித் நிதானமான ஒரு உரையை நிகழ்த்தியுள்ளதுடன் சம்பவத்தையடுத்து அவர் ஒரு சிறந்த நடவடிக்கையை எடுத்து முன்னுதாரணமாக எமக்குத் திகழ்ந்துள்ளார். அத்துடன் ஆழமான கருத்துக்களை முன்வைத்து முஸ்லிம் மக்களுக்குப் பெரும் உதவியை வழங்கியுள்ளார். முஸ்லிம்களாகிய நாம் அவரது கருத்தை வரவேற்பதுடன் அவரது கருத்திற்கு செவிசாய்க்கின்றோம்.
நாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் கட்டியெழுப்புவதற்கு எம்மாலான உதவிகளை செய்வதற்கு முஸ்லிம்களாகிய நாம் தயாராகவுள்ளோம். மதவாதம், இனவாதம் பேசுபவர்கள் மீது அரசாங்கம் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பார்வையில்....
கட்டுவாப்பிட்டிய பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடும் போது அவர்கள் ஒவ்வொருவரும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்தித் ஆண்டகையின் செயற்பாடுகளையும் அவரின் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளையும் அந்த மக்கள் சோகத்திலும் வெளிப்படுத்தியதை அவதானிக்க முடிந்தது.
இந்தக் கொடூரமான தாக்குதலையடுத்து பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிடுகையில்,
இறைவனின் பெயரைக் கூறி ஒரு இனத்தை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது சரி என்று முன்வைக்கப்படும் கருத்துக்கள் மிகப் பிழையானதொன்றாகும். இவ்வாறு மதத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் கவலையடயக் கூடியவை.
மனித உயிர்களை விட உயர்வான வேறொன்று இந்த உலகத்தில் கிடையாது. எம்மால் இந்த உலகத்தில் தனித்து வாழ முடியாது. எம்முடன் வாழ்வதற்கு ஏனையவர்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். கடவுளின் பெயரில் ஒருவரை அழிக்க முடியாது.
இது மிகப் பிழையானதொரு விடயமாகும். எமது உறவுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உண்மையில் கவலையடையக் கூடியவை. அவை முழு மனித குலத்திற்குமே இழைக்கப்பட்ட துரோகமும் அநீதியுமாகும். உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு மனிதர்களும் சமமானவர்களே. எனவே பிறிதொருவருக்கு மரணத்தையோ, கவலையையோ யாராலும் கொடுக்க முடியாது.
பயங்கரவாத தாக்குதலைக் கண்டறிய ஜனாதிபதி விசாரணைக் குழுவொன்றை நியமித்ததாக கூறியுள்ள போதிலும் அதுகுறித்த எந்தத் தெளிவும் இல்லையெனவும் இந்த விசாரணைக் குழுவும் இதற்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களைப் போல செயலிழந்து போய்விடுமோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
உண்மைகளைக் கண்டறிவதில் அரசாங்கம் பொறுப்பை உணர்ந்து செயற்படாவிட்டல் நாம் வீதிக்கிறங்க நேரிடும். முடியுமென்றால் இந்த விடயத்தில் மாத்திரம் தீர்வுகளைக் காண சகல கட்சிகளையும் இணைத்து அரசாங்கம் ஒன்றினை உருவாக்குங்கள் என்ற கோரிக்கையினையும் அவர் முன்வைத்துள்ளார்.
இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்த இளைஞர்களுக்குக் கூட ஏன் செய்தோம் என அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த சம்பவத்தை வைத்து அப்பாவி முஸ்லிம் பொதுமக்களை யாரும் நிந்தித்துவிடக் கூடாது என உறுதிபட கூறினார்.
நேரடியாகச் சென்று நடவடிக்கை
இதேவேளை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பிலும் அவர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் நேரடியாகச் சென்று கட்டுவாப்பிட்டிய கிராமசேவகர் சுனில் பெர்னாண்டோவிடம் வினவினோம். 100 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இறப்பு மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான சரியான புள்ளிவிபரங்கள் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லையெனவும்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நேரடியாகத் தாம் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மக்களின் ஏக்கங்கள்.....
கடந்த கால உள்நாட்டுப்போரின் வடுக்களை சுமந்த மக்களின் வாழ்வில் ஒரு சிறிது காலம் நல்லிணக்கம் சகவாழ்வுகள் வளர்க்கப்பட்டு ஒரு சிறிய மரமாக துளிர்விட்ட நிலையில் மக்கள் மத்தியில் மதங்களால் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுமென்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நல்லிணக்கத்திற்கு சவாலாக அமைந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் நல்லிணக்கத்தையும் அமைதியையும் எந்தவொரு அரசியல்வாதியினாலோ அல்லது எந்த ஒரு கட்சியினாலோ உருவாக்க முடியாதென்ற சிந்தனையில் உள்ளார்களென்பதுடன் அவர்கள் ஒவ்வொருவரின் அமைதியும் சிந்தனையும் இலங்கையின் எதிர்கால நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் இலங்கையின் அரசியலிலும் தாக்கம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை...
கடந்த கால அனுபவங்களை வைத்து நாட்டு மக்கள் நாட்டை வழிநடத்தும் அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஏதோவொன்றைக் கூற விளைகின்றார்கள்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM