தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்த தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் தலையிடாமைக்கான காரணத்தை தெரிவிக்கிறார் கேர்ணல் ஹரிகரன்

Published By: Priyatharshan

28 Apr, 2019 | 02:15 PM
image

தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் இலங்கையின் உள்நாட்டு விடயமான பாதுகாப்பில் அளவுக்கு மீறி தலையிட்டால் அது இலங்கை அரசியலில் இந்திய எதிர்ப்பை மேலெழச் செய்வதற்கே வழி வகுக்கும் என்பதாலேயே பொறுமையாக இருந்தது என்று இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி:- தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் டிதாடர்பாக இந்திய பாதுகாப்பு துறைக்கு தகவல்கள் கிடைத்ததாகவும், இந்தியப் புலனாய்வுத்துறை தகவல்களை வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்த தகவல்களை தாங்கள் அறிவீர்களா?

பதில்:- இந்த தகவல் இந்திய பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிராக விசேடமாக அமைக்கப்பட தேசிய ஆய்வுக் குழு (NIA -National Investigation Agency) சந்தேகத்தின் பேரில் கைதான ஒரு தீவிரவாதியை விசாரணை செய்யும் போது தற்செயலாகத் தெரியவந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த தகவலை இந்தியா இலங்கை அரசுக்கு அளித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்தியது. இலங்கை அரசுக்கு அளித்த குறிப்பில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் தாக்கப் படலாம் என்ற விவரமும் அளிக்கப்பட்டு இருந்தது. 

மேலும் தற்கொலைத் தாக்குதல்களை தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் முகமது சஹ்ரான் நடத்த திட்டமிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி:- இந்தியா புலனாய்வு கட்டமைப்புக்கு இந்த தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் கிடைத்திருக்கின்றது என்றால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குழுவில் இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டு கலந்துரையாடப்பட்டதா?

பதில்:- இந்திய அரசியல் அமைப்பின் பிரகாரம் தேசிய பாதுகாப்பு குழு மற்றும் இறுதி முடிவை எடுக்கும் இந்திய அமைச்சர்சபையின் பாதுகாப்பு குழு ஆகிய இரு அமைப்புகளும் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் விவாதிப்பது வழக்கம்.

2014 இல் சென்னையில் இலங்கையைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞர் ரயிலில் ஒரு வெடிகுண்டை வெடித்த பின்பு, பாகிஸ்தான் அரசின் உதவியுடன் இலங்கை மூலமாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவலை தவிர்க்க இலங்கை உளவு நிறுவனங்களுடன் இந்திய உளவு நிறுவனங்கள் ஒத்துழைத்து வருகிறார்கள்.

2014 இல் இருந்து உள்துறையும் தவ்ஹீத் இயக்கங்களின் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆகவே, சஹ்ரான் காசீம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாஅத் நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களை அறிந்திருப்பார்கள். ஆகவே, ஏப்ரல் மாதத்தில் இந்தியா இலங்கைக்கு அனுப்பிய ஜமாஅத் அமைப்பின் தாக்குதல் பற்றிய விவரங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குழுவில் நிச்சயம் அளிக்கப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும்.

கேள்வி:- நியூஸிலாந்து சம்பவத்திற்கு பழிதீர்ப்பதற்கு இலங்கை இலக்கு வைக்கப்பட்டது என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ளமுடியுமா?

பதில்;:- இத்தகைய பெரும் தாக்குதலை ஈஸ்டர் திருநாள் அன்று நடத்த நிச்சயித்து அதற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க பல மாதங்களுக்கு முன்பே பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி இருக்க வேண்டும். ஆனால், நியூஸிலாந்து தாக்குதலுக்குப் பின்னர் இந்த தாக்குதல்கள் நடத்தியதால் உலகுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் சிரியாவிலும் ஈராக்கிலும் ஏற்பட்ட இழப்புகளுக்கு பின்பும் தனது வலிமை குறையவில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. 

ஆகவே, தோல்வியால் மனம் சோர்ந்த ஐ.எஸ். போராளிகளுக்கு, இந்த தாக்குதல்கள் ஊக்கமூட்டுவதாக இருக்கின்றன.

கேள்வி:- இலங்கையினை தீவிரவாதிகள் இலக்குவைப்பதற்கு அடிப்படையில் என்ன காரணம் இருக்கும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- இலங்கையில் மதவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் பல ஆண்டுகளாகத் தொடரும் காழ்ப்புணர்ச்சி ஓரளவு குறைந்தாலும் அது முழுமையாக மறையவில்லை. மத, இன வாதிகளை அரசியல் கட்சிகள் முக்கியமாக பௌத்த மதப் பேரினவாதிகளை தங்களது ஆதாயத்திற்காக தூண்டிவிட்டு முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்களை 2014 மற்றும் 2018 இலும் நிகழ்த்தினார்கள். அவர்களை உடனுக்குடன் களைந்து எறிய அரசாங்கம் மெத்தனமாக இருந்ததோடு, கையாலாகாத்தன்மையில் இருந்ததும் நாடறிந்த உண்மை. இதனால் இஸ்லாமிய மக்கள் மனக்கசப்பு அடைய, அவர்களிடையே தௌஹீத் ஜமாஅத் போன்ற மதவாத இணைப்புகள் நடத்திய கடும்போக்கில் நடத்திய தீவிரவாத ஆதரவுப் பிரசாரமும் ஓரளவு வெற்றி கண்டது. 

மேலும், இந்த கலக்கமானதும் குழப்பமானதுமான உள்நாட்டு சூழ்நிலையையும் அரசின் உட்பூசலால் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு ரீதியான செயற்பாடுகளில் காணப்பட்ட மெத்தனப்போக்கும் தாக்குதல்கள் வெற்றி காணும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளமை கண்கூடு.

கேள்வி:- இலங்கையில் தாக்குதல்கள் நடைபெறும் என்பதை அறிந்தும் இந்தியா பிராந்திய பாதுகாப்பு கருதி தலையீடு செய்யாமைக்கு அல்லது அதிக கரிசனை கொண்டு விழிப்பூட்டாமைக்கான காரணம் என்ன?

பதில்:- இலங்கையுடன் இந்தியா நெருங்கிய நட்புறவு கொண்ட நாடு. ஆனால், இந்தியா வலிமைவாய்ந்த நாடு என்பதால் இலங்கையின் உள்நாட்டு விடயமான பாதுகாப்பில் அளவுக்கு மீறி தலையிட்டால் அது இலங்கை அரசியலில் இந்திய எதிர்ப்பை மேலெழச் செய்வதற்கே வழி வகுக்கும். 1987 இல் இந்தியா பெருமளவில் இலங்கையின் விடயங்களில் தலையிட்டதால் ஏற்பட்ட பக்க விளைவுகள் தற்போதுவரை நீடித்துக்கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததொன்றாகும்.

கேள்வி:- இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பில் பலவீனம் இருக்கின்றது என்று கருதுகின்றீர்களா?

பதில்:- இலங்கை பாதுகாப்பு படைகள் திறமை வாய்ந்தவை என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், இலங்கையைப் போன்ற ஜனநாயக நாட்டில் அவை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அரசாங்கமே நிர்ணயிக்க வேண்டும். அத்தகைய வழிநடத்துதலில் உள்ள குறைபாடுகளை ஈஸ்டர் தாக்குதல்கள் எடுத்து காட்டியுள்ளன. அதனால் பாதுகாப்பு படைகளை குறை சொல்லுவதில் பயனில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி:- இலங்கை மீதான தீவிரவாத தாக்குதல் பிராந்திய பாதுகாப்பில் செல்வாக்கினை செலுத்துவதால் இந்தியா இதுபற்றி எத்தகைய கரிசனையை கொள்கின்றது?

பதில்:- நான் ஏற்கனவே உங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில் இதுபற்றி விரிவாக கூறியுள்ளேன். இந்தியாவும் இலங்கையும் பூகோள ரீதியாக தொப்புள் கொடி இணைப்புக் கொண்டவை.

ஆகவே, ஒரு நாட்டுக்கு ஏற்படும் பாதுகாப்பு விளைவுகள் மற்றவரையும் பாதிக்கும். ஆகவே, இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி எந்த அரசு பதவி ஏற்றாலும் இந்த விசேட உறவை நினைவு கொண்டே செயல்படும். அந்த வகையிலேயே இந்தியா கரிசனை கொள்ளும்.

கேள்வி:- இலங்கையின் கடற்படை கட்டமைப்பு மற்றும் கடலோரக் காவல் பற்றி உங்களது பார்வை எவ்வாறு உள்ளது?

பதில்:- கடலோரக்காவல் கட்டமைப்பு எவ்வளவு திறமையுடன் செயற்பட்டாலும் திரைகடல் பரப்பில் ஊடுருவலை நூற்றுக்கு நூறுவீதம் நிறுத்துவது கடினம். எனினும் இலங்கையின் கடற்படை மேலும் வலுவாகவும் எந்நேரமும் கண்காணிப்புடனும் இருக்க வேண்டும்.

கேள்வி:- உயிர்த்த ஞாயிறில் நடைபெற்ற வெடிப்புச் சம்பவங்களில் ரி.ஏ.ரி.பி குண்டுகளே பயன்படுத்தப்பட்டதாக படைத்தரப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ள நிலையில் இதனை உள்நாட்டில் தயாரித்திருக்க முடியுமா? அவ்வாறாயின் இக்குண்டுகளுக்கான இரசாயன பதார்த்தங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்குமா?

பதில்:- ரி.ஏ.ரி.பி (TATP ) தயாரிப்புக்கான மூலப் பொருட்களான அசிடோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியன இலங்கையில் எளிதாக கிடைக்க கூடியவை. உதாரணமாக அசிடோன் வர்ணப்பூச்சுக்கு உதவும் பொருளாகும். அதுபோல் ஹைட்ரஜன் பெராக்சைடும் மருத்துவ தேவைக்காக உபயோகிக்கப்படுகிறது. ஆகவே, அவற்றை வியாபார ரீதியாக இலங்கையில் இறக்குமதி செய்ய எந்தவிதமான தடையும் இருந்திருக்காது. ஆனால், அவற்றை உபயோகித்து வெடிகுண்டு தயாரிப்பின் நுணுக்கம் கற்றவர் யார் என்பதே கேள்வி.

கேள்வி:- தீவிரவாத ஒழிப்புக்கு இலங்கை மற்றும் பிராந்திய நாடுகள் உடனடியாக எவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முன்மொழிகின்றீர்கள்?

பதில்:- நாட்டின் மக்களிடையே நல்லுணர்வு வளர சில செயல்பாடுகளை மாற்ற வேண்டும். அதில் மொழி மற்றும் இன ரீதியான ஆளுமைப் பிரிவுகள். உதாரணமாக இலங்கை பிரஜைக்கான அடையாளச் சீட்டில் சிங்களவர், தமிழரா அல்லது இஸ்லாமியரா என்ற குறிப்பு எதற்கு என்று ஒரு முறை, நான் மறைந்த தலைவர் காமினி திசாநாயக்கவிடம் கேட்டது நினைவுக்கு வருகிறது. இது மாதிரி பல விடயங்களில் அடிப்படையில் அணுகுமுறை மாற்றம் ஏற்படுத்துவது அவசியம்.

தெற்காசிய அளவில் பயங்கரவாத விவரங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் தோற்றம்பெற வேண்டும். அதற்கு முதலில் இலங்கை அரசாங்கத்தின் உள்ளக செயற்பாடுகள்  மாற்றப்படவேண்டும்.

பொலிஸார் பொதுமக்களுடன் நேசத்துடன் செயல்பட ஊக்குவிக்கும் வழிமுறைகளை செயலாக்குவது அவசியம். அவர்கள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கே பயங்கரவாத சட்டம் ஊக்குவிக்கிறது. ஆகவே, அவ்வாறு நடப்பதைத் தவிர்க்க கடுமையான கட்டுப்பாடுகளை நிர்ணயிக்க வேண்டும். ஜனநாயக ஆட்சியில் அரசியல் தலையீடு தவிர்க்க முடியாதது. ஆனால், அது சட்ட மன்றம் என்ற வேலிக்குள் அடைக்க நீதிமன்றம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஊராரைக் குறைகாணும் ஊடகங்கள், சில சமூக வலைத்தளங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பி சமூகத்தில் பீதியைக் கிளப்பி விடுவது அதிகமாகி வருகிறது. இதைத் தடுக்க சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு பல விடயங்களில் உடனடியாக மாற்றம் அவசியமாகின்றது. இந்தக் கருத்துக்களை உள்வாங்கும் சிலர் பின்னர் இந்தியாவின் குறைபாடுகளை சுட்டிக் காட்டலாம். உண்மைதான். மேற்கூறிய அத்தனையும் இந்தியாவுக்கும் ஏனைய தெற்காசிய நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால், நான் இங்கே கூற வந்தது இலங்கையைப் பற்றியே என்பது முக்கியமானதாகின்றது.

நேர்காணல் ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54