விண்வெளியில் ஓராண்டு  காலம் தங்கும் அமெரிக்க பெண்

Published By: Daya

17 Apr, 2019 | 11:52 AM
image

 விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா, ரஷ்யா உட்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு நிலையத்தை அமைத்துள்ளன. குறித்த நிலையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்கிற வீராங்கனையும் எதிர்வரும்  ஜூலை மாதம் 20ஆம் திகதி சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு செல்கிறார்.

சோயூஸ் எம்-13 விண்கலத்தில் செல்லும் இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 11 மாதங்கள் அல்லது 392 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்துவிட்டு பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்கப்போகிறார்.

இதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right