12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள பங்காதேஷ் அணி வீரர்கள் 15 பேர் கொண்ட குழாமை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய 10 நாடுகள் இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இதுவரை நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலகக்கிண்ண போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில் நான்காவது நாடாக பங்களாதேஷ் அணி 15 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இலங்கை அணி வீரர்கள் குறித்து எதுவும் வெளிவராத நிலையில், அஞ்சலோ மெத்தியூஸிடம் உலகக் கிண்ண அணிக்கு தலைமை தாங்குமாறு கேட்கப்பட்டதாகவும் அதனை மெத்தியூஸ் நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடக் கூடிய உடற்தகுதியை குசல் ஜனித்பெரேரா பெற்றிருப்பதாகவும் அணியின் தலைவரை தேர்ந்தெடுத்ததன் பின்னர் இலங்கை அணியின் 15 பேரடங்கிய உலகக்கிண்ண குழாமை அறிவிக்கமுடியுமென இலங்கை கிரிக்கெட் சபையின் தெரிவுக்குழுவின் பிரதம அதிகாரி அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வேண்டிய நிலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகக்கிண்ண போட்டிக்கான பங்களாதேஷ் அணியை, அந்த நாட்டு கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.
கடந்த மாதம் இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் அபு ஜயித் புதுமுக வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார்.
5 டெஸ்ட் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ள அவர் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவர் என்பதால் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது, துடுப்பாட்ட வீரர் இம்ருல் கெய்ஸ் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
நடுவரிசை துடுப்பாட்ட வீரர் மொசாடெக் ஹூசைன் அணிக்கு திரும்பி இருக்கிறார். இறுதியாக அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசியக் கிண்ண போட்டிக்கான அணியில் இடம் பிடித்து இருந்தார்.
காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இடம்பெறாத ஷகிப் அல்–ஹசன் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
உலகக்கிண்ண போட்டியில் பங்களாதேஷ் அணி தனது முதல் லீக் போட்டியில், தென்னாபிரிக்க அணியை ஜூன் மாதம் 2 ஆம் திகதி எதிர்கொள்கிறது.
உலகக்கிண்ண போட்டிக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணி வருமாறு:–
மோட்டர்ஷா ( அணித் தலைவர் ) , தமிம் இக்பால், லிட்டான் தாஸ், சவும்யா சர்கார், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் காப்பாளர்), மக்முதுல்லா, ஷகிப் அல்–ஹசன் (துணைத் தலைவர் ), முகமது மிதுன், சபீர் ரகுமான், மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெகிதி ஹசன் மிராஸ், ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான், அபு ஜயித்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM