வடக்கு கிழக்கு இணைந்த தனி பிராந்தியம் அமைப்பதோ அல்லது சமஷ்டி என்ற கோட்பாடோ ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. சமஷ்டி முறையின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்பட முடியாது. மாறாக நாட்டில் பிரிவினைவாதமும் இனவாதமும் மட்டுமே உருவாகும். ஆகவே சமஷ்டி மூலம் நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
வடமாகாண சபையின் செயற்பாடுகளையும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கருத்துகளையும் நாம் கடுமையாக கண்டிக்கின்றோம் எனவும் ஜே.வி.பி குறிப்பிட்டது.
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது வடமாகாண சபையின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே கட்சியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வடமாகாண சபையினதும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனினதும் செயற்பாடுகள் நாட்டை ஐக்கியப்படுத்தும் வகையில் இல்லை. கடந்த காலத்தில் ஜனநாயகம், சமாதானம், இன ஒற்றுமை என்றெல்லாம் கதைகளை கூறியவர்கள் இன்று மீண்டும் பழைய நிலைமையில் செயற்படுவது ஏமாற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது. வடக்கு கிழக்கு இணைந்த தனி பிராந்தியம் என்ற கொள்கை இலங்கைக்குள் ஒருபோதும் ஒத்துவராத ஒன்றாகும்.
ஆரம்பத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்த போது மக்கள் விடுதலை முன்னணியே அதை தடுத்து வடக்கு கிழக்கு தனித்தனி மாகாணங்கள் என்ற நிலைமையை ஏற்படுத்த அழுத்தம் கொடுத்தது. அவ்வாறு இருக்கையில் மீண்டும் வடக்கு கிழக்கு இணைந்த தனி பிராந்தியம் என்ற கோரிக்கையை வடமாகாண முதலமைச்சர் முன்வைத்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிப்பதால் நாட்டில் மக்கள் மத்தியில் முரண்பாடும் இனவாதமும் இன முரண்பாடும் மட்டுமே உருவாகும். இன்று மக்கள் மத்தியில் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டு வரும் நிலையில் யுத்தத்தின் பின்னர் சிங்கள தமிழ் மக்கள் ஒன்றாக வாழ ஆரம்பிக்கும் நேரத்தில் தனிப்பட்ட அரசியல் சுயநலத்தையும் சர்வதேச நிகழ்ச்சிநிரலையும் வைத்துக்கொண்டு வடமாகாண சபை செயற்படக்கூடாது.
இந்த செயற்பாட்டால் தமிழ் இனவாதம் மட்டுமல்லாது சிங்கள இனவாதமும் மீண்டும் தோற்றம்பெறும். அது மக்களையே முழுமையாக பாதிக்கும்.
மேலும் வடமாகாண சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அவர்களால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையையும் ஏற்படவில்லை. அங்கு அபிவிருத்திகளோ அல்லது தமிழ் மக்களுக்கான பொருளாதாரா செயற்பாடுகளோ, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளோ அல்லது குறைந்தபட்சம் மீனவர் பிரச்சினைக்கான தீர்வையோ அவர்கள் பெற்றுக்கொடுக்கவில்லை. வெறுமனே இனவாத கருத்துகளையும் பிரிவினைவாத கொள்கைகளையும் முன்வைத்து வடக்கு கிழக்கு மக்களின் மனங்களில் விரோதத்தை மாத்திரமே வளர்த்து வருகின்றனர். தமிழ் மக்களை கடந்த காலத்தில் ஆயுதத்தின் பிடியில் வைத்திருந்தவர்கள் இப்போது மீண்டும் பொய்களைக் கூறி தனி நாட்டு ஆசையை கோரியும் ஏமாற்றி வருகின்றனர். எவ்வாறு இருந்தாலும் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி என்ற கோட்பாடு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. சமஷ்டி முறையின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்பட முடியாது. சமஷ்டி மூலம் மேலும் நாட்டில் பிரிவினை உருவாக்கும். எனவே வடமாகாண சபையின் செயற்பாடுகளை நாம் கடுமையாக கண்டிக்கின்றோம்.
மேலும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதென்றால் அதன் மூலம் நாட்டின் சகல மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். மொழி சார்ந்தோ, இனம்சார்ந்தோ அல்லது மதம் சார்ந்ததாகவோ, ஒரு தரப்பினருக்கு மட்டும் சலுகைகள், உரிமைகள் பலமடையும் வகையில் அமைந்துவிடக்கூடாது. அனைத்து மக்களினதும் பிரதான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நாட்டை பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். மேலும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஆராய அரசியலமைப்பு சபை உள்ளது. ஆனால் அதை விடுத்து தனிப்பட்ட ரீதியில் குழுக்களை அமைத்து இந்த விடயங்கள் ஆராயப்படுவது ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும். இவ்வாறான குழுக்களில் இணைந்து நாம் செயற்பட மாட்டோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM