சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் 2016 ஏப்ரல் 25ஆம் திகதி முதல் 2016 மே 6ஆம் திகதி வரையில் ஒப்படைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த காலகட்டத்தினுள் தம்மிடமுள்ள சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நபர்களுக்கு தண்டனையோ அல்லது தண்டமோ கிடையாது மாறாக தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரேனும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தால் குறித்த காலத்தினுள் ஆயுதங்களை ஒப்படைத்தால் அவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். குறித்த காலத்தின் பின்னர் தேடுதலின் போது அவ்வாறு ஆயுதங்களை கண்டெடுக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் 30ஆவது வாசகத்தின் சட்ட ஒழுங்குகள் அடிப்படையில் இலக்கம் 1958/06 மற்றும் 2016.03.05 திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சட்டவிரோத துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2016 ஏப்ரல் 25ஆம் திகதி முதல் 2016 மே 06ஆம் திகதி வரையில் வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் குறித்த நபர்கள் அல்லது ஆயுதங்கள் இருக்கும் பிரதேசங்களின் அண்மையில் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலக அலுவலகம், அல்லது பொலிஸ் நிலையத்தில் உரிய ஆயுதங்களை ஒப்படைக்க முடியும்.
அதேபோல் இந்த குறித்த காலகட்டதினுள் தம்மிடமுள்ள சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நபர்களுக்கு குறித்த காலகட்டத்தினுள் துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குகள் அடிப்படையில் குறித்த குற்றத்திற்கான தண்டம் அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.
அதேபோல் அவ்வாறு ஒப்படைக்கும் நபர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும். குறிப்பாக சன்னத் துப்பாக்கி அல்லது அதற்கு சமமான தீ ஆயுதங்களுக்காக (கல் கட்டஸ்/ கட்டுத் துப்பாக்கி) 5000 ரூபாவும், பிஸ்டல்/ ரிவால்வருக்கு 10,000 ரூபாவும், ரி 56 வகையிலான தீ ஆயுதத்திற்காக 25,000 ரூபா பணமும் வழங்கப்படும்.
மேலும் குறித்த காலத்தினுள் பொது மன்னிப்பு வழங்குவதைப்போலவே நிர்ணயிக்கப்பட்ட கால எல்லை முடிவடைந்த பின்னர் மீண்டும் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அவ்வாறு தேடுதலின் போது எவரிடம் இருந்தேனும் சட்டவிரோத ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுமாயின் அந்த நபர்களுக்கு எதிராக மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்களை உரிய வகையில் கையாள்வதே எமக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பாகும். அந்த பொறுப்பை நாம் மிகச் சரியாக மேற்கொண்டு வருகின்றோம். ஆகவே தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் எந்தவித நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க மாட்டோம்.
இப்போதிருக்கும் சூழலில் எவருக்கும் தனிப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை என நம்புகின்றோம். நாட்டில் பாரிய அச்சுறுத்தல் நிலைமைகள் இல்லை. அவ்வாறு இருக்கையில் தனிப்பட்ட ஆயுதங்களை அல்லது சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதே சரியானதாகும். அதையும் மீறி எவருக்கும் அச்சுறுத்தல்கள் அல்லது பாதுகாப்பு சிக்கல்கள் இருக்குமாயின் அவர்களுக்கு தனிப்பட்ட ஆயுதம் தேவைப்படுமாயின் உரிய முறையில் பாதுகாப்பு தரப்பிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அவ்வாறு எம்மிடம் தெரிவிக்கும் பட்சத்தில் குறித்த காரணிகளை பரிசீலனை செய்து அவர்களுக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். அதற்கும் பாதுகாப்பு அமைச்சில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இன்னும் பல பிரதேசங்களில் கண்டெடுக்கப்படுவதாகவும், ஒரு சிலர் இன்றும் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் சர்வதேச நாடுகளில் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள் இரகசியமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இவை சாதாரணமான விடயங்களாக இல்லாவிட்டாலும் பல நாடுகளில் இவ்வாறு நடைபெறுகின்றது.
ஆகவே அவற்றை தடுக்க பாதுகாப்பு தரப்பு கடுமையாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.
விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள நபர்களாக இருந்தாலும் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஆயுதங்கள் இருக்குமாயின் அவற்றையும் உரிய காலத்தினுள் ஒப்படைக்க முடியும். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்றோ அல்லது தண்டனை அதிகமாக வழங்கப்படும் என்றோ அஞ்சவேண்டாம். குறித்த காலத்தினுள் ஆயுதங்களை ஒப்படைத்தால் விடுதலைப் புலிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். குறித்த காலத்தின் பின்னர் தேடுதலின் போது அவ்வாறு ஆயுதங்களை கண்டெடுக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
எவ்வாறு இருப்பினும் இன்றுவரை பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டினுள் அல்லாத 900 ஆயுதங்கள் அளவில் சட்டவிரோதமாக இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவற்றில் 600 தொடக்கம் 700 வரையிலான ஆயுதங்களை நாம் பறிமுதல் செய்துள்ளோம். எஞ்சியுள்ள 200 தொடக்கம் 300 வரையிலான ஆயுதங்களே பறிமுதல் செய்யவேண்டியுள்ளது. அதற்காகவே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM